கண்ணன் பாட்டு/19. கண்ணம்மா - என் காதலி - 4

விக்கிமூலம் இலிருந்து

(நாணிக் கண் புதைத்தல்)

நாதநாமக்கிரியை - ஆதிதாளம்

சிருங்கார ரசம்


மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை - இவன்

மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ?

சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ? - இங்கு

செய்யத் தகாதசெய்கை செய்தவ ருண்டோ ?

வன்ன முகத்திரையைக் களைந்தி டென்றேன் - நின்றன்

மதங்கண்டு துகிலினை வரிதுரிந்தேன்.

என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்? - எனக்

கெண்ணப் படுவதில்லை யேடி கண்ணம்மா! ... 1


கன்னி வயதிலுனைக் கண்டதில்லையோ? - கன்னங்

கன்றிச் சிவக்கமுத்த மிட்ட தில்லையோ!

அன்னிய மாகநம்முள் எண்ணுவதில்லை - இரண்

டாவியுமொன் றாகுமெனக் கொண்ட தில்லையோ?

பன்னிப் பலவுரைகள் சொல்லுவ தென்னே? - துகில்

பறித்தவள் கைப்பறிக்கப் பயங்கொள்வனோ?

என்னைப் புறமெனவுங் கருதுவதோ? - கண்கள்

இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ? ... 2


நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும் - சுவை

நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?

பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால் - தம்முள்

பன்னி உபசரணை பேசுவ துண்டோ ?

நீட்டுங் கதிர்களொடு நிலவு வந்தே - விண்ணை

நின்று புகழ்ந்து விட்டுப் பின்மருவுமோ?

மூட்டும் விறகிளையச் சோதி கவ்வுங்கால் - அவை

முன்னுப சாரவகை மொழிந்திடுமோ? ... 3


சாத்திரக் காரரிடம் கேட்டு வந்திடேன்; - அவர்

சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்;

நேற்று முன்னாளில் வந்த உறவன்றடீ! - மிக

நெடும்பண்டைக் காலமுதற் சேர்ந்து வந்ததாம்.

போற்றுமி ராமனென முன்புதத்தனை, - அங்கு

பொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான்;

ஊற்றுமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோன்- கண்ணன்

உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்கு நான். ... 4


முன்னை மிகப்பழமை இரணியனாம் - எந்தை

மூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ;

பின்னையொர் புத்தனென நான் வளர்ந்திட்டேன் - ஒளிப்

பெண்மை அசோதரையென் றுன்னை யெய்தினேன்.

சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர்காண்; - அவர்

சொல்லிற் பழுதிருக்கக் காரண மில்லை;

இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்; - இதில்

ஏதுக்கு நாணமுற்றுக் கண்புதைப்பதே? ... 5