கம்பராமாயணம்/ஆரணிய காண்டம்/கரன் வதைப் படலம்

விக்கிமூலம் இலிருந்து

சூர்ப்பணகை கரன் தாள் விழுந்து கதறி முறையிடல்[தொகு]

இருந்த மாக் கரன் தாள் இணையின் மிசை,

சொரிந்த சோரியள், கூந்தலள், தூம்பு எனத்

தெரிந்த மூக்கினள், வாயினள், செக்கர்மேல்

விரிந்த மேகம் என விழுந்தாள் அரோ. 1


'அழுங்கு நாள் இது' என்று, அந்தகன் ஆணையால்

தழங்கு பேரி எனத் தனித்து ஏங்குவாள்;

முழங்கு மேகம் இடித்த வெந் தீயினால்

புழுங்கு நாகம் எனப் புரண்டாள் அரோ. 2


வாக்கிற்கு ஒக்க, புகை முத்து வாயினான்

நோக்கி, 'கூசலர், நுன்னை இத் தன்மையை

ஆக்கிப் போனவர் ஆர்கொல்?' என்றான்-அவள்

மூக்கின் சோரி முழீஇக் கொண்ட கண்ணினான். 3



'இருவர் மானிடர்; தாபதர்; ஏந்திய

வரி வில், வாள், கையர்; மன்மதன் மேனியர்;

தரும நீரர்; தயரதன் காதலர்;

செருவில் நேரும் நிருதரைத் தேடுவார். 4


'ஒன்றும் நோக்கலர் உன் வலி; ஓங்கு அறன்

நின்று நோக்கி, நிறுத்தும் நினைப்பினார்;

"வென்றி வேற் கை நிருதரை வேர் அறக்

கொன்று நீக்குதும்" என்று உணர் கொள்கையார். 5


'மண்ணில், நோக்க அரு வானினில், மற்றினில்,

எண்ணி நோக்குறின், யாவரும் நேர்கிலாப்

பெண்ணின் நோக்குடையாள் ஒரு பேதை, என்

கண்ணின் நோக்கி உரைப்ப அருங் காட்சியாள்; 6


'கண்டு, "நோக்க அருங் காரிகையாள்தனைக்

கொண்டு போவன், இலங்கையர் கோக்கு" எனா,

விண்டு மேல் எழுந்தேனை வெகுண்டு, அவர்

துண்டம் ஆக்கினர், மூக்கு' எனச் சொல்லினாள். 7


கரன் கொதித்து எழுதல்[தொகு]

கேட்டனன் உரை; கண்டனன் கண்ணினால்,

தோட்ட நுங்கின் தொளை உறு மூக்கினை;

'காட்டு' எனா, எழுந்தான், எதிர் கண்டவர்

நாட்டம் தீய;-உலகை நடுக்குவான். 8


எழுந்து நின்று, உலகு ஏழும் எரிந்து உகப்

பொழிந்த கோபக் கனல் உக, பொங்குவான்;

'"கழிந்து போயினர் மானிடர்" என்னுங்கால்,

அழிந்ததோ இல் அரும் பழி?' என்னுமால். 9


பதினான்கு வீரர்கள் போரிடச் செல்லுதல்[தொகு]

'வருக, தேர்!' எனும் மாத்திரை, மாடுளோர்,

இரு கை மால் வரை ஏழினொடு ஏழ் அனார்

ஒரு கையால் உலகு ஏந்தும் உரத்தினார்,

'தருக இப் பணி எம் வயின் தான்' என்றார். 10


சூலம், வாள், மழு தோமரம், சக்கரம்,

கால பாசம், கதை, பொரும் கையினார்;

வேலை ஞாலம் வெருவுறும் ஆர்ப்பினார்;

ஆலகாலம் திரண்டன்ன ஆக்கையார். 11


வெம்பு கோபக் கனலர் விலக்கினார்,

'நம்பி! எம் அடிமைத் தொழில் நன்று' எனா,

'உம்பர்மேல் இன்று உருத்தனை போதியோ?

இம்பர்மேல் இனி யாம் உளெமோ?' என்றார். 12


'நன்று சொல்லினிர்; நான் இச் சிறார்கள்மேல்

சென்று போர் செயின், தேவர் சிரிப்பரால்;

கொன்று, சோரி குடித்து, அவர் கொள்கையை

வென்று மீளுதிர் மெல்லியலோடு' என்றான். 13


என்னலோடும், விரும்பி இறைஞ்சினார்;

சொன்ன நாண் இலி அந்தகன் தூது என,

அன்னர் பின் படர்வார் என, ஆயினார்;

மன்னன் காதலர் வைகு இடம் நண்ணினார். 14


சூர்ப்பணகை அரக்கர்க்கு இராமனைக் காட்டுதல்[தொகு]

துமிலப் போர் வல் அரக்கர்க்குச் சுட்டினாள்,

அமலத் தொல் பெயர் ஆயிரத்து ஆழியான்

நிமிலப் பாத நினைவில் இருந்த அக்

கமலக் கண்ணனை, கையினில் காட்டினாள். 15


'எற்றுவாம் பிடித்து; ஏந்துதும்' என்குநர்,

'பற்றுவாம் நெடும் பாசத்தின்' என்குநர்,

'முற்றுவாம் இறை சொல் முறையால்' எனா,

சுற்றினார்-வரை சூழ்ந்தன்ன தோற்றத்தார். 16


இராமன் போருக்கு எழுதல்[தொகு]

ஏத்து வாய்மை இராமன், இளவலை,

'காத்தி தையலை' என்று, தன் கற்பகம்

பூத்தது அன்ன பொரு இல் தடக் கையால்,

ஆத்த நாணின் அரு வரை வாங்கினான். 17


வாங்கி, வாளடு வாளி பெய் புட்டிலும்

தாங்கி, தாமரைக் கண்ணன், அச் சாலையை

நீங்கி, 'இவ்வழி நேர்மின், அடா!' எனா,

வீங்கு தோளன் மலைதலை மேயினான். 18


நால்வரும் வீழ்தல்[தொகு]

மழுவும், வாளும், வயங்கு ஒளி முச் சிகைக்

கழுவும், கால வெந் தீ அன்ன காட்சியார்,

எழுவின் நீள் தடக் கை எழு நான்கையும்,

தழுவும் வாளிகளால், தலம் சார்த்தினான். 19


மரங்கள்போல், நெடு வாளடு தோள் விழ,

உரங்களான் அடர்ந்தார்; உரவோன் விடும்

சரங்கள் ஓடின தைக்க, அரக்கர் தம்

சிரங்கள் ஓடின; தீயவள் ஓடினாள். 20


வெங்கரன் வெகுண்டு எழுதல்[தொகு]

ஒளிறு வேல் கரற்கு, உற்றது உணர்த்தினாள்குள

¢று கோப வெங் கோள் அரிமா அட,

களிறு எலாம் பட, கை தலைமேல் உற,

பிளிறி ஓடும் பிடி அன்ன பெற்றியாள். 21


'அங்கு அரக்கர் அவிந்து அழிந்தார்' என,

பொங்கு அரத்தம் விழிவழிப் போந்து உக,

வெங் கரப் பெயரோன், வெகுண்டான், விடைச்

சங்கரற்கும் தடுப்ப அருந் தன்மையான். 22


'அழை, என் தேர்; எனக்கு ஆங்கு, வெம் போர்ப் படை;

உழையர் ஓடி, ஒரு நொடி ஓங்கல்மேல்,

மழையின், மா முரசு எற்றுதிர், வல்' என்றான் -

முழையின் வாள் அரி அஞ்ச முழங்குவான். 23


பறை ஒலி கேட்டு நான்கு படையும் எழுதல்[தொகு]

பேரி ஓசை பிறத்தலும், பெட்புறு

மாரி மேகம் வரம்பு இல வந்தென,

தேரின் சேனை திரண்டது; தேவர்தம்

ஊரும், நாகர் உலரும் உலைந்தவே. 24


போர்ப் பெரும் பணை 'பொம்' என் முழக்கமா,

நீர்த் தரங்கம் நெடுந் தடந் தோள்களா,

ஆர்த்து எழுந்தது-இறுதியில், ஆர் கலிக்

கார்க் கருங் கடல் கால் கிளர்ந்தென்னவே. 25


காடு துன்றி, விசும்பு கரந்தென

நீடி, எங்கும் நிமிர்ந்த நெடுங் கொடி-

'ஓடும் எங்கள் பசி' என்று, உவந்து, எழுந்து,

ஆடுகின்ற அலகையின் ஆடவே, 26


தறியின் நீங்கிய, தாழ் தடக் கைத் துணை,

குறிகொளா, மத வேழக் குழு அனார்,

செறியும் வாளடு வாளிடை தேய்ந்து உகும்

பொறியின், கான் எங்கும் வெங் கனல் பொங்கவே. 27


முருடு இரண்டு முழங்குறத் தாக்கு ஒலி

உருள் திரண்டு எழும் தேர் ஒலியுள் புக,

அருள் திரண்ட அருக்கன் தன்மேல், அழன்று

இருள் திரண்டு வந்து ஈண்டியது என்னவே. 28


தலையில், மாசுணம், தாங்கிய தாரணி

நிலை நிலாது, முதுகை நெளிப்புற,

உலைவு இல் ஏழ் உலகத்தினும் ஓங்கிய

மலை எலாம், ஒரு மாடு தொக்கென்னவே. 29


'வல்லியக் குழாங்களோ? மழையின் ஈட்டமோ?

