எனது நாடக வாழ்க்கை/குமார எட்டப்ப மகாராஜா

விக்கிமூலம் இலிருந்து
குமார எட்டப்ப மகாராஜா

மதுரையில் நடைபெற்ற நாடகங்களை எட்டையபுரம் அரண்மனை அதிகாரிகள் சிலர் வந்து பார்த்தார்கள். அவர்கள் மூலம் நாடகங்களின் சிறப்பை அறிந்த எட்டையபுரம் அரசர், தமது திவானை அனுப்பிக் கம்பெனியை எட்டையபுரத்திற்கு அழைத்தார். அரசனின் அழைப்பை ஏற்று, எட்டையபுரம் சென்றாேம். எட்டையபுரம் கொட்டகையில் நாடகங்கள் நடை பெற்றன. அப்போது எட்டையபுரம் அரசராக இருந்தவர் குமார எட்டப்ப மகாராஜா. இவர் மிகுந்த கலையுண்ர்ச்சியுடையவர்: வயது முதிர்ந்தவர்; தாத்தா மகாராஜா என்றுதான் இவரைக் குறிப்பிடுவார்கள். இவரது புதல்வர்கள் இருவ மூத்தவர் தங்க மகாராஜா. இளையவர் காசி மகாராஜா. எல்லோரும் கலையறிவு நிறைந்தவர்கள். ஊருக்குப் பொதுவாக அமைக்கப் பெற்றிருந்த நாடக அரங்கத்தைத் தவிர, அரசருக்கென்றும், அவரது புதல்வர்களுக்கென்றும் தனித்தனியாகப் பல நாடக அரங்குகள் அங்தவர் அரண்மனைக்குள்ளேயே அமைக்கப் பெற்றிருந்தன. தாத்தா மகாராஜாவுக்கு முன்னர் அரசராக இருந்தவர் ராஜா ஜெகவீர ராம வெங்கடேசுர எட்டப்பர். அவர் காலமாகிவிட்டதாலும், அவருக்குப் புதல்வர்கள் இல்லாததாலும் ஜமீன் பட்டம் அவரது சிற்றப்பாவாகிய இளைய பரம்பரைக்கு வந்து விட்டது.

தாத்தாவின் அறிவுரை

எட்டையபுரம் போன இரண்டாம் நாள் நாங்கள் அனைவரும் தாத்தா மகாராஜாவைப் பார்க்கப் போனோம். பிரம்மாண்டமான அரண்மனை, அதற்கு முன் அதைப் போன்ற ஒருகட்டிடத்தை நாங்கள் பார்த்ததே இல்லை. அரசர் சாய்மான நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவர் எங்களைப் போலவே இடுப்பில் வேட்டி, மேலே சட்டை எல்லாம் போட்டுக் கொண்டு சாதாரணமாக இருந்தார். நான் அரசரை வேறுவிதமாக உருவகப் படுத்தி வைத்திருந்தேன். வெல்வெட் சரிகையில் கால்சட்டை, மேலங்கி யெல்லாம் அணிந்திருப்பார்; பீதாம்பரம் மேலே போட்டிருப்பார், என்றெல்லாம் எண்ணியிருந்தேன். அரசர் சாதாரணமாகவும், எளிமையாகவும் இருக்கவே எங்களுக்குத் தைரியம் ஏற்பட்டது. நாங்கள் எல்லோரும் கைகூப்பி வணங்கி நின்றோம். அவர் எங்களிடம் நாடகங்களைப்பற்றிப் பேசத் தொடங்கினார், ஓயாமல் பேசிக் கொண்டே இருந்தார். திடீரென்று ஒரு நிமிடம் பேச்சை நிறுத்திவிட்டு, “நீங்களெல்லாம் குடிகாரர்களாகிக் கெட்டுப் போகக் கூடாது. எம். ஆர். கோவிந்தசாமி, குடியினால்தான் அழிந்தான். இன்னும் எத்தனையோ கலைஞர்கள் குடிப் பழக்கத்தால் நாசமாகியிருக்கிறார்கள். இந்தக் காலத்தில் தந்தையார் கூடத் தம் புதல்வர்களுக்கு மருந்து என்று சொல்லி மது வகைகளைக் கொடுக்கிறார்கள். அப்படிக் கொடுத்தாலும் நீங்கள் குடிக்கக் கூடாது. பிறகு அதுவே பழக்கமாகி விடும்” என்றார்.

அரசர் இவ்வாறு கூறியதும் நானும், சின்னண்ணுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். சென்னையில் எங்கள் தந்தையார் மலேரியா ஜுரத்திற்குப் பிராந்தியை மருந்தாகத் தந்தது நினைவிற்கு வந்தது.

