கம்பராமாயணம்/பால காண்டம்/கடிமணப் படலம்

விக்கிமூலம் இலிருந்து
23. கடிமணப் படலம்'

சனகனது உபசரிப்பில் யாவரும் மகிழ்ந்திருத்தல்

 
இடம் படு புகழ்ச் சனகர் கோன் இனிது பேண,
கடம் படு களிற்று அரசர் ஆதி, இடை கண்டோர்,
தடம் படு புயத்த சிறு தம்பியர்கள் காறும்,
உடம்பொடு துறக்க நகர் உற்றவரை ஒத்தார். 1

இரவில் காம வேதனை கொண்ட சீதையின் சிந்தையும், சொல்லும்

 
தேட அரு நலத்த புனல் ஆசை தெறலுற்றார்,
மாடு ஓர் தடம் உற்று, அதனை எய்தும் வகை காணார்,
ஈடு அழிவுற, தளர்வொடு ஏமுறுவர் அன்றே?
ஆடக வளைக் குயிலும், அந் நிலையள் ஆனாள். 2

'"உரவு ஏதும் இலார் உயிர் ஈதும்" எனா,
சுரவே புரிவார் உளரோ? கதிரோன்
வரவே, எனை ஆள் உடையான் வருமே! -
இரவே! - கொடியாய், விடியாய்' எனுமால், 3

'கரு நாயிறு போல்பவர் காலொடு போய்,
வரு நாள், அயலே வருவாய்; -மனனே! -
பெரு நாள், உடனே, பிரியாது உழல்வாய்;
ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ? 4

'கனை ஏழ் கடல்போல், கரு நாழிகைதான்,
வினையேன் வினையால் விடியாவிடின், நீ
தனியே பறவாய்; தகவு ஏதும் இலாய் -
பனைமேல் உறைவாய்!-பழி பூணுதியோ? 5

'அயில் வேல் அனல் கால்வன ஆம்; நிழல் ஆய்,
வெயிலே என நீ விரிவாய்; - நிலவே!
செயிர் ஏதும் இலார், உடல் தேய்வு உறுவார்,
உயிர் கோள் உறுவார், உளரோ? உரையாய்! 6

'மன்றல் குளிர் வாசம் வயங்கு அனல் வாய்,
மின் தொத்து, நிலா நகை, வீழ் மலயக்
குன்றில், குல மா முழையில், குடிவாழ்
தென்றற் புலியே! இரை தேடுதியோ? 7

தெருவே திரிவார், ஒரு சேவகனார்,
இரு போதும் விடார்; இது என்னை கொலாம்?
கரு மா முகில் போல்பவர், கன்னியர்பால்
வருவார் உளரோ, குல மன்னவரே? 8

'தெருளா வினை தீயவர் சேர் நரகோ?
அருளான் நெறி ஓடும் அவாவதுவோ?
கருள் ஆர் கடலோ? கரை காண்பு அரிதால்! -
இருளானதுதான் - எனை ஊழிகொலாம்? 9

'பண்ணோ ஒழியா; பகலோ புகுதாது;
எண்ணோ தவிரா; இரவோ விடியாது;
உள் நோவு ஒழியா; உயிரோ அகலா;
கண்ணோ துயிலா; இதுவோ கடனே? 10

இடையே வளை சோர, எழுந்து, விழுந்து,
அடல் ஏய் மகனன் சரம் அஞ்சினையோ?
உடல் ஓய்வுற, நாளும், உறங்கலையால்! -
கடலே! - உரை! நீயும், ஓர் கன்னிகொலாம்?' 11

இரவில் இராமனது நிலை

 
என, இன்னன பன்னி, இருந்து உளைவாள்,
துனி உன்னி, நலம் கொடு சோர்வுறுகால்,
மனைதன்னில், வயங்குறும் வைகு இருள்வாய்,
அனகன் நினைகின்றன யாம் அறைவாம்: 12

'முன் கண்டு, முடிப்ப அரு வேட்கையினால்,
என் கண் துணைகொண்டு, இதயத்து எழுதி,
பின் கண்டும், ஓர் பெண் கரை கண்டிலெனால்; -
மின் கண்டவர் எங்கு அறிவார் வினையே? 13

