என் சரித்திரம்/86 விடுமுறை நிகழ்ச்சிகள்

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—86

விடுமுறை நிகழ்ச்சிகள்

திருவாவடுதுறையில் நான் இருந்த காலங்களில் அருகிலுள்ள ஊர்களில் இருந்த செல்வர்கள் வீட்டுக் கலியாணங்களுக்கு மடத்தின் பிரதிநிதியாகச் சென்று வருவேன். கலியாண தம்பதிகளுக்கு வழங்கும்படி ஆதீன கர்த்தர் ஆடை முதலியன அளிப்பார். நான் அவற்றைப் பெற்றுக் கொண்டு போய்ச் சேர்ப்பித்து விட்டு வருவேன். காலேஜ் கோடை விடுமுறைக் காலத்தில் திருவாவடுதுறையில் நான் தங்கியிருந்தபோது இத்தகைய சந்தர்ப்பம் ஒன்று நேர்ந்தது. அந்த வருஷம் மே மாதத்தில் கும்பகோணம் காலேஜ் ஆசிரியர் ஸ்ரீ ஸாது சேஷையருடைய மூத்த குமாரிக்குக் கலியாணம் நடைபெற்றது. அதை மிக விமரிசையாக அவர் திருப்பாதிரிப்புலியூரில் நடத்தினார். சேஷையர் மிக்க செல்வாக்குடையவராதலால் ஜட்ஜுகள், ஜில்லா முன்சீபுகள், தாசில்தார்கள் முதலிய பிரபல உத்தியோகஸ்தர்களும், பிரபுக்களும், பலவகையான வித்துவான்களும், பல கலாசாலை ஆசிரியர்களும் வந்து கூடினர். பதினாயிரம் ரூபாய்க்குமேல் செலவாயிற்று. அக்காலத்தில் அவ்வளவு தொகை செலவாயிற்று என்றால் கல்யாணம் எவ்வளவு சிறப்பாக நடந்திருக்க வேண்டுமென்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

சேஷையர் வீட்டுக் கலியாணம்

கும்பகோணம் காலேஜ் ஆசிரியர்கள் யாவரும் கலியாணத்துக்குப் போயிருந்தனர். நானும் ஆசிரியனென்ற முறையிலும் திருவாவடுதுறை மடத்தின் சார்பாகவும் போயிருந்தேன். அதற்கு முன் அவ்வளவு கூட்டமுள்ள விவாகத்தை நான் எங்கும் பார்த்ததே இல்லை. திருப்பாதிரிப்புலியூரில் ஒரு பெரிய உத்ஸவம் நடப்பது போல ஊர் முழுவதும் கல கலப்பாக இருந்தது. தக்க மனிதர்களெல்லாம் வந்திருக்கிறார்களென்று கேள்விப்பட்ட பலர் அவர்களைப் பார்ப்பதற்காகவே வந்து கூடினார்கள். சென்னையில் ஹை கோர்ட்டு ஜட்ஜாக இருந்த ஸர். டி. முத்துசாமி ஐயர் கலியாணம் விசாரிக்க வரப் போகிறாரென்ற பேச்சு வேறு இருந்தது. அந்தப் பெரியாருடைய புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்த காலம் அது. அவரைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆவல் அங்கு வந்திருந்த ஒவ்வொருவருக்கும் இருந்தது. கலியாணத்தின் ஐந்தாம் நாள் அவர் வருவதாகத் தெரிந்தது. அதனால் முன்பே விடைபெற்றுக் கொண்டு போவதாக உத்தேசித்திருந்த பலர் முத்துசாமி ஐயரைப் பார்ப்பதற்காகவே தங்கி விட்டனர்.

