உடற்கல்வி என்றால் என்ன/உடற்கல்வி என்றால் என்ன?

விக்கிமூலம் இலிருந்து

3. உடற்கல்வி என்றால் என்ன?


பொதுக்கல்வி - உடற்கல்வி

உடற்கல்வி என்பது உடலுக்கான கல்வி, உடல் மூலமாகக் கற்றுக் கொள்ளும் கல்வி, உடல் நலம், பலம், வளம் என்பதையே குறிப்பாகக் கொண்டு கற்பிக்கும் கல்வி.

உடலுக்காகத் தானே கல்வி என்று, Physical என்று ஆங்கிலச் சொல்லை சுட்டிக் காட்டித் தரம் தாழ்த்திப் பேசுபவர்கள் உண்டு.

உடல் தான் உலக வாழ்க்கைக்கு ஆதாரம் உடலுக்கு உள்ளேதான் உள்ளம் (mind) இருக்கிறது. ஆத்மாவும் (Spirit) அங்கேதான் இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.

நல்ல தரமான, நலமான, பொலிவான, வலிவான உடல் இருந்தால் தான், தரமான, திறமான, தன்மையான மனம் வளர வாய்ப்புண்டு. அதனால் தான் நல்ல உடலில் நல்ல மனம் (A Sound mind in a sound Body) என்ற கொள்கையை முற்கால மக்கள் முக்கியமான, கொள்கையாகக் கொண்டிருந்தார்கள்.

நல்ல உடலை, நல்ல பயிற்சிகளைக் கொண்டு வளர்த்து, அதிலே நல்ல மனதை இடம் பெற அமைத்து, நல்ல வாழ்க்கையை மக்கள் வாழச் செய்கின்ற வகையில் தான் உடற்கல்வியின் அமைப்பும் முனைப்பும் அமைந்திருக்கிறது.

அதனால் தான் கிரேக்கப் பேரறிஞர் பிளேட்டோ இப்படி கூறியிருக்கிறார், ‘உடலையும் மனதையும் இரு குதிரைகளாக்கி, வாழ்க்கை வண்டியிலே பூட்டி ஒட்ட வேண்டும்.’

ஒரு குதிரை வலிவும் விரைவும் கொண்டு, மற்றொரு குதிரை மெலிவும் நலிவும் கொண்டு விளங்கினால், ஒட வேண்டிய வண்டி, ஒழுங்காகப் போக வேண்டிய இடத்தைப் போய்ச் சேராது, ஆக, இரண்டும் திரண்ட வலிமை பெற்றிருந்தால் தானே முரண்பாடின்றி ஒடும்.

ஆக, பொதுக் கல்வியானது மனதை வளர்க்கிறது, உடற்கல்வி உடலை வளர்க்கிறது என்று நாம் கொள்ளலாமா என்றால், அது அப்படி அல்ல.

பொதுக் கல்வியின் நுண்மையான நோக்கத்தை, உடற்கல்வி செம்மையாக செயல்படுத்துகிறது என்றுதான் நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.போற்றிப் பின்பற்றவேண்டும்.

அப்படியென்றால், உடற்கல்வியின் உண்மையான விளக்கம் என்ன என்பதை அறிஞர்கள் கூறியிருக்கும் கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வோம்.

1. உடற்கல்வி என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்களை ஒரு மனிதரை செய்ய வைத்து, அதில் சிறப்பான எதிர்பார்க்கும் வரவுகளைப் பெறுவதுதான் . J.F. வில்லியம் பிரெளனல்



2. உடற்கல்வி என்பது பொதுக்கல்வியின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாகும். அந்தக் கல்வி ஒரு மனிதரின் உடலை, மனதை, உணர்ச்சிகளை நெறிப்படுத்தி வளர்த்து சமூகத்திற்குத் தகுதியான குடிமகனாக உருவாக்கிட உதவுகிறது. அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பான பல செயல்களில் மனிதர்களை ஈடுபடுத்தி சிறந்த விளைவுகளை உண்டாக்கித்தரும் வகையில் உடற்கல்வி முயற்சிகளை மேற்கொண்டு ஒழுகுகிறது. -மியூக்கர்

3. “உடற்கல்வி என்பது பொதுக்கல்வியின் ஒரு பகுதியாகும். அது உடல் சார்ந்த செயல்களால் உடலை இயக்கிக் கல்வியின் கொள்கைகளை அடைய உதவுகிறது.” - வால்ட்மெர் - எஸ்லிங்கர்

