கம்பராமாயணம்/பால காண்டம்/உலாவியற் படலம்

விக்கிமூலம் இலிருந்து
21. உலாவியற் படலம்

இராமனைக் காண வந்த மகளிரின் இயல்புகள்

 
மான் இனம் வருவ போன்றும், மயில் இனம் திரிவ போன்றும்
மீன் இனம் மிளிர வானில் மின் இனம் மிடைவ போன்றும்,
தேன் இனம் சிலம்பி ஆர்ப்ப, சிலம்பு இனம் புலம்பி ஏங்க,-
பூ நனை கூந்தல் மாதர் - பொம்மெனப் புகுந்து, மொய்த்தார். 1

விரிந்து வீழ் கூந்தல் பாரார்; மேகலை அற்ற நோக்கார்;
சரிந்த பூந் துகில்கள் தாங்கார்; இடை தடுமாறத் தாழார்;
நெருங்கினர்; நெருங்கிப் புக்கு, 'நீங்குமின், நீங்குமின்' என்று, -
அருங் கலம் அனைய மாதர் - தேன் நுகர் அளியின் மொய்த்தார். 2

பள்ளத்துப் பாயும் நல் நீர் அனையவர், பானல் பூத்த
வெள்ளத்துப் பெரிய கண்ணார், மென் சிலம்பு அலம்ப, மென் பூத்
தள்ள, தம் இடைகள் நோவ, தமை வலித்து, 'அவன்பால் செல்லும்
உள்ளத்தைப் பிடித்தும் நாம்' என்று, ஓடுகின்றாரும் ஒத்தார். 3

'கண்ணினால் காதல் என்னும் பொருளையே காண்கின்றோம்; இப்
பெண்ணின் நீர்மையினால் எய்தும் பயன் இன்று பெறுதும்' என்பார்;
மண்ணின் நீர் உலந்து, வானம் மழை அற வறந்த காலத்து,
உண்ணும் நீர் கண்டு வீழும் உழைக் குலம் பலவும் ஒத்தார். 4

அரத்தம் உண்டனையே மேனி அகலிகைக்கு அளித்த தாளும்,
விரைக் கருங் குழலிக்காக வில் இற நிமிர்ந்து வீங்கும்
வரைத் தடந் தோளும், காண, மறுகினில் வீழும் மாதர்,
இரைத்து வந்து, அமிழ்தின் மொய்க்கும் ஈஇனம் என்னல் ஆனார். 5

இராமன் விளைத்த மையல்

 
வீதிவாய்ச் செல்கின்றான்போல், விழித்து இமையாது நின்ற
மாதரார் கண்களூடே வாவும் மான் தேரில் செல்வான்,
யாதினும் உயர்ந்தோர், தன்னை, 'யாவர்க்கும் கண்ணன்' என்றே
ஓதிய பெயர்க்குத் தானே உறு பொருள் உணர்த்திவிட்டான். 6

'எண் கடந்து, அலகு இலாது, இன்று, ஏகுறும் இவன் தேர்' என்று,
பெண்கள் தாம் தம்மின் நொந்து பேதுறுகின்ற காலை,
மண் கடந்து, அமரர் வைகும் வான் கடந்தானை, தான் தன்
கண் கடவாது காத்த காரிகை வலியளே காண்!' 7

பயிர் ஒன்று கலையும், சங்கும், பழிப்ப அரு நலனும், பண்பும்,
செயிர் இன்றி அலர்ந்த பொற்பும், சிந்தையும், உணர்வும் தேசும்,
வயிரம் செய் பூணும், நாணும், மடனும், தன் நிறையும், மற்றும்
உயிர் ஒன்றும், ஒழிய எல்லாம் உகுத்து, ஒரு தெரிவை நின்றாள். 8

