எனது நாடக வாழ்க்கை/மறக்கமுடியாத இரசிகர்

விக்கிமூலம் இலிருந்து
மறக்க முடியாத இரசிகர்!

நாடக இரசிகர்களிலேயே பல தரப்பட்டவர்கள் உண்டு. நான் என் நாடக வாழ்க்கையில் எத்தனையோ விதமான இரசிகர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் சிவகங்கையில் எங்களுக்கு அறிமுகமான ஒரு இரசிகரை இன்னும் என்னால் மறக்க முடிய வில்லை.

இந்த நாடக இரசிகர் ஒரு முஸ்லீம். சிவகங்கையில் எங்கள் நாடகங்களை விடாமல் பார்த்து வந்தார். நாடகம் முடிந்த மறு நாள் எங்கள் வீட்டுக்கு வருவார். வரும்போது மிட்டாய் பிஸ்கத்து, பழங்கள் முதலியவற்றைக் கொண்டு வந்து கொடுப்பார். தந்தையாரோடு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார். தந்தையாருக்கு அந்த இரசிகர் போனால் போதுமென்றிருக்கும். ஆனால் இவர் ஒரு நாளும் எளிதாகப் போனதே இல்லை. இந்த இரசிகர் போவதற்காக மரியாதையான முறையில் தந்தையார் என்னென்னவோ செய்வார். ஒன்றும் அவரிடம் பயன்படாது. கடைசியாக, எங்களுக்கு வேலையிருக்கிறது. நீங்கள் போய் வாருங்கள், என்று அப்பட்டமாகச் சொன்ன பிறகுதான் அவர் போவார்.

சிவகங்கையில் இந்த இரசிகரை முதன்முதலாகச் சந்தித்த போது எங்களுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் அவர் வந்து நாடகத்தைப்பற்றியும், நடிப்பைப் பற்றியும் புகழ்ந்து பேசிப் பேசி, எங்களைச் சலிப்படையச் செய்து விட்டார். தந்தையாருக்கு இவரோடு பேசுவதே ஒரு தொல்லையாகப் போய்விட்டது. அந்த இரசிகரோ எதைப் பற்றியும் சிந்தனைப்படாமல் தொடர்ந்து வந்து கொண்டேயிருத்தார்.

பட்டாபிஷேகம் முடிந்த மறுநாள் காலையிலும் வழக்கம் போல் வந்து விட்டார். அந்தத் திரையோடு கூடிய மர உருளை என்மீது விழுந்திருந்தால் என்ன கதி நேர்ந்திருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். தாரை தாரையாகக் கண்ணிர் விட்டார். அவர் அழுததைப் பார்க்க எனக்கே பரிதாபமாக இருந்தது. எப்படியோ ஒரு வகையாக அவரை வெளியே அனுப்பினார் தந்தையார்.

பரமக்குடிப் பயணம்

சிவகங்கையில் நாடகம் முடிந்ததும் பரமக்குடிக்குப் பயணமானோம். அப்போது சிவகங்கைக்கு இரயில் பாதை கிடையாது. மதுரையிலிருந்து பஸ் வழியாகத்தான் போனோம். சிவகங்கையிலிருந்து பஸ்ஸிலேறி மானாமதுரை போய் அங்கிருந்து இரயிலேறிப் பரமக்குடிக்குப் போக வேண்டும். நாங்கள் அனைவரும் பஸ்ஸிலேறிப் பயணத்திற்குச் சித்தமாக இருந்தோம். பஸ் புறப்படும் நேரத்தில் அந்த அற்புத நாடக இரசிகர் திடீரென்று வந்து விட்டார். “நானும் உங்களோடு மானுமதுரை வந்து, வழியனுப்பிவிட்டு வந்து விடுகிறேன்” என்று கூறிப் பஸ்ஸில் ஏறினார். என்ன செய்வது? பஸ் புறப்பட்டு விட்டது. வேறு வழியின்றித் தந்தையாரும் தலையசைத்தார்.

மானாமதுரை இரயில் நிலையம் வந்து சேர்ந்தோம். பஸ்ஸிலிருந்து சாமான்களை இறக்குவதிலும், மீண்டும் அவற்றை இரயிலில் ஏற்றுவதிலும் இரசிகர் வஞ்சகமில்லாமல் உதவி புரிந்தார். இரயிலும் புறப்பட்டது. நான் தலையை வெளியே நீட்டி அவரைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். கண்களில் நீர் ததும்ப அவர் ஏக்கத்தோடு நின்றார்.

பரமக்குடிக்கு வந்து சேர்ந்தோம். தந்தையார் முன்பே ஒரு முறை வந்து வீடு பார்த்து வைத்திருந்ததால் நாங்கள் எங்கள் தாயாருடன் தனிவீடு போய்ச் சேர்ந்தோம். அன்றிரவு பயணக் களைப்பு அதிகமாக இருந்தது. நிம்மதியாக உறங்கினோம்.