ஒல் இபத் தொகுதியோ? ஓங்கும் ஓங்கலோ?

அல்ல, மற்று அரிகளின் அனிகமோ?' என,

பல் பதினாயிரம் படைக் கை வீரரே. 30


ஆளிகள் பூண்டன, அரிகள் பூண்டன,

மீளிகள் பூண்டன, வேங்கை பூண்டன,

ஞாளிகள் பூண்டன, நரிகள் பூண்டன,

கூளிகள் பூண்டன, குதிரை பூண்டன, 31


ஏற்றுஇனம் ஆர்த்தன, ஏனம் ஆர்த்தன,

காற்றுஇனம் ஆர்த்தன, கழுதை ஆர்த்தன,

தோற்றின மாத்திரத்து உலகு சூழ்வரும்

பாற்றுஇனம் ஆர்த்தன, பணிலம் ஆர்த்தன. 32


தேர்இனம் துவன்றின; சிறு கண் செம் முகக்

கார்இனம் நெருங்கின; காலின், கால் வரு

தார்இனம் குழுமின;-தடை இல் கூற்று எனப்

பேர்இனம் கடல் எனப் பெயருங்காலையே. 33


அரக்கரின் போர்க் கருவிகள்


மழுக்களும், அயில்களும், வயிர வாள்களும்,

எழுக்களும், தோமரத் தொகையும், ஈட்டியும்,

முழுக்களும், முசுண்டியும், தண்டும், முத் தலைக்

கழுக்களும், உலக்கையும், காலபாசமும். 34


குந்தமும், குலிசமும், கோலும், பாலமும்,

அந்தம் இல் சாபமும், சரமும், ஆழியும்,

வெந் தொழில் வலயமும், விளங்கு சங்கமும்

பந்தமும் கப்பணப் படையும், பாசமும். 35


ஆதியின், அருக்கனும் அனலும் அஞ்சுறும்

சோதிய, சோரியும் தூவும் துன்னிய,-

ஏதிகள் மிடைந்தன,-இமையவர்க்கு எலாம்

வேதனை கொடுத்தன, வாகை வேய்ந்தன. 36


அரக்கர் படையும், படைத் தலைவர்களும்


ஆயிரம் ஆயிரம் களிற்றின் ஆற்றலர்;

மா இரு ஞாலத்தை விழுங்கும் வாயினர்;

தீ எரி விழியினர்;-நிருதர் சேனையின்

நாயகர், பதின்மரோடு அடுத்த நால்வரே. 37


ஆறினோடு ஆயிரம் அமைந்த ஆயிரம்

கூறின ஒரு படை; குறித்த அப் படை

ஏறின ஏழினது இரட்டி என்பரால்-

ஊறின சேனையின் தொகுதி உன்னுவார். 38


உரத்தினர்; உரும் என உரறும் வாயினர்;

கரத்து எறி படையினர்; கமலத்தோன் தரும்

வரத்தினர்; மலை என, மழை துயின்று எழு

சிரத்தினர்; தருக்கினர்; செருக்கும் சிந்தையார்; 39


விண் அளவிட நிமிர்ந்து உயர்ந்த மேனியர்;

கண் அளவிடல் அரு மார்பர்; காலினால்,

மண் அளவிடு நெடு வலத்தர்; வானவர்

எண் அளவிடல் அருஞ் செரு வென்று ஏறினார். 40


இந்திரன் முதலினோர் எறிந்த மாப் படை

சிந்தின தெறித்து உக, செறிந்த தோளினார்;

அந்தகன், அடி தொழுது அடங்கும் ஆணையார்;

வெந் தழல் உருவு கொண்டனைய மேனியார். 41


குலமும், பாசமும், தொடர்ந்த செம் மயிர்ச்

சாலமும், தறுகணும், எயிறும், தாங்கினார்,

'ஆலமும் வெளிது' எனும் நிறத்தர்; ஆற்றலால்,

காலனும், 'காலன்' என்று, அயிர்க்கு காட்சியார். 42


கழலினர்; தாரினர்; கவச மார்பினர்;

நிழலுறு பூணினர்; நெறித்த நெற்றியர்;

அழலுறு குஞ்சியர்; அமரை வேட்டு, உவந்து,

எழலுறு மனத்தினர்; ஒருமை எய்தினார். 43


மருப்பு இறா மத களிற்று அமரர் மன்னமும்,

விருப்புறா, முகத்து எதிர் விழிக்கின், வெந்திடும்;

உருப் பொறாது உலைவுறும் உலகம் மூன்றினும்,

செருப் பெறாத் தினவுறு சிகரத் தோளினார். 44


'குஞ்சரம், குதிரை, பேய், குரங்கு, கோள் அரி,

வெஞ் சினக் கரடி, நாய், வேங்கை, யாளி என்று,

அஞ்சுற, கனல் புரை மிகத்தர்; ஆர்கலி

நஞ்சு தொக்கெனப் புரை நயனத்தார்களும்- 45


எண் கையர்; எழு கையர்; ஏழும் எட்டும் ஆய்க்

கண் கனல் சொரிதரு முகத்தர்; காலினர்;

வண் கையின் வளைத்து, உயிர் வாரி, வாயின் இட்டு

உண்கையில் உவகையர்; உலப்பு இலார்களும். 46


இயக்கரின் பறித்தன, அவுணர் இட்டன,

மயக்குறுத்து அமரரை வலியின் வாங்கின,

துய்க்கு இல் கந்தர்ப்பரைத் துரந்து வாரின,

நயப்புறு சித்தரை நலிந்து வவ்வின. 47


கொடி, தழை, கவிகை, வான், தொங்கல், குஞ்சரம்

படியுறு பதாகை, மீ விதானம், பல் மணி

இடையிலாது எங்கணும் இசைய மீமிசை

மிடைதலின், உலகு எலாம் வெயில் இழக்கவே. 48


படைகள் இராமன் இருப்பிடத்தை அடைதல்[தொகு]

எழுவரோடு எழுவர் ஆம், உலகம் ஏழொடு ஏழ்

தழுவிய வென்றியர், தலைவர்; தானையர்-

மழுவினர்; வாளினர்; வயங்கு சூலத்தர்;

உழுவையோடு அரி என உடற்றும் சீற்றத்தார். 49


வில்லினர்; வாளினர்; இதழின்மீது இடும்

பல்லினர்; மேருவைப் பறிக்கும் ஆற்றலர்;

புல்லினர் திசைதொறும்; புரவித் தேரினர்;

சொல்லின முடிக்குறும் துணிவின் நெஞ்சினார். 50


தூடணன், திரிசிராத் தோன்றல், ஆதியர்

கோடணை முரசினம் குளிறு சேனையர்

ஆடவர் உயிர் கவர் அலங்கல் வேலினர்

பாடவ நிலையினர், பலரும் சுற்றினர். 51


ஆன்று அமை எறி படை அழுவத்து ஆர்கலி,

வான் தொடர் மேருவை வளைத்ததாம் என,

ஊன்றின தேரினன், உயர்ந்த தோளினன்,

தோன்றினன் யாவரும் துணுக்கம் எய்தவே. 52


அசும்புறு மத கரி, புரவி, ஆடகத்

தசும்புறு சயந்தனம், அரக்கர் தாள், தர,

விசும்புறு தூளியால், வெண்மை மேயினபசும்பர

¢, பகலவன், பைம் பொன் தேர் அரோ. 53


வனம் துகள்பட்டன, மலையின் வான் உயர்

கனம் துகள்பட்டன, கடல்கள் தூர்ந்தன,

இனம் தொகு தூளியால், இசைப்பது என் இனி?-

சினம் தொகு நெடுங் கடற் சேனை செல்லவே. 54


நிலமிசை, விசும்பிடை, நெருக்கலால், நெடு

மலைமிசை மலை இனம் வருவபோல் மலைத்

தலைமிசை, தலைமிசை, தாவிச் சென்றனர்-

கொலைமிசை நஞ்சு எனக் கொதிக்கும் நெஞ்சினார். 55


வந்தது சேனை வெள்ளம், வள்ளியோன் மருங்கு-மாயா

பந்த மா வினையம் மாளப் பற்று அறு பெற்றி யோர்க்கும்

உந்த அரு நிலையது ஆகி, உடன் உறைந்து உயிர்கள் தம்மை

அந்தகர்க்கு அளிக்கும் நோய்போல், அரக்கி முன் ஆக அம்மா! 56


தூரியக் குரலின், வானின் முகிற் கணம் துணுக்கம்கொள்ள;