குழை உறா மிளிரும் கெண்டை கொண்டலின் ஆலி சிந்த,
தழை உறாக் கரும்பின் சாபத்து அனங்க வேள் சரங்கள் பாய்ந்த
இழை உறாப் புண் அறாத இள முலை ஒருத்தி சோர்ந்து,
மழை உறா மின்னின் அன்ன மருங்குல்போல் நுடங்கி, நின்றாள். 9

பஞ்சு அணி விரலினார் தம் படை நெடுங் கண்கள் எல்லாம்,
செஞ்செவே ஐயன் மெய்யின் கருமையைச் சேர்ந்தவோ தாம்?
மஞ்சு அன மேனியான் தன் மணி நிறம், மாதரார் தம்
அஞ்சன நோக்கம் போர்க்க, இருண்டதோ? அறிகிலேமால். 10

மாந் தளிர் மேனியாள் ஓர் வாணுதல், மதனன், எங்கும்
பூந் துணர் வாளி மாரி பொழிகின்ற பூசல் நோக்கி,
'வேந்தர் கோன் ஆணை நோக்கான்; வீரன் வில் ஆண்மை பாரான்;
ஏந்து இழையாரை எய்வான் யாவனோ ஒருவன்?' என்றாள். 11

சொல் நலம் கடந்த காமச் சுவையை ஓர் உருவம் ஆக்கி,
இன் நலம் தெரிய வல்லார் எழுதியது என்ன நின்றாள் -
பொன்னையும் பொருவு நீராள், புனைந்தன எல்லாம் போக,
தன்னையும் தாங்கலாதாள், துகில் ஒன்றும் தாங்கி நின்றாள். 12

வில் தங்கு புருவம் நெற்றி வெயர் வர, பசலை விம்மிச்
சுற்று எங்கும் எறிப்ப, உள்ளம் சோர, ஓர் தோகை நின்றாள்,
கொற்றம் செய் கொலை வேல் என்னக் கூற்று எனக் கொடிய கண்ணாள் -
மற்று ஒன்றும் காண்கிலாதாள், 'தமியனோ வள்ளல்?' என்றாள். 13

பைக் கருங் கூந்தல், செவ் வாய், வாள் நுதல், ஒருத்தி உள்ளம்
நெக்கனள் உருகுகின்றாள், 'நெஞ்சிடை வஞ்சன் வந்து
புக்கனன்; போகாவண்ணம், கண் எனும் புலம் கொள் வாயில்
சிக்கென அடைத்தேன்; தோழி! சேருதும் அமளி' என்றாள். 14

தாக்கு அணங்கு அனைய மேனி, தைத்த வேள் சரங்கள் பாராள்;
வீக்கிய கலனும் தூசும் வேறு வேறு ஆனது ஓராள்; -
ஆக்கிய பாவை அன்னாள் ஒருத்தி - ஆண்டு, அமலன் மேனி
நோக்குறுவாரை எல்லாம் எரி எழ நோக்குகின்றாள். 15

களிப்பன, மதர்ப்ப, நீண்டு கதுப்பினை அளப்ப, கள்ளம்
ஒளிப்பன, வெளிப்பட்டு ஓடப் பார்ப்பன, சிவப்பு உள் ஊறி
வெளுப்பன, கறுப்ப, ஆன வேல்கணாள் ஒருத்தி, உள்ளம்
குளிர்ப்பொடு காண வந்தாள், வெதுப்பொடு கோயில் புக்காள். 16

கருங் குழல் பாரம், வார் கொள் கன முலை, கலை சூழ் அல்குல்,
நெருங்கின மறைப்ப, ஆண்டு ஓர் நீக்கிடம் பெறாது விம்மும்
பெருந் தடங் கண்ணி, காணும் பேர் எழில் ஆசை தூண்ட,
மருங்குலின் வெளிகளூடே, வள்ளலை நோக்குகின்றாள். 17

இராமன் உலாவந்த வீதிகளின் நிலை

 
வரிந்த வில் அனங்கன் வாளி மனங்களில் தைப்ப, மாதர்
எரிந்த பூண் இனமும், கொங்கை வெயர்த்த போது இழிந்த சாந்தும்,
சரிந்த மேகலையும், முத்தும், சங்கமும், தாழ்ந்த கூந்தல்
வரிந்த பூந் தொடையும், அன்றி வெள்ளிடை அரிது - அவ் வீதி. 18

