எனது நாடக வாழ்க்கை/கம்பெனி நிறுத்தம்

விக்கிமூலம் இலிருந்து
கம்பெனி நிறுத்தம்

நவம்பர் 11ஆம் நர்ள் எல்லோரும் ஈரோட்டுக்குத் திரும்பினோம். மேனகா படத்திற்காக எங்களுக்கு மொத்த வருவாய் பதினாலாயிரம் ரூபாய்கள். அதில் நடிகர்களுக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கும் கொடுத்ததுபோக எங்கள் நால்வரின் உழைப்புக்கு எண்ணாயிரம் ரூபாய்கள் மிஞ்சியது. கம்பெனியைத் தொடர்ந்து நடத்தப் பெரியண்ணா விரும்பவில்லை. நாடகசாலை களெல்லாம் பேசும் படக்காட்சி சாலைகளாக மாறிக் கொண்டிருந்தன. வாடகை பன்மடங்கு உயர்ந்து விட்டது. நெடுங்காலம் நாடக எந்திரத்தில் சிக்கிக் கொண்டு சுழன்று வந்த எங்கள் வாழ்க்கையில், சினிமா உலகம் சிறிது சாந்தியை உண்டாக்கியது. இந்நிலையில் மீண்டும் தொல்லையில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது என்றே தோன்றியது. எங்கள் குடும்பத்திலும் சில அவசியமான காரியங்கள் நடைபெற வேண்டியிருந்தன. எல்லாவற்றையும் உத்தேசித்து 1935 நவம்பர் 11ஆம் தேதியோடு கம்பெனியைக கலைத்துவிட்டு நாகர்கோவிலுக்குப் போக திட்ட மிட்டார் பெரியண்ணா. நடிகர்கள் எங்களிடம் விடை பெற்றுக் கொண்டு பிரிந்தபோது, எங்கள் கண்கள் கலங்கின. மீண்டும் கம்பெனி துவக்குவோம் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லாததால் துக்கம் தாங்க முடியவில்லை.

தேர்தல் பிரசாரம்

அந்தச் சமயத்தில் காங்கிரஸ், சட்ட சபையைக் கைப்பற்றும் முதல் தேர்தல் இந்தியா முழுவதும் நடைபெற்றது; ஈரோட்டுப் பகுதியில் பழைய கோட்டை பட்டக்காரர் திரு நல்லதம்பிசக்கரை மன்றாடியார் காங்கிரஸ் சார்பிலும், அவருக்குப் போட்டியாகக் குட்டப்பாளையம் திரு கே. எஸ். பெரியசாமிக் கவுண்டரும் நின் றார்கள். திருமதி கே. பி சுந்தராம்பாள் அம்மையார், காங்கிரஸ் சார்பில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். நாங்கள் பம்பாயிலிருந்து திரும்பியதும் அவர்களை ஈரோட்டில் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் தம்முடன் என்னைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவேண்டுமென்று விரும்பினார்கள். திரு ஈஸ்வரன், திரு முத்துக்கருப்பன் செட்டியார், குழந்தைவேலு செட்டியார் முதலிய காங்கிரஸ் தலைவர்கள் இதை ஆமோதித்தார்கள். ஈரோடு ஈஸ்வரன் சிறந்த தேச பக்தர். நாங்கள் முதன் முதல் ஈரோட்டுக்குச் சென்ற காலத்தில் நெருங்கிப் பழகியவர். முற்போக்கான லட்சியங்களைக் கொண்டவர். நாங்கள் பம்பாய் சென்றபோது அவரையும் எங்களுக்குத் துணையாக அழைத்துச் சென்றிருந்தோம். எல்லோரிடமும் இனிய முறையில் பழகுபவர். அவருடைய வேண்டுதலைப் புறக்கணிக்கப் பெரியண்ணாவால் இயலவில்லை. எனவே பெரியண்ணாவும் இதற்கு ஒப்புதல் தந்து, நாகர்கோவில் பயணத்தை இரண்டு நாட்கள் ஒத்திப்போட்டார், நான் கே. பி. எஸ். அவர்களுடன் கிராமம் கிராமமாகச் சுற்றித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டேன்; நான் பாடுவேன். கே. பி. எஸ். அவர்கள் பேசுவார்; கே.பி. எஸ். பாடினால், நான் பேசுவேன். இறுதியில் கே.பி. எஸ். மஞ்சள் பெட்டியின் மகிமையைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசுவார். இப்படியே ஈரோடு தாலுக்காவில் பல கிராமங்கள் சுற்றினோம், அப்போது கே. பி. எஸ். அவர்கள் பேசிய ஆவேசப் பேச்சை இன்னும் என்னல் மறக்க முடியவில்லை. கொடுமுடிவரை போய் சுந்தராம்பாள் அம்மையாரிடம் விடை பெற்றுக் கொண்டு திரும்பினேன்.