மறுநாள் காலை

மறுநாள் காலை ஏழுமணி அளவில் எழுந்து நான் பல் துலக்கிக் கொண்டிருந்தேன். தந்தையார் அம்மாவுடன் ஏதோ சண்டை போட்டுக் கொண்டிருந்தார். கவனித்தேன். அம்மா, காலையில் கோபி போடுவதற்குக் ‘கருப்பட்டி’ இல்லையென்று சொல்லி யிருக்கிறார்கள். அதுதான் சண்டைக்குரிய விஷயம்.

ஆம்; அந்த நாளில் நாங்கள் கருப்பட்டிக் காபி தான் சாப்பிடுவது வழக்கம். இப்போதுகூட எங்கள் நாகர்கோவிலுக்குப் போகும் நேரங்களில் வீட்டில் என் அண்ணியாரிடம் கருப்பட்டிக் கோபி போடச் சொல்லுவேன். அந்தக் ‘காபி'யில் எனக்கு ஒரு தனி ஆசை.

“பொழுது விடிந்து, காபி குடிக்க வேண்டிய நேரத்தில் தான கருப்பட்டி இல்லையென்று சொல்வது?” இது அப்பாவின் கேள்வி.

“இன்று ‘காபி’ வேண்டியதில்லை. தண்ணீர் குடித்தால் போதும். மற்ற காரியங்களைப் பார்” என்று தந்தையார் இறுதியாக முடிவு கூறி விட்டார். அவரும் பல் துலக்கத் தொடங்கினார்.

வெளியே யாரோ வருவதுபோல் சத்தம் கேட்டது. நாங்கள் எட்டிப் பார்த்தோம். கையில் ஒரு பெரிய கருப்பட்டிப் பொட்டலத்தோடு சிரித்துக் கொண்டே நின்றார் சிவகங்கை நாடக இரசிகர். எங்களுக்கு வியப்பாகப் போய்விட்டது. இவர் எப்படித் திடீரென்று கருப்பட்டியோடு வந்தார்...?

நாடக இரசிகர் எங்கள் பிரிவைத் தாங்காது அடுத்த வண்டியிலேயே பரமக்குடிக்குப் புறப்பட்டு விட்டார். காலையில் எங்கள் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து வந்திருக்கிரு.ர். உள்ளே அம்மாவும் அப்பாவும் கருப்பட்டிக்காகச் சண்டை போட்டுக் கொண்டது அவர் காதில் விழுந்திருக்கிறது. உடனே அவசரமாக ஒடிப் போய், பக்கத்திலுள்ள கடையிலிருந்து கருப்பட்டியை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்.

இந்த விபரத்தை அறிந்ததும் தந்தையாருக்கு இவரிடம் மிகுந்த அனுதாபம் ஏற்பட்டது. அவரையும் தம்மோடு பலகாரம் சாப்பிடச் சொன்னார். பிறகு நாடகப் பைத்தியத்தால் ஏற்படும் தீமைகளைப் பற்றியெல்லாம் அவருக்கு விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறினார். அவரை ஒருவாறு சமாதானப் படுத்தித் தாமே உடனழைத்துச் சென்று இரயிலில் ஏற்றி அனுப்பிவிட்டுத் திரும்பினார்.

நிலாச் சாப்பாடு

பரமக்குடியில் நாடகம் தொடங்கியது. நல்ல வசூல். சிவகங்கையிலும் பரமக்குடியிலும் வசூல் அதிகமாகும் செய்தியை அறிந்ததும் கம்பெனி உரிமையாளர்கள் எல்லோரும் அடிக்கடி வந்துபோனார்கள். சங்கரதாஸ் சுவாமிகள், பெளர்ணமியன்று நிலாச் சாப்பாடு சிறப்பாகப் போடவேண்டுமென்று திட்டம் போட்டார். அந்த ஏற்பாடு, உரிமையாளர்களில் இரண்டொருவருக்குப் பிடிக்கவில்லை. சுவாமிகளின் திட்டப்படி அதற்கு அதிகமாகச் செலவாகுமென்று தெரிந்தது. உரிமையாளர்கள் யோசித்தார்கள். சுவாமிகள், அவர்களைப்பற்றிக் கவலைப்படவில்லை. தமது திட்டப்படியே சிறப்பான முறையில் நிலாச்சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்தார். நடிகர்களுக்கெல்லாம் ஒரே குதுரகலம், எல்லோரும் முழு நிலவு உலாவரும் நந்நாளில் விருந்துண்டு களித்தோம்.

உரிமையாளர்கள் திட்டம்

உரிமையாளர்கள் கூடிக்கூடிப் பேசினார்களாம். சுவாமிகளின் போக்கில் அவர்களில் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டதாம் தேவையான நாடகங்களேயெல்லாம் தயாரித்தவுடன் சுவாமிகளை விலக்கிவிடவும், சட்டாம்பிள்ளை திரு குற்றாலலிங்கம் பிள்ளையை வைத்துக் கொண்டே நாடகங்களைத் தொடர்ந்து நடத்தவும் திட்டமிட்டதாக எங்கள் தந்தையார் வந்து கூறினார். உழைப்புப் பங்காளியான திரு பழனியாப்பிள்ளை ஒருவர் மட்டும் இந்த ஏற்பாட்டுக்கு இசையவில்லையென்றும் சொன்னார்.