ஒரு கிழவர்

கலியாணத்தில் ஒரு நாள் மாலை நானும் ஆசிரியர்கள் சிலரும் கெடில நதியை நோக்கிப் புறப்பட்டோம். அப்போது எதிரே ஒரு முதிய பிராமணர் விபூதி ருத்திராக்ஷதாரியாக வந்து கொண்டிருந்தார். நாங்கள் ஒரு கூட்டமாய்ப் போய்க்கொண்டிருந்ததைப் அவர் சிறிது நின்று கையைக் கண்ணின் மேல் கவித்து நிமிர்ந்து எங்களைக் கவனித்தார். எங்களுடன் வந்த ஆசிரியர்களுள் கும்பகோணம் வாணாதுறையில் இருந்த காளி நாராயணசாமி ஐயரென்பவர் ஒருவர். அவர் உத்ஸாகமாகவும் வேடிக்கையாகவும் பேசுபவர். அவர் அந்தக் கிழவரைப் பார்த்து, “என்ன பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“ஒன்றும் இல்லை. நீங்களெல்லாம் சேஷப்பா வீட்டுக் கல்யாணத்துக்கா வந்திருக்கிறீர்கள்? இந்த ராஜதானி முழுவதிலிருந்தும் ஜனங்கள் வந்திருக்கிறார்களே! நீங்களெல்லாம் எந்த ஊர்க்காரர்கள்? என்ன உத்தியோகம் பார்க்கிறீர்கள்?” என்றார் கிழவர்.

“நாங்களெல்லாம் கும்பகோணம் பள்ளிக்கூட உபாத்தியாயர்கள். அந்தக் கலியாணத்துக்குத்தான் வந்திருக்கிறோம் என்று பதில் உரைத்தார் நாராயணசாமி ஐயர்.

அவர் ஒவ்வொருவராகச் சுட்டி அவரவருடைய ஊர், பேர், சம்பளம் ஆகியவற்றைப் பற்றி விசாரித்து வந்தார். ஒவ்வொருவரும் நூறு, இருநூறு, முந்நூறு என்று தங்கள் சம்பளங்களைச் சொன்ன போது அவருக்கு ஒரே பிரமிப்பாய்ப் போய் விட்டது. “என்ன! பள்ளிக்கூடத்து வாத்தியாருக்கு இவ்வளவு சம்பளமா? எங்கள் காலத்திலெல்லாம் நாலு ஐந்து வாங்கிக் கொண்டிருந்தார்கள்; பத்து ரூபாய் கிடைத்தால் அது குபேர சம்பத்துக்கு ஸமானம்.”

கிழவர் கிராமத்திலுள்ள திண்ணைப் பள்ளிக்கூட உபாத்தியாயர்களையும் எங்களையும் ஒரு வரிசையில் வைத்து எண்ணினாரென்று தெரிந்தது. எல்லோரும் பள்ளிக்கூட வாத்தியார்களல்லவா? அவர் பின்னும் தம்முடைய வியப்பைத் தெரிவிக்கலானார்.

“வெள்ளைக்காரர்கள் நூறு இருநூறென்று பணத்தை அள்ளிவிடுகிறார்கள். உங்களுக்கும் அதிர்ஷ்டம் இருக்கிறது. மாசம் மாசம் கை நிறையச் சம்பளம் வாங்குவதை இப்போதுதான் பார்க்கிறேன். சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால்,,,,” கிழவர் மேலே பேசாமல் நிறுத்தினார். தாம் சொல்ல வந்ததைச் சொல்லலாமா, வேண்டாமா என்று யோசித்ததாகத் தெரிந்தது.

“என்னவோ சொல்ல வந்தீர்களே; ஏன் நிறுத்தி விட்டீர்கள்?” என்று நாராயணசாமி ஐயர் கேட்டார்.

அதற்குள் அந்தக் கிழவருக்குப் பேசி வந்த பேச்சின் தொடர்பு அறுந்துவிட்டது. அந்தக் கூட்டத்தில் இருந்த நான் அவர் கண்ணில் பட்டேன். பேச்சு என்னைப் பற்றித் திரும்பியது, “இந்தப் பிள்ளையாண்டான் யார்? உங்கள் பள்ளிக்கூடத்தில் வாசிக்கிறானா?” என்று கேட்டார்.

“இவரும் ஓர் உபாத்தியாயர்.”

அவருக்கு எல்லாவற்றையும் மிஞ்சிய ஆச்சரியம் உண்டாயிற்று.

“என்ன! இந்தச் சிறு பிள்ளையா வாத்தியார்! என்ன சம்பளம்?”