இராமனின் மேனி அழகு

 
தோள் கண்டார், தோளே கண்டார்; தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார், தாளே கண்டார்; தடக் கை கண்டாரும், அஃதே;
வாள் கொண்ட கண்ணார் யாரே, வடிவினை முடியக் கண்டார்? -
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார். 19

இராமனைக் கண்ட பற்பல மகளிரின் நிலைகள்

 
அலம்பு பாரக் குழலி ஒர் ஆயிழை,
சிலம்பும் மேகலையும் ஒலி செய்திட,
நலம் பெய் கொம்பின் நடந்து வந்து எய்தினாள்,
புலம்பு சேடியர் கைமிசைப் போயினாள். 20

அருப்பு மென் முலையாள், அங்கு, ஓர் ஆயிழை,
'இருப்பு நெஞ்சினையேனும், ஓர் ஏழைக்கா,
பொருப்பு வில்லைப் பொடி செய்த புண்ணியா!
கருப்பு வில் இறுத்து ஆட்கொண்டு கா' என்றாள். 21

மை தவழ்ந்த கருங் கண் ஒர் வாணுதல்,
'செய் தவன் தனித் தேர்மிசைச் சேறல் விட்டு,
எய்த வந்து எதிர் நின்றமைதான் இது
கைதவம்கொல்? கனவுகொலோ?' என்றாள். 22

மாது ஒருத்தி, மனத்தினை அல்லது ஓர்
தூது பெற்றிலள், இன் உயிர் சோர்கின்றாள்,
'போது அரிக் கண் பொலன் குழைப் பூண் முலைச்
சீதை எத் தவம் செய்தனளோ?' என்றாள். 23

பழுது இலா ஒரு பாவை அன்னாள், பதைத்து,
அழுது, வெய்துயிர்த்து, அன்புடைத் தோழியைத்
தொழுது, சோர்ந்து அயர்வாள், 'இந்தத் தோன்றலை
எழுதலாம்கொல், இம் மன்மதனால்?' என்றாள். 24

வண்ண வாய் ஒரு வாணுதல், 'மானிடற்கு,
எண்ணுங்கால், இவ் இலக்கணம் எய்திட
ஒண்ணுமோ? ஒன்று உணர்த்துகின்றேன், இவன்
கண்ணனே! இது கண்டிடும், பின்' என்றாள். 25

கனக நூபுரம் கை வளையோடு உக,
மனம் நெகும்படி வாடி, ஓர் வாணுதல்,
'அனகன் இந் நகர் எய்தியது, ஆதியில்,
சனகன் செய்த தவப் பயனால்' என்றாள். 26

நனி வருந்தி, நலம் குடிபோயிட,
பனி வரும் கண் ஓர் பாசிழை அல்குலாள்,
'முனிவரும் குல மன்னரும் மொய்ப்பு அற,
தனி வரும்கொல் கனவின் தலை?' என்றாள். 27

புனம் கொள் கார் மயில் போலும் ஓர் பொற்கொடி,
மனம் கொள் காதல் மறைத்தலை எண்ணினாள்;
அனங்கவேள், அது அறிந்தனன்; - அற்றம் தான்,
மனங்கள் போல, முகமும் மறைக்குமே? 28

இணை நெடுங் கண் ஓர் இந்து முகத்தி பூ-
அணை அடைந்து, இடியுண்ட அரா என,
புணர் நலம் கிளர் கொங்கை புழுங்கிட,
உணர்வு அழுங்க, உயிர்த்தனள் ஆவியே. 29

ஆம்பல் ஒத்து அமுது ஊறு செவ் வாய்ச்சியர்,
தாம் பதைத்து உயிர் உள் தடுமாறுவார்,
தேம்பு சிற்றிடைச் சீதையைப்போல், சிறிது
ஏம்பல் பெற்றிலர்; எங்ஙனம் உய்வரே? 30

