கடவுள் வழிபாட்டு வரலாறு/மனிதரும் தெய்வமாகலாம்!

விக்கிமூலம் இலிருந்து


12. மனிதரும் தெய்வம் ஆகலாம்


“மனிதரும் தெய்வம் ஆகலாம்” என்னும் தொடரில் உள்ள மனிதரும் என்னும் சொல்லில் உள்ள உம்மையின் பொருளை விளக்கப் பின்னே மூன்று செய்திகள் தரப்படும் :


ஒன்று: இற்றைக்கு (1988) இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன், கிரேக்க நாட்டில், டயோனியசு என்னும் பெரியார் ஒருவர் பட்டப் பகலில் கையில் விளக்கை வைத்துக் கொண்டு பலர் போகும் தெருவழியே ஏதோ தேடிக்கொண்டு சென்றாராம். அவரைக் கண்ட ஒருவர், பட்டப்பகலிலே கையில் விளக்கை வைத்துக் கொண்டு என்ன தேடுகிறீர்கள் என்று வினவினாராம். அதற்கு அப்பெரியார், மனிதர் ஒருவராவது கிடைப்பாரா என மனிதன்ரத் தேடுகிறேன் என்று கூறினாராம்.


இரண்டு: பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், திருவொற்றியூரில், நெல்லிக்காய்ப் பண்டாரத் தெருவில், உடையில்லாத அம்மணத் துறவி ஒருவர் ஒரு திண்ணையில் அமர்ந்துகொண்டு, தெருவே போகின்றவர் வருகின்றவர்களைப் பார்த்து, இதோ ஒரு நாய் போகிறது-இதோ ஒரு நரி போகிறது-இதோ ஒரு பன்றி போகிறது-இதோ ஒரு மிருகம் போகிறது-என்றெல் லாம் சொல்லிக் கொண்டிருந்தாராம், நடமாடிய மனிதர்கள் அவருக்கு மனிதர்களாகத் தெரியவில்லை. அங்கே நடமாடியவர்கள், இது ஏதோ ஒரு பைத்தியம்உளறுகிறது-என்று சொல்லிக் கொண்டு போய்விட்டார்களாம். இந்தக் காலத்தில் அவ்வாறு கூறினால், துறவிக்கு அடி உதை கிடைக்கும்.


மூன்று: சைவ சமயச் சந்தான குரவர்கள் நால்வர் என்று கூறப்படுகின்றனர். மெய்கண்டார், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார்-என்பவர்கள் அந்த நால்வராவர்.


இவர்களுள் உமாபதி சிவாச்சாரியார், தில்லை நடராசர் கோயில் பூசனை (பூஜை) புரியும் மரபினர். இவரை உமாபதி சிவம் என்றுதான் சொல்லவேண்டும். சிவாச்சாரியார் என்று சொல்வது தவறு என்று சிலர் சொல்கின்றனர். இதுதான் தவறு. சிவன் கோயில் பூசனை செய்பவர்களைச் சிவாச்சாரியார் என்று சொல்வது சைவ சித்தாந்த மரபு. இந்தச் சிவாச்சாரியார் ஒருநாள் தில்லைத் தெருவழியே பல்லக்கில் அமர்ந்து சென்று கொண்டிருந்தாராம். அவருக்கு முன்னால், சிறப்பு மரபின்படிச் சிலர் தீவட்டி, கொடி முதலியன ஏந்திச் சென்றனராம். தெரு ஓரத்தில் நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்த மறைஞான சம்பந்தர் என்னும் அருளாளர், பட்ட கட்டையிலே பகல் குருடு ஏகுது காண்’ என்றாராம். பட்ட கட்டை என்பது பல்லக்கைக் குறிக்கிறது. பகுல் குருடு என்பது, பகலில் பிடித்துக் கொண்டு செல்லும் தீவட்டியைச் சாடுகிறது. இதைக் கேட்ட உமாபதி சிவாச்சாரியார் மெய்யறிவு பிறந்தவராய்ப் பல்லக்கிலிருந்து இறங்கி, மறைஞான சம்பந்தரின் திருவடிகளில் விழுந்து வணங்கி அவருக்கு மாணக்கராக (சீடராக) மாறினாராம். மேற்கூறிய மூன்று நிகழ்ச்சிகளையும் அறியும்போது மிக்க வியப்புணர்வு தோன்றுகிறது. கிரேக்க டயோனியசுக்கும் திருவொற்றியூர்த் துறவிக்கும் மனிதர்கள் மனிதர்களாகத் தெரியவில்லை. அதனால், அவர்கள் மனிதரைத் தேடுகிறேன் என்றும், நாய் போகிறது-நரி போகிறது என்றும் கூறியிருக்கின்றனர். இச்செய்திகளை அறியும்போது, ட்யோனியசும், ஒற்றியூர்த் துறவியும் உயர்ந்த உண்மைக் கருத்துகளை உதிர்த்திருக்கிறார்கள் என அவர்களைப் பாராட்டத் தோன்றுகிறது; பலர் அவர்களைப் பாராட்டவும் செய்கின்றனர்.