“ஐம்பது ரூபாய்” என்று அழுத்தமான தொனியோடு நாராயணசாமி ஐயர் சொன்னார்.

“அப்படியா? எல்லாம் தெய்வத்தின் கிருபை,,,,,என்னவோ சொல்ல வந்தேனே” என்று மறுபடியும் விட்ட இடத்தைத் தொட்டுக்கொண்டார் கிழவர்.

“இந்தமாதிரி சம்பளம் கிடைக்கிறதே; எல்லாம் ஈசுவரன் கொடுத்தது என்று தெரிந்துகொண்டு தெய்வ பக்தி பண்ணுகிறார்களா? அதுதான் இல்லை அனுஷ்டானம் செய்கிறார்களா? அதேது? வெள்ளைக்காரர்களிடம் சம்பளம் வாங்கினால் இவர்களும் தங்களை வெள்ளைக்காரர்களாக எண்ணிக் கொள்ளுகிறார்கள்.”

“எங்களைக்கூட அந்த வர்க்கத்தில் சேர்த்து விட்டீர்களோ! நாங்கள் இப்போது கெடிலத்திற்குத்தான் போகிறோம்” என்று சிரித்துக்கொண்டே நாராயணசாமி ஐயர் சொன்னார்.

“ஓகோ, சந்தியாவந்தனம் பண்ணப் போகிறீர்களா? நல்லதுதான். என்ன இருந்தாலும் நம் தேசத்துப் பழக்க வழக்கங்களே நமக்கு மேன்மையானவை. அவைகளைப் பாதுகாக்க வேண்டியது நமது தர்மம்.”

இவ்வாறு உபதேசம் செய்து விட்டு எங்கள் சந்தியாவந்தனந்திற்கு அகாலமாகி விடுமென்ற பயத்தால் அந்தக் கிழவர் விடை பெற்றுக்கொண்டு சென்றார். எனக்கு அவர் கூறிய வார்த்தைகள் இனிமையாக இருந்தன. தெய்வ பக்தியும் மதாசாரங்களைத் தவறாமல் அனுஷ்டிக்கும் இயல்பும் உடையவர்களோடே பழகி வந்த எனக்கு அந்தக் கிழவருடைய உபதேசம் மதிப்புடையதாகவே தோற்றியது.

ஜட்ஜ் முத்துசாமி ஐயர்

கலியாணத்தின் ஐந்தாம் நாள் பிற்பகல் இரண்டு மணிக்கு முத்துசாமி ஐயர் சென்னையிலிருந்து திருப்பாதிரிப்புலியூருக்கு வந்தார். ஸாது சேஷையர் ரெயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று அவரை வரவேற்றுத் தம் வீட்டுக்கு அழைத்து வந்தார். முத்துசாமி ஐயர் வந்து கலியாணத்திற்காகப் போட்டிருந்த பெரிய பந்தலின் நடுவே ஒரு பெரிய நாற்காலியில் அமர்ந்தார். அவருக்கு அருகில் சேஷையரும் வேறு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

ஊர் முழுவதும் பந்தலிலும் பந்தலைச் சுற்றிலும் கூடி விட்டது. அவ்வளவு கூட்டம் இருந்தாலும் எல்லோரும் அமைதியாக இருந்தனர். படாடோபமற்ற முத்துசாமி ஐயர் தோற்றத்தில் ஒருவகையான கவர்ச்சி இருந்தது. வெள்ளைத் தலைப்பாகை, நெடுஞ்சட்டை, ஐயம்பேட்டைப் பட்டுருமாலை. தூய வெள்ளை வஸ்திரம், காலில் ‘பாபாஸ் ஜோடு’- இவைகளே அவர் அணிந்திருந்தார். கையில் ஒரு பிரம்பு வைத்திருந்தார். இந்தியர்களுக்குக் கிடைக்காத உயர்ந்த பதவியிலே இருந்த அவருடைய ஆங்கிலப் பயிற்சியும், மேதையும், சட்ட ஞானமும் உலகம் அறிந்தவை. அவர் வெள்ளைக்காரர் சம்பளத்தைப் பெறுவது மட்டுமன்றி வெள்ளைக் காரரோடு நெருங்கிப் பழகுபவர். ஆனாலும், அவர் தோற்றத்திலும் பேச்சிலும் பழக்க வழக்கங்களிலும் ஆசாரத்திலும் ஹிந்துவாகவே இருந்தார். அவருடைய நெற்றியில் விளங்கிய விபூதியும் சந்தனமும் இடையிலிருந்த பஞ்சகச்ச வேஷ்டியும் அவர் பேச்சில் தொனித்த அடக்கமும் அவருடைய பெருமைக்குப் பின்னும் பெருமையையே உண்டாக்கின. முதல் நாள் மாலையில் எங்களோடு பேசிய கிழவர் சொன்ன வார்த்தைகள் எனக்கு ஞாபகத்துக்கு வந்தன. “அவர் முத்துசாமி ஐயரைக் கண்டால் எவ்வளவு சந்தோஷமடைவார்” என்று சிந்தித்தேன்.