'வேர்த்து, மேனி தளர்ந்து, உயிர் விம்மலோடு
ஆர்த்தி உற்ற மடந்தையர் ஆரையும்,
தீர்த்தன், இத்தனை, சிந்தையின், செங் கணின்,
பார்த்திலான்; உள் பரிவு இலனோ?' என்றாள். 31

வையம் பற்றிய மங்கையர் எண்ணிலர்,
ஐயன் பொற்புக்கு அளவு இலை ஆதலால்,
எய்யும் பொன் சிலை மாரனும், என் செய்வான்?
கை அம்பு அற்று, உடைவாளினும் கை வைத்தான். 32

நான வார் குழல் நாரியரோடு அலால்,
வேனில் வேளொடு, மேல் உறைவார்களோடு,
ஆன பூசல் அறிந்திலம்; அம்பு போய்
வான நாடியர் மார்பினும் தைத்தவே. 33

'மருள் மயங்கு மடந்தையர்மாட்டு ஒரு
பொருள் நயந்திலன் போகின்றதே; இவன்
கருணை என்பது கண்டு அறியான்; பெரும்
பருணிதன்கொல்? படு கொலையான்!' என்றாள். 34

தொய்யில் வெய்ய முலை, துடி போல் இடை
நையும் நொய்ய மருங்குல், ஓர் நங்கைதான்,
கையும் மெய்யும் அறிந்திலள்; கண்டவர்,
'உய்யும், உய்யும்!' எனத் தளர்ந்து ஓய்வுற்றாள். 35

பூக ஊசல் புரிபவர்போல், ஒரு
பாகின் மென்மொழி, தன் மலர்ப் பாதங்கள்
சேகு சேர்தர, சேவகன் தேரின்பின்,
ஏகும், மீளும்; இது என் செய்தவாறு அரோ? 36

பெருத்த காதலின் பேதுறு மாதரின்
ஒருத்தி, மற்று அங்கு ஒருத்தியை நோக்கி, 'என்
கருத்தும் அவ் வழிக் கண்டது உண்டோ ?' என்றாள் -
அருத்தி உற்றபின் நாணம் உண்டாகுமோ? 37

நங்கை, அங்கு ஒரு பொன், 'நயந்தார் உய்ய,
தங்கள் இன் உயிரும் கொடுத்தார், தமர்;
எங்கள் இன் உயிர் எங்களுக்கு ஈகிலா
வெங்கண், எங்கண் விளைந்தது, இவற்கு? என்றாள். 38

நாமத்தால் அழிவாள் ஒரு நன்னுதல்,
'சேமத்து ஆர் வில் இறுத்தது, தேருங்கால்,
தூமத்து ஆர் குழல் தூ மொழித் தோகைபால்
காமத்தால் அன்று, கல்வியினால்' என்றாள். 39

ஆரமும், துகிலும், கலன் யாவையும்,
சோர, இன் உயிர் சோரும் ஒர் சோர்குழல்,
'கோர வில்லிமுன்னே எனைக் கொல்கின்ற
மாரவேளின் வலியவர் யார்?' என்றாள். 40

வசிட்டனும் கோசிகனும் இருந்த மண்டபத்தை இராமன் சேர்தல்

 
மாதர் இன்னணம் எய்த்திட, வள்ளல் போய்,
கோது இல் சிந்தை வசிட்டனும், கோசிக
வேத பாரனும் மேவிய மண்டபம்,
ஏதி மன்னர் குழாத்தொடும் எய்தினான். 41

முனிவரை வணங்கி இராமன் ஆசனத்து அமர்தல்

 
திருவின் நாயகன், மின் திரிந்தாலெனத்
துருவு மா மணி ஆரம் துயல்வர,
பருவ மேகம் படிந்ததுபோல் படிந்து,
இருவர் தாளும் முறையின் இறைஞ்சினான். 42

