என் சுயசரிதை/முதிர் பருவம்

விக்கிமூலம் இலிருந்து

முதிர் பருவம்

நான் எனது 51-வது வயதில் ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜாக நியமிக்கப்பட்டேன். எனக்கு 55 வயதானவுடன் அவ் வயதிற்குமேல் கவர்ன்மெண்ட் உத்தியோகத்திலிருந்து விலக வேண்டும் என்னும் நியமனப்படி அவ் வேலையிலிருந்து! விலகினேன். இதனிடையே சில மாதங்கள் சீப் பிரசிடென்சி மாஜிஸ்டிரேட்டாக வேலை பார்த்தேன். மேற்கண்டபடி ஜட்ஜாக இருந்தகாலத்தின் சில வியவகாரங்களை இங்கு எழுதுகிறேன்.

நான் ஜட்ஜாக முதல் நாள் உட்கார்ந்தபோது வக்கீல்களின் தரப்பாக காலஞ்சென்ற ஸ்ரீமான் சேஷாச்சாரியார் அவர்கள் என்னை வரவேற்று சில வார்த்தைகள் பேசியபோது அதற்கு நான் பதில் சொன்னபோது “நான் ஜட்ஜ் வேலை நடத்துங்கால் மனிதர் எவருக்கும் பயப்படாது தெய்வம் ஒன்றிற்கே பயந்து நடப்பேன்” என்று உரைத்தது ஞாபகமிருக்கிறது. அதன்படி தினம் நான் கோர்ட்டிற்குப் போய் என் நாற்காலியில் உட்காரு முன் நியாயப்படி விசாரித்து தீர்மானம் கொடுக்க எனக்கு புத்தியையும் மன உறுதியையும் கொடுக்கும்படியாக ஈசனைத் தொழுத பிறகே உட்காருவேன். சாதாரணமாக 25 வருடங்களுக்கு மேல் ஸ்மால்காஸ் கோர்ட்டில் வக்கீலாக வியவஹாரங்கள் நடத்திய படியால் இக்கோர்ட்டில் ஜட்ஜ் வேலை பார்ப்பது எனக்கு சுலபமாக இருந்தது.

ஸ்மால்காஸ் கோர்ட் வியாஜ்யங்களைப் பற்றி சில விஷயங்கள் எழுத விரும்புகிறேன். என் தமயனார் 1894-ஆம் வருஷம் வக்கீலாக வியவஹாரம் நடத்திய போது இந்த சின்ன கோர்ட்டில் மாத்திரம் 32 ஆயிரம் வியாஜ்யங்களுக்குக் குறையாமலிருந்தன! அது குறைந்து கொண்டே வந்து. நான் 1898-ஆம் வருஷம் வக்கீலானபோது சுமார் 25 ஆயிரம் கேசுகள் வருடத்திற்குத் தீர்மானிக்கப்பட்டன. நான் ஜட்ஜான போது சுமார் 20 ஆயிரம் கேசுகள் இருந்தன வருடம் ஒன்றிற்கு, தற்காலம் 5 அல்லது 6 ஆயிரம் கேசுகளுக்கு மேல் இல்லை.

