எனது நாடக வாழ்க்கை/டைரக்டர் ராஜா சாண்டோ

விக்கிமூலம் இலிருந்து
டைரக்டர் ராஜா சாண்டோ


மேனகா படத்தின் டைரெக்டர் ராஜாசாண்டோ அவர்களுடைய ஆடம்பரத்தையும் அந்தஸ்த்தையும் பற்றி நாங்கள் பலவிதமாகக் கற்பனை செய்து வைத்திருந்தோம். அவற்றிற் கெல்லாம் மாறாக ராஜாசாண்டோ, ஒரு குடையைக் கையில் பிடித்துக் கொண்டு சர்வ சாதாரணமாக நடத்தே கம்பெனி வீட்டிற்கு வந்தவுடன் உண்மையிலேயே எங்களுக்குப் பெரும் வியப்புண்டாயிற்று. பல ஆண்டுகளாக வடநாட்டிலேயே இருக்கிறாரே, தமிழ் மொழியையே மறந்து, ஆங்கில மோகத்தில் ஆழ்ந்திருப்பாரோவென எங்களிற்சிலர் ஐயுற்றிருந்தோம். முதல் நாள் சந்திப்பிலேயே அந்தச் சந்தேகத்தை நீக்கிவிட்டார் ராஜா. தமிழ் மொழியை மறவாதது மட்டுமன்று. தமிழிலே அருமையாக எழுதவும் ஆற்றல் பெற்றிருந்தார். தமிழ் வரிவடிவ இலக்கணம், நன்னூல், நிகண்டு முதலியவற்றையெல்லாம் அவர் மனப்பாடம் செய்திருந்தது, எங்களுக்கு ஆச்சிரியமாயிருந்தது. ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு மேலாக வடநாட்டிலேயே வசித்து இந்தி, மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம் முதலிய பிற மொழிகளிலேயே பேசிப் பழகிக் கொண்டிருந்த ராஜாவுக்குத் தமிழ் நாட்டுப் பழங் கிழவிகள் சொல்லக்கூடிய சாதாரணப் பழமொழிகளும் மறக்காமல் இருந்தன. நடிப்புச் சொல்லிக் கொடுப்பதில் ராஜாவுக்கு இணையான டைரக்டர் இந்திய நாட்டிலேயே இல்லையென்பது அன்று வடநாட்டாரும் ஒப்புக்கொண்ட உண்மை. ராஜா பாரத நாட்டின் ஒப்புயர்வற்ற நடிகப் பேரரசன். அவரிடம் பயிற்சி பெறும் போது, நடிப்பவன் சலிப்படைவானேயன்றிச் சொல்லிக் கொடுக்கும் ராஜா சிறிதும் சலிப்படைய மாட்டார்.

ஆண்களே பெண் வேடம்

ஏழாம் தேதி எல்லோருக்கும் பாடம் கொடுக்கப்பட்டது. மேனகா, நூர்ஜஹானைத் தவிர மற்றும் சில பெண் பாத்திரங்கள் இருந்தார்கள். தாசி கமலம், கோமளம், கனகம்மா ஆகிய வேடங்களைப் போடுவதற்கு உடன் பிறந்த சகோதரியர் மூன்று பேர் வந்திருந்தார்கள். பிராமண விதவையாகிய பெருந்தேவி மேனகாவில் ஒரு முக்கியமான பாத்திரம். அந்த, வேடத்தை நாடகத்தில் சின்னண்ணா டி. கே. முத்துசாமி போடுவது வழக்கம். தலையை மொட்டையடித்துக் கொண்ட பிராமணப் பெண்கள் யாரும் அந்த நாளில் சினிமாத் துறைக்கு வரச் சம்மதிக்கவில்லை. கடைசியில் சினிமாவிலும் சின்னண்ணாவே பெருந்தேவி வேடத்தைப் போட நேர்ந்தது. வேலையாள் ரங்கராஜூவின் மனைவியும் மகளும், எங்கள் குழுவில் அப்போது பிரதான நடிகர்களாக இருந்த டி.என்.சுப்பையாவும், பி.எஸ். திவாகரனும் போடுவதாக முடிவு செய்யப்பட்டது. மேனகா படம் வெளிவந்தபோது, அதற்கு ஆனந்தவிகடனில் விமர்சனம் எழுதிய கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சின்னண்ணாவின் பெண் வேட நடிப்பைப் பிரமாதமாகப் புகழ்ந்து எழுதி இருந்ததோடு, “பெருந்தேவியாக நடிப்பவர் ஒரு ஆண் மகன் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை” என்றும் குறிப்பிட்டிருந்தார். பெரியண்ணா டிப்டி கலைக்டராக நடித்தார். நடிகமணி எஸ். வி. சகஸ்ரநாமம் தாசில்தார் தாந்தோனிராயராகவும், பிரண்டு ராமசாமி, நடிப்பிசைப்புலவர் கே.ஆர். ராமசாமி, நகைச்சுவைச் செல்வன் டி. என். சிவதாணு முதலியோர் பைத்தியக்காரர்களாகவும் நடித்தார்கள். மேனகா பட ஒப்பந்தம் முடிந்த அன்றே சாமா ஐயராக நடிப்பதற்கு என். எஸ். கிருஷ்ணனையே அழைத்து வர வேண்டுமென்று பெரி யண்ணா கூறினார். அதன்படி என்.எஸ். கிருஷ்ணனும் எங்களோடு வந்திருந்தார். அவரே ஐயராகநடித்தார். மற்றும் எங்கள் குழுவி அலுள்ள பெரியவர்கள் பல சில்லரை வேடங்களில் நடித்தார்கள்.

