எனது நாடக வாழ்க்கை/நாடக உலகில் நுழைந்தோம்

விக்கிமூலம் இலிருந்து
நாடக உலகில் நுழைந்தோம்

‘ஒரு தொழிலும் இல்லாதார் நாடகக்காரரானார்’ என்று நாடகக் கலைஞர்களைப்பற்றி மக்கள் இழித்துரைத்த காலம். கூத்தாடிகள், குடிகாரர்கள் இவை போன்ற பெயர்கள் நாடகக்காரர்களுக்கு அடைமொழிகளாயிருந்து வந்தன. நாடகக்காரன் என்றால் குடியிருக்க வீடும் கொடுக்கமாட்டார்கள். அவ்வளவு நல்ல பெயர் நடிகனுக்கு. இளம் பெண்களைக் கடத்திச் சென்று விடுவான் என்று மக்கள் பயப்பட்டார்கள். இந்தப் பயத்தில் ஒரளவு உண்மையும் இருந்தது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நாடகம் பார்க்க அனுமதிக்கமாட்டார்கள். நாடகம் பார்த்த இளைனார்கள் அதை நாலு பேருக்கு நடுவில் சொல்லிக்கொள்ள வெட்கப்படுவார்கள். நாடகக் கொட்டகைக்கு எதிரிலேயே ஒரு கள்ளுக் கடையும் இருக்கும்.

ஆம்; இயல், இசை, நாடகம் என்று தமிழ்மொழியை மூன்றாக வகுத்த நாட்டிலேதான் இந்தக் கேவலநிலை. நாடகத்திற் கென்று தனித்தமிழ் கண்ட நம் நாட்டில், நாடகத்துறை இவ்வாறு அவல நிலையில் இருந்த சமயத்தில் தான் நான் நாடக உலகில் நுழைய நேர்ந்தது.

தாயும் தந்தையும்

என் தந்தையார் திரு டி. எஸ். கண்ணாசாமிப்பிள்ளை; தாயார் திருமதி சீதையம்மாள். தந்தையாரும் ஒரு நடிகர். பெண் வேடம் தரித்து நடிப்பதில் பிரசித்தி பெற்றவர். அக்காலத்தில் பிரபலமாய் விளங்கிய வள்ளி வைத்தியநாதையர், அல்லி பரமேசுவரய்யர் ஆகியோர் நடத்தி வந்த கம்பெனிகளில் என் தந்தையார் நீண்டகாலம் பணி புரிந்திருக்கிறார். திரு.பி.எஸ். வேலுநாயர் பின்பாட்டுப் பாடுவதிலிருந்து ராஜபார்ட் வேடத்திற்கு வரத் துாண்டுகோலாயிருந்தவர் என் தந்தையார். இச்செய்தியினைத் திரு நாயரவர்களே என்னிடம் கூறி, என் தந்தையாரைப் பாராட்டினார். அந்த நாளில் எல்லா நாடக நடிகர்களுக்கும் ஆசிரியராக இருந்தவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். அவரைத் தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என்றே எல்லோரும் குறிப்பிடுவார்கள். என் தந்தையும் அவரது மாளுக்கர்களிலே ஒருவர்.

நாடகத் தொழிலுக்கு அக்காலத்தில் தாய் வீடாக விளங்கியது மதுரைமாரு கரம். நாடகக் கம்பெனிகள் பெரும்பாலும் மதுரையிலிருந்தே தொடங்கும். வேறு ஊர்களில் நாடகம் தொடங்குபவர்கள்கூட மதுரை என்றே போட்டுக் கொள்வது வழக்கம், எனவே, என் தந்தையாரும் மதுரையை இருப்பிடமாகக் கொண்டார்.

தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை

அந்தச் சமயம், சங்கரதாஸ் சுவாமிகளை ஆசிரியராகக் கொண்டு ஒரு நாடகக் கம்பெனி தொடங்கியது. இளஞ் சிறுவர்களையே முழுதும் நடிகர்களாகக் கொண்ட அந்தச் கம்பெனியின் பெயர், மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா.