இங்கே நான் சொல்வது என்ன? டயோனியசும் ஒற்றியூர்த் துறவியும் கூறிய கருத்து தவறானது; அவர்கள் உண்மையை உரைக்கவில்லை; பொய்யான கருத்தையே புகன்றுள்ளனர் என்பது என் கருத்து. இதற்கு உரிய விளக்கமாவது:-

கிரேக்க டயோனியசு உண்மையான மனிதர்கட்கு நடுவில் இருந்துகொண்டே, அவர்களை மனிதர்களாகப் புரிந்துகொள்ள முடியாமல், மனிதர்களைத் தேடுவதாகப் பொய்யான கருத்து புகன்றுள்ளார். ஒற்றியூர்த் துறவியும் உண்மையான மனிதர்களை மனிதர்களாக மதிக்கத் தெரியாமல் விலங்குகள் எனத் தவறான கருத்தை வெளியிட்டிருக்கிறார்.


யான் இவ்வாறு கூறுவது சிலர் அல்லது பலர்க்குத் திகைப்பாயிருக்கலாம். நான் சொல்லுவது என்ன? மனிதன் அயோக்கியன். அவன் இப்போது செய்யும் ஊழல்களை அப்போதும் செய்தான்-இனியும் எப்போதும் செய்ய இருக்கிறான். நல்ல பாம்பு எப்போதும் நல்ல பாம்பே மனிதன் எப்போதும் மனிதனே ஒரு நல்ல பாம்புக்கு நஞ்சு இருக்கிறதெனில், எல்லா நல்ல பாம்புகட்கும் அவ்வாறே இருக்கும். ஒரு மனிதன் ஊழல் செய்கிறான் என்றால், அந்த ஊழல் மனித இனத்தின் பொதுப்பண்பு-ஒருவனது ஊழலில் மனித இனத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பங்கு உண்டு, தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் இந்தச் செகத்தினை அழித்திடுவோம்’ என்று சுப்பிரமணிய பாரதியார் கூறியிருப்பதின் உட்கருத்து, ஒரு மனிதனின் துன்பத்தில் மனித இனம் முழுவதற்கும் பங்கு உண்டு என்பதேயாம்.


எனவே, மனிதனிடத்தில் இப்போது உள்ளதற்கு மேல் மிகுதியான பெருந்தன்மையை எதிர்பார்க்க முடியாது. டயோனியசும் ஒற்றியூர்த் துறவியும் உண்மையான மனிதர்களையே பார்த்திருக்கின்றனர்-ஆனால், அவர்கள் மனிதரிடத்தில் தெய்வத் தன்மையை எதிர்பார்த்திருக்கிறார்கள். மனிதர் பொதுவாக எல்லாருக்கும் இருப்பதற்கும் மேற்பட்ட உயரிய பண்பை உடையவர்களாக விளங்கும்போது தெய்வத்தன்மை உடையவர்களாக மாறுகின்றனர். டயோனியசு மனிதரைத் தேடுகிறேன் என்று கூறாமல், மனிதர்க்கு நடுவே மனிதத் தெய்வத்தைத் தேடுகிறேன் என்று சொல்லியிருக்க வேண்டும்.