'திருவே அனையாள் முகமே! தெரியின்,
கருவே, கனியே விளை காம விதைக்கு
எருவே! மதியே! இது என் செய்தவா?
ஒருவேனொடு நீ உறவாகலையோ? 14

'கழியா உயிர் உந்திய காரிகைதன்
விழி போல வளர்ந்தது; வீகில தால்;
அழி போர் இறைவன் பட, அஞ்சியவன்
பழி போல, வளர்ந்தது - பாய் இருளே! 15

'நினையாய் ஒரு கால்; நெடிதோ நெறி தான்?
வினவாதவர் பால், விடை கொண்டிலையோ? -
புன மான் அனையாரொடு போயின என்
மனனே! - எனை நீயும் மறந்தனையோ? 16

'தன் நோக்கு எரி கால், தகை, வாள், அரவின்
பல் நோக்கினது என்பது பண்டு கொலாம்;
என் நோக்கினும், நெஞ்சினும், என்றும் உளார்
மென் நோக்கினதே - கடு வல் விடமே! 17

'கல், ஆர் மலர் சூழ் கழி, வார் பொழிலோடு,
எல்லாம் உள ஆயினும், என் மனமோ -
சொல் ஆர் அமுதின் சுவையோடு இனிது ஆம்
மெல் ஓதியர் தாம் விளையாடு இடமே!' 18

மண முரசு அறையச் சனகன் கட்டளையிடுதல்

 
மானவர் பெருமானும், மண நினைவினன் ஆக,
'"தேன் அமர் குழலாள்தன் திருமணவினை, நாளை;
பூ நகு மணி வாசம், புனை நகர் அணிவீர்!" என்று
ஆனையின்மிசை, யாணர், அணி, முரசு அறைக!' என்றான். 19

நகர மாந்தர் மகிழ்ந்து நகரை அணி செய்தற்கு விரைதல்

 
முரசு அறைதலும், மான முதியவரும், இளையோரும்,
விரை செறி குழலாரும், விரவினர் விரைகின்றார்;
உரை செறி கிளையோடும், உவகையின் உயர்கின்றார்;
கரை தெரிவு அரிது ஆகும் இரவு ஒரு கரை கண்டார். 20

சூரியன் ஒளி வீசி விளங்குதல்

 
'அஞ்சன ஒளியானும், அலர்மிசை உறைவாளும்,
எஞ்சல் இல் மனம், நாளைப் புணர்குவர்' எனலோடும்,
செஞ் சுடர் இருள் கீறி, தினகரன், ஒரு தேர்மேல்,
மஞ்சனை அணி கோலம் காணிய என, வந்தான். 21

நகர மாந்தர் அணிசெய்த வகை

 
தோரணம் நடுவாரும், தூண் உறை பொதிவாரும்,
பூரண குடம் எங்கும் புனை துகில் புனைவாரும்,
கார் அணி நெடு மாடம் கதிர் மணி அணிவாரும்,
ஆரண மறைவாணர்க்கு இன் அமுது அடுவாரும், 22

அன்ன மென் நடையாரும், மழ விடை அனையாரும்,
கன்னி நல் நகர், வாழை கமுகொடு நடுவாரும்,
பன்ன அரு நிறை முத்தம் பரியன தெரிவாரும்,
பொன் அணி அணிவாரும், மணி அணி புனைவாரும், 23

சந்தனம், அகில், நாறும் சாந்தொடு, தெரு எங்கும்
சிந்தினர் திரிவாரும், செழு மலர் சொரிவாரும்,
இந்திரதனு நாண, எரி மணி நிரை மாடத்து,
அந்தம் இல் விலை ஆரக் கோவைகள் அணிவாரும், 24

தளம் கிளர் மணி கால, தவழ் சுடர் உமிழ் தீபம்,
இளங் குளிர் முளை ஆர் நல் பாலிகை இனம், எங்கும்,
விளிம்பு பொன் ஒளி நாற, வெயிலொடு நிலவு ஈனும்,
பளிங்குடை உயர் திண்ணைப் பத்தியின் வைப்பாரும், 25