இறைஞ்ச, அன்னவர் ஏத்தினர்; ஏவ, ஓர்
நிறைஞ்ச பூந் தவிசு ஏறி, நிழல்கள்போல்,
புறஞ்செய் தம்பியருள் பொலிந்தான் அரோ -
அறம் செய் காவற்கு அயோத்தியில் தோன்றினான். 43

தயரதனும் மண்டபம் வந்து அமர்தல்

 
ஆன மா மணி மண்டபம் அன்னதில்
தானை மன்னன் தமரொடும் சார்ந்தனன் -
மீன் எலாம் தன் பின் வர, வெண்மதி,
வான் நிலா உற வந்தது மானவே. 44

வந்து, மா தவர் பாதம் வணங்கி, மேல்
சிந்து தே மலர் மாரி சிறந்திட,
அந்தணாளர்கள் ஆசியொடு, ஆதனம்,
இந்திரன் முகம் நாணுற, ஏறினான். 45

கங்கர், கொங்கர், கலிங்கர், குலிங்கர்கள்,
சிங்களாதிபர், சேரலர், தென்னவர்,
அங்க ராசர், குலிந்தர், அவந்திகர்,
வங்கர், மாளவர், சோளர் மராடரே, 46

மான மாகதர், மச்சர், மிலேச்சர்கள்,
ஏனை வீர இலாடர், விதர்ப்பர்கள்,
சீனர், தெங்கணர், செஞ் சகர், சோமகர்,
சோனகேசர், துருக்கர், குருக்களே, 47

ஏதி யாதவர், ஏழ் திறல் கொங்கணர்,
சேதி ராசர், தெலுங்கர், கருநடர்,
ஆதி வானம் கவித்த அவனி வாழ்
சோதி நீள் முடி மன்னரும் துன்னினார். 48

மங்கையர் சாமரை வீசுதலும், பல்லாண்டு கூறுதலும்

 
தீங் கரும்பினும் தித்திக்கும் இன் சொலார்
தாங்கு சாமரை, மாடு தயங்குவ:
ஓங்கி ஓங்கி வளர்ந்து, உயர் கீர்த்தியின்
பூங் கொழுந்து பொலிவன போன்றவே. 49

சுழலும் வண்டும், மிஞிறும், சுரும்பும், சூழ்ந்து
உழலும் வாச மது மலர் ஓதியர்,
குழலினோடு உற, கூறு பல்லாண்டு ஒலி,
மழலை யாழ் இசையோடு மலிந்தவே. 50

வெண்குடை விளங்கிய காட்சி

 
வெங் கண் ஆனையினான் தனி வெண்குடை,
திங்கள், தங்கள் குலக் கொடிச் சீதை ஆம்
மங்கை மா மணம் காணிய வந்து, அருள்
பொங்கி ஓங்கித் தழைப்பது போன்றதே. 51

தயரதன் படைப் பெருக்கம்

 
ஊடு பேர்விடம் இன்றி, ஒன்று ஆம் வகை
நீடு மா கடல் தானை நெருங்கலால்,
ஆடல் மா மத ஆனைச் சனகர் கோன்
நாடு எலாம், ஒரு நல் நகர் ஆயதே. 52

சனகனின் உபசரிப்பு

 
ஒழிந்த என் இனி? ஒண்ணுதல் தாதைதன்
பொழிந்த காதல் தொடர, பொருள் எலாம்
அழிந்து மன்றல் கொண்டாடலின், அன்புதான்
இழிந்துளார்க்கும் இராமற்கும் ஒத்ததே. 53

மிகைப் பாடல்கள்

 
தையல், சிற்றிடையாள், ஒரு தாழ்குழல்,
உய்ய மற்று அவள் உள்ளத்து ஒடுங்கினான் -
வையம் முற்றும் வயிற்றின் அடக்கிய
ஐயனின் பெரியார் இனி யாவரே? 19-1