மனிதர்களை நோக்கி நாய் போகிறது-நரிபோகிறது என்று கூறிய ஒற்றியூர்த் துறவி, அந்த வழியாக வடலூர் இராமலிங்க வள்ளலார் சென்று கொண்டிருந்த போது, அவரை நோக்கி, இதோ ஒரு மனிதர் போகிறார்’ என்று கூறினாராம். துறவி இவ்வாறு கூறாமல், இதோ ஒரு மனிதத் தெய்வம் போகிறது’ என்று கூறியிருக்க வேண்டும். இழிந்த பண்பினின்றும் படிப்படியாக விலகி உயர்ந்த பண்பைக் கடைப்பிடிக்கும் போது மனிதன் படிப்படியாகத் தெய்வ நிலைக்கு உயருகிறான். மற்ற மாந்தரினும் குறிப்பிட்ட சிலரிடம் உள்ள வியத்தகு பெருந்தன்மை அதாவது உயரிய பண்பு தெய்வத் தன்மை என் னும் பெயர் பெறுகிறது. அதை உடையவர் தெய்வமாக மதிக்கப் பெறுகிறார். இந்த அடிப்படையிலேயே வடலூர் இராமலிங்க வள்ளலார் தெய்வத் தன்மை பெற்றவராக மதிக்கப்படுகிறார். செருக்கான வாழ்க்கையை மேற்கொண்டிருந்த உமாபதி சிவாச்சாரியார், அந்த நிலையி லிருந்து கீழ் இறங்கி வந்து உயரிய அருளாளராக மாறியதும் தெய்வத் தன்மை அடைந்தவராகப் போற்றப்படுகிறார்.


பல்லைப் பிடுங்கிய பாம்பும், சர்க்கசு காட்சியில் வரும் யானை, புலி, கரடி, சிங்கம் முதலிய பழக்கப் படுத்தப்பட்ட விலங்குகளும் பிறர்க்குத் தீமை செய்யாதனவாய் இருப்பது போல், பண்படுத்தப்பட்ட மனிதன் மனிதத் தன்மையிலிருந்து தெய்வநிலைக்கு மாறுகிறான். நம்மால் வழிபடப்படுபவர்கள், இவ்வாறு, மனித நிலையிலிருந்து கடவுள் நிலைக்கு உயர்ந்தவர்களே.


‘மனிதரும் தெய்வம் ஆகலாம் என்ற தலைப்புக்கு இப்போது வருவோம். மனிதரும் என்பதில் உள்ள உம்மை இழிவு சிறப்பு உண்மையாரும். அதாவது மனிதரின் இழிவை-மட்டமான தன்மையை உணர்த்துவதாகும். அத்தகைய மட்டமான மனிதனும் உயரிய தெய்வம் ஆகலாம் என்பதையே, இந்தத் தலைப்பு அறி வுறுத்துகிறது. இத்தகைய மனிதத் தெய்வங்கட்குக் கோயில் எடுத்து வழிபடுகின்றோம்.


இது காறும் கூறியவற்றால், தெய்வங்கள் எல்லாம் மனிதர்களே என்பது புலனாகலாம். இதற்கு இன்னும் விளக்கமான சான்று வேண்டுமா? சரி, இதோ :


பெயர் பெற்ற பல திருக்கோயில்கள், பெரியார்களைப் புதைத்த, அடக்கத்தின் மேல் எழுந்தவையே! அடக்கத் தைச் (சமாதியைச்) சுற்றி எழுந்தவையே! பழநி மலைக் கோயிலில் போகர் என்னும் சித்தர் அடக்கம். திருவாவடுதுறைக் கோயில் பகுதியில் திருமூலர் என்னும் தவயோகி அடக்கம். மயிலம் மலைக் கோயிலில் பாலய சித்தர் அடக்கம். நாட்டரசன் கோட்டை என்னும் ஊரில் கம்பர் என்னும் பெரும் புலவரின் அடக்கத்தின் மேல் சிவலிங்கச் சிலை வைத்துக் கோயிலும் எழுப்பியுள்ளனர். இப்படியே இன்னும் பல சொல்லிக் கொண்டு போகலாம். இந்து மதத்தினர் என்றென்ன மற்ற மதத்தினரும் பெரியார்களின் அடக்கத்தை மதித்துப் போற்றுகின்றனர். மனிதர்க்குள் முதன்மையான நேர்மையாளன் எவனோ - அவனே கடவுள் - அவன் தான் எங்கள் அருகக் கடவுள்’ - என்பது ஒரு சார் சைன சமயக் கொள்கையாகும். எனவே, மனிதரும் தெய்வமாகலாம் என இழுபறியாகச் சொல்ல வேண்டியதில்லை; மனிதரே தெய்வம் என அழுத்தம் திருத்தமாக அடித்துச் சொல்லலாம்.


