கம்பராமாயணம்/ஆரணிய காண்டம்/சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்

விக்கிமூலம் இலிருந்து

சூர்ப்பணகை வந்த போது இராவணன் இருந்த நிலை[தொகு]

இரைத்த நெடும் படை அரக்கர் இறந்ததனை மறந்தனள், போர் இராமன் துங்க

வரைப் புயத்தினிடைக் கிடந்த பேர் ஆசை மனம் கவற்ற, ஆற்றாள் ஆகி,

திரைப் பரவைப் பேர் அகழித் திண் நகரில் கடிது ஓடி, 'சீதை தன்மை

உரைப்பென்' எனச் சூர்ப்பணகை வர, இருந்தான் இருந்த பரிசு உரைத்தும் மன்னோ. 1


நிலை இலா உலகினிடை நிற்பனவும் நடப்பனவும் நெறியின் ஈந்த

மலரின்மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது நுனிப்பது ஒரு வரம்பு இல் ஆற்றல்

உலைவு இலா வகை இழைத்த தருமம் என, நினைந்த எலாம் உதவும் தச்சன்

புலன் எலாம் தெரிப்பது, ஒரு புனை மணி மண்டபம் அதனில் பொலிய மன்னோ. 2


புலியின் அதள் உடையானும், பொன்னாடை புனைந்தானும், பூவினானும்

நலியும் வலத்தார் அல்லர்; தேவரின் இங்கு யாவர், இனி நாட்டல் ஆவார்?

மெலியும் இடை, தடிக்கும் முலை, வேய் இளந் தோள், சேயரிக் கண் வென்றி மாதர்

வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ. 3


வண்டு அலங்கு நுதல் திசைய வயக் களிற்றின் மருப்பு ஒடிய அடர்ந்த பொன்-தோள்

விண் தலங்கள் உற வீங்கி, ஓங்கு உதய மால் வரையின் விளங்க, மீதில்

குண்டலங்கள், குல வரையை வலம்வருவான் இரவி கொழுங் கதிர் சூழ் கற்றை

மண்டலங்கள் பன்னிரண்டும், நால்-ஐந்து ஆய்ப் பொலிந்த என வயங்க மன்னோ. 4


வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின் தொகை வழங்க, வயிரக் குன்றத்

தோள் எலாம் படி சுமந்த விட அரவின் பட நிரையின் தோன்ற, ஆன்ற

நாள் எலாம் புடை, தயங்க நாம நீர் இலங்கையில் தான் நலங்க விட்ட

கோள் எலாம் கிடந்த நெடுஞ்சிறை அன்ன நிறை ஆரம் குலவ மன்னோ. 5


ஆய்வு அரும் பெரு வலி அரக்கர் ஆதியோர்

நாயகர் நளிர் மணி மகுடம் நண்ணலால்,

தேய்வுறத் தேய்வுறப் பெயர்ந்து, செஞ் சுடர்

ஆய் மணிப் பொலன் கழல் அடி நின்று ஆர்ப்பவே. 6


மூவகை உலகினும் முதல்வர் முந்தையோர்,

ஓவலர் உதவிய பரிசின் ஓங்கல்போல்,

தேவரும் அவுணரும் முதலினோர், திசை

தூவிய நறு மலர்க் குப்பை துன்னவே. 7


இன்னபோது, இவ் வழி நோக்கும் என்பதை

உன்னலர், கரதலம் சுமந்த உச்சியர்,

மின் அவிர் மணி முடி விஞ்சை வேந்தர்கள்

துன்னினர், முறை முறை துறையில் சுற்றவே. 8


மங்கையர் திறத்து ஒரு மாற்றம் கூறினும்,

தங்களை ஆம் எனத் தாழும் சென்னியர்,

அங்கையும் உள்ளமும் குவிந்த ஆக்கையர்,

சிங்க ஏறு என, திறல் சித்தர் சேரவே. 9


அன்னவன் அமைச்சரை நோக்கி, ஆண்டு ஒரு

நல் மொழி பகரினும் நடுங்கும் சிந்தையர்,

'என்னைகொல் பணி?' என இறைஞ்சுகின்றனர்,

கின்னரர், பெரும் பயம் கிடந்த நெஞ்சினர். 10


பிரகர நெடுந் திசைப் பெருந் தண்டு ஏந்திய

கரதலத்து அண்ணலைக் கண்ணின் நோக்கிய

நரகினர் ஆம் என, நடுங்கும் நாவினர்,

உரகர்கள், தம் மனம் உலைந்து சூழவே. 11


திசை உறு கரிகளைச் செற்று, தேவனும்

வசையுறக் கயிலையை மறித்து, வான் எலாம்

அசைவுறப் புரந்தரன் அடர்ந்த தோள்களின்

இசையினைத் தும்புரு இசையின் ஏத்தவே. 12


சேண் உயர் நெறி முறை திறம்பல் இன்றியே

பாணிகள் பணி செய, பழுது இல் பண் இடை

வீணையின் நரம்பிடை விளைத்த தேமறை,

வாணியின் நாரதன், செவியின் வார்க்கவே. 13


மேகம் என் துருத்தி கொண்டு, விண்ணவர் தருவும் விஞ்சை

நாகமும் சுரந்த தீந் தேன் புனலோடும் அளாவி, நவ்வித்

தோகையர் துகிலில் தோயும் என்பது ஓர் துணுக்கத்தோடும்

சீகர மகர வேலைக் காவலன், சிந்த மன்னோ. 14


நறை மலர்த் தாதும் தேனும், நளிர் நெடு மகுட கோடி

முறை முறை அறையச் சிந்தி முரிந்து உகும் மணியும் முத்தும்,

தறையிடை உகாதமுன்னம் தாங்கினன் தழுவி வாங்கி,

துறைதொறும் தொடர்ந்து நின்று சமீரணன் துடைப்ப மன்னோ. 15


மின்னுடை வேத்திரக் கையர், மெய் புகத்

துன் நெடுங் கஞ்சுகத் துகிலர், சோர்விலர்,

பொன்னொடு வெள்ளியும், புரந்தராதியர்க்கு

இன் இயல் முறை முறை இருக்கை ஈயவே. 16


சூலமே முதலிய துறந்து, சுற்றிய

சேலையால் செறிய வாய் புதைத்த செங்கையன்,

தோலுடை நெடும் பணை துவைக்குந்தோறு எலாம்,

காலன் நின்று, இசைக்கும் நாள் கடிகை கூறவே. 17


நயம் கிளர் நான நெய் அளாவி, நந்தல் இல்

வியன் கருப்பூரம் மென் பஞ்சின் மீக்கொளீ

கயங்களில் மரை மலர்க் காடு பூத்தென,

வயங்கு எரிக் கடவுளும், விளக்கம் மாட்டவே. 18



அதிசயம் அளிப்பதற்கு அருள் அறிந்து, நல்

புதிது அலர் கற்பகத் தருவும், பொய் இலாக்

கதிர் நெடு மணிகளும், கறவை ஆன்களும்,

நிதிகளும், முறை முறை நின்று, நீட்டவே. 19


குண்டலம் முதலிய குலம் கொள் போர் அணி

மண்டிய பேர் ஒளி வயங்கி வீசலால்,

'உண்டுகொல் இரவு, இனி உலகம் ஏழினும்?

எண் திசை மருங்கினும் இருள் இன்று' என்னவே. 20


கங்கையே முதலிய கடவுட் கன்னியர்

கொங்கைகள் சுமந்து இடை கொடியின் ஒல்கிட,

செங் கையில் அரிசியும் மலரும் சிந்தினர்,

மங்கல முறை மொழி கூறி, வாழ்த்தவே. 21


ஊருவில் தோன்றிய உயிர் பெய் ஓவியம்

காரினில் செருக்கிய கலாப மஞ்ஞைபோல்

வார் விசிக் கருவியோர் வகுத்த பாணியின்,

நாரியர், அரு நடம் நடிப்ப, நோக்கியே. 22


இருந்தனன்-உலகங்கள் இரண்டும் ஒன்றும், தன்

அருந் தவம் உடைமையின், அளவு இல் ஆற்றலின்

பொருந்திய இராவணன், புருவக் கார்முகக்

கருந் தடங் கண்ணியர் கண்ணின் வெள்ளத்தே. 23


சூர்ப்பணகையைக் கண்ட இலங்கை மாந்தரின் துயரம்[தொகு]

தங்கையும், அவ் வழி, தலையில் தாங்கிய

செங் கையள், சோரியின் தாரை சேந்து இழி

கொங்கையள், மூக்கிலள், குழையின் காதிலள்,

மங்குலின் ஒலி படத் திறந்த வாயினள். 24


முடையுடை வாயினள், முறையிட்டு, ஆர்த்து எழு

கடையுகக் கடல் ஒலி காட்டக் காந்துவாள்,

குட திசைச் செக்கரின் சேந்த கூந்தலாள்,

வட திசை வாயிலின் வந்து தோன்றினாள். 25


தோன்றலும், தொல் நகர் அரக்கர் தோகையர்,

ஏன்று எதிர், வயிறு அலைத்து, இரங்கி ஏங்கினார்;

மூன்று உலகு உடையவன் தங்கை மூக்கு இலள்,

தான் தனியவள் வர, தரிக்க வல்லரோ? 26


பொருக்கென நோக்கினர், புகல்வது ஓர்கிலர்,

அரக்கரும், இரைந்தனர்; அசனி ஆம் எனக்

கரத்தொடு கரங்களைப் புடைத்து, கண்களில்

நெருப்பு எழ விழித்து, வாய் மடித்து, நிற்கின்றார். 27


'இந்திரன் மேலதோ? உலகம் ஈன்ற பேர்

அந்தணன் மேலதோ? ஆழியானதோ?