கல்யாணராமையர்

அரசரின் எதிரே ஆள் உயரத்தில் ஒரு படம் சுவரில் மாட்டப் பெற்றிருந்தது. வேட்டியை மூலக் கச்சமாகக் கட்டி, நீண்ட கோட்டு, தலைப்பாகையெல்லாம் அணிந்து, அந்தப் படத்தில் காணப்பட்ட உருவத்தை நாங்கள் யாரோ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என எண்ணினோம். அரசர் அந்தப் படத்தை எங்களுக்குச் சுட்டிக் காட்டி,

“இதோ, இந்தப் படத்திலிருப்பவர்தான் பிரபல நடிகர் கல்யாணராமையர். பெண்ணாக நடிப்பதற்கு அவரைப்போல் இனியொருவர் பிறக்க வேண்டும். பாமா விஜயத்தில் அவர் சத்தியபாமாவாக நடித்தது இன்னும் என்கண்முன்னே நிற்கிறது. அவரது நினைவு மாறாதிருக்கவே இந்தப் படத்தை எதிரே வைத்திருக்கிறேன். நானறிந்தவரையில் இவர் ஒருவர்தான் குடிக்காத நடிகர்” என்று கூறினார்.

பிறகு, கல்யாணராமையர் நாடகக் குழுவின் சிறப்பையும், அந்தக் குழுவில் நடிகர்களாக இருந்த ராமுடு ஐயர், சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோர் பெருமையையும்பற்றி நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தார். சிறுவர்களாக இருந்ததால், அவருடைய நீண்ட பேச்சு எங்களுக்கு அலுத்துப் போய்விட்டது. பிறகு, தம் சமஸ்தானத்தின் வெளியீடாக அச்சிட்ட கல்யாணராமையரின் பாமா விஜயம், லதாங்கி ஆகிய இரு நாடகங்களையும் கொண்டு வரச் சொல்லி, என் கையில் ஒரு பிரதியும் சின்னண்ணா கையில் ஒரு பிரதியும் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.

மனோஹரனுக்குச் சிறப்பு

அன்றிரவு அரசரின் அரண்மனை அரங்கில் மனோஹரா நாடகம் வைக்கப் பெற்றிருந்தது. அரசரும், அவரது இகளய புதல்வர் காசி மகாராஜாவும், மற்றும் சில அதிகாரிகளும் மட்டும் கூடியிருந்தார்கள். அவர்களுக்குப் பின்புறம் அந்தப்புரப் பெண்கள் இருப்பதாகப் பேசிக் கொண்டார்கள். ஆனால், எங்களுக்குத் தெரியவில்லை. பத்துப் பதினைந்து பேர் முன்னிலையில் நாடகத்தை நடிப்பது எங்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அன்று எனக்கும் சின்னண்ணாவுக்கும் மிகப் பெரிய பதக்கங்கள் பரிசளிக்கப் பட்டன. ஒவ்வொரு பதக்கமும் ஆறு பவுனில் செய்யப்பட்டிருந்ததாகச் சொன்னார்கள். காட்சிகள் நடந்து கொண்டிருக்கும்போது இடையே என்னை அழைத்தார்கள். நான் போய் வணங்கி நின்றேன். காசி மகாராஜா தமது புதல்வரின் கழுத்திலிருந்த ஒரு வைரம் பதித்த சங்கிலியைக் கழற்றி என் கழுத்தில் போட்டார். அப்படியே சின்னண்ணாவுக்கும் ஒருதங்கச்சங்கிலி பரிசு கிடைத்தது. மற்றும் பலநடிகர்களுக்கும் பரிசுகள் வழங்கினார்கள். நாடகம் முடிந்து, வீடு திரும்பினோம்.

மறுநாள்காலை மீண்டும் அரசர் எங்களைக் கூப்பிட்டனுப்பினார். முதல் நாள் அரசர் உட்கார்ந்திருந்த இடத்திற்கு மிக அருகிலேயே ஒரு சிறிய நாடக அரங்கு இருந்தது. மனோஹரன் சங்கிலியறுக்கும் காட்சியை அந்த அரங்கிலே நடிக்கச் சொன்னார் அரசர். எனக்கு என்னவோபோலிருந்தது. பகல்வேளை, உடைகள் இல்லை; ஒப்பனை இல்லை; சங்கிலியில்லை. இரண்டுபேர். மேல் துண்டை என் கைகளிலே கட்டியிழுத்துப் பிடித்துக் கொண்டார்கள். நான் எப்படியோ ஒரு வகையாக நடித்தேன். அரசர், தம் பேரரின் கையிலே போட்டிருந்த மோதிரத்தைக் கழற்றி என் கையிலே போட்டார். அவரது போற்றத் தகுந்த அந்தக் கலையுணர்ச்சி, அன்று எனக்குப் புரியவில்லை. இன்று அதன் சிறப்பினை எண்ணிப் பெருமகிழ்ச்சியடைகிறேன். அன்றைய மறு நாள் காசி மகாராஜா அரண்மனையிலுள்ள நாடக அரங்கில் மனோஹரன் நாடகம் நடந்தது. அன்று தாத்தா மகாராஜா வரவில்லை. மற்றவர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். மற்றும் பல பரிசுகள் வழங்கப் பெற்றன. சின்னண்ணாவுக்கு அந்தப்புரப் பெண்கள் ஒரு புடவையைப் பரிசாக அனுப்பினார்கள்.