மந்தர மணி மாட முன்றிலின் வயின் எங்கும்,
அந்தம் இல் ஒளி முத்தின், அகல் நிரை ஒளி நாறி,
அந்தர நெடு வான் மீன் அவண் அலர்குவது என்ன,
பந்தரின் நிழல் வீச, படர் வெயில் கடிவாகும், 26

வயிரம் மின் ஒளி ஈனும், மரகத மணி வேதி,
செயிர் அற ஒளிர் தீபம் சில தியர் கொணர்வாரும்,
வெயில் விரவிய பொன்னின் மிடை கொடி, மதி தோயும்
எயிலினில் நடுவாரும், எரி அகில் இடுவாரும், 27

பண்டியில் நிறை வாசப் பனிமலர் கொணர்வாரும்,
தண்டலை இலையோடு, கனி பல தருவாரும்,
குண்டலம் வெயில் வீசக் குரவைகள் புரிவாரும்,
உண்டை கொள் மத வேழத்து ஓடைகள் அணிவாரும், 28

கலவைகள் புனைவாரும், கலை நல தெரிவாரும்,
மலர் குழல் மலைவாரும், மதிமுகம் மணி ஆடித்
திலகம் முன் இடுவாரும், சிகழிகை அணிவாரும்,
இலவு இதழ் பொலி கோலம் எழில் பெற இடுவாரும், 29

தப்பின மணி காசும், சங்கமும், மயில் அன்னார்
ஒப்பனை புரி போதும், ஊடலின் உகு போதும்,
துப்பு உறழ் இள வாசச் சுண்ணமும், உதிர் தாதும்,
குப்பைகள் என, வாரிக்கொண்டு அயல் களைவாரும், 30

மன்னவர் வருவாரும், மறையவர் நிறைவாரும்,
இன் இசை மணி யாழின் இசை மது நுகர்வாரும்,
சென்னியர் திரிவாரும், விறலியர் செறிவாரும்,
கன்னலின் மண வேலைக் கடிகைகள் தெரிவாரும். 31

கணிகையர் தொகுவாரும், கலை பல பயில்வாரும்,
பணி அணி இன முத்தம், பல இரு நில மன்னர்
அணி நெடு முடி ஒன்று ஒன்று அறைதலின், உகும் அம் பொன்
மணி மலை தொகுமன்னன், வாயிலின் மிடைவாரும், 32

கேடகம் வெயில் வீச, கிளர் அயில் நிலவு ஈன,
கோடு உயர் நெடு விஞ்சைக் குஞ்சரம் அது போல,
ஆடவர் திரிவாரும், அரிவையர் களி கூர,
நாடகம் நவில்வாரும், நகை உயிர் கவர்வாரும், 33

கதிர் மணி ஒளி கால, கவர் பொருள் தெரியாவாறு,
எதிர் எதிர் சுடர் விம்முற்று எழுதலின், இளையோரும்,
மது விரி குழலாரும், மதிலுடை நெடு மாடம்
அது, இது, என ஓராது, அலமரல் உறுவாரும், 34

தேர்மிசை வருவாரும், சிவிகையில் வருவாரும்,
ஊர்தியில் வருவாரும், ஒளி மணி நிரை ஓடைக்
கார்மிசை வருவாரும், கரிணியில் வருவாரும்,
பார்மிசை வருவாரும், பண்டியில் வருவாரும், 35

முத்து அணி அணிவாரும், மணி அணி முனிவாரும்,
பத்தியின் நிமிர் செம் பொற் பல கலன் மகிழ்வாரும்,
தொத்து உறு தொழில் மாலை சுரி குழல் அணிவாரும்,
சித்திர நிரை தோயும் செந் துகில் புனைவாரும், 36

விடம் நிகர் விழியாரும், அமுது எனும் மொழியாரும்,
கிடை புரை இதழாரும், கிளர் நகை வெளியாரும்,
தட முலை பெரியாரும், தனி இடை சிறியாரும்,
பெடை அன நடையாரும், பிடி என வருவாரும், - 37