ஒரு நாள் என் தந்தையார் என் சகோதரர்களுடன் என்னையும் அழைத்துக் கொண்டு, தமது ஆசிரியராகிய சுவாமிகளைக் காணச் சென்றார். அப்போது எங்களைக் கூர்ந்து நோக்கிய சுவாமிகள், “கண்ணா, உன் குழந்தைகளே இந்தக் கம்பெனியிலே சேர்த்துவிடு, நான் கவனித்துக் கொள்கிறேன்” என்றார். நாடகத்துறையை வெறுத்திருந்த தந்தையார் தயங்கினார். ‘குழந்தைகள் படிக்கிறார்கள்; அவர்களுடைய படிப்பு ...’ என்று ஏதோ சொல்ல முயன்றார். உடனே சுவாமிகள், “நானே தமிழ்ப் படிப்பும் சொல்லி வைக்கிறேன்; படித்து வக்கீல் உத்தியோகம் செய்யப் போகிறார்களா, என்ன! நல்ல சந்தர்ப்பம், இங்கேயே சேர்த்துவிடு” என்று வற்புறுத்திச் சொன்னார். எங்கள் தந்தை அப்போது ஸ்பெஷல் நாடகம் என்ற மரக் கட்டையைப் பற்றிக் கொண்டு வாழ்க்கைக் கடலில் நீந்திக் கொண்டிருந்தார். கொழும்பு, யாழ்ப்பாணம் முதலிய இலங்கைத் தீவின் நகரங்களிலேதான் அவரது நாடகப்பணி மிகுதியாக நடை பெற்று வந்தது. மதுரை அம்மன் சந்நிதியை அடுத்த சோற்றுக் கடைத்தெருவில் நாங்கள் குடியிருந்தோம். பண்டை நாளில் இத் தெருவில் உணவு விடுதி இருந்திருக்குமென நினைக்கிறேன். ஆனால், நாங்கள் இருந்தபோது சோற்றுக்கடையோ, இந்தக் காலச் சாப்பாட்டு ஒட்டலோ எதுவுமில்லை. அருகே தெற்கு ரத வீதியிலுள்ள வெள்ளியம்பலம் கலாசாலேதான் நான் படித்த பள்ளிக்கூடம். என் மூத்த அண்ணா திரு டி. கே. சங்கரன் ஆறாவது வகுப்பிலும், சின்னண்ணா திரு டி. கே. முத்துசாமி நான்காவது வகுப்பிலும், நான் இரண்டாவது வகுப்பிலுமாகப் படித்துக் கொண்டிருந்தோம். தம்பி பகவதி அப்போது கைக்குழந்தை.

கம்பெனியில் சேர்ந்தோம்

என் தந்தையார் நன்கு சிந்தித்தார். எங்களோடு கலந்து பேசினார். என்னையும், சின்னண்ணாவையும் சேர்த்துவிட எண்ணி னார். பெரியண்ணா மட்டும் படிப்பது நலமெனத் தோன்றியது. ஆனால், பெரியண்ணாவோ அப்பாவின் முடிவைக் கேட்டுக் கலங்கினார். எங்களைப் பிரிய அவர் மனம் இடம் தரவில்லை. எனவே, பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. நாங்கள் நாடகக் கம்பெனியில் சேர்ந்தோம். தந்தையார் சிறந்த பாடகர். நல்ல சாரீர வன்மையுடையவர். எனவே, அக்காலத்தில் மிக அவசியமாகக் கருதப்பட்ட பின்பாட்டுப் பாடும் ஸ்தானத்தில் அவரையும் கம்பெனியில் சேர்த்துக் கொண்டார்கள். எங்களைத் தனியே விட்டுப் போகத் தந்தையார் இசையவில்லை.

பெரிய அண்ணாவுக்குப் பத்து ரூபாய் மாதச் சம்பளம். சின்னண்ணாவுக்கு எட்டு ரூபாயும் எனக்குப் பதினேந்து ரூபாயும் கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது. பின்பாட்டுப் பாடும் என் தந்தையாருக்கு மட்டும் அறுபத்தி ஐந்து ரூபாய் சம்பளம். 1918-ஆம்ஆண்டில் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையின் நாடகங்கள் மதுரையில் ஆரம்பமாயின. காரதா கலகப்ரியா:

நாடகக் கம்பெனி மதுரை புட்டுத்தோப்பிலுள்ள ஒரு வீட்டில் இருந்து வந்தது. நாடகங்களுக்குப் பயிற்சி நடந்து கொண்டிருந்ததால் நாங்கள் கம்பெனி வீட்டிலேயே தங்கினோம். எனக்கு முதன்முதலாகச் சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் நாரதர் வேடம் கொடுக்கப்பட்டது. அப்போது கம்பெனியிலிருந்த நடிகர்கள் அனைவரிலும் நான் தான் மிகச் சிறியவன். அதனால் ஆசிரியர் சங்கரதாஸ் சுவாமிகளுக்கு என்மீது அளவு கடந்த பற்றுதல். அவர் என்னைப்பற்றி என்ன நினைத்தாரோ எனக்குத் தெரியாது. அநேகமாக எல்லா நாடகங்களிலும் எனக்கு நாரதர் வேடமே கொடுக்கப்பட்டது.

கம்பெனியில் அப்போது ‘சட்டாம் பிள்ளை’யாக இருந்து பாடங்கள் சொல்லி வைத்தவர் திரு டி. எஸ். குற்றாலிங்கம்பிள்ளை. சீமந்தனி, சதியனுகுயா, சுலோசன சதி, பார்வதி கல்யாணம் முதலிய நாடகங்களில் எல்லாம் நாரதர் வேடமே எனக்குக் கிடைத்தது. தொடர்ந்து நான் நாரதர் பாடம் செய்து வருவதைக் கண்ட மற்றப் பிள்ளைகள் என்னைக் கேலி செய்தார்கள். “நாரதா, கலகப் பிரியா” என்றெல்லாம் அடிக்கடி என்னைப் பெயர் வைத்துக் கூப்பிட்டார்கள். இந்தச் செய்தி சுவாமிகளின் செவிக்கும் எட்டியது. அவர் ஒருநாள் எல்லோரும் இருக்கும் சமயத்தில், “நாரதர் கலகக்காரர்தான்; ஆனால், அவர் செய்யும் கலகத்தினால் யாருக்கும் கெடுதி நேராது; நன்மையே விளையும்” என்று விளக்கம் தந்தார்.

வையை யென்னும் பொய்யாக் குலக் கொடி

புட்டுத்தோப்பில் கம்பெனி வீட்டிற்கு எதிரே முழுதும் ஒரே மணற் பரப்பு. வைகையாறு எதிரே இருந்ததால் தினசரி காலையில் ஊற்று நீரில் குளிப்பதற்கும், மாலே நேரங்களில் “பலிஞ் சடுகுடு விளையாடுவதற்கும் எங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது. “வையை யென்னும் பொய்யாக் குலக்கொடி” என்று சங்க இலக்கியம் வைகையின் வளத்தைப் பற்றிப் பேசுகிறது. அதெல்லாம் பழங்காலம். இப்போதெல்லாம் மழைக் காலங் களில் நாலைந்து நாட்கள் வெள்ளம் கரை புரண்டு ஒடும். மீண்டும் பழைய குருடிதான். அதற்குப் பின் ஊற்று நீரில்தான் குளிக்க வேண்டும்.

நான் எந்தப் பாடத்தையும் மிக விரைவில் நெட்டுருப் போட்டுவிடுவேன். அதனுல் பாடத்திற்காக ஆசிரியர் சுவாமி களிடம் நான் அடிவாங்கியதே இல்லை. சட்டாம்பிள்ளையும் எனக்கு அன்போடு நடிப்புச் சொல்லித் தருவார். ஆனால், மற்ற வர்கள் பாடம் செய்யாமல் அடிபடுவதைப் பார்க்கும்போது எனக்குக் கஷ்டமாக இருக்கும்.

முதல் நாடகம்

முதல் நாடகம் ‘சத்தியவான் சாவித்திரி’ மதுரை பெரிய தகரக் கொட்டகையில் அரங்கேறியது. இப்போது அந்தக் கொட்டகை இருந்த அடையாளமே தெரியவில்லை. எல்லாம் வீடுகள் நிறைந்து விட்டன.

மேல மாசி வீதியில் சின்னத் தகரக் கொட்டகை ஒன்று இருந்தது. இப்பொழுது அது சந்திரா டாக்கீஸ் என்று சொல்லப் படுகிறது. இவ்விரண்டைத் தவிர அப்போது மதுரையில் நான் அறிந்த வரையில் வேறு நாடக அரங்கம் கிடையாது.