உரிமையாளர்களின் திட்டமெல்லாம் சுவாமிகளுக்குத் தெரிந்துவிட்டது. அதன் காரணமாகப் புதிதாக நாடகம் தயாரிப்பதும் நிறுத்தப்பட்டது. நிலைமையை அறிந்த உரிமையாளர்கள் சில நாட்கள் அமைதியாக இருந்து பார்த்துவிட்டு மதுரைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். பழனியாப்பிள்ளை மட்டுமே இருந்து நிர்வாகத்தைக் கவனித்து வந்தார்.

பரமக்குடி நாடகம் முடிந்து திண்டுக்கல்லில் ஒரு மாத காலம் நாடகங்கள் நடத்திவிட்டு மீண்டும் மதுரை வந்து சேர்த்தோம். மதுரையில் சில நாடகங்கள் நடைபெற்றன.

திங்கட்கிழமை பஜனை

கம்பெனியில் திங்கட்கிழமைதோறும் பஜனை நடைபெறுவது வழக்கம், நடிகர்கள் எல்லோரும் கூட்டமாகச் சுவாமிகளின் பாடல்களைப் பாடுவோம். கடைசியில் தனித்தனியாக ஒவ்வொரு நடிகரும் பாடவேண்டும் கூட்டத்தில் கோவிந்தா போடும் சிலர், தனியாகப் பாடும்போது குளறி வழிவார்கள். இவர்களையெல்லாம் சட்டாம்பிள்ளை குறித்துக் கொள்வார். பின்னல் சுவாமிகள் கவனித்துக் கொள்வார்கள். எனவே பாடும் ஒவ்வொருவரும் பய பக்தியோடு பாடுவார்கள். மதுரையில் ஒரு நாள் புட்டுத்தோப்பிலுள்ள கம்பெனி வீட்டில் பஜனை வழக்கம் போல் நடந்தது. சித்திரைத் திருவிழா நடைபெறும் சமயம் அது. இரவோடிரவாக, சொக்கேசப் பெருமான் ஊர்வலம் புறப்பட்டு புட்டுத்தோப்புக்கு வருகிற நாள். பஜனையில் நாங்கள் எல்லோரும் பாடிமுடித்து விட்டோம். பஜனைக்கு வந்திருந்த நண்பர்களிலும் சிலர் பாடினார்கள். கடைசியாகச் சுவாமிகள் பாட வேண்டுமென எல்லோரும் வற்புறுத்தினார்கள் சுவாமிகள் சிறிது சிந்தித்தார்கள். குறுநகையோடு, “எவ்வளவு நேரம்பாட வேண்டும்?” என்று கேட்டார்கள். “தங்கள் மனம்போல் பாடுங்கள்” என்றார் ஒருவர். சுவாமிகளின் புலமையை நன்கறிந்தவரான பழனியாயிள்ளை, “சுவாமி ஊர்வலம் இங்கு வருகிற, வரை பாடுங்கள்” என்றார்.

“ஆண்ட சக்ரவர்த்தி” என்று திருப்புகழ்ச் சந்தத்தில் பாடத் தொடங்கினார் சுவாமிகள். கண்களை மூடிய வண்ணம் பாடிக்கொண்டேயிருந்தார், ஏற்கனவே நெட்டுருப் போட் டிருந்த பழைய பாடலன்று; அப்போதுதான் கற்பனையாக எழுந்த புதிய பாடல். எல்லோரும் வியப்பே வடிவாக வீற்றிருந்தனார். பாடல் முடியவில்லை. தொடர்ந்து பாடிக்கொண்டே பரவச நிலையிலிருந்தார் சுவாமிகள். நீண்டநேரத்திற்குப் பின் சுவாமி ஊர்வலம் வருவதை அறிவிக்கும் நாதசுர இன்னிசைக் கேட்டது. மேளச் சத்தம் தன் பாட்டுக்கு இடையூராக வந்த நிலையில் கண்களைத் திறந்தார் சுவாமிகள். பாடலை முடித்தார். சுமார் ஒரு மணி நேரம் சுவாமிகள் பாடியதாக எல்லோரும் பேசிக்கொண்டது என் காதில் விழுந்தது. மதுரை நாடகங்களை முடித்துக் கொண்டு விருதுப்பட்டி, சாத்துார், திருநெல்வேலி முதலிய நகரங்களுக்குச் சென்றோம். வசூல் சுமாரான முறையில் இருந்து வந்தது.

ஒப்பந்த நாடகம்

தமது ஊராகிய தூத்துக்குடியில் நாடகம் நடத்த வேண்டு மென்று சுவாமிகள் திட்டமிட்டார். திருநெல்வேலியிலிருந்து துரத்துக்குடிக்குப் போனோம். துரத்துக்குடியில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தபோது பக்கத்தில் சுமார் இருபது மைல் தொலைவிலுள்ள ஏரல் என்னும் ஊரிலிருந்து கம்பெனியைக் ‘கண்ட்ராக்ட்’ பேச ஒருவர் வந்தார்.