இப்போது உலகினர் வழிபடும் கடவுளர் பட்டாளத்துள் பெரும்பாலான கடவுளர்கள் பெற்றோர்க்குப் பிள்ளையாயிருந்து வளர்ந்து வாழ்ந்தவர்களே. புத்தர் பிறந்தவர்; ஏசுநாதர் பிறந்தவர்; இராமர் பிறந்தவர்; கண்ணபிரான் பிறந்தவர். முருகனும் மூத்தபிள்ளையாரும் (விநாயகரும்) சிவன்-சிவை (பார்வதி) ஆகியோரின் பிள்ளைகளாம். இந்து மதத்தினர் சிறப்பாக வழிபடும் மூன்று தெய்வங்களுள் (மும்மூர்த்திகளுள்) நான்முகன் (பிரமன்) திருமாலின் (விஷ்ணுவின்) பிள்ளையாம். திருமாலோ பத்துப் பிறவிகள் (அவதாரங்கள்) எடுத்தவர் எத்தனையோ பெற்றோர்ர்குப் பிள்ளையாகப் பிறந்தவர் எனப் புராணங்கள் புகலுகின்றன. நான்முகனும் திருமாலுமே பிள்ளைகளாய்ப் பிறந்தவர்கள். எனில், நான்முகன் மனைவி கலைமகளைப் பற்றியும் திருமாலின் மனைவி திருமகளைப் பற்றியும் பேசவேண்டியதில்லை. மும்மூர்த்திகளுள் இவ்விருவரும்போக மூன்றாமவராகிய சிவன் மட்டும் யாருக்கும் பிள்ளையாய்த் தோன்றி வளர்ந்து வாழவில்லையாம். ஆனால், சிவனுடைய மனைவி எனச் சொல்லப்படும் சிவை வெவ்வேறு காலத்தில், பர்வதராசன் மகள் (பார்வதி) ஆகவும், தட்சனுடைய மகள் (தாட்சாயணி) ஆகவும், மீனக் கொடியுடைய பாண்டிய மன்னனின் மகள் (மீனாட்சி) ஆகவும் தோன்றியுள்ளாள் எனப் புராணங்கள் தெரிவிக்கின்றன. சிவன் மட்டும் எவருக்காவது பிள்ளையாய்த் தோன்றியதாக எந்தப் புராணமும் கூறவில்லை என்றே தோன்றுகிறது.

தயிழ் மொழியில் ‘பிள்ளைத் தமிழ்” என்னும் ஒருவகை நூல் உண்டு. அஃதாவது: ஏதாவது ஒரு தெய்வத்தையோ சிறப்புறச் செயல் புரிந்த பெரியாரையோ சிறு பிள்ளையாகக் கற்பனை செய்து கொண்டு, அந்தப் பிள்ளையின் இயக்கத்தைப் பத்துப் பருவங்களாகப் பகுத்துக் கொண்டு, ஒரு பருவத்துக்குப் பத்துப் பாடல்கள் வீதம் (பத்துப்பத்து) நூறு பாடல்களைத் தமிழ்மொழியில் பாடியுள்ள நூலுக்குப் ‘பிள்ளைத் தமிழ்’ என்னும் பெயர் வழங்கப்படுகிறது. சிவனைத் தவிர மற்ற தெய்வங்கள் பிள்ளையாய்த் தோன்றியிருந்தது உண்டாதலின், அத்தெய்வங்களின் மேல் பிள்ளைத் தமிழ் நூல் பாடுவது மரபு. சிவன் மட்டும் எவருக்கும் பிள்ளையாய்த் தோன்றாமையினால், அத்தெய்வத்தின் மேல் பிள்ளைத் தமிழ் நூல் பாடுவது மரபு அன்று.

இது போன்ற செய்திகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு, இளமையில் சைவ சித்தாந்தியாயிருந்த யான், சைவத்தின் மேல் சமயம் வேறில்லை, அதில் சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் வேறொன்றும் இல்லை’ என்று இறுமாப்புடன் வாதிட்டுப் பேசுவது . வழக்கம். சைவ சமயத்தின் தலைமைப் பெருமையைப் பரப்புவதை எனது பத்தொன்பதாவது வயதிலேயே தொடங்கிவிட்டேன். சிவன் ஒருவ்னே பிள்ளையாய்ப் பிறக்காத தெய்வம். செத்துப் பிறக்கின்ற-பிறந்து சாகின்ற தெய்வங்களுக்கெல்லாம் தலைவன் சிவனே என்று யான் அப்போது பேசுவது வழக்கம்.


