எனது நாடக வாழ்க்கை/பாகவதர் சந்திப்பு

விக்கிமூலம் இலிருந்து
பாகவதர் சந்திப்பு

திருப்பூர் முடிந்து வேறு சில ஊர்களுக்குச் சென்றோம். பொன்னமராவதியில் நாடகம் நடித்துக் கொண்டிருந்தபோது ஸ்பெஷலாக வள்ளித்திருமணம் நாடகத்திற்கு எம். கே. தியாகராஜ பாகவதர் வந்தார். அவர் அப்போதுதான் புதிதாக மேடைக்கு வந்து கொண்டிருந்தார். சரியாகப் பேசத்தெரியாது. ஆனால் அற்புதமான சாரீரம். இனிமையாகப் பாடுவார். பாகவதர் அரங்கிற்கு வந்ததும் எங்களை அழைத்து, “நான் ஒன்றும் தெரியாதவன். புதிதாக நாடகமேடைக்கு வந்திருக்கிறேன். நீங்கள் பாய்ஸ் கம்பெனி நடிகர்கள். நன்றாக நடிக்கவும், பேசவும் தெரிந்தவர்கள். நான் ஏதாவது தவறுசெய்தாலும் நீங்கள்தான் சரிப்படுத்திக்கொண்டு என்னைக் கெளரவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அவர் அவ்வாறு அடக்கத்துடன் பேசியது எங்களுக்கு அதிசயமாக இருந்தது.

வள்ளித்திருமணம் நாடகம், கழுகாசலக் காட்சி தொடங்கியது. பாகவதர் பாடி முடித்துப் பேசியதும் நான் நாரதராக வந்தேன். அவர் ஏதோ பேசினார். வார்த்தைகள் சரியாக வராமல் தடைப்பட்டன. அவர் பேசமுடியாமல் திணறுவதைப் பார்த்து நானே பேசி அவர் பேசவேண்டிய பகுதியை நினைவுபடுத்தினேன். ஒருவாறு காட்சி முடிந்தது. உள்ளே வந்ததும் பாகவதர் என்னிடம் நன்றி தெரிவித்துக்கொண்டார். அவர் அன்றாேடு அந்தச் சம்பவத்தை மறந்துவிடவில்லை. பிறகு திரைப்படத்துறையில் ஈடுபட்டு நட்சத்திரமாகத் திகழ்ந்த நாட்களிலேகூட என்னைச் சந்திக்கும்போது, இந்தப் பழைய நிகழ்ச்சியை நினைவுபடுத்தி மற்றவர்களிடம் இதைப் பெருமையோடு சொல்லி, என்னை அறிமுகம் செய்து வைத்த பெருந்தன்மையை என்றும் மறக்க முடியாது. என். எஸ். கிருஷ்ணன் தினைப்புனக் காவலராகத் தோன்றிப் பாகவதரைத் திணற அடித்தார்.

பாகவதர் நடித்த வள்ளித்திருமணம் நாடகத்திற்கு நல்ல வசூலாயிற்று. மீண்டும் பழைய நிலைதான். மகாபாரதத்தில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த சாரதாம்பாள் வேறு சில நாடகங்களிலும் நடிக்கத் தொடங்கினார். இராமாயணத்தில் மாயா சூர்ப்பனகையாக நடித்தார். ராமராக நடிக்க, ராமர் நடிப்பில் பிரசித்தி பெற்ற பரசுராமபிள்ளை வந்திருந்தார். அவர் கோல்டன் கம்பெனியில் ஏற்கனவே நடித்தவர். சீனிவாச பிள்ளையைப் போலவே அவரும் சொந்தமாகக் கம்பெனி வைத்து நடத்திப் புகழ் பெற்றவர்; நன்றாக முறுக்கிய மீசையோடு அவர் ராமராக வந்தார்; அற்புதமாக நடித்தார்; அருமையாகப் பாடினார். நான் லட்சுமணனாக நடித்தேன். லட்சுமணன், ராமனுக்கு முடிசூட்டுவதைத் தடுத்த அனைவரையும் அழித்தொழித்து விடுவதாக ஆர்ப்பாட்டம் செய்து விட்டு உள்ளே போகும்போது ராமர் வருகிறார். வரும்போதே “ஆறுதல் சினமே” என்ற பாட்டு. இந்தப் பாட்டை உள்ளிருந்தபடியே இரண்டு மூன்று முறைகள் பாடிக் கொண்டிருந்தார் பரசுராமபிள்ளை. அவர் பின்னால் நின்றுகொண்டிருந்த கோவிந்தசாமி நாயுடுவுக்கு இது பிடிக்கவில்லை. “வெளியே போய்த்தான் பாடுமேய்யா” என்று பரசுராமபிள்ளையை முதுகில் கை வைத்துத் திடீரென்று தள்ளிவிட்டார். அவர் தள்ளப்பட்ட நிலையில் தடுமாறிக்கொண்டு வந்து நின்றதும் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது.