வார் சிலை ஒலியின், அஞ்சி, உரும் எலாம், மறுக்கம்கொள்ள;

ஆர்கலி, ஆர்ப்பின், உட்கி அசைவுற; அரக்கர் சேனை,

போர் வனத்து இருந்த வீரர் உறைவிடம் புக்கது அன்றே. 57


வாய் புலர்ந்து அழிந்த மெய்யின் வருத்தத்த, வழியில் யாண்டும்

ஓய்வில, நிமிர்ந்து வீங்கும் உயிர்ப்பின, உலைந்த கண்ண,

தீயவர் சேனை வந்து சேர்ந்தமை தெரிய, சென்று,

வேய் தெரிந்து உரைப்ப போன்ற-புள்ளடு விலங்கும் அம்மா! 58


தூளியின் படலை வந்து தொடர்வுற, மரமும் தூறும்

தாள் இடை ஒடியும் ஓசை 'சடசட' ஒலிப்ப, கானத்து

ஆளியும் அரியும் அஞ்சி இரிதரும் அமலை நோக்கி

மீளி மொய்ம்பினரும், 'சேனை மேல்வந்தது உளது' என்று உன்னா, 59


இராமன் போருக்கு எழுதல்[தொகு]

மின் நின்ற சிலையன், வீரக் கவசத்தன், விசித்த வாளன்,

பொன் நின்ற வடிம்பின் வாளிப் புட்டிலன், புகையும் நெஞ்சன்

'நில்; நின்று காண்டி, யான் செய் நிலை' என, விரும்பி நேரா

முன் நின்ற பின்வந்தோனை நோக்கினன், மொழியலுற்றான். 60


'நெறி கொள் மா தவர்க்கு, முன்னே நேர்ந்தனென்; "நிருதர் ஆவி

பறிக்குவென் யானே" என்னும் பழமொழி பழுதுறாமே,

வெறி கொள் பூங் குழலினாளை, வீரனே! வேண்டினேன் யான்,

குறிக்கொடு காத்தி; இன்னே கொல்வென்; இக் குழுவை' என்னா. 61


மரம் படர் கானம் எங்கும் அதர்பட வந்த சேனை

கரன் படை என்பது எண்ணி, கரு நிறக் கமலக்கண்ணன்,

சரம் படர் புட்டில் கட்டி, சாபமும் தரித்தான்; தள்ளா

உரம் படர் தோளில் மீளாக் கவசம் இட்டு, உடைவாள் ஆர்த்தான். 62


போர் செய்ய தனக்கு அருள இராமனை இலக்குவன் வேண்டல்[தொகு]

'மீள அருஞ் செருவில், விண்ணும் மண்ணும் என்மேல் வந்தாலும்,

நாள் உலந்து அழியும் அன்றே? நான் உனக்கு உரைப்பது என்னே?

ஆளியின் துப்பினாய்! இவ் அமர் எனக்கு அருளிநின்று, என்

தோளினைத் தின்னுகின்ற சோம்பினைத் துடைத்தி' என்றான். 63


இலக்குவன் வேண்டுகோளை இராமன் மறுத்து, போர் செய்யச் செல்லல்[தொகு]

என்றனன் இளைய வீரன்; இசைந்திலன் இராமன், ஏந்தும்

குன்று அன தோளின் ஆற்றல் உள்ளத்தில் உணரக் கொண்டான்;

அன்றியும், அண்ணல் ஆணை மறுக்கிலன்; அங்கை கூப்பி-

நின்றவன், இருந்து கண்ணீர் நிலன் உறப் புலர்கின்றாள்பால். 64


குழையுறு மதியம் பூத்த கொம்பனாள் குழைந்து சோர,

தழையுறு சாலைநின்றும், தனிச் சிலை தரித்த மேரு,

மழை என முழங்குகின்ற வாள் எயிற்று அரக்கர் காண,

முழையின்நின்று எழுந்து செல்லும் மடங்கலின், முனிந்து, சென்றான். 65


சூர்ப்பணகை இராமனை சுட்டுதல்[தொகு]

தோன்றிய தோன்றல்தன்னைச் சுட்டினள் காட்டி, சொன்னாள்வ

¡ன் தொடர் மூங்கில் தந்த வயங்கு வெந் தீ இது என்ன,

தான் தொடர் குலத்தை எல்லாம் தொலைக்குமா சமைந்து நின்றாள்-

'ஏன்று வந்து எதிர்த்த வீரன் இவன், இகல் இராமன்' என்றே. 66


கரன் தானே மோதுவதாகக் கூறுதல்[தொகு]

கண்டனன், கனகத் தேர்மேல், கதிரவன் கலங்கி நீங்க,

விண்டனன் நின்ற, வென்றிக் கரன் எனும் விலங்கல் தோளான்;

'மண்டு அமர் யானே செய்து, இம் மானிடன் வலியை நீக்கி,

கொண்டனென் வாகை' என்று, படைஞரைக் குறித்துச் சொன்னான். 67


"மானிடன் ஒருவன்; வந்த வலி கெழு சேனைக்கு, அம்மா!

கான் இடம் இல்லை" என்னும் கட்டுரை கலந்த காலை,

யானுடை வென்றி என் ஆம்? யாவரும் கண்டு நிற்றிர்;

ஊனுடை இவனை, யானே, உண்குவென் உயிரை' என்றான். 68


தீய நிமித்தம் கண்ட அகம்பன் அறிவுரை[தொகு]

அவ் உரை கேட்டு வந்தான், அகம்பன் என்று அமைந்த கல்விச்

செவ்வியான் ஒருவன்; 'ஐய; செப்புவேன்! செருவில் சால

வெவ்வியர் ஆதல் நன்றே; வீரரில் ஆண்மை வீர!

இவ் வயின் உள ஆம் தீய நிமித்தம்' என்று, இயம்பலுற்றான். 69


'குருதி மா மழை சொரிந்தன, மேகங்கள் குமுறி;

பருதி வானவன் ஊர் வளைப்புண்டது; பாராய்-

கருது வீர!-நின் கொடிமிசைக் காக்கையின் கணங்கள்

பொருது வீழ்வன, புலம்புவ, நிலம் படப் புரள்வ; 70


'வாளின் வாய்களை ஈ வளைக்கின்றன; வயவர்

தோளும் நாட்டமும் இடம் துடிக்கின்றன; தூங்கி

மீளி மொய்ம்புடை இவுளி வீழ்கின்றன; விரவி,

ஞாளியோடு நின்று, உளைக்கின்ற நரிக் குலம் பலவால்; 71


'பிடி எலாம் மதம் பெய்திட, பெருங் கவுள் வேழம்

ஒடியுமால் மருப்பு; உலகமும் கம்பிக்கும்; உயர் வான்

இடியும் வீழ்ந்திடும்; எரிந்திடும் பெருந்திசை; எவர்க்கும்

முடியின் மாலைகள் புலாலொடு முழு முடை நாறும். 72


'இனைய ஆதலின், "மானிடன் ஒருவன்" என்று, இவனை

நினையலாவது ஒன்று அன்று அது;-நீதியோய்!-நின்ற

வினை எலாம் செய்து வெல்லல் ஆம் தன்மையன் அல்லன்;

புனையும் வாகையாய்! பொறுத்தி, என் உரை' எனப் புகன்றான். 73


உரைத்த வாசகம் கேட்டலும், உலகு எலாம் உலையச்

சிரித்து, 'நன்று நம் சேவகம்! தேவரைத் தேய

அரைத்த அம்மி ஆம் அலங்கு எழில் தோள், அமர் வேண்டி

இரைத்து வீங்குவ, மானிடற்கு எளியவோ?' என்றான். 74


என்னும் மாத்திரத்து, எறி படை இடி எனா இடியா

மன்னர் மன்னவன் மதலையை, வளைந்தன-வனத்து

மின்னும் வால் உளை மடங்கலை, முனிந்தன வேழம்

துன்னினாலென, சுடு சினத்து அரக்கர் தம் தொகுதி. 75


இராமனின் அம்பால் படை எல்லாம் அழிதல்[தொகு]

