கம்பராமாயணம்/கிட்கிந்தா காண்டம்/தாரை புலம்புறு படலம்

விக்கிமூலம் இலிருந்து

தாரை செய்தி கேட்டு வந்து, வாலிமேல் வீழ்ந்து அழுதலும்[தொகு]

வாலியும் ஏக, யார்க்கும் வரம்பு இலா உலகில் இன்பம்
பாலியா, முன்னர் நின்ற பரிதி சேய் செங்கை பற்றி,
ஆல் இலைப் பள்ளியானும், அங்கதனோடும், போனான்;
வேல் விழித் தாரை கேட்டாள்; வந்து, அவன் மேனி வீழ்ந்தாள். 1

குங்குமம் கொட்டி என்ன, குவி முலைக் குவட்டுக்கு ஒத்த
பொங்கு வெங் குருதி போர்ப்ப, புரி குழல் சிவப்ப, பொன் - தோள்
அங்கு அவன் அலங்கல் மார்பில் புரண்டனள் - அகன்ற செக்கர்,
வெங் கதிர் விசும்பில் தோன்றும் மின் எனத் திகழும் மெய்யாள். 2
 
வேய்ங் குழல், விளரி நல் யாழ், வீணை, என்று இனைய நாண,
ஏங்கினள்; இரங்கி விம்மி உருகினள்; இரு கை கூப்பித்
தாங்கினள் தலையில்; சோர்ந்து, சரிந்து தாழ் குழல்கள் தள்ளி,
ஓங்கிய குரலால் பன்னி, இனையன உரைக்கலுற்றாள்: 3

தாரையின் புலம்பல்[தொகு]

 

'வரை சேர் தோளிடை நாளும் வைகுவேன்,
கரை சேரா இடர் வேலை கண்டிலேன்;
உரை சேர் ஆர் உயிரே! என் உள்ளமே!
அரைசே! யான் இது காண அஞ்சினேன். 4


'துயராலே தொலையாத என்னையும்,
பயிராயோ? பகையாத பண்பினாய்!
செயிர் தீராய், விதி ஆன தெய்வமே!
உயிர் போனால், உடலாரும் உய்வரோ? 5


'நறிது ஆம் நல் அமிழ்து உண்ண நல்கலின்,
பிறியா இன் உயிர் பெற்ற பெற்றி, தாம்
அறியாரோ நமனார்? அது அன்று எனின்,
சிறியாரோ, உபகாரம் சிந்தியார்? 6

'அணங்கு ஆர் பாகனை ஆசைதோறும் உற்று,
உணங்கா நாள் மலர் தூய், உள் அன்பினால்
இணங்கா, காலம் இரண்டொடு ஒன்றினும்
வணங்காது, இத் துணை வைக வல்லையோ? 7


'"வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய்!
தரை மேலாய்! உறு தன்மை ஈது?" எனக்
கரையாதேன் இடு பூசல் கண்டும், ஒன்று
உரையாய், என்வயின் ஊனம் யாவதோ? 8


'நையா நின்றனென், நான் இருந்து இங்ஙன்;
மெய் வானோர் திரு நாடு மேவினாய்;
ஐயா! நீ எனது ஆவி என்பதும்,
பொய்யோ? பொய் உரையாத புண்ணியா! 9


'செரு ஆர் தோள! நின் சிந்தை உளேன் என்னின்,
மருவார் வெஞ் சரம் எனையும் வவ்வுமால்;
ஒருவேனுள் உளை ஆகின், உய்தியால்;
இருவேமுள் இருவேம் இருந்திலேம். 10


'"எந்தாய்! நீ அமிழ்து ஈய, யாம் எலாம்
உய்ந்தேம்" என்று, உபகாரம் உன்னுவார்,
நந்தா நாள்மலர் சிந்தி, நண்பொடும்
வந்தாரோ எதிர், வான் உளோர் எலாம்? 11

'ஓயா வாளி ஒளித்து நின்று எய்வான்
ஏயா வந்த இராமன் என்று உளான்,
வாயால் ஏயினன் என்னின், வாழ்வு எலாம்
ஈயாயோ? அமிழ்தேயும் ஈகுவாய்! 12


'சொற்றேன், முந்துற; அன்ன சொல் கொளாய்;
"அற்றான், அன்னது செய்கலான்" எனா,
உற்றாய், உம்பியை; ஊழி காணும் நீ,
இற்றாய்; நான் உனை என்று காண்கெனோ? 13


'நீறு ஆம், மேருவும், நீ நெருக்கினால்;
மாறு ஓர் வாளி, உன் மார்பை ஈர்வதோ?
தேறேன் யான் இது; தேவர் மாயமோ?
வேறு ஓர் வாலி கொலாம், விளிந்துளான்? 14


'தகை நேர் வண் புகழ் நின்று, தம்பியார்,
பகை நேர்வார் உளர் ஆன பண்பினால்,
உக நேர் சிந்தி உலந்து அழிந்தனன்;
மகனே! கண்டிலையோ, நம் வாழ்வு எலாம்? 15


'அரு மைந்து அற்றம் அகற்றும் வில்லியார்,
ஒரு மைந்தற்கும் அடாதது உன்னினார்;
தருமம் பற்றிய தக்கவர்க்கு எலாம்,
கருமம் கட்டளை என்றல் கட்டதோ?' 16

அனுமன் வாலிக்கு இறுதிக் கடன் செய்து, இராமனிடம் சென்று நிகழ்ந்தன கூறல்[தொகு]


என்றாள், இன்னன பன்னி, இன்னலோடு
ஒன்று ஆனாள்; உணர்வு ஏதும் உற்றிலாள்;
நின்றாள்; அந் நிலை நோக்கி, நீதி சால்,
வன் தாள் மால் வரை அன்ன, மாருதி, 17

 

மடவாரால், அ(ம்) மடந்தை முன்னர் வாழ்
இடம் மேவும்படி ஏவி, வாலிபால்
கடன் யாவும் கடைகண்டு, கண்ணனோடு
உடன் ஆய், உற்றது எலாம் உணர்த்தலும், 18

சூரியன் மறைவும், இராமன் இராப்பொழுதைக் கழித்த வகையும்[தொகு]


அகம் வேர் அற்று உக வீசு அருக்கனார்,
புகழ் மேலைக் கிரி புக்க போழ்தினில்,
நகமே ஒத்த குரக்கு நாயகன்
முகமே ஒத்தது, மூரி மண்டிலம். 19

 

மறைந்தான் மாலை அருக்கன்; வள்ளியோன்
உறைந்தான், மங்கை திறத்தை உன்னுவான்;
குறைந்தான், நெஞ்சு குழைந்து அழுங்குவான்,
நிறைந்து ஆர் கங்குலின் வேலை நீந்தினான். 20