எனது இருபதாவது வயதில் ஒரு திங்கள் கிழமையில் (Monday)தலை முழுகுவதற்காக யான்வீட்டில் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தேன். “சனி நீராடு என்னும் ஒளவையின் அறிவுரைப்படி, எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயைச் சனிக்கிழமை தோறும் உடம்பு முழுவதும் தேய்த்துக் குளிப்பது தமிழ்நாட்டு மரபு. சனிக்கிழமைத் தலை முழுக்கு தவறி விட்டதால், அடுத்து வந்த திங்கட் கிழமையில் யான் வழக்கத்து மாறாக எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, மடுகரை என்னும் ஊரிலிருந்து, எண்பது வயதுக்குமேல் முதிர்ந்த பெரியவர் ஒருவர். எங்கள் வீட்டுக்கு வந்தார். அவர் என்னை நோக்கி, ஏன் தம்பி இன்றைக்கு எண்ணெய் தேய்த்துக் கொள்கிறாய்? என்று வினவினார். இன்றைக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டால் என்ன தவறு? என்று யான் பதிலுக்கு வினவினேன். இன்றைக்கு என்ன கிழமை? என்று கேட்டார் அவர். “திங்கள் கிழமை என்றேன் நான். திங்கள் கிழமை யில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாமா?[1] என்று அவர் வினவினார். திங்கள் கிழமையில் தேய்த்துக்கொண்டால் என்ன? என்று கேட்டேன் நான். திங்கள் கிழமை சிவன் பிறந்த நாளாயிற்றே-சைவ சமயத்தவர்களாகிய நாம் திங்கள் கிழமையில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாமா?-கூடாதே’ என்றார். அவர். உடனே யான், சிவன் கூடப் பிறந்தவர்தானா? என்று வியப்புடனும் வேதனையுடனும் வினவினேன். ஆமாம்.-ஆமாம் என்று அழுத்தம் திருத்தமாகப் பதில் அறைந்தார் அம்முதியவர். திங்கள் கிழமைகளில் சோம வார விரதம் என்ற பெயரில் சிவனுக்காக நோன்பு இருப்பது உனக்குத் தெரியாதா? என்றும் கேட்டு விட்டார் அப்பெரியவர். உடனே எனக்கு நாடி ஒடுங்கிவிட்டது. சிவன் கூடப் பிறந்தவர்தான் போலும்: என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தது எனது வாய்.

இதனால், சிவனும் பிறந்தவரே என்பது தெளிவாயிற்று. சிவன் தோற்றமும் ஒடுக்கமும் இல்லாத முழுமுதற் கடவுள் எனச் சைவ சமய ஆத்திகர்கள் கூறுவர், ஆனால். மடுகரை முதியவர், பழுத்த ஆத்திகராயிருந்து கொண்டே ‘சிவனும் பிறந்தவர்’ என்று கூறியதில் உண்மை இருக்கத்தான் வேண்டும். எனவே, சுடவுளர்களாகக் கருதி வழிபடப்படுவோர் அனைவரும் மாந்தர்களே என்ற முடிவுக்கு எளிதில் வரலாம். சிவன், திருமால் பிரமன் போன்றோர். காலம் கணக்கிட்டுக்கூற முடியாத மிகப் பழங்காலத்திலே பிறந்து வாழ்ந்தவராக இருக்கக் கூடும்.

சைன சமயத்தவர் வழிபடும் சிவனும் பெளத்த சமயத்தினர் வழிபடும் புத்தரும் போன்றோர் காலம் கணக்கிட்டுக் கூறக்கூடிய பிற்காலத்தவர் என்பது அறிந்த செய்தி. கடவுளரின் பட்டியலைக் கூறவந்த மண்டல புருடர் தமது சூடாமணி நிகண்டு நூலின் பதினோராவது-ஒரு சொல் பல்பொருள் பெயர்த் தொகுதி ககர எதுகை என்னும் பகுதியில்

