கம்பராமாயணம்/கிட்கிந்தா காண்டம்/கலன் காண் படலம்

விக்கிமூலம் இலிருந்து

சோலையில் இருந்த இராமனிடம் சுக்கிரீவன் சில செய்திகள் தெரிவித்தல்[தொகு]

ஆயிடை, அரிக்குலம் அசனி அஞ்சிட

வாய் திறந்து ஆர்த்தது; வள்ளல், ஓங்கிய

தூய நல் சோலையில் இருந்த சூழல்வாய்,

'நாயக! உணர்த்துவது உண்டு நான்' எனா, 1


'இவ் வழி, யாம் இயைந்து இருந்தது ஓர் இடை,

வெவ் வழி இராவணன் கொணர, மேலை நாள்,

செவ் வழி நோக்கி, நின் தேவியே கொலாம்,

கவ்வையின் அரற்றினள், கழிந்த சேண் உளாள்? 2


'"உழையரின் உணர்த்துவது உளது" என்று உன்னியோ?

குழை பொரு கண்ணினாள் குறித்தது ஓர்ந்திலம்;

மழை பொரு கண் இணை வாரியோடு தன்

இழை பொதிந்து இட்டனள்; யாங்கள் ஏற்றனம். 3


சீதையின் அணிகல முடிப்பைக் சுக்கிரீவன் காட்டுதல்[தொகு]

'வைத்தனம் இவ் வழி; - வள்ளல்! - நின் வயின்

உய்த்தனம் தந்தபோது உணர்தியால்' எனா,

கைத்தலத்து அன்னவை கொணர்ந்து காட்டினான்; -

நெய்த்தலைப் பால் கலந்தனைய நேயத்தான். 4


அணிகலன்களைக் கண்ட இராமனின் நிலை=[தொகு]

தெரிவுற நோக்கினன், தெரிவை மெய் அணி;

எரி கனல் எய்திய மெழுகின் யாக்கைபோல்

உருகினன் என்கிலம்; உயிருக்கு ஊற்றம் ஆய்ப்

பருகினன் என்கிலம்; பகர்வது என்கொல் யாம்? 5


நல்குவது என் இனி? நங்கை கொங்கையைப்

புல்கிய பூணும், அக் கொங்கை போன்றன;

அல்குலின் அணிகளும், அல்குல் ஆயின;

பல் கலன் பிறவும், அப் படிவம் ஆனவே. 6


விட்ட பேர் உணர்வினை விளித்த என்கெனோ?

அட்டன உயிரை அவ் அணிகள் என்கெனோ?

கொட்டின சாந்து எனக் குளிர்ந்த என்கெனோ?

சுட்டன என்கெனோ? யாது சொல்லுகேன்? 7


மோந்திட, நறு மலர் ஆன; மொய்ம்பினில்

ஏந்திட, உத்தரியத்தை ஏய்ந்தன;

சாந்தமும் ஆய், ஒளி தழுவ, போர்த்தலால்,

பூந் துகில் ஆய, அப் பூவை பூண்களே. 8


ஈர்த்தன, செங் கண் நீர் வெள்ளம், யாவையும்;

போர்த்தன, மயிர்ப் புறம் புளகம்; பொங்கு தோள்,

வேர்த்தன என்கெனோ? வெதும்பினான் என்கோ?

தீர்த்தனை, அவ் வழி, யாது செப்புகேன்? 9


சுக்கிரீவன் தேறுதல் மொழி பல கூறி இராமனை தேற்றுதல்[தொகு]

விடம் பரந்தனையது ஓர் வெம்மை மீக்கொள,

நெடும் பொழுது, உணர்வினோடு உயிர்ப்பு நீங்கிய

தடம் பெருங் கண்ணனைத் தாங்கினான், தனது

உடம்பினில் செறி மயிர் சுறுக்கென்று ஏறவே. 10


தாங்கினன் இருத்தி, அத் துயரம் தாங்கலாது

ஏங்கிய நெஞ்சினன், இரங்கி விம்முவான் -

'வீங்கிய தோளினாய்! வினையினேன் உயிர்

வாங்கினென், இவ் அணி வருவித்தே' எனா. 11


அயனுடை அண்டத்தின் அப் புறத்தையும்

மயர்வு அற நாடி என் வலியும் காட்டி, உன்

உயர் புகழ்த் தேவியை உதவற்பாலெனால்;