பெயர் பெற்ற நகைச்சுவை நடிகர் திரு சி. எஸ்.சாமண்ணா ஐயர் எங்களுக்கெல்லாம் பவுடர் தொட்டு நெற்றியிலிட்டு வேஷம் போட்டு விட்டார். எனக்குத் தலையில் நிறைய முடி இருந்ததால் அதிலேயே கொண்டை போட்டார்கள். இடுப்பில் முழங்கால் வரை, தூக்கி ஒரு மஞ்சள் பட்டுத் துண்டைத் தார் போட்டுக் கட்டினார்கள். அதற்குமேல் இடுப்பைச் சுற்றி ஒரு சிவப்புப் பட்டு இரண்டு கால்களிலும் ‘கஜ்ஜை’ கட்டப்பட்டது. நாரதர் கதித்தை போட்டு ஆடிக் கொண்டே வரவேண்டும். நான் அரங்கில் பிரவேசிக்கும் சமயத்தில் யாரோ ஒருவர் வந்து என் கையில் மரத்தால் செய்த ஒரு வீணையைக் கொடுத்தார்.

எமனைக் கண்டு பயம்

‘சரிகம பதநியாம் ஏழு சுர நிலை லய சங்கீத சுகமே பெரிய சுகம்’ என்ற பாடலைப் பாடிய வண்ணம் நான் ஆடிக் கொண்டே அரங்கில் பிரவேசித்தேன். எல்லோரிலும் நான் மிகச் சிறுவனாக இருந்ததால் வந்தவுடனேயே சபையில் கைதட்டலும் கலகலப் பும் ஏற்பட்டன. பாட்டு முடிந்ததும் அசுவபதி ராஜா, அவர் மனைவி மாளவி, புதல்வி சாவித்திரி மூவரும்பாட்டுப்பாடி என்னை வணங்கி உட்காரச் சொன்னார்கள். மேடையில் உயரமான நாற். காலி போடப்பட்டிருந்தது.ஒரு கையில் வீணை இருந்ததால் அந்த உயரமான நாற்காலியில் உட்கார இயலாமல் நான்சற்று, தயங்கினேன். பிறகு கையிலிருந்த வீணையைக் கீழே போட்டுவிட்டு, நாற்காலியைப் பிடித்து ஏறி ஒருவாறு அதில் உட்கார்ந்தேன். சபையில் அதற்கும் கை தட்டினார்கள். எனக்கு ஒன்றும் புரிய வில்லை. பாடத்தை மட்டும் தவறாமல் பேசினேன்; பாடினேன். ஒருவகையாக நாரதரின் முதல் காட்சி முடிந்தது.

உள்ளே வந்ததும் சுவாமிகள் என்னைத் தூக்கி முத்தமிட்டுப் பாராட்டினார். ‘பையன் சீக்கிரம் முன்னுக்கு வந்துவிடுவான்’ என்று எல்லோரும் புகழ்ந்தார்கள். நாரதர் வர வேண்டிய அடுத்த காட்சி. எமதரும ராஜனின் சபை. நான் மகிழ்ச்சியோடு சபையில் பிரவேசித்தேன். எமனுக்கும் எனக்கும் வாதம் நடந் தது. சத்தியவான் உயிரைக் கவரக் கூடாதென நான் பலமுறை வேண்டிக் கொண்டேன். எமதருமன் சாதாரணமாக வாதித்துக் கொண்டே வந்தவர், இறுதியாகக் கோபம் கொண்டு, “எட்டி நில்லும் நாரதரே” என்ற பாட்டைத் தொடங்கித் தன் கையிலிருந்த சூலாயுதத்தை நீட்டிக் கொண்டு என்னை நெருங்கினார்.

நான் பயந்து அலறிய வண்ணம் உள்ளே ஓடிப் போய் சுவாமிகளைக் கட்டிக் கொண்டேன். சபையில் ஒரே சிரிப்பு, கோலாகலம். திரை விடப்பட்டது.

