எனது நண்பர்கள்/சோ. சு. பாரதியார்

விக்கிமூலம் இலிருந்து
சோ. சு. பாரதியார்

எட்டையாபுரத்து மண்

ட்டபொம்மன் வரலாற்றைப் படிக்கும் பொழு தெல்லாம், எட்டையாபுரத்து மண்ணின்மீது ஒரு வெறுப்புத் தோன்றும். “தமிழ் வாழ்க” என்று ஒலித்த தமிழர்களின் தலையில், அங்குள்ள தமிழர்களே கல்லாலடித்துக் செங்குருதியை வழியவிட்ட வரலாறும், அம் மண்ணை வெறுக்கச் செய்யும். என்றாலும் தமிழ் வளர்த்த மன்னர்களை தமிழ் வளர்த்த புலவர்களை, தமிழ் வளர்த்த பாரதிகளை வளர்த்த மண் என்ற எண்ணமும் உடனே வரும். மனம் மாறும்; புண் ஆறும்.

மணியும் முத்தும்

தந்தை சுப்பிரமணியம், தாய் முத்தம்மாள். இந்த மணியிலிருந்தும் முத்திலிருந்தும் பிறந்த தமிழ் ஒளியை நிலவொளி என நினைத்தோ, தந்தையின் நெருங்கிய உறவினரும் அக்காலப் பிரசங்க கேசரியுமாகிய திரு. சோமசுந்தரநாயகரை எண்ணியோ, இவ்வொளிக்குச் சோமசுந்தரம் எனப் பெயரிட்டனர். பிறந்த ஆண்டு 1879).

சோ. சு. பாரதி

இது சோமசுந்தர பாரதி என்றாகாது. சோமு பாரதி சுப்பு பாரதி என்ற இரட்டையர்களைக் குறிக்கத்தோன்றிய ஒரு சொற்றொடர். சோ. பாரதியின் விட்டிற்குப் பக்கத்து வீடே சுப்பிரமணிய பாரதியின் வீடு. சோ. பாரதிக்கு சு. பாரதி மூன்றாண்டுகளுக்கு இளையவர். இருவரும் தோழர்கள். இவ்விருவரின் பெற்றோரில் எவரும் தமிழ்ப் புலவரல்லர். இருந்தும், இவர்கள் இருவருக்கும் தமிழில் ஒரு வெறி தோன்றியது பெரிதும் வியப்பிற்குரியதாகும்.

சந்தேகப் பாரதி

மூன்று வயதில் சம்பந்தர் எப்படித் தேவாரம் பாடினார் என்ற சந்தேகம் சோ பாரதிக்கு இருந்தது. அத்தகைய சந்தேகப் பாரதியை ஏழு வயதில் வெண்பாவைப் பாடிக்காட்டி நம்ப வைத்தவர் சுப்பிரமணிய பாரதி.

பயங்கொள்ளிப் பாரதி

திண்ணைப் பள்ளிக்கூடத்திலோ, தமிழாசிரியர்களிடத்திலோ இவர்களிவரும் தமிழ் படித்ததில்லை. இவர்கள் இருவரும் தமிழ்படித்தவிடம் எட்டையாபுரத்துச் சிவன்கோயிலின் உட்பிரகாரத்து வாகன மண்டபம். அதிலும் பெற்றோர்கள் பார்த்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், வாகனத்தின் மறைவிலிருந்து தமிழ் படித்தவர்கள். காரணம், ‘தமிழ் படித்தால் அடி உறுதி’ என்ற அச்சமேயாம். நீங்கள் எப்போதாவது எட்டையபுரத்துக்குச் சென்றால், தமிழ்த் தாய் இப்பிள்ளைகளுக்கு, அன்பால் தன்பால் கொடுத்து வளர்த்த அவ்விடத்தையும் அவர்கள் புத்தகங்களை மறைத்து வைத்திருந்த கோவில் வாகனங்களையும் பார்த்து மகிழுங்கள்.

பட்டம் பெற்ற பாரதி

ஆம், கடையம் என்ற ஊரில்தான் சுப்புவிற்குத் திருமணம் கூடியது. சோமு இல்லாமல் சுப்புவின் திருமணம் நடைபெறுமா? எல்லாரும் கடையம் சென்றனர். மணக்கோலத்திலிருந்த சுப்பிரமணியத்திற்கும், தோழமையாயிருந்த சோமசுந்தரத்திற்கும் அங்கு வந்திருந்த புலவர் பெருமக்களால் அளிக்கப்பெற்ற பட்டமே ‘பாரதி’ பட்டமாகும். அப்போது சோமுவுக்கு வயது பதினைந்து. சுப்புவுக்கு வயது பன்னிரண்டு. அதுமுதல் இருவரும் சோமசுந்தரபாரதி, சுப்பிரமணிய பாரதி என்றானார்கள். புலவர்கள் வழங்கிய பட்டம் இவ்விருவரின் புலமையை வியந்தேயாகும். பாரதி என்பதன் பொருள், சரசுவதி என்பது. அது கலைமகளை, அவளருளைக் குறிக்கும். எனினும் இவர்கள் அதற்குக் கூறும் விளக்கம் “பாரதத் தாயின் மக்கள் யாவரும் பாரதி” என்பதே.