சாரதாம்பாளின் கிண்டல்

அன்று எனக்குத் தொண்டை மிகவும் கம்மியிருந்தது. சரியாகப் பேச முடியவில்லை. சக்தியை முழுவதும் உபயோகப்படுத்திப் பேசினேன். பேசவே முடியவில்லையென்றால் பாட்டு எப்படி யிருக்கும்?... ஒரே அலறலாக இருந்தது. சூர்ப்பனகையின் காதலை ராமர் புறக்கணித்து விட்டுப் போனபின் அவள் லட்சுமணனோடு வாதாடுகிறாள். சூர்ப்பனகைக்கும், லட்சுமணனுக்கும் வாதம் நடந்தது. நான் பேச முடியாமல் திணறுவதைக் கண்டு சாரதாம்பாள் அம்மையாருக்கு ஒரே சிரிப்பு. என் தொண்டையிலிருந்து நாலைந்து குரல்கள் வெளி வந்தன. இந்த லட்சணத்தில் நான் பாடத் தொடங்கினேன்.

"வேண்டாதே எனைத்
தீண்டாதே மொழி
தாண்டாதே தூர நில்...”

என்னும் பாடலை நான் மிகவும் சிரமப்பட்டுப் பாடி முடித்தேன். உடனே சாரதாம்பாள்,

“ஐயா, நீர் என்னைக் கொல்லுவதற்குள் உம்முடைய உயிர் போய்விடும் போலிருக்கிறதே! வேண்டாமையா வேண்டாம். நீர் என்னை விரும்பாவிட்டால் போகிறது. உம்முடைய நிலையைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. கொஞ்சம் அமைதியாக இரும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார். சபையோரும் நிலைமையை உணர்ந்து கைதட்டிச் சிரித்தார்கள்.

சொந்தச் சமையல்

பொன்னமராவதியிலிருந்து கீழச்வசேற்பட்டிக்குப் போனோம். கம்பெனி வீட்டில் எல்லாரோடும் இருப்பது பெரியண்ணாவுக்கு வசதிக் குறைவாகத் தோன்றியது. அவருடைய விருப்பப்படி வேறு தனி வீட்டில் வசித்து வந்தோம். ஒட்டல் சாப்பாடு பிடிக்காததால் நாங்களே சமைத்து உண்டோம். பெரியண்ணா கறிகாய்களை எப்படிப் பாகம் செய்ய வேண்டும் என்பதை விளக்கிச் சொல்லுவார். அவரே கறிகாய்களை அரிந்தும் கொடுப்பார். மசாலை அரைக்க வேண்டிய வேலை என் பொறுப்பு. சின்னண்ணா அடுப்படியிலிருந்து எல்லாவற்றையும் ஆக்கித் தருவார். நாங்களே சமைத்து உண்டது மிகவும் சுவையாகத்தான் இருந்தது. அடிக்கடி கம்பெனியில் எங்களிடம் பாசமும் பரிவுமுடைய பிள்ளைகள் வந்து அனுதாபத்தோடு உதவி புரிவார்கள்.

கீழச்சேவற்பட்டியில் வசூல் இல்லை. மேலும் சில ஊர்களுக்குச் சென்றோம். அங்கும் இதே நிலைமை. கடைசியாக கரூருக்கு வந்தோம். கோவிந்தசாமி நாயுடுவின் மகள் கிருஷ்ணவேணியும் சில நாடகங்களில் எங்களோடு நடித்து வந்தார். ராமாயணத்தில் சீதையாக நடிப்பார். சந்திரகாந்தாவில் சந்திரவதனுவாக நடிப்பார். கரூரில் சந்திரகாத்தா நாடகத்தில் ஒருசுவையான நிகழ்ச்சி நடந்தது. நாடகம் நடந்து கொண்டிருந்தது. சுண்டுர் இளவர சன் சந்திரவதைைவப் பலாத்காரம் செய்யப்போய் உதை வாங்கும் கட்டம். நாடகத்தில் இது ஒரு சுவையான காட்சி.