ஜட்ஜான ஒரு வாரத்திற்கெல்லாம் கேசுக்களை, சீக்கிரம் முடிக்கும் வழியைக் கற்றுக் கொண்டேன். இதற்கு இரண்டு மூன்று குணங்கள் அநுகுணமாய் இருந்தன. அதாவது அக் காலத்தில் சாதாரணமாக மாறுபாடிகள் கேசுகள் தான் அதிக மாயிருந்தன. வக்கீலாயிருந்த போது ஏறக்குறைய எல்லா மாறுபாடிகளும் என்னிடம் தங்கள் வியாஜ்யங்களை ஒப்புவிப் பார்கள். இதனால் அவர்கள் கணக்கு ஊழல்களெல்லாம் நன்றாய்த் தெரியும். ஆகவே அவர்களுடைய வியாஜ்யங்கள் நான் ஜட்ஜாக இருக்கும் போது என் முன் வந்தால் அவர்கள் கணக்குகளின் மர்மங்களையெல்லாம் அறிந்திருந்தபடியால், அவர்கள் பொய் சொல்லி என்னை ஏமாற்றுவது அசாத்தியமாயிருந்தது. இதைக் கண்ட மாறுபாடிகள் தங்கள் வியாஜ்யங்கள் என் கோர்ட்டுக்கு முன்பு வராதபடி செய்ய முயன்றனர். இதையறிந்த அக்கால சீப் - ஜட்ஜாக இருந்த திவான் பகதூர் C. R. திருவேங்கடாச்சாரியார் இதைத் தடுத்து வந்தனர். மாறுபாடிகள் என் கோர்ட்டுக்கு முன்பாக வருவதற்கே அஞ்சுவார்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்கள் கோர்ட்டுக்கு வெளியில் என்னை எப்போதாவது சந்தித்தால் “என்னாங்க சாமி, வக்கீலாக எங்ககிட்டே பீஸ் (Fees) வாங்கி சாப்பிட்டுட்டு இப்போ எங்க வாயிலே மண்ணை போடுகிறீர்களே” என்று கேட்பார்கள். இரண்டாவது, வக்கீல்கள் தங்கள் - வியாஜ்யங்களைத் தள்ளி வைக்க வேண்டுமென்று அடிக்கடி கேட்காம லிருக்க ஒரு யுத்தி செய்தேன். வியாஜ்யத்திற்கு வாய்தா போட வேண்டுமென்று கேட்கும் வக்கீல்களை யெல்லாம் மறு வாய்தாக்கள் எதிர்ப்பட்சத்திற்கு தினம் படி (Day fees) கொடுக்க வேண்டுமென்று உத்தரவிடுவேன். இதனால் இரண்டு நன்மைகள் உண்டாயின. ஒன்று கட்டாயமாக வாயிதா வேண்டியவர்கள் தான் இதற்கு உடன்பட்டு கேட் பார்கள், இரண்டாவது இதனால் வக்கீல்களுக்கு மாத வரும் படி அதிகமாகியது. நான் கோர்ட்டை விட்டு விலகியபின் எனது சிநேகிதர்களான பல வக்கீல்கள் என்னை சந்திக்கும் போது “உங்களுடன் எங்களுக்கு டேகாஸ்ட் வரும்படி அற்றுப் போச்சுது” என்று முறையிட்டிருக்கின்றனர்.

மேற்கண்ட மார்க்கங்களின் மூலமாக வியாஜ்யங்களைத் துரிதமாகத் தீர்மானிக்கும் வழிகண்டபின் தினம் என் கோர்ட் வியாஜ்யங்களை முடித்துவிட்டு முதல் கோர்ட்டிலிருந்து வியாஜ்யங்களை அனுப்பும்படி சீப் ஜட்ஜிக்கு வேண்டுகோள் அனுப்புவேன். ஒரு சமயம் முதல் ஜட்ஜும் மூன்றாவது ஜட்ஜும் ஏதோ அவசர நிமித்தமாய் கோர்ட்டுக்கு வராமவிருந்தபோது மூன்று கோர்ட் கேசுகளையும் நான் கவனித்தது ஞாபகமிருக்கிறது