சந்திரமௌலிபால் தங்குமேகொலோ,

அந்தரம்?' என்று நின்று அழல்கின்றார் சிலர். 28


'செப்புறற்கு உரியவர் தெவ்வர் யார் உளர்?

முப் புறத்து உலகமும் அடங்க மூடிய

இப் புறத்து அண்டத்தோர்க்கு இயைவது அன்று இது;

அப் புறத்து அண்டத்தோர் ஆர்?' என்றார் சிலர். 29


'என்னையே! "இராவணன் தங்கை" என்றபின்,

"அன்னையே" என்று, அடி வணங்கல் அன்றியே,

உன்னவே ஒண்ணுமோ, ஒருவரால்? இவள்

தன்னையே அரிந்தனள், தான்' என்றார் சிலர். 30


'போர் இலான் புரந்தரன், ஏவல் பூண்டனன்;

ஆர் உலாம் நேமியான், ஆற்றல் தோற்றுப்போய்

நீரினான்; நெருப்பினான், பொருப்பினான்; இனி

ஆர் கொலாம் ஈது?" என, அறைகின்றார் சிலர். 31


'சொல்-பிறந்தார்க்கு இது துணிய ஒண்ணுமோ?

"இற்பிறந்தார் தமக்கு இயைவ செய்திலள்;

கற்பு இறந்தாள்" என, கரன்கொலாம் இவள்

பொற்பு அறையாக்கினன்போல்?" என்றார் சிலர். 32


'தத்து உறு சிந்தையர், தளரும் தேவர் இப்

பித்து உற வல்லரே? பிழைப்பு இல் சூழ்ச்சியார்

முத் திறத்து உலகையும் முடிக்க எண்ணுவார்

இத் திறம் புணர்த்தனர்' என்கின்றார் சிலர். 33


'இனி ஒரு கற்பம் உண்டுஎன்னில் அன்றியே,

வனை கழல் வயங்கு வாள் வீரர் வல்லரோ?

பனி வரும் கானிடைப் பழிப்பு இல் நோன்புடை

முனிவரர் வெகுளியின் முடிபு' என்றார் சிலர். 34


கரை அரு திரு நகர்க் கருங் கண் நங்கைமார்

நிரை வளைத் தளிர்க் கரம் நெரிந்து நோக்கினர்;

பிரை உறு பால் என, நிலையின் பின்றிய

உரையினர், ஒருவர்முன் ஒருவர் ஓடினார். 35


முழவினில் வீணையில், முரல் நல் யாழினில்

தழுவிய குழலினில், சங்கில் தாரையில்

எழு குரல் இன்றியே, என்றும் இல்லது ஓர்

அழு குரல் பிறந்தது, அவ் இலங்கைக்கு அன்றுஅரோ. 36


கள்ளுடை வள்ளமும், களித்த தும்பியும்,

உள்ளமும், ஒரு வழிக் கிடக்க ஓடினார்-

வெள்ளமும் நாண் உற விரிந்த கண்ணினார்-

தள்ளுறும் மருங்கினர், தழீஇக் கொண்டு ஏகினார். 37


நாந்தக உழவர்மேல் நாடும் தண்டத்தர்,

காந்திய மனத்தினர், புலவி கைம்மிகச்

சேந்த கண் அதிகமும் சிவந்து நீர் உக,

வேந்தனுக்கு இளையவள் தாளில் வீழ்ந்தனர். 38


பொன் -தலை மரகதப் பூகம் நேர்வு உறச்

சுற்றிய மணிவடம் தூங்கும் ஊசலின்

முற்றிய ஆடலில் முனிவுற்று ஏங்கினார்

சிற்றிடை அலமரத் தெருவு சேர்கின்றார். 39


எழு என, மலை என, எழுந்த தோள்களைத்

தழுவிய வளைத் தளிர் நெகிழ, தாமரை

முழு முகத்து இரு கயல் முத்தின் ஆலிகள்

பொழிதர, சிலர் உளம் பொருமி விம்முவார். 40


நெய்ந் நிலைய வேல் அரசன், நேருநரை இல்லான்

இந் நிலை உணர்ந்த பொழுது, எந் நிலையம்?' என்று,

மைந் நிலை நெடுங் கண் மழை வான் நிலையது ஆக,

பொய்ந்நிலை மருங்கினர் புலம்பினர், புரண்டார். 41


மனந்தலை வரும் கனவின் இன் சுவை மறந்தார்;

கனம் தலை வரும் குழல் சரிந்து, கலை சோர,

நனந் தலைய கொங்கைகள் ததும்பிட, நடந்தார்;-

அனந்தர் இள மங்கையர்-அழுங்கி அயர்கின்றார். 42


'அங்கையின் அரன் கயிலை கொண்ட திறல் ஐயன்

தங்கை நிலை இங்கு இதுகொல்?' என்று, தளர்கின்றார்,

கொங்கை இணை செங் கையின் மலைந்து,-குலை கோதை

மங்கையர்கள்-நங்கை அடி வந்து விழுகின்றார். 43


'இலங்கையில் விலங்கும் இவை எய்தல் இல, என்றும்

வலங் கையில் இலங்கும் அயில் மன்னன் உளன் என்னா;

நலம் கையில் அகன்றதுகொல், நம்மின்?' என நைந்தார்;

கலங்கல் இல் கருங் கண் இணை வாரி கலுழ்கின்றார். 44


அண்ணன் இராவணன் அடிகளில் அரக்கி வீழ்தல்[தொகு]

என்று, இனைய வன் துயர் இலங்கைநகர், எய்த,

நின்றவர் இருந்தவரொடு ஓடு நெறி தேட,

குன்றின் அடி வந்து படி கொண்டல் என, மன்னன்

பொன் திணி கருங் கழல் விழுந்தனள், புரண்டாள். 45


மூடினது இருட் படலம் மூஉலகும் முற்ற;

சேடனும் வெருக்கொடு சிரத் தொகை நெளித்தான்;

ஆடின குலக் கிரி; அருக்கனும் வெயர்த்தான்;

ஓடின திசைக் கரிகள்; உம்பரும் ஒளித்தார். 46


விரிந்த வலயங்கள் மிடை தோள் படர, மீதிட்டு

எரிந்த நயனங்கள் எயிறின் புறம் இமைப்ப,

நெரிந்த புருவங்கள் நெடு நெற்றியினை முற்ற,

திரிந்த புவனங்கள்; வினை, தேவரும், அயர்த்தார். 47


தென் திசை நமன்தனொடு தேவர் குலம் எல்லாம்,

'இன்று இறுதி வந்தது நமக்கு' என, இருந்தார்,

நின்று உயிர் நடுங்கி, உடல் விம்மி, நிலை நில்லார்,

ஒன்றும் உரையாடல் இலர், உம்பரினொடு இம்பர். 48

யார் செய்தது இது என இராவணன் வினவல்[தொகு]

மடித்த பில வாய்கள் தொறும், வந்து புகை முந்த,

துடித்த தொடர் மீசைகள் சுறுக்கொள உயிர்ப்ப,

கடித்த கதிர் வாள் எயிறு மின் கஞல, மேகத்து

இடித்த உரும் ஒத்து உரறி, 'யாவர் செயல்?' என்றான். 49


'கானிடை அடைந்து புவி காவல் புரிகின்றார்;

மீனுடை நெடுங் கொடியினோன் அனையர்; மேல் கீழ்

ஊனுடை உடம்பு உடைமையோர் உவமை இல்லா

மானிடர்; தடிந்தனர்கள் வாள் உருவி' என்றாள். 50


இராவணன் நடந்தது கூற வேண்டுதல்[தொகு]

'செய்தனர்கள் மானிடர்' என, திசை அனைத்தும்

எய்த நகை வந்தது; எரி சிந்தின; கண் எல்லாம்,

'நொய்து அலர் வலித் தொழில்; நுவன்ற மொழி ஒன்றோ?