முத்துசாமி ஐயர் பேசிக் கொண்டிருந்தபோது இடையே ஒரு திருக்குறளைச் சொன்னார். அவர் தமிழில் அன்புடையவரென்பதை அப்போது அறிந்து கொண்டேன். அவர் சுருக்கமாகப் பேசினார். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திருக்குறளை உதாரணமாக எடுத்துச் சொன்னார். இவையாவும் என் மனத்தில் நன்றாகப் பதிந்தன. அவர் அன்று இரவு அங்கே விருந்துணவு உண்டு விடை பெற்று மாயூரம் சென்றார்.

கலியாணம் நிறைவேறியது. வந்திருந்தவர்கள் யாவரும் விடை பெற்றுச் சென்றனர். நான் திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்து கலியாண விசேஷங்களையும், ஸர் டி. முத்துசாமி ஐயர் வந்து சென்ற வைபவத்தையும், அவரைப் பார்த்த சில மணிகளில் அவரைப் பற்றி நான் அறிந்து கொண்டவற்றையும் சுப்பிரமணிய தேசிகர் முதலியவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தேன். அன்று முழுவதும் முத்துசாமி ஐயருடைய இளமைப் பருவம், அவர் படித்து முன்னுக்கு வந்த வரலாறு அவருடைய புகழ் முதலியவற்றைப் பற்றிப் பேசுவதிலேயே பொழுது போயிற்று.

‘இந்திர இழவூரெடுத்த காதை’

அந்தக் காலத்தில் காலேஜ் வகுப்புக்களுக்குத் தமிழ்ப் பாடம் வைக்கும் முறை மிக விசித்திரமானது. பேர் மாத்திரம் தெரிந்த நூலிலிருந்து ஏதேனும் ஒரு பகுதியைப் பாடமாக வைத்து விடுவார்கள். ஏட்டுச் சுவடியைத் தேடியெடுத்து உள்ளது உள்ளபடியே யாரேனும் பதிப்பிப்பார்கள். அதை வைத்துக் கொண்டு தெரிந்ததோ தெரியாததோ எல்லாவற்றையும் குழப்பித் தமிழாசிரியர்கள் பாடம் சொல்லுவார்கள். சிலப்பதிகாரம் பழைய நூலென்பது மாத்திரம் அக்காலத்தில் தெரிந்திருந்தது. நூலைத் தெரிந்து கொள்ளுவதைவிட நூலின் சிறப்பைத் தெரிந்து கொள்ளுவது சுலபம். ஆதலின் அதன் சிறப்பைத் தெரிந்தவர்கள் அதிற் சில பகுதிகளைப் பாடம் வைக்கத் தொடங்கினர். தியாகராச செட்டியார் காலேஜில் இருந்த காலத்தில் சிலப்பதிகாரத்திலுள்ள இந்திர விழவூரெடுத்த காதை பாடமாக வந்தது. ஏட்டுச் சுவடியை வைத்துக் கொண்டு அதை அவர் பார்த்தார். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை பிள்ளையவர்களிடம் சென்று இருவரும் சேர்ந்து பார்த்தார்கள். புஸ்தகத்தில் பல காலமாக ஏறியிருந்த பிழைகளுக்கு நடுவே உண்மையான பாடத்தை அறிவதே பிரும்மப் பிரயத்தனமாக இருந்தது. அன்றியும் மிகப் பழங் காலத்து மரபுகளெல்லாம் சொல்லப் பட்டுள்ள அந்நூலிலிருக்கும் விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேறு துணைக் கருவிகள் இல்லை. அதனால் அந்தப் பகுதி தெளிவாக விளங்கவில்லை. செட்டியாருக்குப் புஸ்தகத்தின் மேல் கோபம் மூண்டது. “என்ன புஸ்தகம் இது? இந்திர விழவூரெடுத்த காதையா? இந்திர இழவூரெடுத்த காதையா!” என்று கூறி, “இந்தச் சனியனை நான் பாடம் சொல்லப் போவதில்லை; எனக்கு உடம்பு வேறு அசௌக்கியமாக இருக்கிறது. நான் ஆறு மாசம் ‘லீவு’ வாங்கிக் கொள்கிறேன்” என்று தீர்மானித்துக் கொண்டார். அப்படியே ஆறு மாதம் விடுமுறை பெற்றுப் பிறகே காலேஜு க்கு வந்தார். அக்காலத்தில் சந்திரசேகர கவிராஜ பண்டிதர் தமிழாசிரியராக இருந்து பாடத்தை நடத்தினார்; கற்பித்தாரென்று சொல்லுவதற்கில்லை.