பரிதாப பலாத்காரம்

பூங்காவில் சந்திரவதனா உலாவிக் கொண்டிருக்கிறாள். சுண்டூர் இளவரசன் அங்கு வருகிறான், தனக்கு அவள் மீதுள்ள தணியாக் காதலைப்பற்றி விவரிக்கிறான், சந்திரவதனா. அவனை விரும்ப மறுக்கிறாள். கடைசியில் வெறி கொண்ட இளவரசன் அவளைப் பலாத்காரம் செய்ய முயல்கிறான். சந்திரவதனா கூச்ச லிடுகிறாள். அவள் காதலன் ராகவரெட்டி திடீரென்று தோன்றி, சுண்டுர் இளவரசனை அடித்து வீழ்த்திச் சந்திரவதனவைக் காப்பாற்றுகிறான்... காட்சி இவ்வாறு நடைபெற வேண்டும்.

இந்தச் சுவையான காட்சி தொடங்கியது. சுண்டுர் இளவரசன் வந்தார். சந்திரவதனாவிடம் தனது காதலின் தன்மையைப் பற்றி அபாரமாக அளந்தார். தமிழில் மட்டுமல்ல; ஆசிரியர் திரு எம். கந்தசாமி முதலியார் பயிற்சியளித்திருந்தபடி ஆங்கிலத்திலும், தான் கொண்ட ‘லவ்’வைப் பற்றிப் பொழிந்துதள்ளினார். பலிக்கவில்லை. கடைசியாக,

அட்டியின்றி கட்டி
முத்தமிடாவிடில் நானே-உன்னைத்
திட்டம் பலாத்காரம் செய்குவேன்
சத்தியம் தானே

என்று பாட்டிலேயே சத்தியமும் செய்துவிட்டுச் சந்திரவதனாவைப் பலாத்காரம் செய்வதற்குப் பாய்ந்தார். வழக்கம் போல் சந்திரவதனா பக்கத்தட்டிவரை ஓடினாள்; கூச்சலிட்டாள். இளவரசன் அவள் கையைப் பிடித்துவிட்டான். அடுத்த விநாடியில் ராகவ ரெட்டி வந்து இளவரசன் முதுகிலே அறைய வேண்டும்.

எங்கே ராகவரெட்டி?... காணோம் அவரை! சந்திரவதனாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. எதிரே காதலரைக் காணவில்லை. வேறு எங்கிருந்தாவது வரக் கூடுமென நம்பி இளவரசனின் பிடியிலிருந்து திமிறுவதுபோல் சிறிது நடித்தாள். ராகவரெட்டி வரவே இல்லை. திரைமறைவில் பல குரல்கள் ராகவரெட்டியைத் தேடின. முதுகில் அடி விழுவதை எதிர் பார்த்து நின்ற சுண்டுர் இளவரசனுக்கு ஒரே திகைப்பு. பலாத்காரம் செய்யக் கையைப் பிடித்தாயிற்று. வழக்கம்போல் அறை விழவில்லை. பின்னல் திரும்பிப் பார்க்கவும் கூடாது. என்ன செய்வார் இளவரசன்? சந்திரவதனா. பெண் வேடம் புனைந்த ஆணாக இருந்தாலாவது சிறிது அதிகமாக நடிக்கலாம். அதற்கும் வழியில்லை. அவள் நிஜமாகவே பெண். அதிலும் மங்கைப் பருவம் கடந்த பெண். பலாத்காரம் செய்யப் பிடித்த கையை விடவும் முடியாமல், வேறு வழியும் தோன்றாமல் திண்டாடினார் இளவரசன்.

அண்ணாசாமியின் ஆவேசம்

ராகவரெட்டி எங்கோ ஒரு மூலையில் அமைதியாக உறங்கினார் என்பது மட்டும் புரிந்தது. அரங்கின் உட்புறம் அமர்க்களப் பட்டது. சுபேதார் அண்ணாசாமியாக வேடம் புனைந்திருந்த பெரியண்ணாவின் குரல் உட்புறம் பயங்கரமாக ஒலித்தது. அவர்கையில் வைத்திருந்த சவுக்கும் யார் மீதோ சாத்துபடி ஆயிற்று. “பளார், பளார்” என்ற ஒசையுடன் விழுந்த சில பூசைகளின் ஒலியும் கேட்டது.