பிரியா விடை

19ஆம் தேதி நாகர்கோவிலுக்குப் பயணம் என்பது உறுதி செய்யப்பட்டது. எங்களிடமிருந்த சீன் சாமான்களையெல்லாம் அருகிலுள்ள பவானி கொட்டகையில் கட்டி வைக்க ஏற்பாடு செய்தோம். உடைகள் வைக்கும் பெட்டி, புத்தகப் பெட்டி எல்லாமாகப் பதினறு பெரிய பெட்டிகள் இருந்தன. அவற்றை எங்கள் நண்பரும், சமய சஞ்சீவியுமான கிட்டு ராஜூவிடம் ஒப்படைத்தோம். மற்றும் சில சாமான்களை சீன் வேலையாட்களுக்குக் கொடுத்தோம். எல்லா வேலைகளும் முடிந்தன. புறப்படும் நாள் காலையில் பெரியார் ஈ. வே. ரா. அவர்களிடம் விடைபெறச் சென்றோம், நாங்கள் கம்பெனியை நிறுத்தப் போகிறோம் என் பதை அவர் எதிர்பார்க்கவே இல்லை. செய்தியைக் கேட்டதும் மிகவும் வருந்தினார்.

“இனிமேல்தான் உங்கள் நாடகக் குழுவுக்கு நல்ல எதிர் காலம் இருக்கிறது. இந்த நல்ல சமயத்தில் கம்பெனியை நிறுத்துவது சரியல்ல. அவசியமானல் சில மாதங்கள் ஒய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் கம்பெனியைத் தொடர்ந்து நடத்துங்கள். இதை என்னுடைய அறிவுரையாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று பரிவோடு கூறினார். மற்றும் ஈரோட்டிலிருந்த எங்கள் நண்பர்கள் அனைவரிடமும் விடைபெற்றுகொண்டு அன்று பகல் ரயிலில் புறப்பட்டு மறுநாள் இரவு ஏழு மணியளவில் நாகர் கோவில் வந்து சேர்ந்தோம். எங்கள் நாடக வாழ்க்கையில் ஒரு பகுதி முடிந்தது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது.

பெரியண்ணாவுக்கு நாடக வாழ்க்கையில் அலுப்புத் தட்டி விட்டது. 1918 முதல் 1935 வரை பதினேழு ஆண்டுகள் ஒய்வின்றி உழைத்ததின் பலனை எண்ணிப் பார்த்த பிறகு அவருக்கு நாடகம் என்றாலே வேப்பங்காயாகிவிட்டது. படத்தில் கிடைத்த சொற்ப ஊதியத்தையும் பாழாக்கி விட மனமின்றி வேறுதொழில்களில் ஈடுபட முயற்சித்தார். படத்தில் எங்களுக்குக் கிடைத்த தொகையைக் கொண்டு அடகு வைத்திருந்த நிலத்தை மீட்டோம்.