மாணவ ஆசிரிய பாரதி

இருவரும் தமிழ் இலக்கணம் பயின்றார்கள். தாமாகவே படித்தார்கள். ஓய்வுள்ள போதெல்லாம் படித்தார்கள். சோமுவுக்குச் சுப்பும் சுப்புவுக்கு சோமுவுமே இலக்கண ஆசிரியர்களாகத் திகழ்ந்தார்கள். தமிழ்க்கலையும், அலையும் புரண்டுவரும் காவிரியை அரங்கம் தடுத்து அங்கேயே பிரித்து விட்டதைப் போல, அன்பு புரண்டு வரும் இவ்விருவரையும் ஆங்கிலப் படிப்பு தடுத்து அவ்விடத்திலேயே பிரித்துவிட்டது.

வழக்கறிஞன் பாரதி

சென்னைக் கிருத்துவக் கல்லூரியில் பயின்ற சோம. சுந்தர பாரதியார் பி.ஏ. பட்டத்தைப் பெற்றது 1902ஆம் ஆண்டில். அப்போது அவருக்கு வயது 23. அதன் பிறகு, சட்டக் கல்லூரியில் பயின்று பி.எல். பட்டமும் பெற்றார். அது 1905ஆம் ஆண்டில். அப்போது சட்டப்படிப்பின் காலம் மூன்று ஆண்டுகளாகும். வழக்கறிஞர் தொழிலை உடனே தொடங்கினார். தொடங்கியது துாத்துக்குடியில். அங்கு 15 ஆண்டுகள் நடத்தியபிறகு, மதுரைக்கு வந்து 10 ஆண்டுகள் வரை இத்தொழிலை நடத்தினார். அக். காலத்தில் இவரது தொழில் பலரது கவனத்தையும் ஈர்ப்பதாக இருந்தது வழக்கறிஞர் தொழிலைத் தொடர்ந்து நடத்திக் கொண்டுவந்து, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரியில் படிக்காமல் தாமாகவே தனித்துப் படித்து எம்.ஏ. பட்டம் பெற்றார். அது 1915 ஆம் ஆண்டில். இந்நிகழ்ச்சி அக்காலத்தில் பலருக்கு வியப்பை யளித்தது.

எழுத்தாளன் பாரதி

தமிழ் மொழியில் சிறந்த கருத்துக்களை உயர்ந்த நடையில் அழகு பெற அமைத்து, அழுத்தமாக எழுதும் ஆற்றல் ஒரு தனிப்பட்ட முறையாகப் பாரதியாரிடம் அமைந்திருந்தது. அவரது கட்டுரைகளை விரும்பிக் கேட்டு வாங்கி வெளியிட்டு வந்த அக்காலப் பத்திரிகைகள் மதுரைச் செந்தமிழ்”, கரந்தை தமிழ்ப் பொழில்,” சென்னைச் செந்தமிழ்ச் செல்வி முதலியன.

பேச்சாளன் பாரதி

வள்ளுவன் வரலாற்றை அறிய புலவர்கள் விரும்பினர். அதற்காக ஒரு பெருங்கடிட்டத்தைச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பேராதரவோடு கூட்டினர். கட்டியவிடம் பச்சையப்பன் கல்லூரி மண்டபம். கட்டிய நாள் 1929ஆம் ஆண்டு, மார்ச்சுத் திங்கள், 11ஆம் நாளாகும். பேசியவர் சிலர். வெற்றி பெற்றது பாரதியின் பேச்சு. ஒப்பியவர்களில் தலைமை வகித்தவர் உ.வே. சாமிநாத ஐயர். இப்பேச்சு புத்தக வடிவில் வெளியிடப் பட்டிருக்கிறது.

கவிஞன் பாரதி

இவர் எழுதிய கவிதைகள் பல. அவற்றுள் முழுவதும் கவிதைகளாக வெளிவந்த நூல்கள் இரண்டு. ஒன்று “மாரிவாயில்”; மற்றொன்று “மங்கலக் குறிஞ்சி பொங்கல் நிகழ்ச்சி.” இக்கவிதைகட்கு என்றும் உயிர் உண்டு.

ஆராய்ச்சியாளன் பாரதி

“சேரர் தாயமுறை” “தசரதன் குறையும், கைகேயி ...நிறையும்,” “சேரர் பேரூர்” என்று தமிழ்மொழியில் இவர் மூன்று ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இம்மூன்று நூல்களும் தமிழ் அறிஞர்களுக்குப் பெருவிருந்தளிப்பன.