வளைந்த காலையில், வளைந்தது, அவ் இராமன் கை வரி வில்;

விளைந்த போரையும் ஆவதும் விளம்புவதும்; விசையால்

புளைந்த பாய் பரி புரண்டன; புகர் முகப் பூட்கை

உளைந்த, மால் வரை உரும் இடி பட ஒடிந்தென்ன. 76


சூலம் அற்றன; அற்றன சுடர் மழு; தொகை வாள்

மூலம் அற்றன; அற்றன முரண் தண்டு; பிண்டி

பாலம் அற்றன; அற்றன பகழி; வெம் பகு வாய்

வேலும் அற்றன; அற்றன வில்லொடு பல்லம். 77


தொடி துணிந்தன தோளடு; தோமரம் துணிந்த;

அடி துணிந்தன கட களிறு; அச்சோடு, நெடுந் தேர்,

கொடி துணிந்தன; குரகதம் துணிந்தன; குல மா

முடி துணிந்தன; துணிந்தன, முளையோடு முசலம். 78


கருவி மாவொடு, கார் மதக் கைம்மலைக் கணத்து ஊடு-

உருவி மாதிரத்து ஓடின, சுடு சரம்; உதிரம்

அருவி மாலையின் தேங்கினது; அவனியில் அரக்கர்

திருஇல் மார்பகம் திறந்தன; துறந்தன சிரங்கள். 79


ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், கோடி, என்று உணரா

துன்று பத்திய, இராகவன் சுடு சரம் துரப்ப,

சென்று, பத்திரத் தலையின மலை திரண்டென்ன,

கொன்று, பத்தியில் குவித்தன பிணப் பெருங் குன்றம். 80


காடு கொண்ட கார் உலவைகள் கதழ் கரி கதுவ,

சூடு கொண்டன எனத் தொடர் குருதி மீத் தோன்ற,

ஆடுகின்ற அறுகுறை; அயில் அம்பு, விண்மேல்

ஓடுகின்றன, உயிரையும் தொடர்வன ஒத்த. 81


கைகள் வாளடு களம்பட, கழுத்து அற, கவச

மெய்கள் போழ்பட, தாள் விழ, வெருவிட, நிருதர்

செய்ய மாத் தலை சிந்திட, திசை உறச் சென்ற-

தையலார் நெடு விழி எனக் கொடியன கரங்கள். 82


மாரி ஆக்கிய வடிக் கணை, வரை புரை நிருதர்

பேர் யாக்கையின் பெருங் கரை வயின் தொறும் பிறங்க,

ஏரி ஆக்கின; ஆறுகள் இயற்றின; நிறையச்

சோரி ஆக்கின; போக்கின; வனம் எனும் தொன்மை. 83


அலை மிதந்தன குருதியின் பெருங் கடல், அரக்கர்

தலை மிதந்தன; நெடுந் தடி மிதந்தன; தடக் கைம்ம

லை மிதந்தன; வாம் பரி மிதந்தன; வயப் போர்ச்

சிலை மிதந்தன; மிதந்தன; கொடி நெடுந் தேர்கள். 84


ஆய காலையில், அனல் விழித்து ஆர்த்து இகல் அரக்கர்,

தீய வார் கணை முதலிய தெறு சினப் படைகள்,

மேய மால் வரை ஒன்றினை வளைத்தன மேகம்

தூய தாரைகள் சொரிவன ஆம் என, சொரிந்தார். 85


சொரிந்த பல் படை துணிபட, துணிபட, சரத்தால்

அரிந்து போந்தன சிந்திட, திசை திசை அகற்றி,

நெரிந்து பார்மகள் நெளிவுற, வனம் முற்றும் நிறைய,

விரிந்த செம் மயிர்க் கருந் தலை மலை என வீழ்ந்தான். 86


கவந்த பந்தங்கள் களித்தன, குளித்த கைம்மலைகள்,

சிவந்த பாய்ந்த வெங் குருதியில், திருகிய சினத்தால்

நிவந்த வெந் தொழில் நிருதர்தம் நெடு நிணம் தெவிட்டி,

உவந்த, வன் கழுது; உயிர் சுமந்து உளுக்கியது உம்பர். 87


மருள் தரும் களி வஞ்சனை வளை எயிற்று அரக்கர்,

கருடன் அஞ்சுறு, கண் மணி காகமும் கவர்ந்த;

இருள் தரும் புரத்து இழுதையர் பழுது உரைக்கு எளிதோ?

அருள் தரும் திறத்து அறல் அன்றி, வலியது உண்டாமோ? 88


பல் ஆயிரம் இருள் கீறிய பகலோன் என ஒளிரும்

வில்லாளனை முனியா, வெயில் அயில் ஆம் என விழியா,-

கல் ஆர் மழை, கண மா முகில் கடை நாள், விழுவனபோல்,

எல்லாம் ஒரு தொடையா உடன் எய்தார், வினை செய்தார். 89


எறிந்தார் என, எய்தார் என, நினைந்தார் என, எறிய

அறிந்தார் என, அறியாவகை, அயில் வாளியின் அறுத்தான்;

செறிந்தாரையும், பிரிந்தாரையும், செறுத்தாரையும், சினத்தால்

மறிந்தாரையும், வலித்தாரையும், மடித்தான் -சிலை பிடித்தான். 90


வானத்தன, கடலின் புற வலயத்தன; மதி சூழ்

மீனத்தன; மிளிர் குண்டல வதனத்தன மிடல் வெங்

கானத்தன; மலையத்தன; திசை சுற்றிய கரியின்

தானத்தன-காகுத்தன சரம் உந்திய சிரமே. 91


மண் மேலன; மலை மேலன; மழை மேலன; மதி தோய்

விண் மேலன; நெடு வேலையின் மேல் கீழன; மிடலோர்

புண் மேலன;-குருதிப் பொழி திரை ஆறுகள் பொங்க,

திண் மேருவை நகு மார்பினை உருவித் திரி சரமே. 92


பொலந் தாரினர், அனலின் சிகை பொழி கண்ணினர், எவரும்

வலம் தாங்கிய வடி வெம் படை விடுவார், சர மழையால்

உலந்தார்; உடல் கடலோடு உற, உலவா உடல் உற்றார்;

'அலந்தார் நிசிசரர் ஆம்' என, இமையோர் எடுத்து ஆர்த்தார். 93


ஈரல் செறி கமலத்தன, இரதத் திரள் புளினம்,

வீரக் கரி முதலக் குலம், மிதக்கின்றன உதிக்கும்

பாரக் குடர் மிடை பாசடை படர்கின்றன பலவா,

மூரித் திரை உதிரக் குளம் முழுகிக் கழுது எழுமே. 94


அழைத்தார் சிலர், அயர்த்தார் சிலர், அழிந்தார் சிலர், கழிந்தார்,

உழைத்தார் சிலர், உயிர்த்தார் சிலர், உருண்டார் சிலர், புரண்டார்;

குழைத் தாழ் திரைக் குருதிக் கடல் குளித்தார் சிலர், கொலை வாய்

மழைத் தாரைகள் படப் பாரிடை மடிந்தார் சிலர், உடைந்தார். 95


போர்க்களத்தில் படைத் தலைவர்கள் முந்துதல்[தொகு]

உடைந்தார்களை நகைசெய்தனர், உருள் தேரினர், உடன் ஆய்

அடைந்தார், படைத் தலைவீரர்கள் பதினால்வரும்; அயில் வாள்

மிடைந்தார், நெடுங் கடல்-தானையர், மிடல் வில்லினர், விரிநீர்

கடைந்தார் வெருவுற மீது எழு கடு ஆம் எனக் கொடியார். 96


நாகத் தனி ஒரு வில்லியை, நளிர் முப்புரர், முன் நாள்

மாகத்திடை வளைவுற்றனர் என, வள்ளலை மதியார்,

ஆகத்து எழு கனல் கண்வழி உக, உற்று எதிர் அழன்றார்;

