என் சரித்திரம்/32 தமிழே துணை

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—32

தமிழே துணை


கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் நான் சங்கீதப்பயிற்சி செய்து வருவது என் ஆசிரியருக்கு முதலில் தெரியாது. அதை நானும் தெரிவிக்கவில்லை. பிள்ளையவர்களுக்கும் கோபாலகிருஷ்ண பாரதியாருக்கும் பழக்கமுண்டு. பாரதியார் பெரிய சிவபக்தர் என்ற நினைவினால் அவரிடத்து என் ஆசிரியர் மதிப்பு வைத்திருந்தார்; அவரது சங்கீதத் திறமைக்காக அன்று. தமிழறிவு போதிய அளவு அவர்பால் இல்லையென்ற எண்ணம் பிள்ளையவர்களுக்கு இருந்தது. பாரதியார் இயற்றிய நந்தனார் சரித்திரக் கீர்த்தனத்தில் இலக்கணப்பிழைகள் உள்ளன என்ற காரணத்தால் என் ஆசிரியர் அச்சரித்திரத்தைப் பாராட்டுவதில்லை. ஆனாலும் அதிற் கனிந்து ததும்பும் பக்திரஸத்தில் ஈடுபட்டு அதற்கும் ஒரு சிறப்புப்பாயிரச் செய்யுள் அளித்திருக்கிறார்.

ரகசியம் வெளிப்பட்டது

எப்பொழுதேனும் இவ்விரு பெரியாரும் சந்திப்பதுண்டு. ஒருமுறை அவ்வாறு சந்தித்தபோது, பிள்ளையவர்கள் பாரதியாருக்கு உவப்பாக இருக்குமென்று கருதி, “என்னிடம் ஒரு பிராமணச் சிறுவர் பாடங் கேட்க வந்திருக்கிறார்; ராகத்தோடு பாடல் வாசிக்கிறார். தாங்கள் ஒருமுறை அவர் படிப்பதைக் கேட்டு ஆசீர்வதிக்க வேண்டும்” என்றார். இசையுடன் படிப்பது ஒரு பெரிய காரியமென்றும், அதைக் கேட்டால் பாரதியார் திருப்தி அடைவாரென்றும் அவர் எண்ணினார்.

“அந்தப் பிள்ளையாண்டானை எனக்கு நன்றாகத் தெரியுமே. என்னிடமும் வந்து காலைவேளைகளில் சிக்ஷை சொல்லிக்கொள்ளுகிறான். நல்ல சாரீரம் இருக்கிறது. தங்களிடம் அவன் பாடங் கேட்டு வருவதும் எனக்குத் தெரியும். சங்கீதத்தோடு தமிழ் கலந்தால் நன்றாகத்தான் இருக்கும்” என்று கூறினார் பாரதியார். அவர் கூறிய வார்த்தைகள் பிள்ளையவர்களிடம் வெறும் தமிழ் மாத்திரம் இருப்பது ஒரு குறையென்று தொனிக்கும்படி இருந்தன.

பிள்ளையவர்கள் அச்செய்தியைக் கேட்டதும் திடுக்கிட்டார். உடனே பாரதியாரிடம் விடைபெற்று நேரே தம் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். வீட்டின் ஒரு பக்கத்தில் நண்பர்களுடன் நான் எதையோ படித்துக்கொண்டிருந்தேன். அவர் வேகமாக என் அருகில் வந்து, “நீர் முடி கொண்டான் பாரதியாரிடம் இசைப் பயிற்சி செய்து வருகிறீராமே!” என்று கேட்டார். அக்கேள்வி என்னைத் திகைக்க வைத்தது. நான் அவரிடம் சொல்லாமல் இசைப் பயிற்சி செய்து வந்தது பிழைதான். பிழையென்று தெரிந்தாலும் நான் உடனே சொல்வதற்கு அஞ்சினேன். பாரதியார் பிள்ளையவர்களை முன்பே சங்கீத விரோதியென்று சொல்லியிருந்ததனாலும் நான் பழகின அளவில் சங்கீதத்தில் அவருக்கு விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லையாதலாலும் அந்த அச்சம் எனக்கு உண்டாயிற்று. ‘நின்ற வரையிலும் நெடுஞ்சுவர்’ என்ற எண்ணத்துடன் சங்கீத தெய்வத்தை மறைவாக உபாசனை செய்து வந்தேன்.