பொய் தவிர்; பயத்தை ஒழி; புக்க புகல்' என்றான். 51


சூர்ப்பணகை இராம இலக்குவர் குறித்துக் கூறுதல்[தொகு]

'மன்மதனை ஒப்பர், மணி மேனி; வட மேருத்

தன் எழில் அழிப்பர், திரள் தாலின் வலிதன்னால்,

என், அதனை இப்பொழுது இசைப்பது? உலகு ஏழின்

நல் மதம் அழிப்பர், ஓர் இமைப்பின், நனி, வில்லால். 52



'வந்தனை முனித்தலைவர்பால் உடையார்; வானத்து

இந்துவின் முகத்தர்; எறி நீரில் எழு நாளக்

கந்த மலரைப் பொருவு கண்ணர்; கழல், கையர்;

அந்தம் இல் தவத் தொழிலர்; ஆர் அவரை ஒப்பார்? 53


'வற்கலையர்; வார் கழலர்; மார்பின் அணி நூலர்;

விற் கலையர்; வேதம் உறை நாவர்; தனி மெய்யர்;

உற்கு அலையர்; உன்னை ஓர் துகள்-துணையும் உன்னார்;

சொற் கலை எனத் தொலைவு இல் தூணிகள் சுமந்தார். 54


'மாரர் உளரே இருவர், ஓர் உலகில் வாழ்வார்?

வீரர் உளரே, அவரின் வில் அதனின் வல்லார்?

ஆர் ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள், ஐயா?

ஓர் ஒருவரே இறைவர் மூவரையும் ஒப்பார். 55


'"ஆறு மனம் அஞ்சினம், அரக்கரை" எனச் சென்று

ஏறு நெறி அந்தணர் இயம்ப, "உலகு எல்லாம்

வேறும்" எனும் நுங்கள் குலம், "வேரொடும் அடங்கக்

கோறும்" என, முந்தை ஒரு சூளுறவு கொண்டார். 56


'தராவலய நேமி உழவன், தயரதப் பேர்ப்

பராவ அரு நலத்து ஒருவன், மைந்தர்; பழி இல்லார்;

விராவ அரு வனத்து, அவன் விளம்ப, உறைகின்றார்;

இராமனும் இலக்குவனும் என்பர், பெயர்' என்றாள். 57


இராவணன் தன்னையே பழித்து மொழிதல்[தொகு]

'மருந்து அனைய தங்கை மணி நாசி வடி வாளால்

அரிந்தவரும் மானிடர்; அறிந்தும், உயிர் வாழ்வார்;

விருந்து அனைய வாளடும், விழித்து, இறையும் வெள்காது,

இருந்தனன் இராவணனும் இன் உயிரொடு, இன்னும். 58


'கொற்றம் அது முற்றி, வலியால் அரசு கொண்டேன்;

உற்ற பயன் மற்று இதுகொலாம்? முறை இறந்தே

முற்ற, உலகத்து முதல் வீரர் முடி எல்லாம்

அற்ற பொழுதத்து, இது பொருந்தும் எனல் ஆமே? 59


'மூளும் உளது ஆய பழி என்வயின் முடித்தோர்

ஆளும் உளதாம்; அவரது ஆர் உயிரும் உண்டாம்;

வாளும் உளது; ஓத விடம் உண்டவன் வழங்கும்

நாளும் உள; தோளும் உள; நானும் உளென் அன்றோ? 60


'பொத்துற உடற்பழி புகுந்தது" என நாணி,

தத்துறுவது என்னை? மனனே! தளரல் அம்மா!

எத் துயர் உனக்கு உளது? இனி, பழி சுமக்க,

பத்து உள தலைப் பகுதி; தோள்கள் பல அன்றே? 61


என்ன செய்தான் கரன் என இராவணன் வினவுதல்[தொகு]

என்று உரைசெயா, நகைசெயா, எரி விழிப்பான்

'வன் துணை இலா இருவர் மானிடரை வாளால்

கொன்றிலர்களா, நெடிய குன்றுடைய கானில்

நின்ற கரனே முதலினோர் நிருதர்?' என்றான். 62


சூர்ப்பணகை நடந்தது நவிலல்[தொகு]

அற்று அவன் உரைத்தலோடும், அழுது இழி அருவிக்கண்ணள்,

எற்றிய வயிற்றள், பாரினிடை விழுந்து ஏங்குகின்றாள்

'சுற்றமும் தொலைந்தது, ஐய! நொய்து' என, சுமந்த கையள்,

உற்றது தெரியும்வண்ணம், ஒருவகை உரைக்கலுற்றாள்; 63


"சொல்" என்று என் வாயில் கேட்டார்; தொடர்ந்து ஏழு சேனையோடும்

"கல்" என்ற ஒலியில் சென்றார், கரன் முதல் காளை வீரர்;

எல் ஒன்று கமலச் செங் கண் இராமன் என்று இசைத்த ஏந்தல்

வில் ஒன்றில், கடிகை மூன்றில், ஏறினர் விண்ணில்' என்றாள். 64


தாருடைத் தானையோடும் தம்பியர், தமியன் செய்த

போரிடை, மடிந்தார் என்ற உரை செவி புகாதமுன்னம்,

காரிடை உருமின், மாரி, கனலொடு பிறக்குமாபோல்

நீரொடு நெருப்புக் கான்ற, நிரை நெடுங் கண்கள் எல்லாம். 65


நீ செய்த பிழை யாது என இராவணன் வினவல்[தொகு]

ஆயிடை எழுந்த சீற்றத்து அழுந்திய துன்பம் மாறி,

தீயிடை உகுத்த நெய்யின் சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய,

'நீ இடை இழைத்த குற்றம் என்னைகொல், நின்னை, இன்னே,

வாயிடை இதழும் மூக்கும் வலிந்து அவர் கொய்ய?' என்றான். 66


'என்வயின் உற்ற குற்றம், யாவர்க்கும் எழுத ஒணாத

தன்மையன் இராமனோடு தாமரை தவிரப் போந்தாள்

மின்வயின் மருங்குல் கொண்டாள், வேய்வயின் மென் தோள் கொண்டாள்

பொன்வயின் மேனி கொண்டாள், பொருட்டினால் புகுந்தது' என்றான். 67


சீதையின் அழகை சூர்ப்பணகை விரித்துரைத்தல்[தொகு]

'ஆர் அவள்?' என்னலோடும், அரக்கியும், 'ஐய! ஆழித்

தேர், அவள் அல்குல்; கொங்கை, செம் பொன் செய் குலிகச் செப்பு;

பார் அவள் பாதம் தீண்டப் பாக்கியம் படைத்தது அம்மா!

பேர் அவள், சீதை' என்று வடிவு எலாம் பேசலுற்றாள்; 68


'காமரம் முரலும் பாடல், கள் எனக் கனிந்த இன் சொல்;

தே மலர் நிறைந்த கூந்தல்; "தேவர்க்கும் அணங்கு ஆம்" என்னத்

தாமரை இருந்த தையல், சேடி ஆம் தரமும் அல்லள்;

யாம் உரை வழங்கும் என்பது ஏழைமைப்பாலது அன்றோ? 69


'மஞ்சு ஒக்கும் அளக ஓதி; மழை ஒக்கும் வடிந்த கூந்தல்;

பஞ்சு ஒக்கும் அடிகள்; செய்ய பவளத்தின் விரல்கள்; ஐய!

அம் சொற்கள் அமுதில் அள்ளிக் கொண்டவள் வதனம் மை தீர்

கஞ்சத்தின் அளவிற்றேனும், கடலினும் பெரிய கண்கள்! 70


"ஈசனார் கண்ணின் வெந்தான்" என்னும் ஈது இழுதைச்சொல்; இவ்

வாசம் நாறு ஓதியாளைக் கண்டவன், வவ்வல் ஆற்றான்

பேசல் ஆம் தகைமைத்து அல்லாப் பெரும் பிணி பிணிப்ப, நீண்ட

ஆசையால் அழிந்து தேய்ந்தான் அனங்கன், அவ் உருவம் அம்மா! 71


'தெவ் உலகத்தும் காண்டி; சிரத்தினில் பணத்தினோர்கள்

அவ் உலகத்தும் காண்டி; அலை கடல் உலகில் காண்டி;

வெவ் உலை உற்ற வேலை, வாளினை, வென்ற கண்ணாள்

எவ் உலகத்தாள்? அங்கம் யாவர்க்கும் எழுத ஒணாதால்! 72


'தோளையே சொல்லுகேனோ? சுடர் முகத்து உலவுகின்ற

வாளையே சொல்லுகேனோ? அல்லவை வழுத்துகேனோ?

மீளவும் திகைப்பதல்லால், தனித்தனி விளம்பல் ஆற்றேன்;

நாளையே காண்டி அன்றே? நான் உனக்கு உரைப்பது என்னோ? 73


'வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல் ஒக்கும் விழி என்றாலும்,

பல் ஒக்கும் முத்து என்றாலும், பவளத்தை இதழ் என்றாலும்,

சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாதால்; சொல்லல் ஆம் உவமை உண்டோ?