இப்படித் தியாகராச செட்டியாரே சிரமப்பட்டபோது மற்றப் பண்டிதர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. எப்போது பாடமாக வந்து விட்டதோ உடனே புஸ்தகப் பதிப்பும் வந்துவிடும். சிலப்பதிகாரத்தின் முற்பகுதியை ஸ்ரீநிவாசராகவாசாரியரும் சென்னையிலிருந்த சோடசாவதானம் சுப்பராய செட்டியாரும் பதிப்பித்திருந்தனர். முதல் வெளியீடு ஸ்ரீநிவாச ராகவாசாரியருடையதே. புகார்க் காண்டத்தின் முற்பகுதியின் மூலம் மாத்திரம் இருந்தது. “சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய சிலப்பதிகாரம்” என்று அவர் முகப்புப் பக்கத்தில் பதிப்பித்திருந்தார்.

சிலப்பதிகார ஆராய்ச்சி

நான் வேலையை ஏற்றுக் கொண்ட வருஷத்தில் சிலப்பதிகாரத்தில் கானல்வரி முதல் நான்கு காதைகள் பாடமாக வந்திருந்தன. அதைக் கோடை விடுமுறை முடிந்தவுடன் பாடம் சொல்ல வேண்டியவனாக இருந்தேன். “இவர் சிலப்பதிகாரத்தை எப்படிப் பாடம் சொல்லப் போகிறார்?” என்று சிலர் சொல்லிக் கொண்டிருந்ததாக என் காதில் பட்டது. ஆகவே அதைக் கூடிய வரையில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று நிச்சயம் செய்து கொண்டேன். இருந்த அச்சுப் பிரதியின் உதவி கொண்டு விஷயத்தைத் தெரிந்துகொள்ளுவது கஷ்டமாகவே இருந்தது. இந்த விஷயங்களை நான் சுப்பிரமணிய தேசிகரிடம் சொன்னபோது அவர், “மடத்தில் ஏட்டுப் பிரதியிருக்கிறது. சின்னப் பண்டாரத்தினிடம் படித்துத் தெரிந்து கொள்ளலாம்” என்றார். பிள்ளையவர்களுக்கே சந்தேகமான புஸ்தகத்தில் நமசிவாய தேசிகர் தேர்ச்சியடைய நியாயம் இல்லை. ஆனாலும் சிறந்த அறிவாளியாகிய அவருடன் சேர்ந்து ஆராய்ந்து வரையறை செய்து கொள்வதில் பல லாபம் உண்டு. அதனால் நான் சிலப்பதிகார ஏட்டுச் சுவடியை எடுத்துக் கொண்டு நமசிவாய தேசிகரிடம் சென்று படித்தேன். இருவரும் கவனித்து ஆராய்ந்தோம். ஒரு விதமாகப் படித்து முடித்தோம்; பொருள் வரையறையும் செய்து கொண்டோம்.