4. தனிப்பட்ட ஒரு மனிதர், தனது உடல் இயக்கங்கள் மூலமாகப் பெறுகிற அனுபவங்கள் அனைத்துமே உடற்கல்வி என்று அழைக்கப்படுகிறது. D. ஒபர்ட் டியூபர்

5. உடல் இயக்க செயல்கள் ஒருங்கிணைந்து செயல்படும்போது, உண்டாகும் அனுபவங்கள், உண்டாக்கும் மாற்றங்களின் மொத்தத் தொகுப்பே உடற்கல்வி என்று அழைக்கப்படுகிறது. - R. கேசிடி

6. உடற்கல்வி என்பது பொதுக்கல்வியின் பெருவாரியான கொள்கைகளை, மனிதர்களின் பெருந்தசைச் செயல்கள் மூலமாக செயல்படுத்தி, அதன் மூலமாக விரும்பத் தகுந்த விளைவுகளை ஏற்படுத்தி, சிறந்தத் தொண்டாற்றுகிறது. -J.B.நேஷ்

7. உடற்கல்வி என்பது பொதுக்கல்வி போலவே மனிதர்களை வளர்க்கும் கொள்கையைக் கொண்டிருக்கிறது. ஆனால், உடற்கல்வியானது உடல் திற செயல்களில் சிறந்தனவற்றைச் செயல்படுத்தி அதன்

மூலமாக பயிற்சி செய்பவர்களின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் நன்னெறி செயல்முறைகள் இவற்றை வளர்த்துவிடுகிறது. —(AAHPER) ஆபர் என்ற மாத இதழ்

8. உடல் இயக்க செயல்கள் மூலமாக, குழந்தைகளின் மொத்த வளர்ச்சிக்கும் காரணமாகி, அதன் மூலம் உடலை, மனதை ஆத்மாவை செழிப்புற வளர்த்துக் காக்கும் கல்வி முறையாலே உடற்கல்வி சிறப்படைகிறது. —J.P. தாமஸ்

மேற்கானும் சில விளக்கங்களின் மூலம் நாம் சில உண்மைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.

1. உடற்கல்வியானது பொதுக்கல்வியின் இன்றியமையாத இணைந்த பகுதியாக இருக்கிறது.

2. உடல் இயக்கமும், உடல் உறுப்புக்களின் செயல்களும் சிறந்த அனுபவங்களை வழங்கி, வளமான அறிவை நல்குகின்றன.

3. பெருந்தசைச் செயல் இயக்கங்கள் (Big muscle Activity) இல்லாது போனால், பொதுக்கல்வி எதிர்பார்க்கின்ற எந்த இலட்சியக் கொள்கையும் நடை முறையில் நிறைவேறாமலே போய்விடும்.

4. உடலால் பெறும் அறிவும், மூளையால் பெறும் அறிவும் ஒன்றையொன்று சார்ந்தே, ஒன்று சேர்ந்தே உறுதுணையுடனே பணியாற்றுகின்றன.

5. பொதுக்கல்வியின் நோக்கமும் உடற்கல்வியின் நோக்கமும் வெவ்வேறு திசைநோக்கிப்பிரிந்துபோகும் பாதைகளல்ல. வாழ்க்கை எனும் ரயில் வண்டி, பத்திரமாகவும், பாதுகாப்புடனும், விரைவாகவும் ஓடக்கூடிய வகையில் தாங்கி நிற்கின்ற இரண்டு தண்டவாளங்கள் போன்றனவாகும். 

உடலும் மனமும் இரண்டறக் கலந்தது, ஒன்றாகப் பிணைந்தது, ஒன்றையொன்று சார்ந்து உறுதியாக செயல்படுகின்றன என்ற உண்மையை விளங்கிக்கொள்ளாதவர்கள், உடற்கல்வி என்றவுடனே குழம்பிப் போய் விடுகின்றார்கள். உடன் இருப்பவர்களையும் குழப்பி விடுகின்றார்கள். குதர்க்கம் பேசுகிறார்கள்.

அவர்கள் குழப்பத்திற்குக் காரணம் புரியாமைதான். உடற்கல்வி, உடற்பயிற்சி, உடல் கலாச்சாரக் கல்வி, உடல் நலக்கல்வி, உடல் தகுதி என்றெல்லாம் பேசப்படுகிற போது, அவர்கள் அறியாமையின் காரணமாக புரியாமல் பேசுகின்றார்கள். அவற்றின் விளக்கத்தை இனி காண்போம்.