"நெல் ஒக்கும் புல்" என்றாலும், நேர் உரைத்து ஆகவற்றோ! 74


'இந்திரன் சசியைப் பெற்றான்; இரு-மூன்று வதனத்தோன் தன்

தந்தையும் உமையைப் பெற்றான்; தாமரைச் செங்கணானும்

செந் திருமகளைப் பெற்றான்; சீதையைப் பெற்றாய் நீயும்;

அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலை உனக்கே; ஐயா! 75


'பாகத்தில் ஒருவன் வைத்தான்; பங்கயத்து இருந்த பொன்னை

ஆகத்தில் ஒருவன் வைத்தான்; அந்தணன் நாவில் வைத்தான்;

மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை-

மாகத் தோள் வீர!-பெற்றால், எங்ஙனம் வைத்து வாழ்தி! 76


'பிள்ளைபோல் பேச்சினாளைப் பெற்றபின், பிழைக்கலாற்றாய்;

கொள்ளை மா நிதியம் எல்லாம் அவளுக்கே கொடுத்தி; ஐய!

வள்ளலே! உனக்கு நல்லேன்; மற்று, நின் மனையில் வாழும்

கிள்ளைபோல் மொழியார்க்கு எல்லாம் கேடு சூழ்கின்றேன் அன்றே! 77


'தேர் தந்த அல்குல் சீதை, தேவர்தம் உலகின், இம்பர்,

வார் தந்த கொங்கையார்தம் வயிறு தந்தாளும் அல்லள்;

தார் தந்த கமலத்தாளை, தருக்கினர் கடைய, சங்க

நீர் தந்தது; அதனை வெல்வான் நிலம் தந்து நிமிர்ந்தது அன்றே. 78


'மீன் கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்த,

தேன் கொண்டு ஊடாடும் கூந்தல், சிற்றிடை, சீதை என்னும்

மான் கொண்டு ஊடாடும் நீ; உன் வாளை வலி உலகம் காண,

யான் கொண்டு ஊடாடும் வண்ணம், இராமனைத் தருதி என்பால். 79


'தருவது விதியே என்றால், தவம் பெரிது உடையரேனும்,

வருவது வரும் நாள் அன்றி, வந்து கைகூட வற்றோ?

ஒருபது முகமும், கண்ணும், உருவமும், மார்பும், தோள்கள்

இருபதும் படைத்த செல்வம் எய்துதி இனி, நீ எந்தாய்! 80


'அன்னவள்தன்னை நின்பால் உய்ப்பல் என்று எடுக்கலுற்ற

என்னை, அவ் இராமன் தம்பி இடைப் புகுந்து, இலங்குவாளால்

முன்னை மூக்கு அரிந்து விட்டான்; முடிந்தது என் வாழ்வும்; உன்னின்

சொன்னபின், உயிரை நீப்பான் துணிந்தனென்' என்னச் சொன்னாள். 81

இராவணனுக்கு மோகவெறி தலைக்கு ஏறல்[தொகு]

கோபமும், மறனும், மானக் கொதிப்பும், என்று இனைய எல்லாம்

பாபம் நின்ற இடத்து நில்லாப் பெற்றிபோல், பற்று விட்ட,

தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல் ஆம் செயலின், புக்க

தாபமும் காமநோயும் ஆர் உயிர் கலந்த அன்றே. 82


கரனையும் மறந்தான்; தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான்

உரனையும் மறந்தான்; உற்ற பழியையும் மறந்தான்; வெற்றி

அரனையும் கொண்ட காமன் அம்பினால், முன்னைப் பெற்ற

வரனையும் மறந்தான்; கேட்ட மங்கையை மறந்திலாதான். 83


சிற்றிடச் சீதை என்னும் நாமமும் சிந்தைதானும்

உற்று, இரண்டு ஒன்று ஆய் நின்றால், ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன

மற்றொரு மனமும் உண்டோ? மறக்கல் ஆம் வழி மற்று யாதோ?

கற்றவர் ஞானம் இன்றேல், காமத்தைக் கடக்கல் ஆமோ? 84


மயிலுடைச் சாயலாளை வஞ்சியாமுன்னம், நீண்ட

எயிலுடை இலங்கை நாதன், இதயம் ஆம் சிறையில் வைத்தான்;

அயிலுடை அரக்கன் உள்ளம், அவ் வழி, மெல்ல மெல்ல,

வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெய்போல், வெதும்பிற்று அன்றே. 85


விதியது வலியினாலும், மேல் உள விளைவினாலும்,

பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும்,

கதி உறு பொறியின் வெய்ய காம நோய், கல்வி நோக்கா

மதியிலி மறையச் செய்த தீமைபோல், வளர்ந்தது அன்றே. 86


பொன் மயம் ஆன நங்கை மனம் புக, புன்மை பூண்ட

தன்மையோ-அரக்கன் தன்னை அயர்த்தது ஓர் தகைமையாலோ-

மன்மதன் வாளி தூவி நலிவது ஓர் வலத்தன் ஆனான்?

வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே? 87


எழுந்தனன் இருக்கை நின்று; ஆண்டு, ஏழ் உலகத்துள்ளோரும்

மொழிந்தனர் ஆசி; ஓசை முழங்கின, சங்கம் எங்கும்,

பொழிந்தன பூவின் மாரி; போயினர் புறத்தோர் எல்லாம்

அழிந்து ஒழிசிந்தையோடும் ஆடகக் கோயில் புக்கான். 88


இராவணனின் முற்றிய காம நோய்[தொகு]

பூவினால் வேய்ந்து செய்த பொங்கு பேர் அமளிப் பாங்கர்,

தேவிமார் குழுவும் நீங்கச் சேர்ந்தனன்; சேர்தலோடும்,

நாவி நாறு ஓதி நவ்வி நயனமும், குயமும், புக்குப்

பாவியா, கொடுத்த வெம்மை பயப்பயப் பரந்தது அன்றே. 89


நூக்கல் ஆகலாத காதல் நூறு நூறு கோடி ஆய்ப்

பூக்க வாச வாடை வீச சீத நீர் பொதிந்த மென்

சேக்கை வீ கரிந்து, திக்கயங்கள் எட்டும் வென்ற தோள்,

ஆக்கை, தேய, உள்ளம் நைய, ஆவி வேவது ஆயினான். 90


தாது கொண்ட சீதம் மேவு சாந்து, சந்த மென் தளிர்,

போது, கொண்டு அடுத்தபோது, பொங்கு தீ மருந்தினால்,

வேது கொண்டதென்ன, மேனி வெந்து வெந்து, விம்மு தீ

ஊது வன் துருத்திபோல், உயிர்த்து உயிர்த்து, உயங்கினான். 91


தாவியாது, தீது எனாது, தையலாளை மெய் உறப்

பாவியாத போது இலாத பாவி-மாழை, பானல், வேல்,

காவி, ஆன கண்ணி மேனி காண மூளும் ஆசையால்

ஆவி சால நொந்து நொந்து-அழுங்குவானும் ஆயினான். 92


பரம் கிடந்த மாதிரம் பரித்த, பாழி யானையின்

கரம் கிடந்த கொம்பு ஒடிந்து அடங்க வென்ற காவலன் -

மரம் குடைந்த தும்பிபோல், அனங்கன் வாளி வந்து வந்து

உரம் குடைந்து, நொந்து நொந்து உளைந்து உளைந்து-ஒடுங்கினான். 93


'கொன்றை நன்று கோதையோடு ஓர் கொம்பு வந்து என் நெஞ்சிடை

நின்றது, உண்டு கண்டது' என்று, அழிந்து அழுங்கும் நீர்மையான்

மன்றல் தங்கு அலங்கல் மாரன் வாளி போல, மல்லிகைத்

தென்றல் வந்து எதிர்ந்த போது, சீறுவானும் ஆயினான். 94


இராவணன் ஒரு குளிர் சோலை அடைதல்[தொகு]

அன்ன காலை, அங்கு நின்று, எழுந்து, அழுங்கு சிந்தையான்,

'இன்ன ஆறு செய்வென்' என்று, ஓர் எண் இலான், இரங்குவான்;

பன்னு கோடி தீப மாலை, பாலை யாழ் பழித்த சொல்

பொன்னனார், எடுக்க, அங்கு ஓர் சோலையூடு போயினான். 95


மாணிக்கம், பனசம், வாழை, மரகதம்; வயிரம், தேமா;

ஆணிப் பொன், வேங்கை; கோங்கம் அரவிந்தராகம்; பூகம்

சேண் உய்க்கும் நீலம்; சாலம் குருவிந்தம்; தெங்கு வெள்ளி

பாணித் தண் பளிங்கு, நாகம், பாடலம் பவளம் மன்னோ. 96



வான் உற நிவந்த செங் கேழ் மணி மரம் துவன்றி, வான்

மீனொடு மலர்கள் தம்மின் வேற்றுமை தெரிதல் தேற்றா,

தேன் உகு, சோலை நாப்பண், செம்பொன் மண்டபத்துள், ஆங்கு ஆர்

பால் நிற அமளி சேர்ந்தான்; பையுள் உற்று உயங்கி நைவான். 97


கனிகளின், மலரின், வந்த கள் உண்டு களிகொள் அன்னம்,

வனிதையர் மழலை இன்சொல் கிள்ளையும், குயிலும், வண்டும்,

இனியன மிழற்றுகின்ற யாவையும், 'இலங்கை வேந்தன்

முனியும்' என்று அவிந்த வாய; மூங்கையர் போன்ற அன்றே. 98


பருவத்தால் வாடை தந்த பசும் பனி, அனங்கன் வாளி

உருவிப் புக்கு ஒளித்த புண்ணில், குளித்தலும், உளைந்து விம்மி,

'இருதுத்தான் யாது அடா?' என்று இயம்பினன்; இயம்பலோடும்

வெருவிப் போய், சிசிரம் நீக்கி, வேனில் வந்து இறுத்தது அன்றே. 99


வன் பணை மரமும், தீயும், மலைகளும் குளிர வாழும்

மென் பனி எரிந்தது என்றால், வேனிலை விளம்பலாமோ?

