கண்ணன் பாட்டு/10. கண்ணன் - என் காதலன்

விக்கிமூலம் இலிருந்து

செஞ்சுருட்டி - திஸ்ர ஏக தாளம்

சிருங்கார ரசம்


தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே

சுடர் விளக்கினைப் போல்,

நீண்ட பொழுதாக - எனது

நெஞ்சந் துடித்த தடீ!

கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை

கொண்டு மிகவும் நொந்தேன்;

வேண்டும் பொருளை யெல்லாம் - மனது

வெறுத்து விட்டதடீ! . ... 1


பாயின் மிசை நானும் - தனியே

படுத் திருக்கை யிலே,

தாயினைக் கண்டாலும் - சகியே!

சலிப்பு வந்த தடீ!

வாயினில் வந்ததெல்லாம் - சகியே!

வளர்த்துப் பேசிடுவீர்;

நோயினைப் போலஞ் சினேன்; - சகியே!

நுங்க ளுறவை யெல் லாம். ... 2


உணவு செல்லவில்லை; - சகியே!

உறக்கங் கொள்ளவில்லை.

மணம் விரும்பவில்லை; - சகியே!

மலர் பிடிக்க வில்லை;

குண முறுதி யில்லை; - எதிலும்

குழப்பம் வந்த தடீ!

கணமும் உளத்திலே - சுகமே

காணக் கிடைத்ததில்லை. ... 3


பாலுங் கசந்தடீ தடீ! - சகியே!

படுக்கை நொந்த தடீ!

கோலக் கிளிமொழியும் - செவியில்

குத்த லெடுத்த தடீ!

நாலு வயித்தியரும் - இனிமேல்

நம்புதற் கில்லை யென்றார்;

பாலத்துச் சோசியனும் - கிரகம்

படுத்து மென்று விட்டான். ... 4


கனவு கண்டதிலே - ஒருநாள்

கண்ணுக்குத் தோன்றாமல்,

இனம் விளங்க வில்லை - எவனோ

என்னகந் தொட்டு விட்டான்.

வினவக் கண்விழித்தேன்; - சகியே!

மேனி மறைந்து விட்டான்;

மனதில் மட்டிலுமே - புதிதோர்

மகிழ்ச்சி கண்டதடீ! . ... 5


உச்சி குளிர்ந்ததடீ! - சகியே!

உடம்பு நேராச்சு,

மச்சிலும் வீடுமெல்லாம் - முன்னைப்போல்

மனத்துக் கொத்தடீ!

இச்சை பிறந்ததடீ! - எதிலும்

இன்பம் விளைளந்ததடீ!

அச்ச மொழிந்ததடீ! - சகியே!

அழகு வந்ததடீ! ... 6


எண்ணும் பொழுதி லெல்லாம் - அவன்கை

இட்ட விடத்தினிலே!

தண்ணென் றிருந்ததடீ! - புதிதோர்

சாந்தி பிறந்ததடீ!

எண்ணி யெண்ணிப் பார்த்தேன்; - அவன்தான்

யாரெனச் சிந்தை செய்தேன்;

கண்ணன் திருவுருவம் - அங்ஙனே

கண்ணின் முன் நின்றதடீ! ... .7