பகவனே ஈ சன் மாயோன்
பங்கயன் சினனே புத்தன்

எனக் கூறியுள்ளார். பகவன் கடவுள். ஈசன் - சிவன். மாயோன்-திருமால். பங்கயன் - பிரமன். சினன்-சைனர் கடவுள். புத்தன் பெளத்தர் கடவுள். இந்த ஐவரையுமே மண்டல புருடர் சமனாக ஒரே ஏரில் கட்டியுள்ளார். இவர்களுள் சிவன் பிறப்பால் முற்பட்டவர் எனவும் புத்தர் பிறப்பர்ல் பிற்பட்டவர் எனவும் கொள்ளல் தகும், சைன சமயத்தவராகிய மண்டல புருடர், நடுநிலை பிறழாது, கால (Seniority) முதன்மையின்படி பட்டியல்படுத்தியுள்ள அழகு பாராட்டத்தக்கது. சினனுக்குப் பிற்பட்டவரே புத்தர் என்பது வரலாறு. இவர்களைப் போலவே அரும்பெருஞ் செயல்கள் புரிந்த பெரியார்களைக் கடவுளாக வழிபடும் மரபு இன்று வரையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இற்றைக்கு (1988) முன்னே சுமார் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்குள் வாழ்ந்தவர்களாகிய நாயன்மார்கள் எனப்படும் சிவனடியார்களுக்கும், ஆழ்வார்கள் எனப்படும் வைணவ அடியார்களுக்கும், கோயில்களில் சிலை வைத்து வழிபாடு செய்து வருவதை மக்கள் அறிவர். வேறு சில மதங்களிலும் இம்மரபு உண்டு.


சிலைவைக்கும் வழக்கம்:

கடவுள் அடியார்கட்கும் அரசர்கட்கும் அவர்கள் இறந்தபின் சிலை வைக்கும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது. இக்காலத்தில், இலக்கியம், நுண்கவின் கலைகள், அரசியல், சமூகப் பணி முதலியவற்றுள் எந்தத் துறையில் அரும்பெருஞ்செயல் புரிந்தவர்க்கும் சிலை வைக்கும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது.

அக்காலத்தில் ஒருவர் இறந்த பின்பே அவருக்குச் சிலை வைக்கப்பட்டது. இக்காலத்திலோ, ஒருவர் உயிரோடு இருக்கும்போதே வைக்கும் அளவுக்குச் சிலை வைக்கும் வழக்கம் முன்னேற்றம் அடைந்துள்ளது. அக் காலத்தில் இறந்த பின்பே சிலை வைப்பு நிகழ்ந்தது என்ப தற்கு ஒரு சான்று வருமாறு :


முன்னொரு காலத்தில் அயோத்தி நகரைத் தலைநகராகக் கொண்டு கோசல நாட்டைத் தசரதன் என்னும் பேரரசன் ஆண்டான். அவனுக்கு, இராமன், பரதன், இலக்குவன், சத்துருக்கனன் என மக்கள் நால்வர் இருந்தனர். அவர்களுள் பரதனும் சத்துருக்கனனும் கேகய நாட்டுக்குச் சென்றிருந்தனர். அரசியல் சூழ்நிலை காரணமாக இராமனும் இலக்குவனும் காட்டுக்குப் போய் விட்டனர். மன்னனுக்கு மூத்த பிள்ளை இராமன் மீது பற்று மிகுதி. அவனது பிரிவாற்றாமையால் தசரத மன்னன் இறந்து விட்டான். பரதன் என்னும் மகன் கேகய நாட்டிலிருந்து கோசல நாட்டுக்குத் திரும்பினான். தந்தை தசரதன் இறந்து போனது பரதனுக்குத் தெரியாது: பரதன் அரண்மனை வாயிலுக்குள் புகுந்து உள்ளே போய்க்கொண்டிருந்தபோது, வழியில் இருந்த ஒரு பகுதி அவன் கண்ணுக்குத் தென்பட்டது. முன்னர் இறந்து போன மன்னர்களின் சிலைகள் வைக்கப்பட்டிருந்த பகுதி தான் அது. அந்தப்பகுதியில் தந்தை தசரதனது சிலையும் வைக்கப்பட்டிருந்ததைப் பரதன் கண்டு திடுக்கிட்டான். தந்தை இறந்து விட்டார் போலும் என்று முதலில் ஐயுற்றான்.பின்னர் மற்றவரை வினவி உண்மையறிந்து அழுது அரற்றினான்.இது, ‘பாசகவி’ என்னும் கவிஞர் இயற்றிய பிரதிமா என்னும் சும்சுகிருத நாடகத்தில் உள்ள ஒரு வரலாற்றுப் பகுதி.