அவர், மாதம் பதிமூன்று நாடகங்களுக்குச் சகல செலவுகளும் போக ஆயிரத்தி ஐநூறு ரூபாய்கள் தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டார். இப்போதெல்லாம் ஒரு நாடகத்திற்கு 1500 ரூபாய்கள் கொடுத்தாலும் நாடகம் நடத்துவது கஷ்டமாயிருக்கிறது. அந்த நாளில் 13 நாடகங்களுக்கு 1500 ரூபாய்கள் என்றால், கால மாறுபாட்டை எண்ணிப் பாருங்கள். எல்லோரும் இரட்டை மாட்டு வண்டிகளில் பயணம் செய்து ஏரல் போய்ச் சேர்ந்தோம். ஏரலில் வீடு கிடைக்காததால் தாயார் மட்டும் தூத்துக்குடியிலேயே இருக்க நேர்ந்தது.

ஏரலில் நாடகக் கொட்டகைக்கு எதிரேயே ‘கள்ளுக்கடை’ இருந்தது. நாடகம் பார்த்துக் கொண்டிருப்பவர்களில் பலர் அடிக்கடி வெளியே சென்று வருவார்கள். ஒரு சிலர் மொந்தை யோடு உள்ளே வந்து உட்கார்த்து கொண்டு குடிப்பார்கள். இந்தக் கோலாகலத்தைக் கண்டு யாரும் அதிசயப்படுவதுமில்லை; தடுப்பதுமில்லை. நாடகங்கள் நல்ல வசூலில் தொடர்ந்து நடை பெற்று வந்தன.

தகராறும் குழப்பமும்

நாடகத்தைக் ‘கண்ட்ராக்டு’ எடுத்தவர் மிகுந்த புத்திசாலி. அவர் சுவாமிகளை எப்படியோ சரிப்படுத்திக் கொண்டார். சுவாமிகளுக்குத் தேவையான சகல வசதிகளையும் தனிப்பட்ட முறையில் செய்து கொடுத்து விட்டார். ஒப்பந்தப்படி கம்பெனிக்கு அன்றாடச் சாப்பாட்டுக்குரிய பணத்தைக் கூடக் கொடுக்காமல் ஏதேதோ சொல்லி வந்தார். சாப்பாட்டுவகையில் ஒருநாள் தகராறு ஏற்பட்டதும் எங்கள் தந்தையாருக்குப் பிரமாதக் கோபம் வந்துவிட்டது. அன்று கடைசி நாடகம், நடிகர்கள் எல்லோரையும் வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு “ஒருவரும் இன்று நாடகத்திற்குப் போகக் கூடாது” என்று ஆணை பிறப்பித்து விட்டார். விபரம் அறிந்தவுடன் கண்ட்ராக்டரிடமிருந்து ஆள் வந்தது. வந்தவர் தந்தையார் வாசற்படியில் கையில் பெரிய தடியோடு உட்கார்ந்திருக்கும் நிலையைப் பார்த்தவுடன் பயந்து ஓடிவிட்டார். பிறகு கண்ட்ராக்டர் சுவாமிகளிடம் விஷயத்தைச் சொல்ல, சுவாமிகளே நேரில் வந்தார். சுவாமிகள் வருவதை அறிந்ததும் தந்தையார் பெட்டிப் பாம்பாய் அடங்கிவிட்டார். ஒன்றும் பேசாமல் கதவைத் திறந்துவிட்டு, எங்கோ போய்விட்டார். அன்று கடைசி நாடகம்; சுவையில்லாமல் கவலையோடு நடந்து முடிந்தது. எல்லோரும் தூத்துக்குடி வந்து சேர்ந்தோம்.

இந்தச் சம்பவத்திற்குப் பின் சுவாமிகளுக்கும், எங்கள் தந்தையாருக்கும் மனக் கசப்பு வளர்ந்தது. துரத்துக்குடிக்கு வந்ததும் திடீரென்று ஒரு நாள் சுவாமிகளிடமும் சொல்லாமல் தந்தையார் எங்கள் எல்லோரையும் அழைத்துக் கொண்டு இரயிலேறி மதுரை வந்து சேர்ந்தார்.

மதுரைக்கு வந்த மறுநாள் தந்தையார், சின்னையா பிள்ளையைப் போய்ப் பார்த்தார். ஏரலில் நடந்த விஷயங்களை யெல்லாம் கூறினார். இனிமேல் கம்பெனியிலிருந்தால் சுவாமிகளுக்கும் தமக்கும் மனத் தாங்கல் வளருமென்றும் கணக்குத் தீர்த்துத் தங்களை நிறுத்திவிடுமாறும் வேண்டிக்கொண்டார். சின்னையா பிள்ளை, கம்பெனியின் முக்கியமான பங்காளி. அதிகப் பணம் போட்டவர். அவர் அப்போது மதுரை பொன்னகரத்தில் தமது குடும்பத்தோடு வசித்து வந்தார். தந்தையாரின் மொழியைக்கேட்டதும், அவர் தந்தையாரைச் சமதானப்படுத்தி விட்டு, உட்புறம்சென்று இரண்டு தந்திகளைக் கொண்டு வந்து கொடுத்தார். அவ்விரண்டு தந்திகளும் தூத்துக்குடியிலிருந்து சுவாமிகளால் கொடுக்கப்பட்டிருந்தன. முதல் தந்தியில், “கண்ணாசாமிப் பிள்ளை கோஷ்டியாரை வைத்து இனிமேல் தொழில் நடத்த முடியாது. வேறு ஏற்பாடு செய்யவும்” என்று குறிப்பிட்டிருந்தது. இரண்டாவது தந்தியில்,