இந்த நிலையில் என் ரகசியம் வெளிப்பட்டபோது நான் திகைப்படையாமல் என்ன செய்வேன்? என்ன பதில் சொல்வது? “பழக்கம் விட்டுப்போகாமல் இருப்பதற்காக அவரிடம் கற்றுக்கொள்ளும்படி என் தகப்பனார் சொன்னார்” என்று வாய் குழறிக்கொண்டே சொன்னேன். இயற்றமிழை மாத்திரம் தனித்து விரும்பும் அப்புலவர் தலைவர், “எனக்கு இதுவரையில் அந்த விஷயம் தெரியாது. இசையில் அதிகப்பழக்கம் வைத்துக்கொண்டால் இலக்கண இலக்கியங்களில் தீவிரமாகப் புத்தி செல்லாது” என்று சொல்லிவிட்டுத் தம் வேலையைக் கவனிக்கச் சென்றார்.

‘அவர் சொன்னது உண்மை’

அவர் கூறிய செய்தி எவ்வளவு தூரம் உண்மை என்பதை ஆராய நான் முற்படவில்லை. பாரதியார் அவரைப்பற்றிச் சொன்னது மாத்திரம் உண்மையென்று அன்று உணர்ந்தேன். “இனிமேல் சங்கீதத்தைக் கட்டி வைக்கவேண்டியதுதான்” என்ற முடிவிற்கு வந்தேன். மறுநாள் முதல் பாரதியாரிடம் சங்கீதப் பயிற்சிக்காகச் செல்வதை நிறுத்திக் கொண்டேன்.

இந்நிகழ்ச்சியால் எனக்கு அதிக மனவருத்தம் உண்டாகவில்லை. சங்கீதம் எங்கள் பரம்பரைச் சொத்து. அதற்காக அதிகச் சிரமப்படவேண்டியதில்லை. தமிழறிவோ கிடைத்தற்கரிய பெரும் பேறாக எனக்கு இருந்தது, ஆதலின் அதற்கு முன்னே வேறு எந்தப் பொருளும் எனக்குப் பெரியதாகவே தோற்றவில்லை.

அப்பால் நான் பாரதியாரிடம் சென்று, “படிக்க வேண்டிய பாடங்கள் அதிகமாக இருப்பதால் தினந்தோறும் இங்கே வந்து அப்பியாசம் செய்ய முடியாதென்று தோன்றுகிறது. அவகாசமுள்ள வேளைகளில் வந்து தரிசனம் செய்துவிட்டுப் போகிறேன்” என்று கேட்டுக்கொண்டேன்.

சீர்காழிக் கோவை

தமிழ்ப்பாடம் தினந்தோறும் நடைபெற்று வந்தது. பிரபந்தங்கள் பலவற்றை முறையே கேட்டுவந்தேன். ஒரு நாள் என் ஆசிரியர் பாடஞ் சொல்லி வரும்போது, “காஞ்சிப் புராணத்தை நீர் பாடம் கேட்கலாம்; நல்ல நூல். பல அரிய விஷயங்களை அதனால் தெரிந்து கொள்ளலாம்” என்றார்கள். அவருக்கு அப்புராணத்தில் அதிக விருப்பமுண்டு. என்ன காரணத்தாலோ பின்பு அதைத் தொடங்கவில்லை.

“கோவை நூல் ஏதாவது நீர் வாசித்திருக்கிறீரா?” என்று பின்பு பிள்ளையவர்கள் கேட்டார்கள்.

“திருக்கோவையாரும் தஞ்சைவாணன் கோவையும் படித்திருக்கிறேன்” என்று விடை கூறினேன்.

“இப்போது சீகாழிக் கோவை பாடம் கேட்கலாம்” என்று அவர் சொன்னார்.

“அக்கோவையில் ஒரு செய்யுள் எனக்கு முன்பே தெரியும்” என்றேன்.

“எப்படி உமக்குத் தெரியும்?”

“என் சிறிய தந்தையார் முன்பு ஒரு முறை இவ்வூருக்கு வந்தபோது ஐயா அவர்களைப் பார்க்க வந்தாராம். அப்பொழுது ஐயா அவர்கள் சிலருக்குச் சீகாழிக் கோவையைப் பாடஞ் சொல்லி வந்ததை அவர் சிறிது நேரம் இருந்து கவனித்தாராம். ஐயா அவர்கள் பாடஞ் சொல்லியபோது ‘அற்றேமலர்க் குழல்’ என்ற செய்யுளைச் சொல்ல என் சிறிய தந்தையாருக்கு அது மனப்பாடமாகிவிட்டது. அவர் ஊருக்கு வந்து என்னிடம் இச்செய்தியைச் சொல்லியதோடு செய்யுளையும் சொன்னார். நான் அதை அப்போதே பாடம் செய்துகொண்டேன்” என்று சொல்லி அச்செய்யுளையும் கூறினேன்.