அன்பு எனும் விடம் உண்டாரை ஆற்றல் ஆம் மருந்தும் உண்டோ?-

இன்பமும் துன்பம்தானும் உள்ளத்தோடு இயைந்த அன்றே? 100


மாதிரத்து இறுதிகாறும், தன் மனத்து எழுந்த மையல்-

வேதனை வெப்பும் செய்ய, வேனிலும் வெதுப்பும் காலை,

'யாது இது இங்கு? இதனின் முன்னைச் சீதம் நன்று; இதனை நீங்கி,

கூதிர் ஆம் பருவம் தன்னைக் கொணருதிர் விரைவின்' என்றான். 101


கூதிர் வந்து அடைந்தகாலை, கொதித்தன குவவுத் திண் தோள்;

'சீதமும் சுடுமோ? முன்னைச் சிசிரமேகாண் இது' என்றான்;

'ஆதியாய்! அஞ்சும் அன்றே, அருள் அலது இயற்ற?' என்ன,

'யாதும், இங்கு, இருதுஆகாது; யாவையும் அகற்றும்' என்றான். 102


என்னலும், இருது எல்லாம் ஏகின; யாவும் தம்தம்

பன் அரும் பருவம் செய்யா, யோகிபோல் பற்று நீத்த;

பின்னரும், உலகம் எல்லாம், பிணி முதல் பாசம் வீசித்

துன் அருந் தவத்தின் எய்தும் துறக்கம்போல், தோன்றிற்று அன்றே. 103


கூலத்து ஆர் உலகம் எல்லாம் குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க,

நீலத்து ஆர் அரக்கன் மேனி நெய் இன்றி, எரிந்தது அன்றே-

காலத்தால் வருவது ஒன்றோ? காமத்தால் கனலும் வெந் தீ

சீலத்தால் அவிவது அன்றி, செய்யத்தான் ஆயது உண்டோ? 104


இராவணன் சந்திரனைக் கொணரும்படி கூறல்[தொகு]

நாரம் உண்டு எழுந்த மேகம், தாமரை வளையம், நானச்

சாரம் உண்டு இருந்த சீதச் சந்தனம், தளிர், மென் தாதோடு,

ஆரம், உண்டு எரிந்த சிந்தை அயர்கின்றான்; அயல் நின்றாரை

'ஈரம் உண்டு என்பர் ஓடி, இந்துவைக் கொணர்மின்' என்றான். 105


வெஞ் சினத்து அரக்கன் ஆண்ட வியல் நகர் மீது போதும்

நெஞ்சு இலன், ஒதுங்குகின்ற நிறை மதியோனை தேடி,

'அஞ்சலை; வருதி; நின்னை அழைத்தனன் அரசன்' என்ன,

சஞ்சலம் துறந்துதான், அச் சந்திரன் உதிக்கலுற்றான். 106


அயிர் உறக் கலந்த நல் நீர் ஆழிநின்று, ஆழி இந்து-

செயிர் உற்ற அரசன், ஆண்டு ஓர் தேய்வு வந்துற்ற போழ்தில்

வயிரம் உற்று உடைந்து சென்றோர் வலியவன் -செல்லுமாபோல்

உயிர் தெற உவந்து வந்தான் ஒத்தனன் - உதயம் செய்தான். 107


பராவ அருங் கதிர்கள் எங்கும் பரப்பி, மீப் படர்ந்து, வானில்

தராதலத்து, எவரும் பேண, அவனையே சலிக்கும் நீரால்,

அரா-அணைத் துயிலும் அண்ணல், காலம் ஓர்ந்து, அற்றம் நோக்கி,

இராவணன் உயிர்மேல் உய்த்த திகிரியும் என்னல் ஆன, 108


அருகுறு பாலின் வேலை அமுது எலாம் அளைந்து வாரிப்

பருகின, பரந்து பாய்ந்த நிலாச் சுடர்ப் பனி மென் கற்றை,

நெரியுறு புருவச் செங் கண் அரக்கற்கு, நெருப்பின் நாப்பண்

உருகிய வெள்ளி அள்ளி வீசினால் ஒத்தது அன்றே. 109


மின் நிலம் திரிந்தது அன்ன விழுநிலா-மிதிலை சூழ்ந்த

செந்நெல் அம் கழனி நாடன் திரு மகள் செவ்வி கேளா,

நல் நலம் தொலைந்து சோரும் அரக்கனை, நாளும் தோலாத்

துன்னலன் ஒருவன் பெற்ற புகழ் என-சுட்டது அன்றே. 110


கருங் கழல் காலன் அஞ்சும் காவலன், கறுத்து நோக்கி,

'தரும் கதிர்ச் சீத யாக்கைச் சந்திரன்-தருதிர் என்ன,

முருங்கிய கனலின், மூரி விடத்தினை முருக்கும் சீற்றத்து,

அருங் கதிர் அருக்கன் தன்னை ஆர் அழைத்தீர்கள்?' என்றான். 111


அவ் வழி, சிலதர் அஞ்சி, 'ஆதியாய்! அருள் இல்லாரை

இவ் வழித் தருதும் என்பது இயம்பல் ஆம் இயல்பிற்று அன்றால்;

செவ் வழிக் கதிரோன் என்றும் தேரின்மேல் அன்றி வாரான்;

வெவ் வழித்து எனினும், திங்கள், விமானத்தின் மேலது' என்றார். 112


இராவணன் நிலவைப் பழித்தல்[தொகு]

பணம் தாழ் அல்குல் பனி மொழியார்க்கு அன்புபட்டார் படும் காமக்

குணம்தான் முன்னம் அறியாதான் கொதியாநின்றான்; மதியாலே,

தண் அம் தாமரையின் தனிப் பகைஞன் என்னும் தன்மை, ஒருதானே,

உணர்ந்தான்; உணர்வுற்று, அவன்மேல் இட்டு, உயிர்தந்து உய்க்க உரைசெய்வான். 113


'தேயாநின்றாய்; மெய் வெளுத்தாய்; உள்ளம் கறுத்தாய்; நிலை திரிந்து

காயா நின்றாய்; ஒரு நீயும், கண்டார் சொல்லக் கேட்டாயோ?

பாயா நின்ற மலர் வாளி பறியாநின்றார் இன்மையால்

ஓயா நின்றேன்; உயிர் காத்தற்கு உரியார் யாவர்?-உடுபதியே! 114


'ஆற்றார் ஆகின், தம்மைக் கொண்டு அடங்காரோ? என் ஆர் உயிர்க்குக்

கூற்றாய் நின்ற குலச் சனகி குவளை மலர்ந்த தாமரைக்குத்

தோற்றாய்; அதனால் அகம் கரிந்தாய்; மெலிந்தாய்; வெதும்பத் தொடங்கினாய்

மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால், வெற்றி ஆக வற்று ஆமோ?' 115


இராவணனின் ஆணைப்படி பகலும் பகலவனும் வருதல்[தொகு]

என்னப் பன்னி, இடர் உழவா, 'இரவோடு இவனைக் கொண்டு அகற்றி;

முன்னைப் பகலும் பகலோனும் வருக' என்றான்; மொழியாமுன்

உன்னற்கு அரிய உடுபதியும் இரவும் ஒழிந்த; ஒரு நொடியில்

பன்னற்கு அரிய பகலவனும் பகலும் வந்து பரந்தவால். 116


இருக்கின் மொழியார் எரிமுகத்தின் ஈந்த நெய்யின், அவிர் செம்பொன்

உருக்கி அனைய கதிர் பாய, அனல்போல் விரிந்தது உயர் கமலம்;