“கண்ணாசாமிப்பிள்ளை கோஷ்டியார் என்னிடம் சொல்லாமல் போய் விட்டார்கள். உடனடியாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யவும்” என்று எழுதப்பட்டிருந்தது. மாறுபட்ட கருத்துடனிருந்த இவ்விரண்டு தந்திகளையும் படித்துவிட்டுத் தந்தையார் சிரித்தார்.

முதல் தந்தி கொடுத்தபோது நாங்கள் தூத்துக்குடியை விட்டுப் புறப்பட்டுப் போய்விட்ட செய்தி சுவாமிகளுக்குத் தெரியாது போலிருக்கிறது. அந்தத் தந்தியில் சுவாமிகளுக்கு எங்கள்மேல் இருந்த கோபம் தெரிகிறதல்லவா? சுவாமிகள் முடிவு செய்யுமுன்பே நாங்கள் புறப்பட்டுப் போய்விட்டோமென்று தெரிந்ததும், அந்தக்கோபம் ஒருவாறு தணிந்திருக்கிறது. இரண்டாவது தந்தியைக் கொடுத்திருக்கிறார். சின்னையாபிள்ளை தந்தையாருக்கு நீண்ட நேரம் சமாதானம் சொன்னார், கடைசி யாக மீண்டும் கம்பெனிக்குப் போகச் சம்மதித்து, தந்தையார் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

தந்தையார் வந்து அம்மாவிடம் இந்த விஷயங்களை யெல்லாம் சொன்னார். அம்மா மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். சுவாமிகளோடு மன வேற்றுமைப் படுவதும், அதற்காகக் கம்பெனியிலிருந்து விலகுவதும் அம்மாவுக்குப் பிடிக்கவேயில்லை.

புதியம்புத்துார்

கம்பெனி புதியம்புத்துருக்குப் போயிருப்பதாகவும், அங்கு போய்ச் சேரவேண்டுமென்றும் சொல்லி, சின்னையாபிள்ளை எங்களை அனுப்பி வைத்தார்.

மணியாச்சிக்கும், துரத்துக்குடிக்குமிடையே ‘தட்டப் பாறை’ என்றொரு ஸ்டேஷன் இருக்கிறது. அந்த ஸ்டேஷனில் இறங்கி, மாட்டு வண்டியில் ஏறித்தான் புதியம்புத்துார் போக வேண்டும். நாங்கள் தந்தையாருடன், புதியம்புத்துார் வந்து சேர்ந்தோம். புதியம்புத்துார் ஒரு சிற்றுார்; அந்த ஊர் மக்கள் மிகவும் நல்லவர்கள், எங்களிடம் அன்பும் ஆதரவும் காட்டினார்கள் நாள் தோறும் ஊர் மக்களில் யாராவது ஒருவர், கம்பெனிக்குத் தேவையான காய்கறிகளைக் கொண்டு வந்து கொடுப்பார். வாரத்திற்கு இரண்டு நாள் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுவோம். அந்த நாட்களில் புலால் உணவு போடுவது வழக்கம். ஊர் மக்கள் ஆடுகள், கோழிகள் இவற்றையெல்லாம் அன்புடன் அளித்து உதவினார்கள்.

நாங்கள் புதியம்புத்துருக்கு வந்த பிறகு, சுவாமிகள் சில நாட்கள் எங்களோடு பேசாதிருந்தார். அவரைப் பார்க்கவே எங்களுக்குப் பயமாக இருந்தது. என்னுடைய பாடங்களை யெல்லாம் வேறொரு பையனுக்குக் கொடுத்தார். பெரியண்ணாவின் பாடங்களையும் கேட்டனுப்பினார். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. நான் ‘சுலோசன சதி’ யில் போடும் நாரதர், இலட்சுமனன், சின்னண்ணா போடும் ‘ராமர்’ ஆகிய பாடங்களை யெல்லாம் கொண்டு வரும்படி ஒருநாள் என்னிடமே சொன்னார். நான் அழுதுகொண்டே போய் அப்பாவிடம் கூறினேன். அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது. எங்கள் மூன்று பேருடைய பாடங்களும் வைத்திருந்த புத்தகப் பெட்டியை அப்படியே தூக்கிக் கொண்டு போய், சுவாமிகளின் முன்னால் போட்டுவிட்டு வந்தார். சுவாமிகள் இப்படி நடக்குமென்று சற்றும் எதிர்பார்க்க வில்லை. உடனே ஏதோ சமாதானம் கூறும் முறையில், “பாடங்களைப் பலபேர் நெட்டுருப் போட்டு வைத்திருந்தால் நோய் நொடி ஏற்படும் சமயங்களில், பயன்படுமே என்பதற்காகத்தான் பாடங்களைக் கேட்டேன். வேறு தவறான எண்ணம் எதுவுமில்லை” என்று மழுப்பினார். புத்தகப் பெட்டி எல்லாப் பாடங்களுடனும் எங்கள் அறைக்கு மீண்டும் வந்து சேர்ந்தது.
மதுரை மாரியப்ப சுவாமிகள்