உள் நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும்
கண்ணுறல் அரிது என்றும், கருதுதல் அரிது அம்மா!
எண்ணுறு சுடர் வானத்து இந்திரன் முடி சூடும்
மண்ணுறு திருநாளே ஒத்தது - அம் மண நாளே. 38

மண மண்டபத்திற்குத் தயரதன் வருதல்

 
கரை தெரிவு அரியது, கனகம் வேய்ந்தது,
வரை என உயர்ந்தது, மணியின் செய்தது,
நிரைவளை மணவினை நிரப்பு மண்டபம்,
அரைசர் தம் அரசனும் அணுகல் மேயினான். 39

வெண்குடை இள நிலா விரிக்க, மின் எனக்
கண் குடை இன மணி வெயிலும் கான்றிட,
பண் குடை வண்டினம் பாட, ஆடல் மா
மண் குடை தூளி விண் மறைப்ப, - ஏகினான். 40

மங்கல முரசுஇனம் மழையின் ஆர்த்தன;
சங்குகள் முரன்றன; தாரை, பேரிகை,
பொங்கின; மறையவர் புகலும் நான்மறை
கங்குலின் ஒலிக்கும் மா கடலும் போன்றதே. 41

பரந்த தேர், களிறு, பாய் புரவி, பண்ணையில்
தரம் தரம் நடந்தன; தானை வேந்தனை
நிரந்தரம் தொழுது எழும் நேமி மன்னவர்,
புரந்தரன் புடை வரும், அமரர் போன்றனர். 42

தயரதன், சனகன், முதலியோர் ஆசனத்து அமர்தல்

 
அனையவன், மண்டபம் அணுகி, அம் பொனின்
புனை மணி ஆதனம் பொலியத் தோன்றினான்;
முனிவரும், மன்னரும், முறையின் ஏறினார்;
சனகனும், தன் கிளை தழுவ, ஏறினான். 43

திருமண மண்டபத்தின் தோற்றம்

 
மன்னரும், முனிவரும், வானுளோர்களும்,
அன்ன மென் நடை அணங்கு அனைய மாதரும்,
துன்னினர் துவன்றலின், சுடர்கள் சூழ்வரும்
பொன் மலை ஒத்தது - அப் பொரு இல் கூடமே. 44

புயல் உள, மின் உள, பொரு இல் மீன் உள,
இயல் மணி இனம் உள, சுடர் இரண்டு உள;
மயன் முதல் திருத்திய மணி செய் மண்டபம்,
அயன் முதல் திருத்திய அண்டம் ஒத்ததே. 45

எண் தவ முனிவரும், இறைவர் யாவரும்,
அண்டரும், பிறரும், புக்கு அடங்கிற்று; ஆதலால்,
மண்டபம் வையமும் வானும் வாய் மடுத்து
உண்டவன் மணி அணி உதரம் ஒத்ததே. 46

தராதலம் முதல் உலகு அனைத்தும் தள்ளுற,
விராவின, குவிந்தன, விளம்ப வேண்டுமோ?
அரா-அணை துறந்து போந்து, அயோத்தி எய்திய
இராகவன் செய்கையை இயம்புவாம் அரோ: 47

இராமன் நீராடி மணக்கோலம் புனைதல்

 
சங்கு இனம் தவழ் கடல் ஏழில் தந்தவும்,
சிங்கல் இல் அரு மறை தெரிந்த தீர்த்தமும்,
கங்கையே முதலவும், கலந்த நீரினால்,
மங்கல, மஞ்சனம் மரபின் ஆடியே, 48

கோது அறு தவத்துத் தம் குலத்துளோர் தொழும்
ஆதி அம் சோதியை அடி வணங்கினான் -
காது இயல், கயல் விழிக் கன்னிமார்களை,
வேதியர்க்கு அரு மறை விதியின் நல்கியே. 49