தங்கையின் திருமணம்

தங்கை சுப்பமாளுக்கு வரன் தேடும் முயற்சியில் ஈடுபட்டோம். நாடகக்காரர்களின் குடும்பத்தில் பெண் கொள்ளப் பெரும்பாலோர் விரும்பவில்லை. நாகர்கோவிலுக்கு மூன்றாவது மைலிலுள்ள சுசீந்திரம் அக்கரையில் தங்கைக்குப் பொருத்தமான வரன் கிடைத்தார். மாப்பிள்ளைக்குத் தாய் தந்தை இல்லை. தமையனும் தமக்கையும் முன்னின்று பேச்சு வார்த்தைகளை முடித்தார்கள். 1936 பிப்ரவரி 2 ஆம் தேதி சுப்பையாபிள்ளைக்கும், சுப்பம்மாளுக்கும் திருமணம் நடந்தேறியது.

தங்கையின் திருமணத்திற்கான செலவுகள் போகமீதியிருந்த் சொற்பத் தொகையைக் கொண்டு ஒரு சிறிய ஷராப் கடை வைக்க ஏற்பாடு செய்தார் பெரியண்ணா. நாகர்கோவில் மணி மேடையின் பக்கம் ஷராப் கடை தொடங்கப் பெற்றது.

மேனகா படம் வெளி வந்தது. அமோகமான வசூல், எங்கள் நால்வருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. பத்திரிகைகளில் வெளி வந்த விமர்சனங்களையெல்லாம் ஆர்வத்தோடு வாங்கிப் படித்தேன். திருநெல்வேலியில் மேனகா திரையிடப் பெற்றது. நாங்களும் என். எஸ். கிருஷ்ணனும் சென்று கலந்துகொண்டோம். இடைவேளையில் எங்களைப் பேசச் சொல்லி ரசிகர்கள் கூச்சலிட்டார்கள். நானும் என்.எஸ். கிருஷ்ணனும் ரசிகர்களுக்கு நன்றி கூறிப் பேசினோம். கலைவாணர் என்.எஸ். கிருஷணன் தொடர்ந்து படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனக்கும் தம்பி பகவதிக்கும் தனித்தனியாகச் சிலரிடமிருந்து படத்தில் நடிக்க அழைப்புக்கள் வந்தன. பெரியண்ணா எங்களைப் பிரித்து அனுப்ப விரும்பவில்லை. நாங்களும் அப்படி போக விரும்பவில்லை. எனவே தொடர்ந்து நடிக்க இயலாது போயிற்று.

நண்பர்கள் வற்புறுத்தல்

சில மாதங்கள் ஒடிமறைந்தன. உழைப்பினிலே இன்பம் கண்ட எங்கள் மூவருக்கும் சும்மா இருப்பது கஷ்டமாக இருந்தது. பெரியார் ஈ. வே. ரா. அவர்கள் மீண்டும் கம்பெனியைத் தொடங்குமாறு வற்புறுத்தியதாக ஈரோட்டிலிருந்து நண்பர் ஈஸ்வரன் எழுதியிருந்தார். எங்கள் மீது அன்பு கொண்ட மற்றும் பல நண்பர்கள் நாடகக்குழுவை நடத்தியே தீரவேண்டுமென அன்புக் கட்டளைகள் விடுத்தனார். எங்கள் பால் மாருத அன்பு கொண்ட கலை வள்ளல் எட்டையபுரம் இளைய ராஜா திரு காசிவிசுவநாத பாண்டியன் மீண்டும் குழுவைத் தோற்றுவிக்குமாறு அன்புடன் வேண்டினார். இரவு நேரங்களில் எங்களுக்குச் சரியான உறக்கம் இல்லை. இராமாயணம், மகாபாரதம், முதலிய நாடகங்களையெல்லாம் பல்வேறு நூல்களைக்கொண்டு நன்கு ஆராய்ந்து புதுமுறையில் இந்த ஓய்வு நாட்களில் எழுதி முடித்தோம். நாடகக் கம்பெனியைத் தொடங்குமாறு நாங்களும் பெரியண்ணாவை வேண்டினோம். எங்கள் சோர்வுற்ற நிலையைக் கண்டு அவரது மனமும் மாறி யது. வாழ்ந்தால் நாடகத் துறையில் வாழ்வது, வீழ்ந்தாலும் இத்துறையிலேயே வீழ்வது என்ற முடிவுடன் நாகர்கோவிலி: லிருந்து புறப்பட்டோம்.