சுவாமிகள் பரிவு

அன்று எமன் வேடம் போட்டிருந்தவர் கந்தசாமி என்னும் பெயருடையவர். அவருடைய ஊர் துரத்துக்குடி. வேஷம் போட்டு ஒத்திகை பார்ப்பதெல்லாம் அப்போது கிடையாது. முகமெல்லாம் நீலத்தைப் பூசி, பெரிய கறுப்பு மீசை எழுதி, கண் களில் ஏதோ விழி பிதுங்கியது போன்ற ஒரு நீலக்கண்ணாடியைப் போட்டுக்கொண்டு, பயங்கரமான தோற்றத்தில் நின்ற கந்த சாமியைப் பார்த்ததும் நான் முதலிலேயே பயந்துவிட்டேன். அப்புறம் அவர் கோபத்தோடு சூலத்தை நீட்டிக் கொண்டு என்னை நெருங்கியதும் ஏதோ செய்யப் போகிருரென்று அஞ்சி உள்ளே ஒடி விட்டேன். தேம்பித் தேம்பி அழவாரம்பித்தேன். சுவாமிகள் என்னைச் சமாதானப்படுத்தினார். எமனைக் கூப்பிட்டு, என் பக்கத்தில் நிறுத்தினார், அவருடைய தலையிலிருந்த தகரக் கிரீடத்தையும் ‘டோப்பா’ வையும் மூக்கில் போட்டிருந்த நீல வலைக் கண்ணாடியையும் கழற்றச் செய்தார். “நம்ம கந்தனடா இவன்: நன்றாய்ப் பார். எமனில்லை! அதெல்லாம் வெறும் நடிப்பு!...பயப்படாதே!” என்று தட்டிக் கொடுத்தார், அந்த எமக் கந்தசாமி யும் என்னோடு சிரித்துக் கொண்டே பேசினார். ஒருவாறு பயம் நீங்கியது.

மீண்டும் திரை தூக்கப்பட்டது. காட்சியை விட்ட இடத் திலிருந்து தொடங்கினார் கந்தசாமி, எட்டி நில்லும் நாரதரே’ என்ற பாடலைப் பாடினார். அப்போதும் நான் சற்று நடுங்கிக் கொண்டிருந்தேன். எமன் பேசி முடித்ததும், “கச்சை கட்டிக் கொண்டு, நானே உன் கைவரிசையைப் பார்க்கிறேன்” என்று பாட ஆரம்பித்தேன். அவ்வளவுதான். சபையில் ஒரே கை தட்டல்; சிரிப்பு. நாரதர் பயந்து ஓடிப்போனதைப் பார்த்த சபையோ, இப்போது கைவரிசையைப் பார்க்கிறேன்’ என்றால் வேறு என்ன செய்வார்கள்? எப்படியோ நடுக்கத்துடன் பாடி முடித்து உள்ளே வந்து சேர்ந்தேன்.

அந்த முதல் நாடகத்தில் நான் பயந்தோடிய சம்பவம் இன்னும் பசுமையாக என் நினைவில் இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.

கம்பெனியின் உரிமையாளர்கள்

இந்தச் சந்தர்ப்பத்தில் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையைப் பற்றியும், தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றி யும் சில செய்திகள் குறிப்பிடுவது அவசியமெனக் கருதுகிறேன்.

நாடக சபைக்கு உரிமையாளர்கள் நால்வர். திருவாளர்கள் சின்னையாபிள்ளை, பழனியாபிள்ளை, கருப்பையாபிள்ளை, சுப்ரமணிய பிள்ளை. இந்த நால்வரில் நாடக சபைக்கு அதிக முதலீடு செய்தவர் சின்னையாபிள்ளை. இவர் கம்பெனி வீட்டில் தங்குவதில்லை. அடிக்கடி வந்து பார்த்துவிட்டுப் போவார். கருப்பையா பிள்ளை கம்பெனியின் கணக்கு விவகாரங்களையெல்லாம் பார்த்துக் கொள்வார். பெரும்பாலும் கம்பெனி வீட்டிலேயே தங்குவார். சுப்பிரமணிய பிள்ளை எப்போதாவது மாதத்திற்கொரு முறை வந்து போவார். பழனியா பிள்ளை ஒருவர் தான் எல்லோருடனும் நெருங்கிப் பழகக் கூடியவர். அதிலும் ஆசிரியர் சுவாமிகளிடம் ஏதாவது சொல்ல வேண்டுமானால் பழனியா பிள்ளை தான் சொல்வார். மற்ற உரிமையாளர்கள் சுவாமிகளிடம் நெருங்கவே பயப்படுவார்கள்.