கண்ணன் பாட்டு/20. கண்ணம்மா - என் காதலி - 5

விக்கிமூலம் இலிருந்து

(குறிப்பிடம் தவறியது)

செஞ்சுருட்டி - ஆதி தாளம்

சிருங்கார ரசம்


தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில்

செண்பகத் தோட்டத்திலே,

பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே

பாங்கியோ டென்று சொன்னாய்.

வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா!

மார்பு துடிக்கு தடீ!

பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே

பாவை தெரியு தடீ! ... 1


மேனி கொதிக்கு தடீ! - தலை சுற்றியே

வேதனை செய்கு தடீ!

வானி லிடத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா

வந்து தழுவுது பார்!

மோனத் திருக்கு தடீ! இந்த வையகம்

மூழ்கித் துயிலினிலே,

நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர்

நகரத் துழலுவதோ? ... 2


கடுமை யுடைய தடீ! - எந்த நேரமும்

காவலுன் மாளிகையில்;

அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான்

அங்கு வருவதற் கில்லை;

கொடுமை பொறுக்க வில்லை - கட்டுங் காவலும்

கூடிக் கிடக்கு தங்கே;

நடுமை யரசி யவள் - எதற்காகவோ

நாணிக் குலைந்திடுவாள். ... 3


கூடிப் பிரியாமலே - ஓரி ரவெலாம்

கொஞ்சிக் குலவி யங்கே,

ஆடி விளை யாடியே, - உன்றன் மேனியை

ஆயிரங்கோடி முறை

நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான்

நல்ல களி யெய்தியே,

பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம்

பண்ணிய தில்லை யடி! ... 4