“அப்படியா! அந்நூல் முழுவதையும் நீர் பாடங் கேட்டுவிடலாம்” என்று கூறினார்.

நான் பாடங் கேட்பதற்கு அக்கோவையின் பிரதி கிடைக்கவில்லை. பிள்ளையவர்களிடம் இருந்த பிரதி வேறொருவர் வசம் இருந்தது. “கூறை நாட்டுக் கனகசபை ஐயரிடம் பிரதி இருக்கிறது: ஆனால் அதை அவர் எளிதில் கொடுக்கமாட்டார். வேறு யாரிடமாவது இருக்கும்; வாங்கித் தருகிறேன்” என்று அவர் சொன்னார். அன்று என் ஆசிரியர் வழக்கம்போல் மத்தியான்ன போஜனம் ஆன பிறகு படுத்துக்கொண்டிருந்தார்.

கூறை நாடு மாயூரத்திலிருந்து இரண்டு மைல் தூரமிருக்கும். அவர் துயிலும் சமயமறிந்து நான் கூறை நாட்டுக்கு மிகவும் வேகமாக ஓட்டமும் நடையுமாகச் சென்றேன். எப்படியாவது கனகசபை ஐயரிடமிருந்து சீகாழிக் கோவைப் பிரதியை வாங்கி வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு சென்றேன். அவரிடம் நயந்து கேட்டு அதை வாங்கினேன். பிள்ளையவர்கள் விழித்துக்கொள்வதற்குள் வந்துவிடவேண்டுமென்று ஒரே ஓட்டமாக மாயூரம் வந்துவிட்டேன். அப்போது ஒரு மணியிருக்கும். அந்த வெயிலின் வெம்மையும் இரண்டு மைல் தூரம் வேகமாகப் போய் வந்த களைப்பும் கோவைப் பிரதி கிடைத்த சந்தோஷத்தில் தோற்றவில்லை.

பிள்ளையவர்கள் விழித்துக்கொண்டபோது நான் சுவடியும் கையுமாக எதிரில் நின்றேன். “என்ன புஸ்தகம் அது?” என்று கேட்டார் அவர்.

“சீகாழிக் கோவை.”

“ஏது?”

“கனகசபை ஐயருடையது.”

“எப்போது வாங்கி வந்தீர்?”

“இப்போதுதான்.”

“இந்த வெயிலில் ஏன் போக வேண்டும்? அவர் லேசில் தரமாட்டாரே! என்னிடம் சொல்லியிருந்தால் நான் வருவித்துக் கொடுத்திருப்பேனே.”

அக்கோவையைப் பாடங் கேட்க வேண்டுமென்றிருந்த வேகம் என்னை அவ்வாறு செய்யத் தூண்டியதென்பதை அவர் உணர்ந்துகொண்டார். ஆதலின் அதை உடனே பாடம் சொல்லத் தொடங்கினார்.

சீகாழிக் கோவையென்னும் பிரபந்தம் பிள்ளையவர்களாலே இயற்றப் பெற்றது. அவர்களுடைய நண்பராகிய வேதநாயகம் பிள்ளை சீகாழியில் முன்சீபாக இருந்த காலத்தில் என் ஆசிரியர் அங்கே சென்று சில காலம் வசித்தார். அப்போதுதான் அக்கோவையை அவர் இயற்றினார். மற்றக் கோவைகளைக் காட்டிலும் அது சிறிது விரிந்த அமைப்புடையது.

கோவை, பாடம் கேட்டு வருகையில் அப்பொழுதப்பொழுது பிள்ளையவர்கள் திருக்கோவையாரிலிருந்தும் வேறு கோவைகளிலிருந்தும் செய்யுட்களை எடுத்துரைத்து அவற்றிலுள்ள நயங்களைச் சொல்வார். கோவைப் பிரபந்தம் ஒரு கதைபோலத் தொடர்ந்து செல்வது; நாயகனும் நாயகியும் அன்பு பூண்டு வாழும் வாழ்க்கையை விரித்துரைப்பது. ஆதலின் அப்பிரபந்தத்தைப் பாடங் கேட்டபோது சிறிதாவது சிரமம் தோற்றவில்லை. அந்தாதிகளையும் பிள்ளைத் தமிழ்களையும் கேட்ட காலத்தில் அங்கங்கே சில இடங்களில் தான் மயங்குவேன்; தெளிவு ஏற்படாது. சீகாழிக் கோவை கேட்கும்போது அம்மாதிரி இல்லை.

சீகாழியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பிரமபுரீசரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டது அக்கோவை. சிவபக்திச் செல்வராகிய பிள்ளையவர்கள் அப்பிரபந்தத்தில் சிவபெருமான் புகழை வாயாரப் பாடியிருக்கின்றனர். பாடஞ் சொல்லும்போது அங்கங்கே பிரபந்த இயல்பையும் அகப்பொருள் இலக்கண நுணுக்கங்களையும் புலப்படுத்திக்கொண்டே சென்றார். கோவைகளில் ஆரம்பப் பகுதியில் வரும் ‘வறிது நகை தோற்ற’லென்னும் துறையைக் கவிஞன் கூற்றாக அமைப்பது சம்பிரதாயமென்று அவர் சொன்னார். பிற்காலத்தில் எனது தமிழாராய்ச்சியில் அகப்பட்ட கோவைகளில் இந்த அமைப்பைக் கண்டேன். சிலவற்றில் மாத்திரம் அச்செய்யுள் தலைவன் கூற்றாக இருந்தது.

சீகாழிக் கோவை பாடம் நடந்தபோது சவேரிநாத பிள்ளையிடமிருந்து அந்நூல் சீகாழியில் முன்சீபாக இருந்த வேதநாயகம் பிள்ளையின் உதவியால் அரங்கேற்றப்பட்டதென்பதை உணர்ந்தேன். அக் கோவையைப் பாராட்டி அவர் இயற்றிய சிறப்புப்பாயிரச் செய்யுட்கள் சில உண்டென்றும் சொன்னார். அவற்றுள் மிகவும் நயமான செய்யுள் ஒன்று வருமாறு:—

“விதியெதிரி லரிமுதலோர் புகல்புகலி யீசரே
        விண்ணோர் மண்ணோர்
துதிபொதிபல் பாமாலைபெற் றிருப்பீர் மீனாட்சி
        சுந்த ரப்பேர்
மதிமுதியன் கோவையைப்போற் பெற்றீர்கொல் இக்காழி
        வரைப்பில் நீதி
யதிபதிநா மெனவறிவீர் நம்முன்னஞ் சத்தியமா
        அறைகு வீரே.”

[சீகாழியில் எழுந்தருளியுள்ள ஈசரே, நீர் பலர் இயற்றிய பாமாலைகளைப் பெற்றிருப்பீர். ஆனாலும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய கோவையைப் போல ஒன்று பெற்றதுண்டா? இந்தச் சீகாழி வட்டத்தில் நாம் நீதி பரிபாலனத்திற்கு அதிபதியென்பதை நீர் அறிவீர். நமக்கு முன் சத்தியமாகச் சொல்லும். விதி-பிரமா. புகலி-சீகாழி]

வேதநாயகம் பிள்ளையைப் பற்றிச் சவேரிநாத பிள்ளை பாராட்டிப் பேசினார்; “நான் பிள்ளையவர்களிடத்திலே வருவதற்கு அவரே சிபாரிசு செய்தார். பிள்ளையவர்களிடத்தில் மிக்க அன்பும் மதிப்பும் உள்ளவர், அவர் செய்யுட்களெல்லாம் எளிய நடையில் சாதுர்யமான பொருளை உடையனவாக இருக்கும்” என்று கூறினார். பெரிய உத்தியோகத்தில் இருப்பவர் தமிழில் அவ்வளவு பற்றுடையவரென்பதைக் கேட்டபோது எனக்கு வியப்பாக இருந்தது.

பிள்ளையவர்கள் தம் வீட்டிற்குப் பின்புறத்திலுள்ள குளத்தின் படித்துறையில் இருந்து பிற்பகலில் பாடஞ் சொல்லுவார். மேலே ஓடு வேயப்பட்டிருந்தமையின் வெயிலின் கடுமை அங்கே இராது. அப்படித்துறையில் குளிர்ந்த நிழலில் இருந்து பாடஞ் சொல்வதில் அவருக்கு விருப்பம் அதிகம்.

சீகாழிக் கோவையைப் பெரும்பாலும் அங்கேயே பாடங் கேட்டேன். அது சில தினங்களில் முடிவடைந்தது. அதைக் கேட்டபோது என் ஆசிரியர் கூறிய செய்திகள் பிற்காலத்தில் என் தமிழாராய்ச்சிக்கு மிகவும் உபயோகமாக இருந்தன.

சங்கீத முயற்சியைக் கைவிட்டுத் தமிழே துணையாக இருந்த எனக்கு அக்காலத்தில் சங்கீதத் தொடர்பு அற்றுப் போனது ஒரு குறைவாகத் தோற்றவில்லை. என் கவனத்தை இரண்டு திசைகளிற் பகிர்ந்து செலுத்தாமல் ஒரே திக்கில் செலுத்தியது நல்லதுதானென்ற எண்ணமும் வர வர உறுதியாயிற்று.