பிரபல தமிழிசைப் பாடகர், மதுரை மாரியப் பசுவாமிகளை நாங்கள் முதன்முதலாகப் புதியம்புத்துாரில்தான் சந்தித்தோம். அவர் திருச்செந்தூர் முருகன் ஆலயத்திற்குமுன், தாமே நாக்கை அறுத்துக் கொண்டாரென்றும், முருகன் திருவருளால் நல்ல பாடல்களை இயற்றும் திறனுடையவராய் விளங்குகிறாரென்றும் எல்லோரும் பேசிக்கொண்டார்கள். திரு மாரியப்ப சுவாமிகள் திருச்செந்துTர் முருகனுக்குப் பால்காவடிப்பிரார்த்தனை செலுத்துவதற்காக, சுவாமிகளிடம் பொருளுதவிபெற வந்திருந்தார்.

மாரியப்ப சுவாமிகள் சங்கரதாஸ் சுவாமிகளின் சிறந்த மாணாக்கர்களிலே ஒருவர். சுவாமிகளின் சமரச சன்மார்க்க நாடக சபையில் பிரதம நடிகராக விளங்கியவர். சங்கீத ஒளி விளக்காகத் திகழ்ந்த எஸ் ஜி கிட்டப்பாவும், அவரது சகோதரர்களும் சுவாமிகளின் மாணாக்கர்களாக, இந்த நாடக சபையிலே பயிற்சி பெற்றவர்கள்தாம்.

“என்ன மாரியப்பா! பாடல்கள் எழுதுகிறாயாமே? எங்கே நீ எழுதின பாடல்களைப் பாடு. கேட்போம்” என்றார் சுவாமிகள். மாரியப்ப சுவாமிகள் பாடத் தொடங்கினார். கடைசி அடியைப் பாடும்போது ஏதோ சிறிது தயக்கத்துடன் நிறுத்தினார். உடனே சுவாமிகள், “என்னடா, அப்பன் மாரியப்பன் என்று முத்திரை பாடி வைத்திருக்கிறாயா? பாதகமில்லை, பாடு” என்றார். எங்களுக்கெல்லாம் பெரும் வியப்பாகப் போய்விட்டது, சுவாமிகள் கூறியபடியேதான் அந்தப் பாடலின் அடி அமைக்கப்பட்டிருந்தது. சுவாமிகள் துவக்க முதலே தமது பெயரை முத்திரையடியாக வைத்துப் பாடும் வழக்கமில்லாதவர். எனவே மாரியப்ப சுவாமி கள் தமது ஆசிரியர் எதிரில் முத்திரையடி வைத்துப் பாடத் தயங்கினார் என்பதைப் பின்னால் உணர்ந்தோம்.

மதுரை மாரியப்ப சுவாமிகள் தமிழிசைக்குப் பெரும் பணி புரிந்தவர்களிலே தலைசிறந்த ஒருவர். தமிழிசை இயக்கம் தோன்றுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழிசைப் பெரும் புலவராக விளங்கியவர் நூற்றுக் கணக்கான சாகித்தியங்களை அவரே புனைந்திருக்கிறார். அத்தனையும் அருமையான பாடல்கள். சிட்டா ஸ்வரங்களுக்கெல்லாம் சாகித்தியங்கள் அமைத்துப் பாடியிருக்கிறார்.

நண்பர் கருப்பண்ணன்

புதியம்புத்துரரில் நாடகங்கள் சிறப்பாக நடைபெற்று வந்தன. அந்த ஊரில் கருப்பண்ணன் என்று ஒருவர் இருந்தார். அவர், ஒரு சலவைத் தொழிலாளி. ஊரில் பெரிய போக்கிரி அவர் கம்பெனிக்கும், சிறப்பாக எங்கள் தந்தையாருக்கும் நெருங்கிய நண்பரானார்.

திரு கருப்பண்ணனுக்குப் பதின்மூன்று மனைவியர் இருந்தார்கள். அவர்கள் பல்வேறு சாதியினார். ஒருநாள் நாங்கள் நாடகக் கொட்டகைக்குப் போகும்போது, அவர்களைப் பார்க்க நேர்ந்தது. பெண்கள் பலர் கூட்டமாக வாயிலில் நிற்பதைப் பார்த்து, “இவர்கள் யார்?” என்று கேட்டோம். உடனே அங்கு நின்று கொண்டிருந்த திரு கருப்பண்ணன், “இவர்களெல்லோரும் அடியேனுடைய வீட்டுக்காரிகள்: உங்களைப் பார்ப்பதற்காகத் தான் நிற்கிறார்கள்” என்றார். எங்களுக்கு ஒரே ஆச்சரியம்! பதின் மூன்று மனைவியரை வைத்துக்கொண்டு, இவர் எப்படித்தான் வாழ்க்கை நடத்துகிறாரோ ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

பிள்ளையார் உடைப்பு

புதியம்புத்துரில் ஒரு குறிப்பிடத்தக்க விசேஷம் நடந்தது. தலைப்பைப் பார்த்ததும் திகைப்படைய வேண்டாம். பிள்ளையாரை உடைக்கும் இயக்கம் பிறக்காத காலம் அது. அந்தக் காலத்தில் ஒருவர் பிள்ளையாரை உடைத்தார் என்றால் அது வியப்புக்குரிய செய்தியல்லவா?