மேகத்தினை நிகர் வில்லியை வளைத்தார், செரு விளைத்தார். 97


எய்தார் பலர்; எறிந்தார் பலர்; மழு ஓச்சினர்; எழுவால்

பொய்தார் பலர்; புடைத்தார் பலர்; கிடைத்தார் பலர்; பொருப்பால்

பெய்தார் மழை; பிதிர்த்தார் எரி;-பிறை வாள் எயிற்று அரக்கர்-

வைதார் பலர்; தெழித்தார் பலர்; மலை ஆம் என வளைத்தார். 98


தேர் பூண்டன விலங்கு யாவையும், சிலை பூண்டு எழு கொலையால்,

பார் பூண்டன; மத மா கரி பலி பூண்டன; புரிமா

தார் பூண்டன, உடல் பூண்டில தலை; வெங்கதிர் தழிவந்து

ஊர் பூண்டன பிரிந்தாலென, இரிந்தார் உயிர் உலைந்தார். 99


மால் பொத்தின, மறவோர் உடன் மழை பொத்தின; வழி செம்ப

¡ல் பொத்தின, நதியின் கிளர் படி பொத்தின; படர் வான் -

மேல் பொத்தின குழி விண்ணவர், விழி பொத்தினர்; விரை வெங்

கால் பொத்தினர் நமன் தூதுவர், கடிது உற்று, உயிர் கவர்வார். 100


பேய் ஏறின செரு வேட்டு எழு பித்து ஏறினர் பின் வாய்,

நாய் ஏறின, தலைமேல் நெடு நரி ஏறின; எரி கால்

வாய் ஏறின வடி வாளியின் வால் ஏறினர், வந்தார்,

தீ ஏறு, இகல் அரி ஏறு என, முகில் ஏறு எனச் செறிந்தார். 101


தலை சிந்தின; விழி சிந்தின; தழல் சிந்தின; தரைமேல்

மலை சிந்தினபடி சிந்தின, வரி சிந்துரம்; மழைபோல்

சிலை சிந்தின கணை சிந்தின, திசை சிந்தின; திசையூடு

உலை சிந்தின, பொறி சிந்தின, உயிர் சிந்தின, உடலம். 102


படைப் பெருந் தலைவரும், படைத்த தேர்களும்

உடைத் தடம் படைகளும், ஒழிய, உற்று எதிர்

விடைத்து அடர்ந்து எதிர்ந்தவர், வீரன் வாளியால்

முடைத்த வெங் குருதியின் கடலில் மூழ்கினார். 103


சுற்றுற நோக்கினர், தொடர்ந்த சேனையில்

'அற்றன தலை' எனும், ஆக்கை கண்டிலர்;

தெற்றினர் எயிறுகள்; திருகினார் சினம்;

முற்றினர் இராமனை, முடுகு தேரினார். 104


ஏழ்-இரு தேரும் வந்து, இமைப்பின் முன்பு, இடை

சூழ்வன, கணைகளின் துணிய நூறினான்;

ஆழியும், புரவியும், ஆளும் அற்று, அவை

ஊழி வெங் கால் எறி ஓங்கல் ஒத்தவே. 105


அழிந்தன தேர்; அவர் அவனி கீண்டு உக,

இழிந்தனர்; வரி சிலை எடுத்த கையினர்;

ஒழிந்தனர்; சரங்களை உருமின் ஏறு எனப்

பொழிந்தனர், பொழி கனல் பொடிக்கும் கண்ணினார். 106


நூறிய சரம் எலாம் நுறுங்க வாளியால்

ஈறுசெய்து, அவர் சிலை ஏழொடு ஏழையும்

ஆறினோடு ஆறும் ஓர் இரண்டும் அம்பினால்

கூறுசெய்து, அமர்த் தொழில் கொதிப்பை நீக்கினான். 107


வில் இழந்து, அனைவரும் வெகுளி மீக்கொள,

கல் உயர் நெடு வரை கடிதின் ஏந்தினார்,

ஒல்லியில் உருத்து, உயர் விசும்பில் ஓங்கி நின்று

எல் உயர் பொறி உக, எறிதல் மேயினார். 108


கலைகளின் பெருங் கடல், கடந்த கல்வியான்

இலை கொள் வெம் பகழி ஏழ்-இரண்டும் வாங்கினான்;

கொலை கொள் வெஞ் சிலையடு புருவம் கோட்டினான்;

மலைகளும் தலைகளும் விழுந்த, மண்ணினே. 109


திரிசிரா சினந்து மேல் வருதல்[தொகு]

படைத் தலைத் தலைவர்கள் படலும், பல் படை

புடைத்து, அடர்ந்து, எதிர் அழல் புரையும் கண்ணினார்,

கிடைத்தனர், அரக்கர்கள்; கீழும் மேலும் மொய்த்து

அடைத்தனர் திசைகளை; அமரர் அஞ்சினார். 110


முழங்கின பெரும் பணை, மூரி மால் கரி;

முழங்கின வரி சிலை முடுகு நாண் ஒலி;

முழங்கின சங்கொடு புரவி; மொய்த்து உற

முழங்கின அரக்கர் தம் முகிலின் ஆர்ப்பு அரோ. 111


வெம் படை, நிருதர், வீச விண்ணிடை மிடைந்த, வீரன்

அம்பு இடை அறுக்க, சிந்தி அற்றன படும்'; என்று, அஞ்சி,

உம்பரும் இரியல் போனார்; உலகு எலாம் உலைந்து சாய்ந்த;

கம்பம் இல் திசையில் நின்ற களிறும், கண் இமைத்த அன்றே. 112


அத் தலைத் தானையன், அளவு இல் ஆற்றலன்,

முத் தலைக் குரிசில், பொன் முடியன்; முக்கணான்

கைத்தலைச் சூலமே அனைய காட்சியான்;

வைத் தலைப் பகழியால் மழை செய் வில்லினான். 113


அன்னவன் நடுவுற, 'ஊழி ஆழி ஈது'

என்ன வந்து, எங்கணும் இரைத்த சேனையுள்,

தன் நிகர் வீரனும், தமியன், வில்லினன்,

துன் இருள் இடையது ஓர் விளக்கின் தோன்றினான். 114


பெருஞ் சேனையோடு திரிசிரா எதிர்த்தல்[தொகு]

ஓங்கு ஒளி வாளினன், உருமின் ஆர்ப்பினன்,

வீங்கிய கவசத்தன், வெய்ய கண்ணினன்-

ஆங்கு-அவன் அணிக்கு எதிர் அணிகள் ஆக, தேர்

தாங்கினன் இராமனும், சரத்தின் தானையால். 115


தாள் இடை அற்றன; தலையும் அற்றன;

தோள் இடை அற்றன; தொடையும் அற்றன;

வாள் இடை அற்றன; மழுவும் அற்றன;

கோள் இடை அற்றன; குடையும் அற்றன. 116


கொடி யடு கொடுஞ்சு இற, புரவிக் கூட்டு அற,

படியடு படிந்தன, பருத்த தேர்; பணை

நெடிய வன் கட கரி புரண்ட, நெற்றியின்

இடியடு முறிந்து வீழ் சிகரம் என்னவே. 117


'அற்றன சிரம்' என அறிதல் தேற்றலர்;

கொற்ற வெஞ் சிலை சரம் கோத்து வாங்குவார்

இற்றவர், இறாதவர் எழுந்து, விண்ணினைப்

பற்றின மழை எனப் படை வழங்குவார். 118


கேடகத் தடக் கைய, கிரியின் தோற்றத்த,

ஆடகக் கவசத்த, கவந்தம் ஆடுவப

¡டகத்து அரம்பையர் மருள, பல்வித

நாடகத் தொழிலினை நடிப்ப ஒத்தவே. 119


கவரி வெண் குடை எனும் நுரைய; கைம்மலைச்

சுவரன; கவந்தம் ஆழ் சுழிய; தண் துறை

பவர் இனப்படு மணி குவிக்கும் பண்ணைய;

உவரியைப் புதுக்கின-உதிர-ஆறுஅரோ. 120


சண்ட வெங் கடுங் கணை தடிய, தாம், சில

திண் திறல் வளை எயிற்று அரக்கர், தேவர் ஆய்,

வண்டு உழல் புரி குழல் மடந்தைமாரொடும்

கண்டனர், தம் உடல்-கவந்த நாடகம். 121


ஆய் வளை மகளிரொடு அமரர் ஈட்டத்தர்-

தூய வெங் கடுங் கணை துணித்த தங்கள் தோள்,

பேய் ஒருதலை கொள, பிணங்கி, வாய்விடா

நாய் ஒருதலை கொள-நகையுற்றார், சிலர். 122


தெரி கணை மூழ்கலின் திறந்த மார்பினர்

இரு வினை கடந்து போய் உம்பர் எய்தினார்

'நிருதர் தம் பெரும் படை நெடிது; நின்றவன்

ஒருவன்' என்று, உள்ளத்தில் உலைவுற்றார், சிலர். 123


கைக் களிறு அன்னவன் பகழி, கண்டகர்

மெய்க் குலம் வேரொடும் துணித்து வீழ்த்தின-

மைக் கரு மனத்து ஒரு வஞ்சன், மாண்பு இலன்,

பொய்க் கரி கூறிய கொடுஞ் சொல் போலவே. 124


அஞ்சிறை அறுபதம் அடைந்த கீடத்தைத்

தஞ்சு எனத் தன் மயம் ஆக்கும் தன்மைபோல்

வஞ்சகத்து அரக்கரை வளைத்து, வள்ளல்தான்

செஞ் சரத் தூய்மையால், தேவர் ஆக்கினான். 125


'வலம் கொள் போர், மானிடன் வலிந்து கொன்றமை,

அலங்கல் வேல் இராவணற்கு அறிவிப்பாம்' என

சலம்கொள் போர் அரக்கர்தம் உருக்கள் தாங்கின,

இலங்கையின் உற்ற, அக் குருதி ஆறு அரோ. 126


திரிசிரா இரு சிரம் இழத்தல்[தொகு]