தொல்காப்பியப் பாரதி

தொல்காப்பியத்துள் பொருளதிகாரத்தை ஆராய்ந்து அகம், புறம், மெய்ப்பாடு ஆகிய மூன்று பிரிவுகளுக்கும் விளக்கம் எழுதித் தனித்தனி நூல்களாக வெளியிட்டிருக்கின்றனர். இன்னும் சில கருத்துக்கள் அச்சிடப்படாமல் இருக்கின்றன. தொல்காப்பியத்தில் ஏற்படும் ஐயப்பாடுகளை நீக்கும் ஒரே புலவன் பாரதி. இவர்களோடு தொல்காப்பியத்தின் பரம்பரைப் புலமை அற்றுப் போகாதிருக்க வேண்டுமே என்ற கவலை, இன்றைய தமிழறிஞர்களுக்கு உண்டாக வேண்டும் என்பதே என் கவலை.

நூலாசிரியர் பாரதி

“தமிழகமும் பழந்தமிழ் நூல்களும்” என்ற பெயரில் ஓர் அரிய நூலை ஆங்கில மொழியில் எழுதி உலக நூலாசிரியர் குழுவில் ஒருவராகத் திகழ்பவர் பாரதி. தமிழை, தமிழரை, தமிழகத்தை அறிய விரும்பும் பிற நாட்டினர்க்கு, இந்நூல் பெருந்துணையாக இருந்து வருகிறது.

சீர்திருத்த வீரன் பாரதி

சாதி வெறி தலைவிரித்து ஆடி நின்ற அக்காலத்திலேயே சாதிமுறை ஒழிந்தாக வேண்டும் என எழுதி, பேசி, நடந்து காட்டியவர் பாரதி. அக்காலத்தில் தம் திருமணத்தையே தமிழ்த் திருமணமாக நடத்திக்காட்டியவர்.

அரசியல் தலைவன் பாரதி

இளமையிலிருந்தே பாரதி சிறந்த தேச பக்தர்; வ.உ.சியுடன் இருந்து பெருந்தொண்டு செய்தவர். வர மறுத்துங்கூட காந்தியடிகளைக் கட்டாயப்படுத்தித் தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்று பேசச் செய்தவர் என்றும் பாரதியாருக்கு, காந்தியடிகள் மீது மாறாத அன்பு உண்டு.

நடுநாள் கண்ட பாரதி

ஆரியர்களுக்கு நாள் தொடக்கம் காலை 6 மணி. அராபியர்களுக்கு நாள் தொடக்கம் மாலை 6 மணி. ஐரோப்பியர்களுக்கு நாள் தொடக்கம் நள்ளிரவு 12 மணி. ஆனால் தமிழர்களின் நாள் தொடக்கம் நண்பகல் 12 மணி எனக்கண்டு கூறியவர் பாரதி. இக்கருத்தை அரண் செய்வது புறம் 280இல் ‘நடுநாள் வந்து’ என்ற. சொற்றொடர்.

சான்று காட்டும் பாரதி

பல சமயங்களில் பாரதியார் கூறும் முடிவைவிட அவர் காட்டும் சான்று சிறப்புடையதாகவிருக்கும். அவற்றுள் ஒன்று இது. ‘திருவள்ளுவ மாலை வள்ளுவர் காலத்திலேயே பாடப்பெற்றது அல்ல’ என்பது பாரதியின் முடிவு. அதற்கவர் காட்டும் சான்று உயிரோடிருக்கும் காலத்தில் ஒருவரை ஒருவர் பாராட்டுகின்ற வழக்கம் தமிழ்ப் புலவர்கள் தோன்றிய காலந்தொட்டு இன்றுவரையில்லை’ என்பதே.

பேராசிரியர் பாரதி

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அழைப்பை: ஏற்று, மதுரையில் தாம் நடத்தி வந்த வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டுச் சென்று, ஐந்து ஆண்டுக் காலம் பேராசிரியராக இருந்து தமிழ்ப்பணி செய்து வந்தவர். இது 1988 முதல் 1988 வரையாகும்.

பெரும் புலவன் பாரதி

பாரதியார் பழங்காலத்துப் பெரும் புலவர்களில் ஒருவராக விளங்கியவர். அவரோடு ஒத்த புலவர்கள் பலர். அவர்களிற் குறிப்பிடத் தகுந்தவர்கள்: வெள்ளக்கால் திரு வி.பி. சுப்பிரமணிய முதலியார். உ. வே. சாமிநாத ஐயர், அரசன் சண்முகனார், ரா.இராகவையங்கார், மு.ரா. கந்தசாமிக்கவிராயர், மு.ரா. அருணாசலக் கவிராயர், பா. வே. மாணிக்க நாயக்கர், சுவாமி விபுலானந்தர், நாட்டாரய்யா, நெல்லையப்பக் கவிராயர், கரந்தைக் கவியரசு வேங்கடாசலம்பிள்ளை, கா. சுப்பிர மணியப்பிள்ளை முதலியோர் ஆவர்.

