கண்ணன் பாட்டு/7. கண்ணன் - எனது சற்குரு

விக்கிமூலம் இலிருந்து

புன்னாகவராளி - திஸ்ர ஜாதி - ஏகதாளம் ரசங்கள்: அற்புதம், பக்தி

சாத்திரங் கள்பல தேடினேன் - அங்கு சங்கையில் லாதன சங்கையாம் - பழங் கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் - பொய்மைக் கூடையில் உண்மை கிடைக்குமோ? - நெஞ்சில் மாத்திரம் எந்த வகையிலும் - சக மாயம் உணர்ந்திடல் வேண்டுமே - என்னும் ஆத்திரம்நின்ற திதனிடை - நித்தம் ஆயிரந் தொல்லைகள் சூழ்ந்தன. . ... 1

நாடு முழுதிலுஞ் சுற்றிநான் - பல நாட்கள் அலைந்திடும் போதினில், - நிறைந் தோடும் யமுனைக் கரையிலே - தடி ஊன்றிச் சென்றாரோர் கிழவனார்; - ஒளி கூடு முகமும், தெளிவுதான் - குடி கொண்ட விழியும், சடைகளும், - வெள்ளைத் தாடியும் கண்டு வணங்கியே - பல சங்கதி பேசி வருகையில், ... 2

என்னுளத் தாசை யறிந்தவர் - மிக இன்புற் றுரைத்திட லாயினர் -தம்பி, நின்னுளத் திற்குத் தகுந்தவன், - சுடர் நித்திய மோனத் திருப்பவன், - உயர் மன்னர் குலத்தில் பிறந்தவன், - வட மாமது ரைப்பதி யாள்கின்றான்; - கண்ணன் தன்னைச் சரணென்று போவையில் - அவன் சத்தியங் கூறுவன் என்றனர். ... 3

மாமது ரைப்பதி சென்றுநான் - அங்கு வாழ்கின்ற கண்ணனைப் போற்றியே, - என்தன் நாமமும் ஊரும் கருத்துமே - சொல்லி நன்மை தருகென வேண்டினன்; - அவன் காமனைப் போன்ற வடிவமும் - இளங் காளையர் நட்பும் பழக்கமும் - கெட்ட பூமியைக் காக்குந் தொழிலிலே - எந்தப் போதுஞ் செலுத்திடுஞ் சிந்தையும், ... 4

ஆடலும் பாடலும் கண்டுநான் - முன்னர் ஆற்றங் கரையினில் கண்டதோர் - முனி வேடந் தரித்த கிழவரைத் - கொல்ல வேண்டுமென் றுள்ளத்தில் எண்ணினேன் - 'சிறு நாடு புரந்திடு மன்னவன் - கண்ணன் நாளுங் கவலையில் மூழ்கினோன்; - தவப் பாடுபட் டோ ர்க்கும் விளங்கிடா - உண்மை பார்த்திவன் எங்ஙனம் கூறுவான்?' ... 5

என்று கருதி யிருந்திட்டேன்; - பின்னர் என்னைத் தனியிடங் கொண்டுபோய், - நினை நன்று மருவூக! மைந்தனே! - பர ஞான முரைத்திடக் கேட்பைநீ; - நெஞ்சில் ஒன்றுங் கவலையில் லாமலே - சிந்தை ஊன்ற நிறுத்திக் களிப்புற்றே தன்னை வென்று மறந்திடும் போழ்தினில் - அங்க விண்ணை யளக்கும் அறிவுதான்! ... 6

சந்திரன் சோதி யுடையதாம்; - அது சத்திய நித்திய வஸ்துவாம்; - அதைச் சிந்திக்கும் போதினில் வந்துதான் - நினைச் சேர்ந்து தழுவி அருள்செயும் -; அதன் மந்திரத் தாலிவ் வுலகெலாம் - வந்த மாயக் களிப்பொருங் கூத்துக்காண் -'இதைச் சந்ததம் பொய்யென் றுரைத்திடும் - மடச் சாத்திரம் பொய் யென்று தள்ளடா! ... 7

ஆதித் தனிக்பொரு ளாகுமோர்; - கடல் ஆருங் குமிழி உயிர்களாம்; - அந்தச் சோதி யறிவென்னும் ஞாயிறு - தன்னைச் சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம்; - இங்கு மீதிப் பொருள்கள் எவையுமே - அதன் மேனியில் தோன்றிடும் வண்ணங்கள்;- வண்ண நீதி யறிந்தின்பம் எய்தியே - ஒரு நேர்மைத் தொழிலில் இயங்குவார்; ... 8

சித்தத்தி லேசிவம் நாடுவார், - இங்கு சேர்ந்து களித்துல காளுவார்; - நல்ல மத்த மதவெங் களிறுபோல் நடை வாய்ந்திறு மாந்து திரிகுவார்; - 'இங்கு நித்தம் நிகழ்வ தனைத்துமே - எந்தை நீண்ட திருவரு ளால்வரும் - இன்பம் சுத்த சுகந்தனி யாநந்தம்' - எனச் சூழ்ந்து கவலைகள் தள்ளியே, ... 9

'சோதி அறிவில் விளங்கவும் - உயர் சூழ்ச்சி மதியில் விளங்கவும் - அற நீதி முறைவழு வாமலே - எந்த நேரமும் பூமித் தொழில்செய்து - கலை ஓதிப் பொருளியல் கண்டுதாம் - பிறர் உற்றிடுந் தொல்லைகள் மாற்றியே - இன்பம் மோதி விழிக்கும் விழியினார் - பெண்மை மோகத்தில், செல்வத்தில், கீர்த்தியில், ... 10

ஆடுதல், பாடுதல், சித்திரம் -கவி யாதி யினைய கலைகளில் - உள்ளம் ஈடுபட் டென்றும் நடப்பவர் - பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவார் - அவர் நாடும் பொருள்கள் அனைத்தையும் - சில நாளினில் எய்தப் பெறுகுவார் - அவர் காடு புதரில் வளரினும் - தெய்வக் காவனம் என்றதைப் போற்றலாம். ... 11

ஞானியர் தம்மியல் கூறினேன் - அந்த ஞானம் விரைவினில் எய்துவாய் - எனத் தேனி லினிய குரலிலே - கண்ணன் செப்பவும் உண்மை நிலைகண்டேன் - பண்டை ஈன மனிதக் கனவெலாம் - எங்ஙன் ஏகி மறைந்தது கண்டிலேன்; - அறி வான தனிச்சுடர் நான்கண்டேன்! - அதன் ஆட லுலகென நான் கண்டேன்! ... 12