அழி வரு தவத்தினோடு, அறத்தை ஆக்குவான்,
ஒழிவு அருங் கருணை ஓர் உருவு கொண்டென,
எழுத அரு வடிவு கொண்டு, இருண்ட மேகத்தைத்
தழுவிய நிலவு என, கலவை சாத்தியே; 50

மங்கல முழு நிலா மலர்ந்த திங்களை,
பொங்கு இருங் கருங் கடல் பூத்தது ஆம் என,
செங்கிடைச் சிகழிகை, செம் பொன் மாலையும்,
தொங்கலும், துயல்வர, சுழியம் சூடியே; 51

ஏதாம் இல் இரு குழை, இரவு, தன் பகல்,
காதல் கண்டு உண்ர்ந்தன, கதிரும் திங்களும்,
சீதைதன் கருத்தினைச் செவியின் உள்ளுற,
தூது சென்று, உரைப்பன போன்று தோன்றவே; 52

கார் விடக் கறையுடை, கணிச்சி, வானவன்
வார் சடைப் புடையின், ஓர் மதி மிலைச்ச, தான்
சூர் சுடர்க் குலம் எலாம் சூடினான் என,
வீர பட்டத்தொடு திலகம் மின்னவே; 53

சக்கரத்து அயல் வரும் சங்கம் ஆம் என
மிக்கு ஒளிர் கழுத்து அணி தரள வெண் கொடி,
மொய்க் கருங் குழலினாள், முறுவல் உள்ளுறப்
புக்கன நிறைந்து, மேல் பொடிப்ப போன்றவே. 54

பந்தி செய் வயிரங்கள் பொறியின் பாடு உற
அந்தம் இல் சுடர் மணி அழலின் தோன்றலால்,
சுந்தரத் தோள் அணி வலயம், தொல்லை நாள்
மந்தரம் சுற்றிய அரவை மானுமே. 55

கோவையின் பெரு வட முத்தம் கோத்தன,
காவல் செய் தடக் கையின் நடுவண் காந்துவ,
'மூவகை உலகிற்கும் முதல்வன் ஆம்' என,
ஏ வரும் பெருங் குறி இட்ட போன்றவே. 56

மாண்ட பொன் மணி அணி வலயம் வந்து, எதிர்
வேண்டினர்க்கு உதவுவான் விரும்பி, கற்பகம்
ஈண்டு, தன் கொம்பிடை ஈன்றது ஆம் என,
காண் தகு தடக் கையில், கடகம் மின்னவே; 57

தேனுடை மலர்மகள் திளைக்கும் மார்பினில்,
தான் இடை விளங்கிய தகையின் ஆரம்தான்,
மீனொடு சுடர் விட விளங்கும் மேகத்து,
வான் இடு வில் என, வயங்கிக் காட்டவே; 58

நணுகவும் அரியதா நடக்கும் ஞானத்தர்
உணர்வு என, ஒளி திகழ் உத்தரீயம்தான்,
தணிவு அருங் கருணையான் கழுத்தில் சாத்திய,
மணி உமிழ் கதிர் என, மார்பில் தோன்றவே; 59

மேவ அருஞ் சுடர் ஒளி விளங்கும் மார்பின் நூல்,
'ஏவரும் - தெரிந்து இனிது உணர்மின் ஈண்டு' என,
தேவரும், முனிவரும், தெரிக்கலா முதல்
மூவரும், தான் என, முடித்தது ஒத்ததே. 60

சுற்றும் நீள் தமனியச் சோதி பொங்க, மேல்
ஒற்றை மா மணி உமிழ் உதரபந்தனம்,
மற்றும் ஓர் அண்டமும், அயனும், வந்து எழ,
பொன் தடந் தாமரை பூத்த போன்றதே. 61

'மண்ணுறு சுடர் மணி வயங்கித் தோன்றிய
கண்ணுறு கருங் கடல் அதனை, கை வளர்
தண் நிறப் பாற்கடல் தழீஇயது ஆம்' என,
வெண் நிறப் பட்டு, ஒளி விளங்கச் சாத்தியே; 62