புலவர் தலைவன் பாரதி

இவர்களிடம் பயின்ற மாணவர்களில் பலர் இன்று பெரும் புலவர்களாகவும், பேராசிரியர்களாகவும் திகழ்கின்றனர். அவர்களிற் சிலர் தமிழ்த்துறைக்குத் தலைமை வகித்துத் தனித்தனியாகப் பல கல்லூரிகளையும், பல்கலைக் கழகத்தையும் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் எனக்குத் தெரிந்தவர்கள் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் அவர்கள், பூ. ஆலால சுந்தரம் செட்டியார் அ.ச. ஞானசம்பந்தன், வெள்ளை வாரணனார், இராசரத்தினம் அம்மையார், எஸ். இராசாமணி அம்மையார் முதலியோர்.

வாது புரியும் பாரதி

“தசரதன் குறையும் கைகேயி நிறையும் என்ற நூலைப்பற்றி, புலவர் சிலர் மனக்குறையடைந்த செய்தி, இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி அவர்கட்கு எட்டியது. அவர் தமது அவைப் புலவராகிய திரு.ரா. இராகவையங்கார் அவர்களை அழைத்து, இது பற்றிப் பாரதியாரோடு வாது புரியலாமா?’ என வினவினார். அய்யங்கார் விரிந்த மனப்பான்மையுடையவர். ஆதலின் அவர் கூறிய விளக்கத்தினால் அது நடைபெறாமற் போயிற்று.

உண்மை கண்ட பாரதி

சேரன் தலைநகராகிய வஞ்சி, திருச்சியை அடுத்துள்ள கரூரே என்று மு. இராகவையங்கார் அவர்கள் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்கள். பாரதியார் அதை மறுத்துத் திருச்சியில் உள்ள கரூரில் கடற்கரைப் பகுதி: இல்லையென்பதை எடுத்துக்காட்டிச் “சேரநாட்டுக் கடற்கரைப் பகுதியிலுள்ள பட்டினமே வஞ்சியும், கரூரும் ஆகும்” என நிலை நாட்டினார். காலப் போக்கில் உண்மை பாரதியாரையே தழுவியது.

நாவலர் பாரதி

சுவாமி விபுலானந்தர் அவர்களின் அழைப்பினை ஏற்றுப் பாரதியார் இலங்கைக்கும், யாழ்ப்பாணத்திற்கும் சென்று தமிழ்மழை பொழிந்தார். மனங்குளிர்ந்த அங்குள்ள புலவர் பெருமக்களால் வாழ்த்தி வழங்கப்பெற்ற பட்டமே “நாவலர்” பட்டமாகும். ஒல்லும் வகையெல்லாம் ஓயாமல் தொண்டுசெய்து மொழியை வளர்த்த மூதறிஞர் நாவலர்க்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினர், சென்னை மாநிலம் முழுவதையும் கூட்டி வைத்து வழங்கி மகிழ்ந்த பட்டமே ‘டாக்டர்’ பட்டமாகும்.

உணர்ச்சி வெள்ளம் பாரதி

சுப்பிரமணிய பாரதி புதுச்சேரி சென்று செயலிழந்து இருந்தபோது எவரும் எதுவும் பேசாதிருந்தனர். காரணம் அவரைப்பற்றிப் பேசினால், அது “'அரசத், துரோகக் குற்றம்’” ஆகும் என்பதே. அக்காலத்தில் சுப்பிரமணிய பாரதியைப் புதுச்சேரியில் விட்டு வைத்திருப்பது தமிழுக்கு ஓர் இழப்பு, தமிழனுக்கு ஓர் இழிவு. தமிழகத்திற்கு ஒரு மானக்கேடு என்று எழுதிப் பேசிக் கண்டித்துச் செய்தித்தாள்களில் வெளியிட்டுப் பயனை எதிர்பார்த்திருந்த உணர்ச்சிவெள்ளம் பாரதியின் உள்ளம். இதற்காக விடுதலை பெற்று வந்ததும் சு. பாரதி, சோ. பாரதியைக் கட்டித் தழுவிக் கண்ணீருகுத்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.

இத்தகைய உயர்ந்த தமிழ் மகனாரது நூல்களைப் படித்துப் பயன்பெற வேண்டியது தமிழ் மக்களின் தலை சிறந்த கடமையாகும். வாழட்டும் பாரதியின் புகழ்! வளரட்டும் தமிழ்மொழி!