சூழ்ந்த தார் நெடும் படை, பகழி சுற்றுறப்

போழ்ந்து உயிர் குடித்தலின், புரளப் பொங்கினான்,

தாழ்ந்திலன் முத் தலைத் தலைவன், சோரியின்

ஆழ்ந்த தேர், அம்பரத்து ஓட்டி ஆர்க்கின்றான். 127


ஊன்றிய தேரினன் உருமின் வெங் கணை,

வான் தொடர் மழை என, வாய்மை யாவர்க்கும்

சான்று என நின்ற அத் தரும மன்னவன்

தோன்றல்தன் திரு உரு மறையத் தூவினான். 128


தூவிய சரம் எலாம், துணிய, வெங் கணை

ஏவினன் இராமனும்; ஏவி, ஏழ்-இரு

பூ இயல் வாளியால் பொலம் கொள் தேர் அழித்து,

ஆவி, வெம் பாகனை, அழித்து மாற்றினான். 129


அன்றியும், அக் கணத்து, அமரர் ஆர்த்து எழ,

பொன் தெரி வடிம்புடைப் பொரு இல் வாளியால்,

வன் தொழில் தீயவன் மகுட மாத் தலை

ஒன்று ஒழித்து, இரண்டையும் உருட்டினான் அரோ. 130


முத்தலைவன் அத்தலை ஒரு தலையுடன் பொருதல்[தொகு]

தேர் அழிந்து, அவ் வழி, திரிசிரா எனும்

பேர் அழிந்ததனினும், மறம் பிழைத்திலன்;

வார் அழிந்து உமிழ் சிலை, வான நாட்டுழிக்

கார் இழிந்தாலென, கணை வழங்கினான். 131


ஏற்றிய நுதலினன் இருண்ட கார் மழை

தோற்றிய வில்லொடும் தொடர, மீமிசைக்

காற்று இடை அழித்தென, கார்முகத்தையும்

மாற்ற அரும் பகழியால், அறுத்து மாற்றினான். 132


வில் இழந்தனன் என்னினும், விழித்த வாள் முகத்தின்

எல் இழந்திலன்; இழந்திலன் வெங் கதம், இடிக்கும்

சொல் இழந்திலன்; தோள் வலி இழந்திலன்; சொரியும்

கல் இழந்திலன்; இழந்திலன் கறங்கு எனத் திரிதல். 133


ஆள் இரண்டு-நூறு உள என, அந்தரத்து ஒருவன்

மூள் இரும் பெரு மாய வெஞ் செரு முயல்வானை,

தாள் இரண்டையும் இரண்டு வெங் கணைகளால் தடிந்து,

தோள் இரண்டையும் இரண்டு வெங் கணைகளால் துணித்தான். 134


நிருதர் சேனை[தொகு]

அற்ற தாளடு தோளிலன், அயில் எயிறு இலங்க,

பொற்றை மா முழைப் புலாலுடை வாயினின், புகுந்து

பற்ற ஆதரிப்பான் தனை நோக்கினன்; பரிவான்,

கொற்ற வார் சரத்து, ஒழிந்தது ஓர் சிரத்தையும் குறைத்தான். 135


திரிசிரா எனும் சிகரம் மண் சேர்தலும், செறிந்த

நிருதர் ஓடினர், தூடனன் விலக்கவும் நில்லார்;-

பருதி வாளினர், கேடகத் தடக் கையர், பரந்த

குருதி நீரிடை, வார் கழல் கொழுங் குடர் தொடக்க. 136


கணத்தின் மேல் நின்ற வானவர் கை புடைத்து ஆர்ப்ப,

பணத்தின்மேல் நிலம் குழியுற, கால் கொடு பதைப்பார்

நிணத்தின்மேல் விழுந்து அழுந்தினர் சிலர்; சிலர் நிவந்த

பிணத்தின் மேல் விழுந்து உருண்டனர், உயிர் கொடு பிழைப்பார். 137


வேய்ந்த வாளடு வேல் இடை மிடைந்தன வெட்ட,

ஓய்ந்துளார் சிலர்; உலந்தனர் உதிர நீர் ஆற்றில்

பாய்ந்து, கால் பறித்து அழுந்தினர் சிலர்; சிலர் பயத்தால்

நீந்தினார், நெடுங் குருதி அம் கடல் புக்கு நிலையார். 138


மண்டி ஓடினார் சிலர், நெடுங் கட கரி வயிற்றுப்

புண் திறந்த மா முழையிடை வாளடும் புகுவார்,

தொண்டை நீங்கிய கவந்தத்தை, 'துணைவ! நீ எம்மைக்

"கண்டிலேன்" எனப் புகல்' என, கை தலைக் கொள்வார். 139


கச்சும் வாளும் தம் கால் தொடர்ந்து ஈர்வன காணார்,

அச்சம் என்பது ஒன்று உருவு கொண்டாலென, அழிவார்;

உச்ச வீரன் கைச் சுடு சரம் நிருதர் நெஞ்சு உருவத்

தச்சு நின்றன கண்டனர், அவ் வழித் தவிர்ந்தார். 140


தூடணன் வீர உரை கூறல்[தொகு]

அனையர் ஆகிய அரக்கரை, "ஆண் தொழிற்கு அமைந்த

வினையம் நீங்கிய மனித்தரை வெருவன்மின்" என்னா,

நினையும் நான் உமக்கு உரைப்பதும் உண்டு' என, நின்றே,

துனையும் வாம் பரித் தேரினன் தூடணன் சொன்னான். 141


'வச்சை ஆம் எனும் பயம் மனத்து உண்டு என வாழும்

கொச்சை மாந்தரைக் கோல் வளை மகளிரும் கூசார்;

நிச்சயம் எனும் கவசம்தான் நிலைநிற்பது அன்றி,

அச்சம் என்னும் ஈது ஆர் உயிர்க்கு அருந் துணை ஆமோ? 142


'பூ அராவு வேல் புரந்தரனோடுதான், பொன்றா

மூவரோடுதான் முன் நின்று முட்டிய சேனையில்

ஏவர் ஓடினர் இராக்கதர்? நுமக்கு இடைந்து ஓடும்

தேவரோடு கற்றறிந்துளிரோ? மனம் திகைத்தீர்! 143


'இங்கு ஓர் மானிடற்கு, இத்தனை வீரர்கள், இடைந்தீர்;

உம் கை வாளடு போய் விழுந்து, ஊர் புகலுற்றீர்;

கொங்கை மார்பிடைக் குளிப்புறக் களிப்புறு கொழுங் கண்

நங்கைமார்களைப் புல்லுதிரோ? நலம் நுகர்வீர்! 144


'செம்பு காட்டிய கண் இணை பால் எனத் தெளிந்தீர்!