இவ்வரலாற்றால், இறந்தவர்க்கே சிலை வைக்கும் வழக்கம் அக்காலத்தில் மரபாக இருந்தது என்பது புலனாகும். இவ்விருபதாம் நூற்றாண்டில், இறந்தவர்- இருப்பவர்-எல்லாருக்குமே சிலை வைப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இச்சிலைகளாக நிற்பவர்கட்குள் யார் யார் எதிர் காலத்தில் கடவுளர்களாக மாற இருக் கின்றார்களோ - தெரியவில்லை.

இதுகாறும் பல்வேறு கோணங்களில் நின்று விளக்கிய சான்றுகளால், கட்வுள் என்பது ஒருவகைக்கற்பனைப் படைப்பே-அரும் பெருஞ் செயல்கள் ஆற்றிய ஆன்றோர் களே கடவுளர்களாக ஆக்கப்பட்டனர்-அவர்கட்கு முன்பு, பல்வேறு இயற்கைப் பொருள்களே கடவுள்களாக வழிபடப்பட்டன-நாளடைவில் கடவுள் வழிபாடு படிப் படியாக வளர்ந்து, இப்பொழுது உள்ள பெரிய நிலையை அடைந்துவிட்டது-என்னும் உண்மை தெளிவாகும்.

வழிபாடு :

இப்போது மக்கள் ஒருவரை ஒருவர் நேரில் கண்டால் வணக்கம் செய்து கொள்கின்றனர். உயர்ந்த பண்பாளர்கள் தாழ்ந்த இயல்பினரைக் கண்டாலும் முறைப்படி வணக்கம் செய்கின்றனர். இதுவே இப்படி என்றால், தெய்வமாக மாறியவர்களை- மனிதத் தெய்வங்களை வணங்குவதில் தவறு ஏதும் இல்லை. அந்தத் தெய்வங்களின் பெயரால் உள்ள கோயில்களில் வழிபாடு செய்வதும் தவறு இல்லை. ஆனால், வழிபாடு என்னும் பெயரில், ஆரவாரச் செயல்களும் செலவுகளும் வேண்டா. வழிபாடு ஒன்றே போதும். அத்தெய்வங்களாக உயர்ந்தவர்களிடத்தில் இருந்த உயர் பண்பை, வழிபடுபவர்களும் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். பக்தி என்னும் பெயரால் வழிபடும் பலரிடத்தில் பண்பு இல்லை. பக்தியினும் உயர் பண்பே இன்றியமையாதது. கடவுள் வழிபாடு செய்து கொண்டே இழி செயல்கள் புரிபவர்களினும், கடவுள் வழிபாடு செய்யாமல் உயரிய செயல்கள் புரிபவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர். கடவுள் வழிபாட்டின் நோக்கமும் பயனும் உயரிய நெறியில் நின்று ஒழுகி உயர் நிலை பெறுவதாகும்; அதுவே வீடுபேறு ஆகும்,


  1. ஆத்திசூடி-16



கருத்து வழங்கிய கருவூல நூல்கள்


(குறிப்பு : முதலில் இந்நூலின் பக்க எண்ணும், அடுத்து மேற்கோள் நூலின் பெயரும் உட்பிரிவும், மூன்றாவதாக ஆசிரியர் பெயரும் அமைந்திருக்கும்.

2-மலரும் மாலையும்-கோவில் வழிபாடு-1 கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

7-நல்வழி 34-ஒளவையார்

8-மணிமேகலை- : 70, 71-சீத்தலைச் சாத்தனார்,

9.புறநானூறு-194 - பக்குடுக்கை நன்கணியார் -

12-பாரதியார் பாடல்-பாரத மக்களின் தற்கால நிலைமை -1- சுப்பிரமணிய பாரதியார்

25-திருக்குறள்-169 திருவள்ளுவர்

திருக்குறள்-619, 620-திருவள்ளுவர்

29-கொன்றை வேந்தன்-16-ஒளவையார் 2

9-திருக்குறள்- 850 - திருவள்ளுவர்

44-திருவாசகம்-4 : 47-மாணிக்க வாசகர்

44-சைவ சமய நெறி-பொது-408 உரை-மறைஞான சம்பந்தர் 44.காஞ்சிப் புராணம்-கழுவா. 208-சிவஞான முனிவர்