அருக்கன் எய்த அமைந்து அடங்கி வாழா, அடாத பொருள் எய்திச்

செருக்கி, இடையே, திரு இழந்த சிறியோர் போன்ற, சேதாம்பல். 117


நாணிநின்ற ஒளி மழுங்கி, நடுங்காநின்ற உடம்பினன் ஆய்,

சேணில் நின்று புறம் சாய்ந்து, கங்குல்-தாரம் பின்செல்ல,

பூணின் வெய்யோன் ஒரு திசையே புகுதப் போவான், புகழ் வேந்தர்

ஆணை செல்ல, நிலை அழிந்த அரசர் போன்றான்-அல்-ஆண்டான். 118


மணந்த பேர் அன்பரை, மலரின் சேக்கையுள்

புணர்ந்தவர் இடை ஒரு வெகுளி பொங்கலால்,

கணம் குழை மகளிர்கள் கங்குல் வீந்தது என்று

உணர்ந்திலர்; கனவினும் ஊடல் தீர்ந்திலர். 119


தள்ளுறும் உயிரினர், தலைவர் நீங்கலால்,

நள் இரவிடை உறும் நடுக்கம் நீங்கலர்-

கொள்ளையின் அலர் கருங் குவளை நாள்மலர்

கள் உகுவன என, கலுழும் கண்ணினார். 120


அணைமலர்ச் சேக்கையுள் ஆடல் தீர்ந்தனர்,

பணைகளைத் தழுவிய பவள வல்லிபோல்,

இணை மலர்க் கைகளின் இறுக, இன் உயிர்த்

துணைவரைத் தழுவினர், துயில்கின்றார் சிலர். 121


அளி இனம் கடம்தொறும் ஆர்ப்ப, ஆய் கதிர்

ஒளிபட உணர்ந்தில, உறங்குகின்றன;

தெளிவுஇல இன் துயில் விளையும் சேக்கையுள்

களிகளை நிகர்த்தன, களி நல் யானையே. 122


விரிந்து உறை துறைதொறும் விளக்கம் யாவையும்

எரிந்து இழுது அ·கல, ஒளி இழந்தன-

அருந் துறை நிரம்பிய உயிரின் அன்பரைப்

பிரிந்து உறைதரும் குலப் பேதைமாரினே. 123


புனைந்து இதழ் உரிஞ்சுறு பொழுது புல்லியும்,

வனைந்தில வைகறை மலரும் மா மலர்;

நனந் தலை அமளியில் துயிலும் நங்கைமார்

அனந்தரின் நெடுங் கணோடு ஒத்த ஆம் அரோ. 124


இச்சையில் துயில்பவர் யாவர் கண்களும்

நிச்சயம், பகலும் தம் இமைகள் நீக்கல-

'பிச்சையும் இடுதும்' என்று, உணர்வு பேணலா

வச்சையர் நெடு மனை வாயில் மானவே. 125


நஞ்சு உறு பிரிவின, நாளின் நீளம் ஓர்

தஞ்சு உற விடுவது ஓர் தயாவு தாங்கலால்,

வெஞ் சிறை நீங்கிய வினையினார் என,

நெஞ்சு உறக் களித்தன-நேமிப்புள் எலாம். 126


நாள்மதிக்கு அல்லது, நடுவண் எய்திய

ஆணையின் திறக்கலா அலரில் பாய்வன

மாண் வினைப் பயன்படா மாந்தர் வாயில் சேர்

பாணரின் தளர்ந்தன-பாடல்-தும்பியே. 127


அரு மணிச் சாளரம் அதனினூடு புக்கு

எரி கதிர் இன் துயில் எழுப்ப எய்தவும்,

மருளடு தெருளுறும் நிலையர், மங்கையர்-

தெருளுற மெய்ப் பொருள் தெரிந்திலாரினே. 128


ஏவலின் வன்மையை எண்ணல் தேற்றலர்,

நாவலர் இயற்றிய நாழி நாம நூல்

காவலின் நுனித்து உணர் கணித மாக்களும்,

கூவுறு கோழியும், துயில்வு கொண்டவே. 129


இனையன உலகினில் நிகழும் எல்லையில்,

கனை கழல் அரக்கனும், கண்ணின் நோக்கினான்;

'நினைவுறு மனத்தையும் நெருப்பின் தீய்க்குமால்;

அனைய அத் திங்களே ஆகுமால்' என்றான். 130


'திங்களோ அன்று இது; செல்வ! செங் கதிர்

பொங்கு உளைப் பச்சை அம் புரவித் தேரதால்;

வெங் கதிர் சுடுவதே அன்றி, மெய் உறத்

தங்கு தண் கதிர் சுடத் தகாது' என்றார் சிலர். 131


இராவணன் கதிரவனைப் போகச்சொல்லி கவின் பிறையைக் கொணரச் சொல்லுதல்[தொகு]

'நீலச் சிகரக் கிரி அன்னவன், 'நின்ற வெய்யோன்,

ஆலத்தினும் வெய்யன்; அகற்றி, அரற்றுகின்ற

வேலைக் குரலைத் "தவிர்க" என்று விலக்கி, மேலை

மாலைப் பிறைப் பிள்ளையைக் கூவுதிர் வல்லை' என்றான். 132


சொன்னான் நிருதர்க்கு இறை; அம் மொழி சொல்லலோடும்,

அந் நாளில் நிரம்பிய அம் மதி, ஆண்டு ஓர் வேலை,

முந் நாளில் இளம் பிறை ஆகி முளைத்தது என்றால்,

எந் நாளும் அருந் தவம் அன்றி, இயற்றல் ஆமோ? 133


பிறையைக் குறை கூறல்[தொகு]

குடபாலின் முளைத்தது கண்ட குணங்கள்-தீயோன்

'வடவாஅனல்; அன்று எனின், மண் பிடர் வைத்த பாம்பின்

விட வாள் எயிறு; அன்று எனின், என்னை வெகுண்டு, மாலை

அட, வாள் உருவிக்கொடு தோன்றியது ஆகும் அன்றே. 134


'தாது உண் சடிலத் தலை வைத்தது-தண் தரங்கம்

மோதும் கடலிற்கிடை முந்து பிறந்தபோதே,

ஓதும் கடுவைத் தன் மிடற்றில் ஒளித்த தக்கோன்,

"ஈதும் கடு ஆம்" என எண்ணிய எண்ணம் அன்றே? 135


'உரும் ஒத்த வலத்து உயிர் நுங்கிய திங்கள், ஓடித்

திருமு இச் சிறு மின் பிறை தீமை குறைந்தது இல்லை-

கருமைக் கறை நெஞ்சினில் நஞ்சு கலந்த பாம்பின்

பெருமை சிறுமைக்கு ஒரு பெற்றி குறைந்தது உண்டோ?' 136


"கன்னக் கனியும் இருள்தன்னையும் காண்டும் அன்றே?

முன்னைக் கதிர் நன்று; இது அகற்றுதிர்; மொய்ம்பு சான்ற

என்னைச் சுடும் என்னின், இவ் ஏழ் உலகத்தும் வாழ்வோர்

பின்னைச் சிலர் உய்வர் என்று அங்கு ஒரு பேச்சும் உண்டோ? 137


இராவணன் இருளினை ஏசுதல்[தொகு]

ஆண்டு, அப் பிறை நீங்கலும், எய்தியது அந்தகாரம்;

தீண்டற்கு எளிது ஆய், பல தேய்ப்பன தேய்க்கல் ஆகி,

வேண்டில் கரபத்திரத்து ஈர்த்து விழுத்தல் ஆகி,

காண்டற்கு இனிதாய், பல கந்து திரட்டல் ஆகி. 138


முருடு ஈர்ந்து உருட்டற்கு எளிது என்பது என்? முற்றும் முற்றிப்

பொருள் தீங்கு இல் கேள்விச் சுடர் புக்கு வழங்கல் இன்றிக்

குருடு ஈங்கு இது என்ன, குறிக்கொண்டு கண்ணோட்டம் குன்றி,

அருள் தீர்ந்த நெஞ்சின் கரிது என்பது அவ் அந்தகாரம். 139


விள்ளாது செறிந்து இடை மேல் உற ஓங்கி, எங்கும்

நள்ளா இருள் வந்து, அகன் ஞாலம் விழுங்கலோடும்,

'எள்ளா உலகு யாவையும் யாவரும் வீவது என்பது

உள்ளாது, உமிழ்ந்தான், விடம் உண்ட ஒருத்தன்' என்றான். 140


'வேலைத்தலை வந்து ஒருவன் வலியால் விழுங்கும்

ஆலத்தின் அடங்குவது அன்று இது; அறிந்து உணர்ந்தேன்;

ஞாலத்தொடு விண் முதல் யாவையும் நாவின் நக்கும்

காலக் கனல் கார் விடம் உண்டு கறுத்தது அன்றே. 141


சீதையின் உருவெளிப்பாடு காண்டல்[தொகு]

'அம்பும் அனலும் நுலையாக் கன அந்தகாரத்

தும்பு, மழைக்கொண்டு,-அயல் ஒப்பு அரிது ஆய துப்பின்

கொம்பர்-குரும்பைக் குலம் கொண்டது, திங்கள் தாங்கி,

வெம்பும் தமியேன்முன், விளக்கு என, தோன்றும் அன்றே! 142


'மருளூடு வந்த மயக்கோ? மதி மற்றும் உண்டோ?