துயர் உழந்து அயர்தியோ, சுருதி நூல் வலாய்? 12


'திருமகள் அனைய அத் தெய்வக் கற்பினாள்

வெருவரச் செய்துள வெய்யவன் புயம்

இருபதும், ஈர் - ஐந்து தலையும், நிற்க; உன்

ஒரு கணைக்கு ஆற்றுமோ, உலகம் ஏழுமே? 13


'ஈண்டு நீ இருந்தருள்; ஏழொடு ஏழ் எனாப்

பூண்ட பேர் உலகங்கள் வலியின் புக்கு, இடை

தேண்டி, அவ் அரக்கனைத் திருகி, தேவியைக்

காண்டி; யான் இவ் வழிக் கொணரும் கைப்பணி. 14


'ஏவல் செய் துணைவரேம், யாங்கள்; ஈங்கு, இவன்,

தா அரும் பெரு வலித் தம்பி; நம்பி! நின்

சேவகம் இது எனின், சிறுக நோக்கல் என்?

மூவகை உலகும் நின் மொழியின் முந்துமோ? 15


'பெருமையோர் ஆயினும், பெருமை பேசலார்;

கருமமே அல்லது பிறிது என் கண்டது?

தருமம், நீ அல்லது தனித்து வேறு உண்டோ?

அருமை ஏது உனக்கு? நின்று அவலம் கூர்தியோ? 16


'முளரிமேல் வைகுவான், முருகன் - தந்த அத்

தளிரியல் பாகத்தான், தடக் கை ஆழியான்,

அளவி ஒன்று ஆவரே அன்றி, - ஐயம் இல்

கிளவியாய்! - தனித் தனிக் கிடைப்பரோ துணை? 17


'என்னுடைச் சிறு குறை முடித்தல் ஈண்டு ஒரீஇப்

பின்னுடைத்து ஆயினும் ஆக! பேதுறும்

மின் இடைச் சனகியை மீட்டு, மீள்துமால் -

பொன்னுடைச் சிலையினாய்! - விரைந்து போய்' என்றான். 18


சுக்கிரீவன் உரையால் தெளிந்த இராமன் மறுமொழி பகர்தல்[தொகு]

எரி கதிர்க் காதலன் இனைய கூறலும்,

அருவி அம் கண் திறந்து, அன்பின் நோக்கினான்;

திரு உறை மார்பனும், தெளிவு தோன்றிட,

ஒருவகை உணர்வு வந்து, உரைப்பதுஆயினான்: 19


'விலங்கு எழில் தோளினாய், வினையினேனும், இவ்

இலங்கு வில் கரத்திலும், இருக்கவே, அவள்

கலன் கழித்தனள்; இது, கற்பு மேவிய

பொலன் குழைத் தெரிவையர் புரிந்துளோர்கள் யார்? 20


'வாள் நெடுங் கண்ணி என் வரவு நோக்க, யான்,

தாள் நெடுங் கிரியடும், தடங்கள் தம்மொடும்,

பூணொடும், புலம்பினென் பொழுது போக்கி, இந்

நாண் நெடுஞ் சிலை சுமந்து, உழல்வென்; நாண் இலேன். 21


'ஆறுடன் செல்பவர், அம் சொல் மாதரை

வேறு உளார் வலி செயின், விலக்கி, வெஞ் சமத்து

ஊறுற, தம் உயிர் உகுப்பர்; என்னையே

தேறினள் துயரம், நான் தீர்க்ககிற்றிலேன். 22


'கருங் கடல் தொட்டனர்; கங்கை தந்தனர்;

பொரும் புலி மானொடு புனலும் ஊட்டினர்;