45-திருக்குறள்-கடவுள் வாழ்த்து-2

48-திருநாவுக்கரசர் தேவாரம்-பொது

49.திருவாய் மொழி-3-5-10-நம்மாழ்வார்

49-திருவாசகம்-திருச்சதகம்-46-மாணிக்க வாசகர்

50-நீதிநூல்-வேதநாயகம் பிள்ளை

60-திருமந்திரம்-115-திருமூலர் -

60-தாயுமானவர் பாடல்

65-மலரும் மாலையும்-கோவில் வழிபாடுகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

66-பட்டினத்தார் பாடல்-பொது-6

67-சிவ வாக்கியர் பாடல்-520

71-திருமந்திரம்-724-திருமூலர்

73-பெரிய புராணம் - கண்ணப்ப நாயனார்-177, 178 சேக்கிழார்

81-திருவாசகம்-ஆசைப்பத்து - 2 - மாணிக்க வாசகர்

82-சீவக சிந்தாமணி-கனக மாலையார் இலம்பகம்--21-திருத்தக்க தேவர்

82-பாகவதம்-5, 2 : 31-செவ்வைச் சூடுவார்

84-பெரிய புராணம்-தடுத்தாட் கொண்டபுராணம்-106 - சேக்கிழார்

85-திருமந்திரம்-2290-திரு மூலர்

86-திருக்குறள்-1316-திருவள்ளுவர்

95-புறநானூறு-18-குடபுல்வியனார்

95-பாம்பாட்டி சித்தர் பாடல்கள்

97-திருக்குறள்-271-திருவள்ளுவர் 99-திருவாசகம்-4 : 56, 57 - மாணிக்க வாசகர்

தொல்காப்பியம்-பெயரியல்-1-தெல்காப்பியார் 104-புறநானூறு-260-வடமோதங்கிழார்

104-அகநானூறு-297-மதுரை மருதனிள நாகனார்

107-சிலப்பதிகாரம்-மங்கல வாழ்த்துப் பாடல் இளங்கோவடிகள்

114-புறநானூறு-335-மாங்குடி கிழார்

115-புறம் 70-கோவூர் கிழார்

115-நாலடியார்-62 - சமண முனிவர்

115-திருக்குறள்-64-திருவள்ளுவர்

116-சேந்தன் திவாகரம்-பல்பொருள் பெயர்த் தொகுதி-78-திவாகரர்

116-திருக்குறள்-381, 554-திருவள்ளுவர்

சேந்தன் திவாகரம்-பல்பொருள் பெயர்கத் தொகுதி-908

117-வேமன்னபத்தியம்-அன்னரசம்-467, 469-வேமன்னர் * - 123-தொல்காப்பியம்-புறத்திணையியல் -5 தொல்காப்பியர்

124-புறப்பொருள் வெண்பாமாலை-பொதுவியற் படலம்-1-ஐயனாரிதனார் -

125-அகநானூறு-மணிமிடை பவளம்-131-மதுரை மருதனிள நாகனார்

126-புறநானூறு-232-ஒளவையார்

127-புறநானூறு-260-வடமோதங்கிழார்

127- " - 261-ஆவூர் மூலங்கிழார்

128- " - 263-(புலவர் பெயர் தெரியவில்லை)

128- "- 264-உறையூர் இளம்பொன் வாணிகனார்

129- " - 305-அள்ளுர்நன் முல்லையார்

129- " - 329-மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 130-புறம் - 335-மாங்குடிகிழார்

130-திருக்குறள்-771-திருவள்ளுவர்

131-மலைபடுகடாம்-387 - 89-இரணிய முட்டத்துப் பெருங் குன்றுார்ப் பெருங் கெளசிகனார்

132.அகநானூறு-35 - அம்மூவனார்

133-பதிற்றுப் பத்து-5-பதிகம்-3-பரணர்

133-அகம் 53 - சீத்தலைச் சாத்தனார்

133- , - 289-எயினந்தை மகன் இளங்கீரனார்

134.297-365-187-மதுரை மருதனிள் நாகனார்

136-புறநானூறு-306-அள்ளுர் நன்முல்லையார்

138-புறம்-221-123-பொத்தியார்

152-ஆத்திசூடி-16-ஒளவையார்

153-சூடாமணி நிகண்டு- ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி-ககர எதுகை-1 மண்டல புருடர்

155-பிரதிமா (வடமொழிநூல்)-பாசகவி