தெருளேம்; இது என்னோ? திணி மை இழைத்தாலும் ஒவ்வா

இருளூடு, இரு குண்டலம் கொண்டும் இருண்ட நீலச்

சுருளோடும் வந்து, ஓர் சுடர் மா மதி தோன்றும் அன்றே! 143


'புடை கொண்டு எழு கொங்கையும், அல்குலும், புல்கி நிற்கும்

இடை, கண்டிலம்; அல்லது எல்லா உருவும் தெரிந்தாம்;

விடம் நுங்கிய கண் உடையார் இவர்; மெல்ல மெல்ல,

மட மங்கையர் ஆய், என் மனத்தவர் ஆயினாரே. 144


'பண்டு ஏய் உலகு ஏழினும் உள்ள படைக்கணாரைக்

கண்டேன்; இவர் போல்வது ஓர் பெண் உருக் கண்டிலேனால்;

உண்டே எனின், வேறு இனி, எங்கை உணர்த்தி நின்ற,

வண்டு ஏறு கோதை மடவாள் இவள் ஆகும் அன்றே. 145


'பூண்டு இப் பிணியால் உறுகின்றது, தான் பொறாதாள்,

தேண்டிக் கொடு வந்தனள்; செய்வது ஓர் மாறும் உண்டோ?

காண்டற்கு இனியாள் உருக் கண்டவட் கேட்கும் ஆற்றால்,

ஈண்டு, இப்பொழுதே, விரைந்து, எங்கையைக் கூவுக' என்றான். 146


என்றான் எனலும், கடிது ஏகினர் கூவும் எல்லை

வன் தாள் நிருதக் குலம் வேர் அற மாய்த்தல் செய்வாள்,

ஒன்றாத காமக் கனல் உள் தெறலோடும், நாசி,

பொன் தாழ் குழைதன்னொடும் போக்கினள் போய்ப் புகுந்தாள். 147


இராவணன்-சூர்ப்பணகை உரையாடல்[தொகு]

பொய்ந் நின்ற நெஞ்சின் கொடியாள் புகுந்தாளை நோக்கி,

நெய்ந் நின்ற கூர் வாளவன், 'நேர் உற நோக்கு; நங்காய்!

மைந் நின்ற வாள்-கண் மயில் நின்றென வந்து, என் முன்னர்

இந் நின்றவள் ஆம்கொல், இயம்பிய சீதை?' என்றான். 148


'செந் தாமரைக் கண்ணொடும், செங் கனி வாயினோடும்,

சந்து ஆர் தடந் தோளோடும், தாழ் தடக் கைகளோடும்

அம் தார் அகலத்தொடும், அஞ்சனக் குன்றம் என்ன

வந்தான் இவன் ஆகும், அவ் வல் வில் இராமன்' என்றாள். 149


'பெண்பால், உரு நான், இது கண்டது; பேதை! நீ ஈண்டு,

எண்பாலும் இலாதது ஓர் ஆண் உரு என்றி; என்னே!

கண்பால் உறும் மாயை கவற்றுதல் கற்ற நம்மை,

மண்பாலவரேகொல், விளைப்பவர் மாயை?' என்றான். 150


'ஊன்றும் உணர்வு அப்புறம் ஒன்றினும் ஓடல் இன்றி,

ஆன்றும் உளது ஆம் நெடிது ஆசை கனற்ற நின்றாய்க்கு,

ஏன்று, உன் எதிரே, விழி நோக்கும் இடங்கள்தோறும்,

தோன்றும், அனையாள்; இது தொல் நெறித்து ஆகும்' என்றாள். 151


அன்னாள் அது கூற, அரக்கனும், 'அன்னது ஆக;

நின்னால் அவ் இராமனைக் காண்குறும் நீர் என்?' என்றான்;

'எந்நாள், அவன் என்னை இத் தீர்வு அரும் இன்னல் செய்தான்

அந் நாள்முதல், யானும் அயர்த்திலென் ஆகும்' என்றாள். 152


'ஆம் ஆம்; அது அடுக்கும்; என் ஆக்கையடு ஆவி நைய

வேமால்; வினையேற்கு இனி என் விடிவு ஆகும்?' என்ன,

'கோமான்! உலகுக்கு ஒரு நீ, குறைகின்றது என்னே?

பூ மாண் குழலாள் தனை வவ்வுதி, போதி' என்றாள். 153


என்றாள் அகன்றாள்; அவ் அரக்கனும் ஈடழிந்தான்;

ஒன்றானும் உணர்ந்திலன்; ஆவி உலைந்து சோர்ந்தான்;

நின்றாரும் நடுங்கினர்; நின்றுள நாளினாலே

பொன்றாது உளன் ஆயினன்; அத்துணைபோலும் அன்றே. 154


சந்திரகாந்த மண்டபம் சமைவித்து இராவணன் அதனுள் சார்தல்[தொகு]

'இறந்தார் பிறந்தார்' என, இன் உயிர் பெற்ற மன்னன்,

மறம் தான் உணர்ந்தான், அவண், மாடு நின்றாரை நோக்கி,

'"கறந்தால் என நீர் தரு சந்திரகாந்தத்தாலே,

சிறந்து ஆர் மணி மண்டபம் செய்க" எனச் செப்புக' என்றான். 155


வந்தான் நெடு வான் உறை தச்சன்; மனத்து உணர்ந்தான்;

சிந்தாவினை அன்றியும், கைவினையாலும் செய்தான் -

அம் தாம நெடுந் தறி ஆயிரத்தால் அமைத்த

சந்து ஆர் மணி மண்டபம், தாமரையோனும் நாண. 156


காந்தம், அமுதின் துளி கால்வன, கால மீனின்

வேந்தன் ஒளி அன்றியும், மேலொடு கீழ் விரித்தான்;

பூந் தென்றல் புகுந்து உறை சாளரமும் புனைந்தான்;

ஏந்தும் மணிக் கற்பகச் சீதளக் கா இழைத்தான். 157


ஆணிக்கு அமை பொன் கை, மணிச் சுடர் ஆர் விளக்கம்

சேண் உற்ற இருள் சீப்ப, அத் தெய்வ மடந்தைமார்கள்

பூணின் பொலிவார் புடை ஏந்திட, பொங்கு தோளான்

மாணிக்க மானத்திடை மண்டபம் காண வந்தான். 158


அல் ஆயிரகோடி அடுக்கியது ஒத்ததேனும்,

நல்லார் முகம் ஆம், நளிர் வால் நிலவு ஈன்ற, நாமப்

பல் ஆயிரகோடி பனிச் சுடர் ஈன்ற, திங்கள்

எல்லாம் உடன் ஆய், இருள் ஓட இரித்தது அன்றே. 159


பொற்பு உற்றன ஆய் மணி ஒன்பதும் பூவில் நின்ற

கற்பத் தருவின் கதிர் நாள் நிழற் கற்றை நாற,

அல் பற்று அழிய, பகல் ஆக்கியதால் -அருக்கன்

நிற்பத் தெரிக்கின்றது நீள் சுடர் மேன்மை அன்றோ? 160


ஊறு, ஓசை, முதல் பொறி யாவையும், ஒன்றின் ஒன்று

தேறா நிலை உற்றது ஓர் சிந்தையன்; செய்கை ஓரான்;

வேறு ஆய பிறப்பிடை, வேட்கை விசித்தது ஈர்ப்ப,

மாறு ஓர் உடல் புக்கென, மண்டபம் வந்து புக்கான். 161


தண்டல் இல் தவம் செய்வோர், தாம் வேண்டிய, தாயின் நல்கும்

மண்டல மகர வேலை அமுதொடும் வந்ததென்ன,

பண் தரு சுரும்பு சேரும் பசு மரம் உயிர்த்த பைம் பொன்

தண் தளிர் மலரின் செய்த சீதளச் சேக்கை சார்ந்தான். 162


இராவணன் தென்றலைச் சீறுதல்[தொகு]

நேரிழை மகளிர் கூந்தல் நிறை நறை வாசம் நீந்தி

வேரி அம் சரளச் சோலை வேனிலான் விருந்து செய்ய,

ஆர் கலி அழுவம் தந்த அமிழ்தென, ஒருவர் ஆவி,

தீரினும் உதவற்கு ஒத்த தென்றல் வந்து இறுத்தது அன்றே. 163


சாளரத்தூடு வந்து தவழ்தலும், தரித்தல் தேற்றான்;

நீள் அரத்தங்கள் சிந்தி, நெருப்பு உக, நோக்கும் நீரான்;

வாழ் மனை புகுந்தது ஆண்டு ஓர் மாசுணம் வரக் கண்டன்ன

கோள் உறக் கொதித்து விம்மி, உழையரைக் கூவிச் சொன்னான். 164


'கூவலின் உயிர்த்த சில் நீர் உலகினைக் குப்புற்றென்ன,

தேவரில் ஒருவன் என்னை இன்னலும் செயத்தக்கானோ?