சந்திரவதனவும் சுண்டுர் இளவரசனும் மேடையில் பலாத்காரக் கட்டத்தில் நின்று பரிதவித்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று பேயறைந்தது போன்ற ஒரு பயங்கரமான அடி இளவரசனின் முதுகில் விழுந்தது. அவ்வளவுதான்; அறைந்தபின் ராகவ ரெட்டியால் கீழே இழுத்துத் தள்ளப்பட வேண்டிய இளவரசன், அறைபட்டவுடனேயே விழுந்துவிட்டான். ஐயோ பாவம்... நல்ல உறக்கம் கலைக்கப்பட்டதால் உண்டான கோபம்; உள்ளே தான் வாங்கிய பலத்த அடிகளால் ஏற்பட்ட ஆத்திரம்: எல்லாவற்றையும் சேர்த்துச் சுண்டுர் இளவரசனைப் பலம் கொண்ட மட்டும் தாக்கிவிட்டார் அந்த ராகவரெட்டியார். கீழே விழுந்தபின் மீண்டும் எழுந்து ராகவரெட்டியைப் பார்த்து உறுமி விட்டுப் போக வேண்டிய சுண்டுர் இளவரசன், எழுந்திருக்க முடியாமல் அவஸ்தைப்பட்டு எப்படியோ ஒரு வகையாகத் தட்டுத் தடுமாறி உள்ளே போய்ச்சேர்ந்தார். பலாத்காரம் செய்யப் போய் பரிதவித்த அந்தப் பரிதாபத்துக்குரிய சுண்டுர் இளவரசன் வேறு யாறுமல்லன்; அடியேன் தான். கும்பகர்ணன் சேவையிலிருந்து விடுபட்டு, உள்ளே அறையும் பட்டு, வந்த உணர்ச்சியில் என்னைப் பேயறை அறைந்த ராகவரெட்டி எனது அருமைத் தம்பி பகவதி.

நாயுடுவுக்கும் எங்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. வசூல் இல்லாததால் நாயுடுவுக்கு எங்களைக் கண்டாலே வெறுப்பாக இருந்தது.

என். எஸ். கே. யோசனை

இந்நிலையில் மதுரை பால வினோத சங்கீத சபையின் உரிமையாளராகிய பக்கிரி ராஜா, கரூருக்கு வந்தார். அப்போது அவருடைய கம்பெனியிலிருந்து நவாப் இராஜமாணிக்கம் கே. சாரங்க பாணி முதலியோர் பிரிந்து சொந்தமாகத் தேவி பால வினோத சங்கீத சபா என்னும் கம்பெனியைத் துவக்கியிருந்தார்கள். பக்கிரி ராஜா என், எஸ். கிருஷ்ணனிடம் தனியாகப் பேசினார். அவரைத் தமது கம்பெனிக்கு வருமாறு அழைத்தார். பெரியண்ணா பக்கிரி ராஜாவைச் சந்தித்து, என். எஸ். கிருஷ்ணனை அழைத்துப்போவதால் தமக்கொன்றும் ஆட்சேபனை இல்லையென்று கூறி அனுமதி யளித்தார். மறுநாள் கிருஷ்ணன் பெரியண்ணாவிடம் வந்து, பக்கிரி ராஜா எங்கள் நால்வரையும் விரும்புவதாகவும், நாமெல்லோரும் ஒரு குழுவாகவே போய்க் கொஞ்சகாலம் நிம்மதியாக இருக்கலாம் என்றும் யோசனை கூறினார். பெரியண்ணா அதற்கு உடன்படவில்லை. நாங்கள் மறுத்து விட்டதால் என். எஸ். கிருஷ்ணனும் பக்கிரி ராஜா கம்பெனிக்குப் போக மறுத்து விட்டார்.

ஒப்பந்தம் ரத்தாகியது

கரூரில் எங்களுக்கும் நாயுடுவுக்கும் வழக்கு நடைபெறக் கூடிய அளவுக்குக் குழப்பங்கள் வளர்ந்தன. பெரியண்ணா மிகவும் வேதனைப்பட்டார். தொடர்ந்து வந்த துன்பத்தைப் போக்கிக் கொள்ள வேண்டிக் கம்பெனியை ஒருவரிடம் ஒப்படைத்தோம். ஆனாலும் எங்கள் துன்பம் தீரவில்லை. செலவுக்குப் பணம் பெறுவதே கஷ்டமாகப் போய்விட்டது. இந்நிலையில் திருச்சிராப்பள் விக்கு வந்து சேர்ந்தோம். மூன்றாண்டுகள் நாயுடுவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தோம். ஒப்பந்தப்படி பதினொரு மாத காலந்தான் நாடகம் நடந்தது. எங்களுக்கு வர வேண்டிய சம்பளப் பாக்கிக்கு நோட்டு எழுதிக் கொடுத்தார் நாயுடு. கம்பெனியில் இருக்க விருப்பமில்லாதவர்கள் எங்களோடு வந்து விடலாமென்றும் அவர்களை அனுப்பி வைப்பதாகவும் பெரியண்ணா கூறினார். பெரும்பாலோர் எங்களோடு வர விரும்பவில்லை. ஒராண்டு காலமாகத் தொடர்பு விட்டுப்போனதால் எல்லோரும் நாயுடுவுடனேயே இருக்க விரும்புவதாகவும் கூறிவிட்டார்கள்.