இப்படிச் சில நாட்கள் சென்றன. வேறு நூல்களைப் படிப்பதும், பாடஞ் சொல்வதுமாக மற்ற நாட்கள் போய்க் கொண்டிருந்தன.

புது வீடு

விடுமுறை முடிந்தவுடன் கும்பகோணத்தில் நிரந்தரமாகக் குடித்தனம் வைத்து விடலாமென்று என் தந்தையார் சொன்னார். அதன் பொருட்டு அங்கே ஒரு வீடு பார்ப்பதற்காக அவர் கும்பகோணத்திற்கு புறப்பட்டார். புறப்படும்போது என் தாயார், “காவேரிக்குப் பக்கமாக இருந்தால் நல்லது” என்றார். “காலேஜு க்கும் பக்கமாக இருந்தால் சௌகரியமாக இருக்கும்” என்றேன் நான். அவர் கும்பகோணத்திற்கு நடந்தே சென்றார். ரெயில் வண்டியில் ஏறும் வழக்கம் அவருக்கு இல்லை.

கும்பகோணத்தில் சில தெருக்களைப் பார்த்து விட்டுப் பக்தபுரி அக்கிரகாரத்துக்குள் செல்லும்போது, “மங்களாம்பா இருக்கிறாள்; பயமில்லை” என்று யாரோ இருவர் பேசிக் கொண்டிருந்தது அவர் காதில் பட்டது. கும்பகோணம் கும்பேசுவரராலயத்தில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையின் திருநாமம் அது. அந்த வார்த்தைகள் நல்ல சகுனமாகத் தோன்றவே அவர் அந்தத் தெருவின் மத்தியில் கீழ் சிறகில் ஒரு வீட்டைப் பார்த்துத் திட்டம் செய்தார். மாதம் மூன்றரை ரூபாய் வாடகை பேசினார். பதினைந்தடி அகலமும் நாற்பதடி நீளமும் உள்ளது அது. வீட்டிற்குப் பின் நீண்ட தோட்டமும் இருந்தது.

வீடு எல்லோரும் இருப்பதற்குப் போதுமானதாக இராவிட்டாலும் சகுனத்தின் விசேஷத்தால் என் தந்தையாருக்கு அதுவே பெரிய மாளிகையாகத் தோற்றியது. வாழ்க்கையில் பல வகையான துன்பங்களையும், வறுமையின் சங்கடங்களையும் அனுபவித்துத் தேர்ந்த அவருக்குப் பணம் கிடைத்தால் எவ்வளவு செட்டாக வாழமுடியுமோ அவ்வளவு செட்டாக வாழ வேண்டுமென்ற சங்கற்பம் இருந்தது. அதனால் அவருடைய நோக்கத்துக்கு அந்த வீடு ஏற்றதாகவே அமைந்தது.

வீட்டைப் பார்த்துத் திட்டம் செய்துவிட்டு நடந்தே திருவாவடுதுறை வந்து சேர்ந்தார். “காவிரிக்கும் காலேஜு க்கும் பக்கமாக இருக்கிறது; இரண்டாம் வேளை ஆகாரத்துக்கு வீட்டுக்கு வந்து போகலாம். நல்ல சகுனமாயிற்று” என்று சொல்லி எங்களுக்குச் சந்தோஷத்தை உண்டாக்கினார்.

விடுமுறை முடிந்தது. என் தகப்பனாருக்குத் திருவாவடுதுறையை விட்டுப்பிரிய மனம் வரவில்லை. ஆனாலும் ஒரு வகையாகச் சமாதானம் செய்து கொண்டார். யாவரும் சுப்பிரமணிய தேசிகரிடத்திலும் மற்ற அன்பர்களிடத்திலும் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டுக் கும்பகோணம் வந்து புது வீட்டில் புகுந்தோம். அதுவரையில் திருவாவடுதுறை வாசியாக இருந்த நான் அன்று முதல் கும்பகோண நகர வாசியாக என் வாழ்க்கையைத் தொடங்கினேன்.