சாதாரணமாக 4 மணிக்குள் கோர்ட் வேலையை முடித்துக் கொண்டு சபைக்குப் போய் விடுவேன். சாயங்காலம் ஐந்து மணியானவுடன் எந்த வியாஜ்யமானாலும் நடத்தாது வாயிதா போட்டுவிடுவேன். ஐந்து மணிக்குமேல் கோர்ட் நடப்பது தவறு என்பது என் அபிப்பிராயம். நான் வக்கீலாக இருந்தபோது ஐந்து மணிக்கு மேல் வியாஜ்யங்களை நடத்துவதை ஆட்சேபித்திருக்கிறேன். 1926-ஆம் வருஷம் நான் ஜட்ஜாக இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை இங்கு எழுதுகிறேன். முன்னாள் இரவு மரித்த என் மனைவியின் தேகத்தை இடுகாட்டிற்குக் கொண்டு போய் சம்ஸ்காரம் செய்தவுடன் வீட்டிற்கு வந்து ஸ்நானம் செய்துவிட்டு பூஜையை வழக்கம் போல் முடித்துவிட்டு உணவு கொண்டு கோர்ட்டுக்கு வழக்கம் போல் போனேன். அப்பொழுது. சுமார் 11 மணியிருக்கும். இதற்குள் எனக்கு துக்ககரமான சம்பவத்தைக் கேள்விப்பட்டு முதல் ஜட்ஜாக இருந்த ஸ்ரீமான் திருவேங்கடாச்சாரியார் நான் அன்று கோர்ட்டுக்கு வரமாட்டேனென்று என் கோர்ட் வியாஜ்யங்களை யெல்லாம் வாய்தa போடுவதற்காக தன் கோர்ட்டுக்கு மாற்றிக்கொண்டார். நான் கோர்ட்டுக்கு வந்ததாகக் கேள்விப்பட்டவுடனே என் அறைக்கு வந்து துக்கம் விசாரித்துவிட்டு “மிஸ்டர் சம்பந்தம் இன்றைக்கு ஏன் கோர்ட்டுக்கு வந்தாய்” என்று கொஞ்சம் வெறுப்புடன் கேட்டார். அதற்கு நான் “என்னை மன்னிக்க வேண்டும். என் மனைவி நோயாயிருந்தபோது என்னால் இயன்ற அளவு சிகிச்சை செய்து பார்த்தேன். இறந்த பின் துக்கப்பட்டு என்ன பயன். என் மனதைத் தேற்றிக் கொண்டேன். என்னுடைய துக்கம் என்னுடனிருக்க வேண்டும். என்னால் மற்றவர்களுக்குக் கஷ்டம் கொடுப்பதில் என்ன பலன்? இன்றைக்கு என் கோர்ட்டில் வாதிப் பிரதிவாதிகளும் சாட்சிகளும் சேர்த்து சுமார் 100 பெயர்களிருக்கலாம். இத்தனை பெயர்களும் மற்றொரு நாள் வரும்படியான கஷ்டத்திற்கு நான் அவர்களை உள்ளாக்கக் கூடாதென்று தீர்மானித்து வந்தேன் இங்கு; அன்றியும் கோர்ட்டுக்கு வந்து வேலை பார்த்தால் என் துக்கத்தைக் கொஞ்சம்மறந்திருப்பேன்” என்று சொல்லி அவரை என் கோர்ட் வியாஜ்யங்களையெல்லாம் என் கோர்ட்டுக்கே அனுப்பிவிடும்படி கேட்டுக்கொண்டேன். இச் சந்தர்ப்பங்களில் நான் சீப் ஜட்ஜாக சிலகாலம் ஆக்ட் செய்தபோது நடந்த ஒரு வியவஹாரத்தை இங்கு எழுதுகிறேன். ஒரு நாள் ஐந்தடித்தவுடன் கீழே ஸ்மால்காஸ் கோர்ட் ஆபீசுக்குள் நுழைந்து ஐந்து மணிக்குமேல் வேலை செய்து கொண்டிருந்த குமஸ்தாக்களையெல்லாம் அழைத்து “கவர்மெண்டார் உங்களுக்கெல்லாம் ஐந்து மணி வரையில் வேலை செய்ய சம்பளம் கொடுக்கிறார்களே யொழிய வேறில்லை. ஆகவே நீங்கள் ஐந்தடித்தவுடன் கட்டுக்களைக் கட்டிவிட்டு வீட்டிற்குப் போங்கள். மறு நாள் சரியாக பத்தரை மணிக்கு வந்து விடுங்கள்” என்று சொல்லி எல்லோரையும் வீட்டிற்கனுப்பினேன்.