வெம்பு காட்டிடை நுழைதொறும், வெரிந் உறப் பாய்ந்த

கொம்பு காட்டுதிரோ, தட மார்பிடைக் குளித்த

அம்பு காட்டுதிரோ, குல மங்கையர்க்கு? அம்மா! 145


'ஏக்கம் இங்கு இதன்மேலும் உண்டோ? இகல் மனிதன்

ஆக்கும் வெஞ் சமத்து, ஆண்மை அவ் அமரர்க்கும் அரிதாத்

தாக்க அரும் புயத்து உம் குலத் தலைமகன் தங்கை

மூக்கொடு அன்றி, நும் முதுகொடும் போம் பழி முயன்றீர். 146


'ஆர வாழ்க்கையின் வணிகராய் அமைதிரோ? அயில் வேல்

வீர வாள் கொழு என மடுத்து உழுதிரோ?-வெறிப் போர்த்

தீர வாழ்க்கையின் தெவ்வரைச் செருவிடைப் பறித்த

வீர வாட் கையீர்!-எங்ஙனம் வாழ்திரோ? விளம்பீர். 147


தூடணனை இராமன் எதிர்த்தல்[தொகு]

என்று, தானும், தன் எறி கடற் சேனையும், 'இறை, நீர்

நின்று காண்டிர் என் நெடுஞ் சிலை வலி' என நேராச்

சென்று தாக்கினன், தேவரும் மருள்கொண்டு திகைத்தார்;

'நன்று! காத்தி' என்று, இராமனும் எதிர் செல நடந்தான். 148


ஊடு அறுப்புண்ட, மொய்படை; கையடும் உயர்ந்த

கோடு அறுப்புண்ட, குஞ்சரம்; கொடிஞ்சொடு கொடியின்

காடு அறுப்புண்ட, கால் இயல் தேர்; கதிர்ச் சாலி

சூடு அறுப்புண்ட எனக் கழுத்து அறுப்புண்ட, துரகம். 149


துருவி ஓடின, உயிர் நிலை, சுடு சுரம், துரந்த;

கருவி ஓடின, கச்சையும் கவசமும் கழல;

அருவி ஓடின என அழி குருதி ஆறு ஒழுக;

உருவி ஓடின, கேடகத் தட்டொடும் உடலம். 150


ஆய்ந்த கங்கபத்திரங்கள் புக்கு, அரக்கர்தம் ஆவி

தோய்ந்த; தோய்வு இலாப் பிறை முகச் சரம் சிரம் துமித்த;

காய்ந்த வெஞ் சரம் நிருதர்தம் கவச மார்பு உருவப்

பாய்ந்த; வஞ்சகர் இதயமும் பிளந்தன; பல்லம். 151


தூடணன் விடு சுடு சரம் யாவையும் துணியா,

மாடு நின்றவர் வழங்கிய படைகளும் மாற்றா

ஆடல் கொண்டனன், அளப்ப அரும் பெரு வலி அரக்கர்

கூடி நின்ற அக் குரை கடல் வறள்படக் குறைத்தான். 152


ஆர்த்து எழுந்தனர் வானவர்; அரு வரை மரத்தொடு

ஈர்த்து எழுந்தன, குருதியின் பெரு நதி; இராமன்

தூர்த்த செஞ் சரம் திசைதொறும் திசைதொறும் தொடர்ந்து

போர்த்த வெஞ் சினத்து அரக்கரைப் புரட்டின, புவியில் 153


தோன்றும் மால் வரைத் தொகை எனத் துவன்றிய நிணச் சேறு

ஆன்ற பாழ் வயிற்று அலகையைப் புகல்வது என்? அமர் வேட்டு

ஊன்றினார் எலாம் உலைந்தனர்; ஒல்லையில் ஒழிந்தார்;

கான்ற இன் உயிர் காலனும் கவர்ந்து, மெய்ம் மறந்தான். 154


களிறு, தேர், பரி, கடுத்தவர், முடித் தலை, கவந்தம்,

ஒளிறு பல் படை, தம் குலத்து அரக்கர்தம் உடலம்,

வெளிறு சேர் நிணம், பிறங்கிய அடுக்கலின் மீதாக்

குளிறு தேர் கடிது ஓட்டினன் தூடணன், கொதித்தான். 155


அறம் கொளாதவர் ஆக்கைகள் அடுக்கிய அடுக்கல்

பிறங்கி நீண்டன, கணிப்பு இல; பெருங் கடு விசையால்;

கறங்கு போன்றுளது ஆயினும், பிணப் பெருங் காட்டில்

இறங்கும், ஏறும்; அத் தேர் பட்டது யாது என இசைப்பாம்? 156


அரிதின் எய்தினன் -ஐ-ஐந்து கொய் உளைப் பரியால்

உருளும் ஆழியது ஒரு தனித் தேரினன், மேகத்து

இருளை நீங்கிய இந்துவின் பொலிகின்ற இராமன்

தெருளும் வார் கணைக் கூற்று எதிர், ஆவி சென்றென்ன. 157


தூடணனின் வீழ்ச்சி[தொகு]

சென்ற தேரையும், சிலையுடை மலை எனத் தேர்மேல்

நின்ற தூடணன் தன்னையும் நெடியவன் நோக்கி,

'நன்று-நன்று, நின் நிலை' என, அருள், இறை நயந்தான்

என்ற காலத்து, அவ் வெய்யவன் பகழி மூன்று எய்தான். 158


தூர வட்ட எண் திசைகளைத் தனித்தனி சுமக்கும்

பார எட்டினோடு இரண்டினில் ஒன்று பார் புரக்கப்

பேர விட்டவன், நுதல் அணி ஓடையின் பிறங்கும்

வீர பட்டத்தில் பட்டன, விண்ணவர் வெருவ. 159


'எய்த காலமும் வலியும் நன்று' என நினைத்து, இராமன்

செய்த சேயளி முறுவலன், கடுங் கணை தெரிந்தான்;

நொய்தின், அங்கு அவன் நொறில் பரித் தேர் பட நூறி,

கையில் வெஞ் சிலை அறுத்து, ஒளிர் கவசமும் கடிந்தான். 160


தேவர் ஆர்த்து எழ, முனிவர்கள் திசைதொறும் சிலம்பும்

ஓவு இல் வாழ்த்து ஒலி கார்க் கடல் முழக்கு என ஓங்க,

'கா அடா இது, வல்லையேல், நீ' என, கணை ஒன்று

ஏவினான்; அவன் எயிறுடை நெடுந் தலை இழந்தான். 161


வெகுண்ட கரன் திரண்ட படையுடன் போர்க்கு வரல்[தொகு]

தம்பி தலை அற்ற படியும், தயரதன் சேய்

அம்பு படையைத் துணிபடுத்ததும், அறிந்தான்

வெம்பு படை விற் கை விசயக் கரன் வெகுண்டான்-

கொம்பு தலை கட்டிய கொலைக் கரியடு ஒப்பான். 162


அந்தகனும் உட்கிட, அரக்கர் கடலோடும்

சிந்துரம், வயப் புரவி, தேர், திசை பரப்பி,

இந்துவை வளைக்கும் எழிலிக் குலம் என, தான்

வந்து, வரி விற் கை மத யானையை வளைத்தான். 163


அடங்கல் இல் கொடுந் தொழில் அரக்கர், அவ் அனந்தன்

படம் கிழிதர, படிதனில், பலவிதப் போர்

கடம் கலுழ் தடங் களிறு, தேர், பரி, கடாவி,

தொடங்கினர்; நெடுந்தகையும் வெங் கணை துரந்தான். 164


துடித்தன கடக் கரி, துடித்தன பரித் தேர்

துடித்தன முடித் தலை; துடித்தன தொடித் தோள்;

துடித்தன மணிக் குடர்; துடித்தன தசைத் தோள்;

துடித்தன கழல்-துணை; துடித்தன இடத் தோள். 165


வாளின் வனம், வேலின் வனம் வார் சிலை வனம் திண்

தோளின் வனம், என்று இவை துவன்றி, நிருதப் போர்

ஆளின் வனம் நின்றதனை, அம்பின் வனம் என்னும்

கோளின் வன வன் குழுவினின், குறைபடுத்தான். 166


தான் உருவு கொண்ட தருமம் தெரி சரம் தான்

மீன் உருவும்; மேருவை விரைந்து உருவும்; மேல் ஆம்

வான் உருவும்; மண் உருவும், 'வாள் உருவி வந்தார்

ஊன் உருவும்' என்னும் இது உணர்த்தவும் உரித்தோ? 167


அன்று இடை வளைந்தவர் குலங்களடு அடங்கச்

சென்று உலைவுறும்படி, தெரிந்து கணை சிந்த

மன்றிடை நலிந்து வலியோர்கள் எளியோரைக்

கொன்றனர், நுகர்ந்த பொருளின், கடிது கொன்ற. 168


கடுங் கரன் எனப் பெயர் படைத்த கழல் வீரன்,

அடங்கலும் அரக்கர் அழிவுற்றிட, அழன்றான்,

ஒடுங்கல் இல் நிணக் குருதி ஓதம் அதில் உள்ளான்,

நெடுங் கடலில் மந்தரம் என, தமியன் நின்றான். 169


கரனும் இராமனும் மோதுதல்[தொகு]

செங் கண் எரி சிந்த, வரி வில் பகழி சிந்த,

பொங்கு குருதிப் புணரியுள், புகையும் நெஞ்சன்-

கங்கமொடு காகம் மிடைய, கடலின் ஓடும்

வங்கம் எனல் ஆயது ஒரு தேரின்மிசை-வந்தான். 170


செறுத்து, இறுதியில் புவனி தீய எழு தீயின்,

மறத்தின் வயிரத்து ஒருவன் வந்து அணுகும் முந்தை,

கறுத்த மணிகண்டர் கடவுட்சிலை கரத்தால்

இறுத்தவனும், வெங் கணை தெரிந்தனன், எதிர்ந்தான். 171


தீ உருவ, கால் விசைய, செவ்வியன, வெவ் வாய்,

ஆயிரம் வடிக் கணை அரக்கர்பதி எய்தான்;