பெருந் தகை என் குலத்து அரசர்: பின், ஒரு

திருந்திழை துயரம் நான் தீர்க்ககிற்றிலேன். 23


'இந்திரற்கு உரியது ஓர் இடுக்கண் தீர்த்து, இகல்

அந்தகற்கு அரிய போர் அவுணன் - தேய்த்தனன்,

எந்தை; மற்று, அவனின் வந்து உதித்த யான், உளேன்,

வெந் துயர்க் கொடும் பழி வில்லின் தாங்கினேன். 24


'"விரும்பு எழில் எந்தையார் மெய்ம்மை வீயுமேல்,

வரும் பழி" என்று, யான் மகுடம் சூடலேன்;

கரும்பு அழி சொல்லியைப் பகைஞன் கைக்கொள,

பெரும் பழி சூடினேன்; பிழைத்தது என் அரோ?' 25


இராமன் துயரால் மீண்டும் சோர, சுக்கிரீவன் ஆற்றுவித்தல்[தொகு]

என்ன நொந்து, இன்னன பன்னி, ஏங்கியே,

துன்ன அருந் துயரத்துச் சோர்கின்றான் தனை,

பன்ன அருங் கதிரவன் புதல்வன், பையுள் பார்த்து,

அன்ன வெந் துயர் எனும் அளக்கர் நீக்கினான். 26


'நின் குறை முடித்தலே முதற் பணி' என இராமன் கூறுதல்[தொகு]

'ஐய, நீ ஆற்றலின் ஆற்றினேன் அலது,

உய்வெனே? எனக்கு இதின் உறுதி வேறு உண்டோ?

வையகத்து, இப் பழி தீர மாய்வது

செய்வென்; நின் குறை முடித்து அன்றிச் செய்கலேன்.' 27


அப்பொழுது அனுமன் இராமனை நோக்கிப் பேசுதல்[தொகு]

என்றனன் இராகவன்; இனைய காலையில்,

வன் திறல் மாருதி வணங்கினான்; 'நெடுங்

குன்று இவர் தோளினாய்! கூற வேண்டுவது

ஒன்று உளது; அதனை நீ உணர்ந்து கேள்!' எனா, 28


'கொடுந் தொழில் வாலியைக் கொன்று, கோமகன்

கடுங் கதிரோன் மகன் ஆக்கி, கை வளர்

நெடும் படை கூட்டினால் அன்றி, நேட அரிது,

அடும் படை அரக்கர்தம் இருக்கை - ஆணையாய்! 29


'வானதோ? மண்ணதோ? மற்று வெற்பதோ?

ஏனை மா நாகர்தம் இருக்கைப் பாலதோ? -

தேன் உலாம் தெரியலாய்! - தெளிவது அன்று, நாம்

ஊன் உடை மானிடம் ஆனது உண்மையால்! 30


'எவ் உலகங்களும் இமைப்பின் எய்துவர்,

வவ்வுவர், அவ் வழி மகிழ்ந்த யாவையும்;

வெவ் வினை வந்தென வருவர், மீள்வரால்;

அவ் அவர் உறைவிடம் அறியற்பாலதோ? 31


'ஒரு முறையே பரந்து உலகம் யாவையும்,

திரு உறை வேறு இடம் தேரவேண்டுமால்;

வரன்முறை நாடிட, வரம்பு இன்றால் உலகு;

அருமை உண்டு; அளப்ப அரும் ஆண்டும் வேண்டுமால். 32


'ஏழு - பத்து ஆகிய வெள்ளத்து எம் படை,

ஊழியில் கடல் என உலகம் போர்க்குமால்;

ஆழியைக் குடிப்பினும், அயன் செய் அண்டத்தைக்

கீழ் மடுத்து எடுப்பினும், கிடைத்த செய்யுமால். 33


அனைவரும் வாலி இருக்கும் இடத்திற்குச் செல்லுதல்[தொகு]

'ஆதலால், அன்னதே அமைவது ஆம் என,

நீதியாய்! நினைந்தனென்' என, நிகழ்த்தினான்;

'சாது ஆம்' என்ற, அத் தனுவின் செவனும்,

'போதும் நாம் வாலிபால்' என்ன, போயினார். 34