பாட்டுத் தகராறு

மேனகா நாங்கள் நடித்த முதல் திரைப்படமாதலால் அந்தச் செய்திகள் மிகச் சுவையாக இருக்கும். அதனால்தான் சுருக்கமாகச் சொல்லாமல் சற்று விரிவாகவே எழுதுகிறேன். அப்பப்பா! பாடல்களுக்கு மெட்டு போடும் விஷயமாக ஏற்பட்ட தகராறு இருக்கிறதே, அதற்கே ஒரு தனி அத்தியாயம் எழுத வேண்டும். எவ்வளவு ரசமான விஷயம்! பாட்டு வாத்தியார் பூமிபாலகதாஸ் பெரும் புலவர். அவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. பாட்டுக்கு மெட்டு அமைப்பதா, மெட்டுக்குப் பாட்டு அமைப்பதா என்று நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. கடைசியாக மெட்டுக்கே பாட்டு அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். புலவர் பூமிபாலகதாஸ் கொஞ்சம் சிரமபட்டார். சின்னண்ணா தான் சங்கீத டைரக்டர். தமிழிலேயுள்ள இசைப் பாடல்களைப்போல் ஒரு வரம்புக்குள் அடங்காத இந்தி மெட்டுகளிலே எதுகை மோனை முதலிய இலக்கண விதிகளுக்கு உட்பட்டுப் பாடல்கள் புனைவதென்றால் எளிதான காரியமா? அதிலும் இசைப்பயிற்சியில்லாத புலவர் என்ன செய்வார்? இந்தத் தொந்தரவுகளிலெல்லாம் மாட்டிக் கொள்ளாமல் என். எஸ். கிருஷ்ணன் அவர் பாத்திரத்துக்குரிய இரண்டு பாடல்களையும் அவரே போட்டுக் கொண்டார். எனக்குரிய மூன்று பாடல்களையும் நானே புலவருடன் இருந்து புனைந்து வாங்கிக்கொண்டேன்.

தாசி கமலமாக நடிக்க வந்திருந்த அம்மையார், அவர் பாடவேண்டிய பாட்டிலுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் தகராறு செய்யத் தொடங்கினார்.

ஆசை யென்பது அளவு மீறியே
ஆஹா வெகு மோகமானேன்
அணைய வாரும் துரையே கீரும்

என்பது அவரது பாட்டின் முதலடி. இதில் ‘அணைய வாரும் துரையே’ என்ற வரியைப் பாட முடியாதென்று அம்மையார் மறுத்துவிட்டார். பாட்டு வாத்தியாரோ அந்தவரியை மாற்றவே முடியாதென்று கூறி விட்டார். தகராறு முற்றியது. கடைசியில் சின்னண்ணா அவர்கள் ‘அணைய வாரும் துரையே’ என்பதை ‘அருகில் வாரும் துரையே’ என்று மாற்றிக்கொடுத்தார். இதைப் போன்ற சில சிக்கல்களுக்கிடையே பாட்டுப் போடும் படலம் முடிந்தது.

