கண்ணன் பாட்டு/5. கண்ணன் - என் அரசன்

விக்கிமூலம் இலிருந்து

பகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும்

பார்த்திருப்ப தல்லா லொன்றுஞ் செய்திடான்;

நகைபுரிந்து பொறுத்துப் பொறுத்தையோ

நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான். ... 1


கண்ணன் வென்று பகைமை யழிந்துநாம்

கண்ணிற் காண்ப தரிதெனத் தோன்றுமே;

எண்ணமிட் டெண்ண மிட்டுச் சலித்துநாம்

இழந்த நாட்கள் யுகமெனப் போகுமே . ... 2


படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல்

பணமுண் டாக்கல் எதுவும் புரிந்திடான்;

'இடையன், வீரமி லாதவன், அஞ்சினோன்'

என்றவர் சொல்லும் ஏச்சிற்கு நாணிலான். ... 3


கொல்லப் பூத மனுப்பிடு மாமனே

கோலு யர்த்துல காண்டு களித்திட,

முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும்

மோக முற்றுப் பொழுதுகள் போக்குவான். ... 4


வான நீர்க்கு வருந்தும் பயிரென

மாந்தர் மற்றிவண் போர்க்குத் தவிக்கவும்,

தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துக்கள்

தனிமை வேய்ங்குழல் என்றிவை போற்றுவான். ... 5


காலினைக் கையினால் பற்றிக்கொண்டு நாம்

கதியெமக் கொன்று காட்டுவை யென்றிட்டால்

நாலி லொன்று பலித்திடுங் காணென்பான்;

நாமச் சொல்லின் பொருளெங் குணர்வதே? ... 6


நாம வன்வலி நம்பியி ருக்கவும்,

நாண மின்றிப் பதுங்கி வளருவான்;

தீமை தன்னை விலக்கவுஞ் செய்குவான்;

சிறுமை கொண்டொழித் தோடவுஞ் செய்குவான். ... 7


தந்தி ரங்கள் பயிலவுஞ் செய்குவான்;

சவுரி யங்கள் பழகவுஞ் செய்குவான்;

மந்தி ரத்திற னும்பல காட்டுவான்;

வலிமை யின்றிச் சிறுமையில் வாழ்வான். . ... 8


காலம் வந்துகை கூடுமப் போதிலோர்

கணத்தி லேடதி தாக விளங்குவான்;

ஆல கால விடத்தினைப் போலவே,

அகில முற்றும் அசைந்திடச் சீறுவான். ... 9


வேரும் வேரடி மண்ணு மிலாமலே

வெந்து போகப் பகைமை பொசுக்குவான்;

பாரும் வானமும் ஆயிர மாண்டுகள்

பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான். ... 10


சக்கரத்தை யெடுப்ப தொருகணம்;

தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்;

இக்க ணத்தில் இடைக்கண மொன்றுண்டோ ?

இதனுள் ளேபகை மாய்த்திட வல்லன்காண்! . ... 11


கண்ண னெங்கள் அரசன் புகழினைக்

கவிதை கொண்டெந்தக் காலமும் போற்றுவேன்;

திண்ணை வாயில் பெருக்கவந் தேனெனைத்

தேசம் போற்றத்தன் மந்திரி யாக்கினான். ... 12


நித்தச் சோற்றினுக் கேவல் செயவந்தேன்;

நிகரி லாப்பெருஞ் செல்வம் உதவினான்.

வித்தை நன்குகல் லாதவன் என்னுள்ளே

வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான். ... 13


கண்ண னெம்பெரு மானருள் வாழ்கவே!

கலிய ழிந்து புவித்தலம் வாழ்கவே!

அண்ண லின்னருள் வாடி ய நாடுதான்

அவலம் நீங்கிப் புகழில் உயர்கவே! ... 14