கண்ணன் பாட்டு/18. கண்ணம்மா - என் காதலி - 3

விக்கிமூலம் இலிருந்து

(முகத்திரை களைத்தல்)

நாதநாமக்கிரியை - ஆதிதாளம்

சிருங்கார ரசம்


தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள்

திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;

வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் - இந்த

மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;

வல்லி யிடையினையும் மார்பு ரண்டையும் - துணி

மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;

சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை - முகச்

சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ ? ... 1


ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் - பண்டை

ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ ?

ஓரிரு முறைகண்டு பழகிய பின் - வெறும்

ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?

யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் - வலு

வாக முகத்திரையை அகற்றி விட்டால்?

காரிய மில்லையடி வீண்ட சப்பிலே - கனி

கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பனோ? ... 2