சாமிநாதன் துரதிர்ஷ்டம்

ஒத்திகை ஆரம்பமாயிற்று. முதல் நாள் எம்.ஆர்.சாமிநாதன் நடிக்க வேண்டிய காட்சிகள். நடிப்பு இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக ராஜா விஷயங்களைத் தெளிவாக விளக்கிப் பச்சைக் குழந்தைகளுக்குச் சொல்லுவது போலப் பன்முறை சொன்னார். சாமிநாதன் நல்ல கற்பனா சக்தியுள்ள மிகச்சிறந்த நடிகர்தாம். என்றாலும் ஒத்திகையில் பூரணமாக நடிப்பதில்லை. எனவே ராஜா அவரை நடிக்கத் தெரியாதவர் என்று முடிவு கட்டி விட்டார். சாமிநாதனின் துரதிர்ஷ்டத்தை எண்ணி நாங்கள் வருத்தப்பட்டோம். பிறகு ராஜாவுக்கு ஏற்பட்ட அந்த எண்ணத்தை மாற்ற எவ்வளவோ முயன்றோம். கதையில் வரும் ரங்கராஜு பாத்திரத்தை ராஜா பிரமாதமாக உருவகப்படுத்தி வைத்திருந்தார். சாமிநாதன் ஒத்திகையில் நடித்ததைப் பார்த்ததும் அவருக்கு மிகவும் கவலையாகப் போய் விட்டது, “இந்தப் பாத்திரத்தைப் போட வேறு யாரும் இல்லையா?” என்று வெளிப் படையாகக் கேட்டது எங்களைத் துன்புறுத்தியது. நான் சாமி நாதனுக்குச் சமாதானம் கூறி, நடிக்கச் செய்தேன். ஒத்திகையில் சாமிநாதனுக்கு ஏற்பட்ட இந்த விபத்தைப் பார்த்ததும் நான் கொஞ்சம் விழித்துக் கொண்டேன். ஒத்திகையிலேயே முழுத்திறமையையும் காட்டி, ‘சபாஷ்’ பெற வேண்டுமென்று முடிவு கட்டி வைத்திருந்தேன். மறுநாளே என் ஒத்திகை.

காதல் சிரிப்பு

நைனா முகம்மது நூர்ஜஹான் காதல் காட்சி. நான் கே.டி. ருக்மணியோடு நடிக்க வேண்டிய சுவையான கட்டம், பெண் வேடத்தில் நிற்கும் ஆண்களோடுதான் நான் நடித்திருக்கிறேன். பருவப் பெண்களோடு காதல் காட்சியில் நடிப்பதென்பது அன்று தான் எனக்கு முதல் அனுபவம். வந்தது முதல் நான் மாடிக்குப் போகவும் இல்லை, பெண்கள் எவருடனும் பேசவும் இல்லை. இந்த நிலையிலே ஒத்திகை தொடங்கியது.

நூர்ஜஹான் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். நைனா முகம்மது விரைந்து வந்து, அவள் முகவாய்க்கட்டையைப் பிடித்துத் தன்பக்கம் திருப்பிப் பேச வேண்டும். 

ராஜா இரண்டு முறை நடித்துக் காண்பித்தார். எனக்கு என்னவோ போலிருந்தது. ‘பெண்ணின் மீது கை வைத்துத் தொட்டு நடிக்க வேண்டிய இந்த எழவை எல்லாம் ஸ்டுடியோவில் படம் பிடிக்கும் போது வைத்துக் கொள்ளக் கூடாதா?’ என்று ராஜாவை மனத்திற்குள்ளாகவே சபித்தேன். பட முதலாளிகளில் ஒருவரான எஸ். கே. மொய்தீன் எதிரில் உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருந்தார். என் நண்பர்கள், சகோதரர்கள் எல்லாரும் எதிரே வீற்றிருந்தர்கள். எல்லோருடைய கண்களும் என்மீதே பதிந்திருந்தன. எனக்கோ ஒரே கூச்சம். ராஜா ‘உம் ரைட்’ என்றார். நானும் மனதைத் திடப் படுத்திக்கொண்டு அவர் நடித்துக் காண்பித்தவாறே நடிக்க முயன்றேன். ருக்மணியின் முகவாய்க்கட்டையைப் பிடித்துத்திருப்பினேன். எங்கள் இருவருடைய கண்களும் சந்தித்தன. அவ்வளவுதான். ருக்குமணி சிரிக்கத் தொடங்கினார். எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது. எவ்வளவோ முயன்றும் அந்தச் சிரிப்பை அடக்க முடியவில்லை. ருக்குமணிக்கும் அதே நிலைதான். அவருடைய முகம் நாணத்தால் சிவந்துவிட்டது. நல்ல வேளையாக அன்று பெரியண்ணா மட்டும் இல்லை. ராஜா இரண்டுமுறை கோபித்துப் பார்த்தார், நாங்களும் சிரிக்காமல் நடிக்க ஆன மட்டும் முயன்றோம். ஒன்றும் பலிக்கவில்லை. நாலைந்து முறை இவ்வாறு எங்கள் முயற்சியில் தோல்வி ஏற்பட்டதும் எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். கோபித்தும் பயனில்லாததைக் கண்ட ராஜாவும் சிரித்து விட்டார். இவ்வாறு அன்றைய ஒத்திகை சிரிப்பிலேயே முடிந்தது. விஷயம் பெரியண்ணா காதுக்கு எட்டியதும் மிகவும் கோபப்பட்டார். ‘ஏன் அப்படிச் சிரித்தோம்?’ என்பது எனக்கே புரியவில்லை. “இதுதான் காதல் சிரிப்பு” என்றார் என்.எஸ்.கிருஷ்ணன்.

