கண்ணன் பாட்டு/8. கண்ணன் - என் குழந்தை

விக்கிமூலம் இலிருந்து

(பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு)

(ராகம் - பைரவி, தாளம் - ரூபகம்)


ஸ ஸ ஸ - ஸா ஸா - பபப

தநீத - பதப - பா

பபப -பதப - பமா - கரிஸா

ரிகம - ரிகரி - ஸா

என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக்கொண்டு

மனோவாபப்படி மாற்றி பாடுக.


சின்னஞ் சிறு கிளியே, - கண்ணம்மா!

செல்வக் களஞ்சியமே!

என்னைக் கலி தீர்த்தே - உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்! ... 1


பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா

பேசும்பொற் சித்திரமே!

அள்ளி யணைத்திடவே - என் முன்னே

ஆடி வருந் தேனே! . ... 2


ஓடி வருகையிலே - கண்ணம்மா!

உள்ளங் குளிரு தடீ!

ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்

ஆவி தழுவு தடீ! ... 3


உச்சி தனை முகந்தால் - கருவம்

ஓங்கி வளரு தடீ!

மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்

மேனி சிலிர்க்குதடீ! ... 4


கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்

கள்வெறி கொள்ளு தடீ!

உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா!

உன்மத்த மாகுதடீ! ... 5


சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது

சஞ்சல மாகு தடீ!

நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு

நெஞ்சம் பதைக்கு தடீ! ... 6


உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்

உதிரம் கொட்டு தடீ!

என்கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!

என்னுயிர் நின்ன தன்றோ? ... 7


சொல்லு மழலையிலே - கண்ணம்மா!

துன்பங்கள் தீர்த்திடு வாய்;

முல்லைச் சிரிப்பாலே - எனது

மூர்க்கந் தவிர்த்திடு வாய். ... 8


இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல்

ஏடுகள் சொல்வ துண்டோ ?

அன்பு தருவதிலே - உனைநேர்

ஆகுமோர் தெய்வ முண்டோ ? ... 9


மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்

வைர மணிக ளுண்டோ ?

சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்

செல்வம் பிறிது முண்டோ ? ... 10