சுமார் பதினைந்து வயதுடைய ஒர் இளைனார் கம்பெனியில் இருந்தார். நல்ல இனிமையான குரல். அவர் பாடும் உச்ச ஸ்தாயிக்கு, ஆர்மோனியத்தில் கட்டையே யில்லையென்று புகழுவார்கள். அவ்வளவு அற்புதமான சாரீரம். நடிப்பிலும் நல்ல திறமை. எந்தப் பாடமாயிருந்தாலும் சிலமணி நேரங்களில் நெட்டுருச் செய்துவிடக்கூடிய அபாரமான நினைவாற்றலும் அந்த இளைஞரிடம் இருந்தது.

இத்தனை தகுதியுடைய ஒருநடிகனுக்கு எப்படி ஓய்வு இருக்க முடியும்? யாராவது காய்ச்சல், தலைவலி என்று படுத்து விட்டால் உடனடியாக அந்தப் பாத்திரத்தை ஏற்க வேண்டிய பொறுப்பு அந்த இளைஞன் தலையில் விழும். இவ்வாறு பல நடிகர்களின் ஸ்தானத்தைப்பூர்த்தி செய்ய வேண்டிய நெருக்கடி அடிக்கடி அவருக்கு ஏற்படுவதுண்டு.

ஒரு நாள் பிரகலாதன் நாடகம். இரணியன் வேடதாரி கந்தசாமி திடீரென்று நோயாய்ப் படுத்துவிட்டார். வழக்கம் போல் நமது இளைஞரே இரண்யனின் இடத்தைப் பூர்த்தி செய்ய வேண்டியதாயிற்று. நடிகருக்கு ஒரே ஆத்திரம். எதிர் பாராது பல வேடங்களில் நடிப்பதற்குக் கிடைக்கும் இந்த நல்ல வாய்ப்புக்கள் அந்த நடிகருக்குச் சிறிதும் மகிழ்ச்சியை உண்டாக்க வில்லை.

அந்த நாளில் காலை, மாலை, இருவேளைகளிலும் நடிகர்களை ஊர்ப்புறத்தில் உலாவ அழைத்துச் செல்வது வழக்கம். ஏரிக் கரையை அடுத்த சமவெளியில் ஓர் அரசமரமும், அதன்கீழ் கெம்பீரமான ஒரு பிள்ளையார் சிலையும், அதைச் சுற்றி நாகர்களும் அமைந்திருந்தன. நடிகர்கள் அந்த இடத்தைத் தாண்டித்தான் ஏரிக்கரைக்குச் செல்லவேண்டும். பிரகலாதன் நாடகம் முடிந்த மறுநாள் அந்த வழியாகச் செல்லும்போது, ஏதோ சத்தம் கேட்டுச் சில நடிகர்கள் திரும்பிப் பார்த்தார்கள். நமது நடிக இளைனார் அரசமரத்தின் முன் நின்று கொண்டு, ஆவேசத்தோடு கையில் கிடைத்த கற்களையெல்லாம் எடுத்து, எதிரேயிருந்த பிள்ளையாரின் மீது வீசிக் கொண்டிருந்தார்.

“ஏனப்பா, இப்படிப்பிள்ளையாரை உடைக்கிறாய்” என்றார் ஒருவர். “இந்த நாசமாப் போற பிள்ளையார் எனக்கு வளமான சாரீரத்தைக் கொடுத்திருப்பதாலல்லவா இந்த வம்பெல்லாம் வருகிறது. பாவிகள் எதற்கெடுத்தாலும் என்னையே போட்டுச் சாகடிக்கிறார்களே! எனக்குச் சாரீரம் கெட்டுப் போகும் வரை இந்தப் பிள்ளையாரை உடைத்தே தீருவேன் என்று சொல்லி மீண்டும் கற்களை வீசினார். அரச மரத்தடிப் பிள்ளையார் சிறிது சேதமடைந்தது. நல்ல குரல் வேண்டும், நல்ல வேடம் புனைய வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டுத் தினமும் பிள்ளையாரை வழிபட்டு வரும் நடிகர்களும் சிலர் இருந்தார்கள். அவர்களுக்கு இளைஞரது செயல் பெரும் வியப்பாக இருந்தது.