காப்பியடிக்காதே!

மறுநாள் மிகத் துணிவோடு ஒத்திகையில் நடித்தேன். ராஜா எப்படிச் சொல்லிக் கொடுத்தாரோ அப்படியே நடித்தேன். உடனே ராஜா கலகலவென்று சிரித்துவிட்டார்.

“நான் செய்வதை அப்படியே காப்பியடிக்காதே. அது நடிப்பல்ல. சொல்லுவதைக் கேட்டுப் புரிந்துகொண்டு, அந்தக் கருத்தை மனத்தில் பதிய வைத்துக் கொண்டு, உனக்கு இயற்கையாக எப்படி வருகிறதோ அப்படிச்செய். ஒவ்வொருவரும் அவர்களின் உடல் அமைப்பிற்கும், அங்க அசைவுகளுக்கும் ஏற்றவாறு தான் நடிக்க வேண்டும். ஒரு வரைப் பார்த்துக் காப்பியடிப்பது அவரவர்க்கு உண்டான இயற்கை நடிப்பைக் கெடுத்துவிடும்” என்றார்.

ராஜாவின் இந்த அறிவுரை நான் நடிப்புத் துறையில் வளர்ச்சிப் பெறப் பெருந் தூண்டுகோலாக இருந்தது.

அந்தநாளில் பம்பாய் ஸ்டுடியோக்கள் பெரும்பாலும் நாங்கள் தங்கிய தெருவிலேயேதான் இருந்தன. பேசாப் படத்திலேயும், பேசும் படத்திலேயும் நாங்கள் கண்ட பல நடிகர்கள் எங்கள் கண்களிலே தென்பட்டார்கள். பில்லிமோரியாவையும், ஜால்மெர்ச்சென்டையும், பேசாப் படக் கத்திச்சண்டை வீரர்களான விட்டல் பச்சு முதலியோரையும் நேரில் கண்டபோது எங்களுக்கு ஒரே குதுரகலமாய் இருந்தது.

தலையும் மீசையும் தப்பியது

முதன்முதலாக நான் வேடம் புனைய வேண்டிய நாள் வந்தது. ராஜா காலையிலேயே நாவிதரை அழைத்து என் தலையை கிராப், செய்ய வேண்டிய மாதிரியைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். இரவு ‘மேக்கப்’ அறையில் நான் வேடம் புனைந்து கொண்டிருந்த போது அவர் வந்து பார்த்தார். கிராப் செய்திருந்த முறை அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை. கோபத்துடன் நாவிதரை வரச்சொன்னார். அந்தச் சமயத்தில் நாவிதர் வருவது சாத்திய மில்லையெனத் தெரிந்தது. “கொண்டாடா கத்தரிக்கோலை” என்றதும் எனக்குக் குலை நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது. கத்தரிக் கோல் வந்தது. எனக்குக் ‘கிராப்’ வெட்டத் தொடங்கி விட்டார் ராஜா. எங்கள் நடிகர்கள் சிரிப்பை அடங்கிக் கொண்டு மெளனமாய் நின்றார்கள். ஒருவாறு தலையலங்காரம் முடித்தது. என் முகத்தைப் பார்க்க எனக்கே கோரமாக இருந்தது. மீசை அடிக்கடி ஒட்ட வேண்டிய கஷ்டத்தை உத்தேசித்து, பம்பாய் சென்றதும் நான் மீசை வளர்த்துக் கொண்டேன். சிகையலங்காரத்தை முடித்ததும் ராஜாவின் கண்கள் என் மீசை மீது விழுந்தன. அதிலும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. மீசையையும் திருத்த ஆரம்பித்தார். கத்தரிக்கோலை மூக்கருகில் கொண்டுவந்தார். “அசையாமல் இரு” என்றார். மாற்றி மாற்றி சரிபார்த்தார். இரு புறமும் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிக்கொண்டே போனார். இறுதியாகக் குரங்கு அப்பம் பங்கு வைத்தகதையாய் ஒட்டுமீசை வைக்கவேண்டி வருமோ என்று நான் பயந்தேன். என் அதிர்ஷ்டம் அப்படி ஏற்படவில்லை. முன்பொரு நாள் இதே மாதிரி நாவிதர் இல்லாத சமயத்தில் எங்கள் நடிகர் ஒருவருக்கு ஸ்டுடியோவில் உள்ள வறட்டுக் கத்தியால் ராஜா சவரம் செய்ய முனைந்தபோது எங்களுக்கெல்லாம் பயமாக இருந்தது. அந்த மாதிரி ஒருநிலை எனக்கு ஏற்படாததை எண்ணி உள்ளுர மகிழ்ச்சி யடைந்தேன்.