தீ உருவ, கால் விசைய, செவ்வியன், வெவ் வாய

ஆயிரம் வடிக் கணை இராமனும் அறுத்தான். 172


ஊழி எரியின் கொடிய பாய் பகழி ஒன்பான்;

ஏழ் உலகினுக்கும் ஒரு நாயகனும், எய்தான்;

சூழ் சுடர் வடிக் கணை அவற்று எதிர் தொடுத்தே,

ஆழி வரி விற் கரனும், அன்னவை அறுத்தான். 173


கள்ள வினை மாய அமர் கல்வியின் விளைத்தான்;

வள்ளல் உருவைப் பகழி மாரியின் மறைத்தான்;

உள்ளம் உலைவுற்று, அமரர் ஓடினார் ஒளித்தார்;

வெள் எயிறு இதழ்ப் பிறழ, வீரனும் வெகுண்டான். 174


இற்றது இராமனின் வில்[தொகு]

முடிப்பென் இன்று, ஒரு மொய் கணையால்' எனா,

தொடுத்து நின்று, உயர் தோள் உற வாங்கினான்;

பிடித்த திண் சிலை, பேர் அகல் வானிடை

இடிப்பின் ஓசை பட, கடிது இற்றதே. 175


வெற்றி கூறிய வானவர், வீரன் வில்

இற்ற போது, துணுக்கம் உற்று ஏங்கினார்,

மற்று ஓர் வெஞ் சிலை இன்மை மனக் கொளா,

'அற்றதால் எம் வலி' என, அஞ்சினார். 176


இராமன் வருணன் கொடுத்த வரிசிலை வாங்குதல்

என்னும் மாத்திரத்து, ஏந்திய கார்முகம்

சின்னம் என்றும், தனிமையும், சிந்தியான்;

மன்னர் மன்னவன் செம்மல், மரபினால்,

பின் உறத் தன் பெருங் கரம் நீட்டினான். 177


கண்டு நின்று, கருத்து உணர்ந்தான் என,

அண்டர் நாதன் தடக் கையில், அத் துணை,

பண்டு போர் மழுவாளியைப் பண்பினால்,

கொண்ட வில்லை, வருணன் கொடுத்தனன். 178


கொடுத்த வில்லை, அக் கொண்டல் நிறத்தினான்

எடுத்து வாங்கி, வலம் கொண்டு, இடக் கையில்

பிடித்த போது நெறி பிழைத்தோர்க்கு எலாம்

துடித்தவால், இடக் கண்ணொடு தோளுமே. 179


போரில் கரன் மடிதல்[தொகு]

ஏற்றி நாண், இமையாமுன் எடுத்து, அது

கூற்றினாரும் குனிக்க, குனித்து, எதிர்

ஆற்றினான் அவன் ஆழி அம் தேர், சரம்

நூற்றினால், நுண் பொடிபட, நூறினான். 180


எந்திரத் தடந் தேர் இழந்தான்; இழந்து

அந்தரத்திடை ஆர்த்து எழுந்து, அம்பு எலாம்

சுந்தரத் தனி வில்லிதன் தோள் எனும்

மந்தரத்தில் மழையின் வழங்கினான். 181


தாங்கி நின்ற தயரத ராமனும்,

தூங்கு தூணியிடைச் சுடு செஞ் சரம்

வாங்குகின்ற வலக் கை ஓர் வாளியால்,

வீங்கு தோளோடு பாரிடை வீழ்த்தினான். 182


வலக் கை வீழ்தலும், மற்றைக் கையால் வெற்றி

உலக்கை, வானத்து உரும் என, ஓச்சினான்;

இலக்குவற்கு முன் வந்த இராமனும்

விலக்கினான், ஒரு வெங் கதிர் வாளியால். 183


விராவரும் கடு வெள் எயிறு இற்றபின்

அரா அழன்றது அனைய தன் ஆற்றலால்

மரா மரம் கையில் வாங்கி வந்து எய்தினான்;

இராமன் அங்கு ஓர் தனிக் கணை ஏவினான். 184


வரம் அரக்கன் படைத்தலின், மாயையின்,

உரமுடைத் தன்மையால், உலகு ஏழையும்,

பரம் முருக்கிய பாவத்தினால், வலக்

கரம் என, கரன் கண்டம் உற்றான் அரோ. 185


வானவர் மகிழ்ச்சி[தொகு]

ஆர்த்து எழுந்தனர், ஆடினர், பாடினர்,

தூர்த்து அமைந்தனர், வானவர் தூய மலர்;

தீர்த்தனும் பொலிந்தான், கதிரோன் திசை

போர்த்த மென் பனி போக்கியது என்னவே. 186


செய்வினை முடித்துச் செய்யவள் அணுகல்

முனிவர் வந்து முறை முறை மொய்ப்புற,

இனிய சிந்தை இராமனும் ஏகினான்,

அனிக வெஞ் சமத்து ஆர் உயிர் போகத் தான்

தனி இருந்த உடல் அன்ன, தையல்பால். 187


விண்ணின் நீங்கிய வெய்யவர் மேனியில்

புண்ணின் நீரும் பொடிகளும் போய் உக,

அண்ணல் வீரனைத் தம்பியும் அன்னமும்

கண்ணின் நீரினில் பாதம் கழுவினார். 188


மூத்தம் ஒன்றில் முடித்தவர் மொய் புண்ணீர்

நீத்தம் ஓடி, நெடுந் திசை நேர் உற,

கோத்த வேலைக் குரல் என, வானவர்

ஏத்த, வீரன் இனிது இருந்தான் அரோ. 189


சூர்ப்பணகை அழுது புலம்பி, இலங்கை ஏகுதல்[தொகு]

இங்கு நின்றது உரைத்தும்; இராவணன்

தங்கை தன் கை, வயிறு தகர்த்தனள்;

கங்குல் அன்ன கரனைத் தழீஇ, நெடும்

பொங்கு வெங் குருதிப் புரண்டாள் அரோ. 190


'ஆக்கினேன் மனத்து ஆசை; அவ் ஆசை என்

மூக்கினோடு முடிய, முடிந்திலேன்;

வாக்கினால், உங்கள் வாழ்வையும் நாளையும்

போக்கினேன்; கொடியேன்' என்று போயினாள். 191


அலங்கல் வேற் கை அரக்கரை ஆசு அறக்

குலங்கல் வேர் அறுப்பான் குறித்தாள், உயர்

கலங்கு சூறை வன் போர் நெடுங் கால் என,

இலங்கை மா நகர் நொய்தின் சென்று எய்தினாள். 192


மிகைப் பாடல்கள்[தொகு]

ஆற்றேன் ஆற்றேன், அது கெட்டேன்; அறுத்தான் அறுத்தான் என் மூக்கை;

கூற்றே கூற்றே என் உடலை, குலையும் குலையும்; அது கண்டீர்;

காற்றே தீய எனத் திரியும் கரனே! கரனுக்கு இளையோரே!

தோற்றேன் தோற்றேன்; வல்லபங்கள் எல்லா வகையும் தோற்றேனே. 7-1


பத்துடன் ஆறு எனப் பகுத்த ஆயிரம்

வித்தக வரத்தர்கள் வீர வேள்வியில்

முத் தலைக் குரிசிலுக்கு அன்று முக்கணான்

அத்துணைப் படைத்து அவன் அருள் உற்றுளார். 35-1


ஆறு நூறாயிரம் கோடி ஆழித் தேர்,

கூறிய அவற்றினுக்கு இரட்டி குஞ்சரம்,

ஏறிய பரி அவற்று இரட்டி, வெள்ளம் நூறு

ஈறு இல் ஆள், கரன் படைத் தொகுதி என்பரால். 38-1


நடந்து தன் இரு கரத்தினில் நலம் பெறும் சிலைவாய்

தொடர்ந்த நாண் ஒலி எழுப்பினன்; தொகைப்படும் அண்டம்

இடிந்ததென்ன நின்று அதிர்ந்தது; அங்கு இறைவனும் இமைப்பில்

மிடைந்த வெஞ் சரம் மழை விடு தாரையின் விதைத்தான். 148-1


விழுந்த வெம் படை தூடணன் சிரம் என வெருவுற்று

அழிந்த சிந்தையர் திசை திசை ஓடினர் அரக்கர்;

எழுந்த காதலின் இடைவிடாது, இமையவர், முனிவர்,

பொழிந்து பூ மழை போற்றினர்; இறைவனைப் புகழ்ந்தார். 161-1