ஒரு நாளோடு அவர் இந்தப் பிள்ளையார் உடைப்பை நிறுத்தவில்லை. சுவாமிகள் காதில் செய்தி எட்டிக் கண்டிக்கும் வரை தினமும் இவ்வாறு பிள்ளையார் பூசை நடத்திக் கொண்டே யிருந்தார். இப்படிப் பிள்ளையார் உடைப்பை நடத்திய அந்த நடிகப் பெரு வீரர் யார் தெரியுமா? நன்கு மெருகேறிய பழம் பெரும் நகைச்சுவை நடிகர் அவர். அவரது பெயரை அறிந்து கொள்ள ஆவல் உண்டாகிறதல்லவா? அவர்தாம் திரைப்பட நடிகர் திரு எம். ஆர். சாமிநாதன்!

எம். ஆர். சாமிநாதன்

மிகச் சிறந்த நடிகர், நகைச்சுவை நடிகர்களுக்குச் சாதாரணமாக எல்லா விதப் பாத்திரங்களையும் நடிக்க வராது. அப்படி ஒரு சிலர் நடித்தாலும் ரசிகர்கள் நகைச் சுவையுடனேயே அவர் நடிப்பை வரவேற்பது வழக்கம். திரு சாமிநாதன் அதற்கு முற்றிலும் விலக்கானவர் எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நடித்து வெற்றி பெற்றுவிடுவார். அவர் தொடர்ந்து தத்துவ மீனலோசினி வித்துவ பால சபையிலும், பிறகு எங்கள் சொந்தக் கம்பெனியிலும் பல ஆண்டுகள் நகைச்சுவை நடிகராக விளங்கி யிருக்கிறார், நாங்கள் முதன் முதலாகத் திரைப்படத் துறையில் புகுந்தபோதும் எங்கள் குழுவோடு சேர்ந்து “மேனகா” படத்தில் நடித்தவர். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களுக்கு, எம். ஆர் சாமிநாதன் அவர்களை ‘ஆசான்’ என்றே குறிப்பிடவேண்டும். இருவரும் பல ஆண்டுகள் எங்கள் குழுவில் நகைச்சுவை நடிகர்களாக இருந்திருக்கிறார்கள்.

நடிகர் மட்டுமன்று எம். ஆர், சாமிநாதன், ஒரு நாடகாசிரி யருமாவார். இவர் எழுதிய ‘ஜம்புலிங்கம்’ என்னும் சீர்திருத்த நாடகத்தை நாங்கள் 1934ஆம் ஆண்டில் நடித்திருக்கிறோம். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் கோயமுத்தூரில் ‘அசோகன பிக்சர்ஸ்’ என்னும் படக் கம்பெனி வைத்திருந்தபோது, எம்.ஆர். சாமிநாதன் கதை எழுதும் பொறுப்பிலும் சிறந்த முறையில் பணி புரிந்திருக்கிறார். பழனியாபிள்ளை அவர்கள் ஸ்ரீ மீனலோசனி பால சற்குண நாடக சபா’ என்னும் பெயரால் ஒரு சொந்தக் கம்பெனியை நிறுவி, இலங்கையில் நாடகங்கள் நடத்தி வந்த போது திரு எம். ஆர். சாமிநாதன், திரு டி. எஸ்.துரைராஜ் ஆகிய இருபெரும் நடிகமணிகளும் அக்குழுவின் பிரதம நகைச்சுவை நடிகர்களாக விளங்கி வந்தார்கள். டி. எஸ். துரைராஜ் அவர்கள் தயாரித்த "பானை பிடித்தவள் பாக்கியசாலி" என்னும் திரைப் படத்தில் எம். ஆர். சாமிநாதன் ஜட்காவாலா வாக நடித்ததை இரசிகர்கள் இன்னும் மறந்திருக்க முடியாது. இவரைப்பற்றி இன்னும் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட நேருமாதலால் இத்தோடு இங்கே நிறுத்திக் கொள்ளுகிறேன்.

சிதம்பரனரைத் தந்த சிற்றூர்

புதியம்புத்தூரில் நாடகங்களுக்கு நல்ல வசூல் ஆயிற்று. ஒரு மாத காலம் நாடகம் நடந்தது. அடுத்த ஊர் முடிமன்; புதியம் புத்துரரிலிருந்து சுமார் ஏழு மைல்கள் இருக்கும். எல்லோரும் மாட்டுவண்டிகளில் முடிமன்னுக்குப் புறப்பட்டோம். வழியில் ஒட்டப்பிடாரம் என்னும் ஊரைத் தாண்டிதான் போக வேண்டும். ஒட்டப்பிடாரம் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரைத் தந்த சிற்றுார். அப்போது தாலுகாவின் தலை நகராக இருந்ததால் பெரிய ஊராகத் தோன்றியது. சிறந்த வாணிபத் தலமாகவும் விளங்கியது.

முடிமன் சென்றபிறகு அங்கு நாடகக் கொட்டகை இல்லை யென்பதை அறிந்தோம். பக்கத்தில் போலிநாய்க்கனூர், என்றொரு சிற்றுார். அந்த ஊரில்தான் கொட்டகை இருந்தது. முடி மன்னில் கம்பெனி வீடு; போலிநாய்க்கனூரில் நாடகக் கொட்டகை. இடையேயுள்ள சுமார் ஒரு மைல் தூரத்திற்குச் சரியான பாதை கிடையாது.