ஏவலின் அன்றி, தென்றல் எவ் வழி எய்திற்று?' என்னா,

'காவலின் உழையர் தம்மைக் கொணருதிர் கடிதின்' என்றான். 165


அவ் வழி, உழையர் ஓடி, ஆண்டு அவர்க் கொணர்தலோடும்,

வெவ் வழி அமைந்த செங் கண் வெருவுற நோக்கி, வெய்யோன்

'செவ் வழி தென்றலோற்குத் திருத்தினீர் நீர் கொல்?' என்ன,

'இவ் வழி இருந்தகாலைத் தடை அவற்கு இல்லை' என்றார். 166


'வேண்டிய நினைந்து செய்வான் விண்ணவர் வருவது என்றால்,

மாண்டது போலும் கொள்கை, யானுடை வன்மை? வல்லைத்

தேண்டி, நீர் திசைகள்தோறும் சேணுற விசையில் செல்குற்று,

ஈண்டு, இவன் தன்னைப் பற்றி, இருஞ் சிறை இடுதிர்' என்றான். 167


இராவணன் மாரீசனை அடைதல்[தொகு]

'காற்றினோன் தன்னை வாளா முனிதலின் கண்டது இல்லை;

கூற்றும் வந்து என்னை இன்னே குறுகுமால், குறித்த ஆற்றால்,

வேல் தரும் கருங் கட் சீதை மெய் அருள் புனையேன் என்றால்,

ஆற்றலால் அடுத்தது எண்ணும் அமைச்சரைக் கொணர்திர்' என்றான். 168


ஏவின சிலதர் ஓடி, 'ஏ' எனும் துணையில், எங்கும்

கூவினர்; கூவலோடும் குறுகினர்-கொடித் திண் தேர்மேல்,

மாவினில், சிவிகை தன்மேல், மழை மதக் களிற்றின் -வையத்

தேவரும், வானம் தன்னில் தேவரும், சிந்தை சிந்த. 169


வந்த மந்திரிகளோடு மாசு அற மனத்தின் எண்ணி,

சிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன், தெளிவு இல் நெஞ்சன்,

அந்தரம் செல்வது ஆண்டு ஓர் விமானத்தில், ஆரும் இன்றி

இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான். 170


மிகைப் பாடல்கள்[தொகு]

பரிக்கும் அண்டப் பரப்பு எவைக்கும் தனியரசு என்று அரன் கொடுத்த வரத்தின் பான்மை

உரைக்கு உவமை பெற, குலிசத்தவன் முதலாம் உலகு இறைமைக்கு உரிய மேலோர்

இருக்கும் அரித் தவிசு எவைக்கும் நாயகம் ஈது எனக் குறித்து அங்கு இமையோர் தச்சன்

அருக்கர் வெயில் பறித்து அமைத்த அரிமுகத்தின் மணிப் பீடத்து அமர்ந்தான் மன்னோ. 2-1


பொருப்பினையும் கடந்த புயப் பரப்பினிடைப் பொழி கதிரின் ஒளி குலாவி,

பரப்பும் இருட் குறும்பு எறித்த பகல் ஒளியும் கெடத் துரந்து, பருவ மேகத்து

உருப் பயில் இந்திர நீலச் சோதி தளைத்து, உலகம் எலாம் உவந்து நோக்க,

திருப் பயில் உத்தரிகமொடு செறி வாகுவலய நிரை திகழ மன்னோ. 5-1


இலங்கு மரகதப் பொருப்பின் மருங்கு தவழ் இளங் கதிரின் வெயில் சூழ்ந்தென்ன,

அலங்கு செம் பொன் இழைப் பயிலும் அருந் துகிலின் பொலிந்த அரைத் தவத்தின் மீது,

நலம் கொள் சுடர்த் தொகை பரப்பும் நவமணிப் பத்தியின் இழைத்த நலம் ஆர் கச்சு

துலங்க அசைத்து அதில் சுரிகையுடை வடி வாள் மருங்கினிடைத் தொடர மன்னோ. 5-2


வானுலகு அளிக்கும் புரந்தரன் ஆதி, மருவும் எண் திசைப் படு நிருபர்

ஆனவர் தமது புகழ் எலாம் ஒருங்கே, அன்ன மென் புள் உருத் தாங்கி,

தான் இடைவிடாது தசமுகத்து அரக்கன் பதத்து இடைத் தாழ்ந்து தாழ்ந்து எழல்போல்

பால் நிறக் கவரி மயிர்க் குலம் கோடி பாங்கினில் பயின்றிட மன்னோ. 5-3


தேவ கன்னியர்கள், இயக்கர் தம் குலத்துத் தெரிவையர், சித்தர் மங்கையர்கள்

மேவ அருந் திறல் சேர் நாகர் மெல்லியர்கள் விளங்கு கந்திருவர், மேல் விஞ்சைக்

காவலர் குலத்தில் தோன்று கன்னியர்கள், ஆதியாய்க் கணிப்பு இல் பல் கோடிப்

பாவையர் எவரும் பாங்குற நெருங்கி, பலாண்டு இசை பரவிட மன்னோ. 5-4


தண் கதிர் பொழியும் ஓர் தவள மா மதி

விண் பிரிந்து இரு நிலத்து இருந்து, வேறு வேறு

எண் கடந்து உரு எடுத்து இருளை ஓட்டல்போல்

வெண் குடைத் தோகை பல கோடி மேவவே. 7-1


ஏவலின் புரி தொழில் எவையும் செய்து, செய்து

ஓவு இலர், துயர்க் கடற்கு ஒழிவு காண்கிலர்

மேவரும் பெரும் பயம் பிடித்து, விண்ணவர்

தாவினர், தலைத் தலை தாழ்ந்து நிற்கவே. 7-2


வியக்கும் முப் புவனமும் வெகுண்டு, மேலைநாள்

கயக்கிய கடுந் திறல் கருத்துளே கிடந்து,

உயக்கிய பயத்தினர் அவுணரோடு மற்று

இயக்கரும் திசை திசை இறைஞ்சி நிற்கவே. 11-1


பெருந் திசை இரிந்திடப் பெயர்த்தும் வென்ற நாள்,

பருந் திறல் புயம் பிணிப்புண்டு, பாசத்தால்,

அருந் தளைப்படும் துயர் அதனுக்கு அஞ்சியே

புரந்தரன் களாஞ்சி கை எடுத்துப் போற்றவே. 11-2


கடி நகர் அழித்துத் தன் காவல் மாற்றிய

கொடியவன் தனக்கு உளம் குலைந்து கூசியே,

வட திசைப் பரப்பினுக்கு இறைவன் மா நெதி

இடு திறை அளந்தனன், இரந்து நிற்கவே. 15-1


நிகர் அறு புவனம் மூன்று என நிகழ்த்திய

தொகையினில் தொகுத்திடு அண்டச் சூழலில்

வகையினைக் குரு முறை மரபின் வஞ்சியாப்

புகரவன் விரித்து எடுத்து இயம்பிப் போகவே. 15-2


மதியினில் கருதும் முன் அந்து வேண்டின

எது விதப் பொருள்களும் இமைப்பின் நல்கியே,

திதி முதல் அங்கம் அஞ்சுஅவையும் தெற்றென,

விதி முறை பெறத் தனி விளம்பிப் போகவே. 15-3


'உரிய நும் குலத்து உளேன் ஒருவன் யான்' எனப்

பரிவுறும் பழமைகள் எடுத்துப் பன்னியே,

விரை மலர் சிதறி, மெய் அன்பு மீக்கொளா,

நிருதி அங்கு அடிமுறை காத்து நிற்கவே. 17-1


என்ற பொழுதில், கடிது எழுந்து அலறி, வாய் விட்டு,

அன்று அருகு நின்ற பல தேவர் கணம் அஞ்ச,

புன் தொழில் அரக்கர் மனதில் புகை எழும்ப,

கன்றிய மனத்தன் கழறுற்றிடுவதானாள். 49-1


என்பதை மனக் கொடு இடர் ஏறிய கருத்தாள்,

முன்ப! உன் முகத்தின் எதிர் பொய் மொழியகில்லேன்;

நின் பதம்; நின் ஆணை இது; நீ கருதுவாய் என்று

அன்பின் உரியோர் நிலை எடுத்து அறை செய்கிற்பாள். 51-1


'ஈது அவர்கள் தங்கள் செயல்' என்று அவள் உரைப்ப,

கோது உறு மனத்து எரி பிறந்து, குறை நாளில்

மோது வடவைக் கனல் முகந்து, உலகம் எல்லாம்

காதுற சினத்தன் இதனைக் கழறுகின்றான். 57-1


இற்று எலாம் அரக்கி ஆங்கே எடுத்து அவள் இயம்பக் கேட்ட

கொற்ற வாள் அரக்கன் முன்னே, கொண்ட வெங் கோபத் தீயில்

கொற்ற ஆதரத்தின் வாய்மை எனும் புனல் சொரிதலோடும்

அற்றதால்; பின்பு ஆங்கு அன்னோன் கருத்தும் வேறாயது அன்றே. 81-1