கண்ணன் பாட்டு/16. கண்ணம்மா - என் காதலி - 1

விக்கிமூலம் இலிருந்து

(காட்சி வியப்பு)


செஞ்சுருட்டி - ஏகதாளம்

ரசங்கள் : சிருங்காரம், அற்புதம்


சுட்டும் விழிச்சுடர் தான், - கண்ணம்மா!

சூரிய சந்திர ரோ?

வட்டக் கரிய விழி, - கண்ணம்மா!

வானக் கருமை கொல்லோ?

பட்டுக் கருநீலப் - புடவை

பதித்த நல் வயிரம்

நட்ட நடு நிசியில் - தெரியும்

நக்ஷத் திரங்க ளடீ! ... 1


சோலை மல ரொளியோ - உனது

சுந்தரப் புன்னகை தான்

நீலக் கடலலையே - உனது

நெஞ்சி லலைக ளடீ!

கோலக் குயி லோசை - உனது

குரலி னிமை யடீ!

வாலைக் குமரி யடீ, - கண்ணம்மா!

மருவக் காதல் கொண்டேன். ... 2


சாத்திரம் பேசுகிறாய், - கண்ணம்மா!

சாத்திர மேதுக் கடீ!

ஆத்திரங் கொண்டவர்க்கே, - கண்ணம்மா!

சாத்திர முண்டோ டீ!

மூத்தவர் சம்மதியில் - வதுவை

முறைகள் பின்பு செய்வோம்;

காத்திருப் பேனோ டீ? - இதுபார்,

கன்னத்து முத்த மொன்று! ... 3