சின்ன கோர்ட் பெய்லிப்கள் (Bailife) சாதாரணமாக லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே இதைத் தடுக்க ஒரு சிறிது நான் முயன்றேன் என்று சொல்ல வேண்டும். ஒருமுறை ஒரு வக்கீல் ஒரு பெய்லிப் லஞ்சம் வாங்கிக்கொண்டு பிரதிவாதியைப் பிடிக்காமலிருக்கிறான் என்று என்னிடம் வந்து முறையிட்டார். நான் மத்தியான போஜனத்திற்காக 2 மணிக்கு என் அறைக்குப் போனவுடன் அந்த பெய்லிப்பை அழைத்து அந்த பிரதிவாதியை சாயங்காலத்திற்குள் பிடித்துக்கொண்டு வரவேண்டுமென்று கண்டிப்பாய் கூறினேன். இதன் பலனாக நான் 3 மணிக்கு கோர்ட்டுக்குப் போகுமுன் அந்த கட்சிக்காரனைப் பிடித்துக்கொண்டு வந்து விட்டான். இம்மாதிரியாக நான் கொஞ்சம் கண்டிப்பாயிருந்ததினால் என் காலத்தில் பெய்லிப்கள் லஞ்சம் வாங்குவதே நின்றுவிட்டது என்று நான் சொல்லவில்லை. ஆயினும் மேல் அதிகாரிகள் கவனித்தால் இவ்வழக்கம் மிகவும் குறையும் என்பது என் அபிப்பிராயம்.

இவ்வாறு நான் கண்டிப்பாய் இருந்தபடியால் வக்கில்கள் பெரும்பாலர்களுடைய அன்பினைப் பெற்றேன் என்று நினைக்கிறேன். நான் எனது 55-வது வயதில் இவ்வேலையினின்றும் விலகியபோது அவர்கள் எனக்கு ஒரு தேநீர் விருந்து கொடுத்தனர். அன்றியும் கோர்ட் சிப்பந்திகளும் பிரத்யேகமாக வேறொரு தேநீர் விருந்து கொடுத்தனர்.

இதற்கிடையில் சில மாதங்கள் சீப் பிரசிடென்சி மாஜிஸ்டிரேட்டாக வேலை பார்க்கும்படி நேரிட்டது. அக்காலமெல்லாம் கோர்ட் வேலையெல்லாம் மத்யானத்திற்குள் முடித்துக்கொண்டு என் கோர்ட் வீடுபோய் சேர்வேன், ஒரு நாளாவது சாயங்காலத்தில் கோர்ட் வேலை பார்த்ததாக எனக்கு ஞாபகமில்லை. அதுசமயம் இப்போதிருப்பதுபோல், அத்தனை ஆனரெரி மாஜிஸ்டிரேட்டு கோர்ட்டுக்கள் கிடையாது. தற்காலம் இந்த ஆனரெரி கோர்ட்டுக்கள் பல ஏற்படுத்தப்பட்டும் ஐந்து ஸ்டைபென்டியரி (Stipendiary) கோர்ட்டுகளுக்கு என்ன வேலையிருக்கிறதென ஆச்சரியப்படுகிறேன்.

சுமார் 4 வருஷங்கள் நான் ஜட்ஜாயிருந்தபோது ஒரே ஒரு வியாஜ்யத்தில்தான் என் தீர்மானம் ஐகோர்ட்டாரால் மாற்றப்பட்டது என்று எழுத விரும்புகிறேன்.

மேற்கண்டபடி சிவில் கோர்ட்டிலும் கிரிமினல் கோர்ட்டிலும் நான் நியாயாதிபதியாக இருந்திருக்கிறேன். இவ்விரண்டில் சிவில் கோர்ட் ஐட்ஜாயிருந்ததுதான் என் மனதிற்குப் பிடித்தது. ஏனென்றால் ஸ்மால்காஸ் கோர்ட் வியாஜ்யத்தில் என்னையுமறியாதபடி தவறாகத் தீர்மானித்தாலும் வியாஜ்யத்தில் தோற்றக் கட்சிக்காரனுக்கு சொல்ப நஷ்டத்துடன் போகிறது. மாஜிஸ்டிரேட்டாக நான் தவறாக ஒருவனை தண்டித்தால் அவனுடைய வாழ்க்கையே அழிந்தாலும் அழியுமல்லவா?