மீண்டும் காமேஸ்வரய்யர்

எங்கிருந்தோ பழைய காமேஸ்வரய்யர் வந்து சேர்ந்தார். தாம் பணம் தருவதாகவும், கம்பெனியைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென்றும் துாண்டினார். பெரியண்ணா அப்போது ஆத்திரத்தோடு கூறிய வார்த்தைகளை இன்னும் என்னல் மறக்க முடியவில்லை.

“எவ்வளவோ கஷ்டங்கள் எங்களுக்கு வந்தது; ஆனாலும் நாங்கள் கலங்கவில்லை. எங்களுக்கென்றிருந்த ஒரே ஒரு சிறு நிலத்தை உங்கள் சம்பளப் பாக்கிக்காக அடகு வைக்கும் நெருக்கடியை உண்டாக்கினீர்கள். நிலமும் அடகு வைக்கப் பட்டது. உங்கள் சம்பளமும் வசூல் செய்யப்பட்டது. இப்போது ஒத்தாசை செய்வதாகப் பாசாங்கு செய்கிறீர்கள்! அனந்தகோடி வந்தனம். உங்கள் ஒத்தாசையில் கம்பெனி நடப்பதை நான் விரும்பவில்லை. எங்கள் தலையெழுத்துப்படி நடக்கட்டும். நீங்கள் போய்வரலாம்”.

என்று கண் கலங்கக் கூறினார் பெரியண்ணா, காட்சிகள், உடைகள் இவற்றையெல்லாம் ஒரு வீட்டை வாடகைக்குப் பேசி, அதிலேபோட முடிவு செய்தார். நாங்கள் புறப்படும் சமயம் சாமான்களை வாடகை வீட்டில் சேர்ப்பிக்கக்கூட யாரும் ஒத்தாசைக்கு வரவில்லை. திருச்சிராப்பள்ளி ரங்கவிலாஸ் தியேட்டருக்கு உள்ளேயே கம்பெனி வீடு இருந்தது. நாயுடு வாயிலில் நாற்காலியின் மேல் உட்கார்ந்திருந்தார். அவருக்குப் பயந்துகொண்டு நடிகர்கள் யாருமே வெளி வரவில்லை.

நன்றி காட்டியவர்கள்

நாயுடு அதிகச் சம்பளம் தருவதாக எவ்வளவோ ஆசை காட்டியும் அதற்குக் கட்டுப்படாமல் எங்களோடு வந்தவர்கள் சிலர். அவர்களில் முதல்வர் என். எஸ். கிருஷ்ணன். இன்னும் சீன் மேஸ்திரி பத்மனாபபிள்ளை, கொல்லம் பாலகிருஷ்ணன், கே. கோவிந்தசாமி, டி. என். சிவதானு, என். எஸ். பால கிருஷ்ணன், என். எஸ். வேலப்பன், பிரண்டு ராமசாமி ஆகியோர், எல்லோருமாகச் சாமான்களை வெளியே கொண்டு சேர்த்தனார். விடைபெற்றுக் கொண்டு வெளியேறினோம். அப்போது நவாப் இராஜமாணிக்கம் பிள்ளை நகரசபைத் தியேட்டரில் (தேவர் மன்றம்) நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். சொந்தக் கம்பெனி ஆரம்பித்த புதிதாகையால் எந்நேரமும் ஒத்திகை சுறு சுறுப்பாக நடைபெற்று வந்தது. விலகியவர்கள் எல்லோரும் நவாப்பின் விருந்தினராக, ஒரு நாள் அவர்கள் கம்பெனி வீட்டிலேயே தங்கினோம். எல்லோரும் உட்கார்ந்து புகைப் படம் எடுத்துக் கொண்டோம். மறுநாள் புறப்பட்டு நாகர் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.