சலம் வரு தரளமும், தயங்கு நீலமும்,
அலம்வரு நிழல் உமிழ் அம் பொன் கச்சினால்,
குலம் வரு கனக வான் குன்றை நின்று உடன்
வலம் வரு கதிர் என, வாளும் வீக்கியே; 63

முகை விரி சுடர் ஒளி முத்தின் பத்தி வான்
தொகை விரி பட்டிகைச் சுடரும் சுற்றிட,
தகை உடைவாள் எனும் தயங்கு வெய்யவன்
நகை இள வெயில் என, தொங்கல் நாற்றியே; 64

காசொடு கண் நிழல் கஞல, கைவினை
ஏசறு கிம்புரி எயிறு வெண் நிலா
வீசலின், மகரவாய் விளங்கும் வாள் முகம்,
ஆசையை ஒளிகளால் அளந்து காட்டவே; 65

'இனிப் பரந்து உலகினை அளப்பது எங்கு?' என,
தனித்தனி தடுப்பன போலும் சால்பின;
நுனிப்ப அரு நுண் வினைச் சிலம்பு நோன் கழல்,
பனிப் பருந் தாமரைப் பாதம் பற்றவே; 66

இன்னணம் ஒளிர்தர, இமையவர்க்கு எலாம்,
தன்னையே அனையது ஓர் கோலம் தாங்கினான் -
பன்னக மணி விளக்கு அழலும் பாயலுள்
அன்னவர் தவத்தினால் அனந்தல் நீங்கினான். 67

முப் பரம் பொருளிற்குள் முதலை, மூலத்தை,
இப் பரம் துடைத்தவர் எய்தும் இன்பத்தை,
அப்பனை, அப்பினுள் அமிழ்தை, தன்னையே
ஒப்பனை, ஒப்பனை உரைக்க ஒண்ணுமோ? 68

இராமன் தேரில் ஏறி வரும் காட்சி

 
பல் பதினாயிரம் பசுவும், பைம் பொனும்,
எல்லை இல் நிலனொடு, மணிகள் யாவையும்,
நல்லவர்க்கு உதவினான்; நவிலும் நான் மறைச்
செல்வர்கள் வழுத்துற, தேர் வந்து ஏறினான். 69

பொன் திரள் அச்சது; வெள்ளிச் சில்லி புக்கு
உற்றது; வயிரத்தின் உற்ற தட்டது;
சுற்று உறு நவ மணி சுடரும் தோற்றத்தது;
ஒற்றை ஆழிக் கதிர்த் தேரொடு ஒப்பதே. 70

நூல் வரும் தகையன, நுனிக்கும் நோன்மைய,
சால் பெருஞ் செவ்விய, தருமம் ஆதிய
நாலையும் அனையன, புரவி நான்கு, ஒரு
பாலமை உணர்ந்தவன் பக்கம் பூண்டவே. 71

அனையது ஓர் தேரினில், அருணன் நின்றெனப்
பனி வரு மலர்க்கண் நீர்ப் பரதன் கோல் கொள,
குனி சிலைத் தம்பிபின் கூட, ஏனையன்
இனிய பொற் கவரி கால் இயக்க, ஏகினான். 72

மண்ணவரும் விண்ணவரும் மகிழ்தல்

 
அமைவு அரு மேனியான் அழகின் ஆயதோ?
கமை உறு மனத்தினால் கருத வந்ததோ?
சமைவு உற அறிந்திலம்; தக்கது ஆகுக -
இமையவர் ஆயினார் இங்கு உளாருமே! 73

'வரம்பு அறும் உலகினை வலிந்து, மாய்வு இன்றி,
திரம் பயில் அரக்கர்தம் வருக்கம் தேய்வு இன்று
நிரம்பியது' எனக் கொடு, நிறைந்த தேவரும்,
அரம்பையர் குழாத்தொடும், ஆடல் மேயினார். 74

சொரிந்தனர் மலர் மழை; சுண்ணம் தூவினர்;
விரிந்து ஒளிர் காசு, பொன் தூசு, வீசினர்;
பரிந்தனர்; அழகினைப் பருகினார் கொலோ?
தெரிந்திலம், திருநகர் மகளிர் செய்கையே! 75

வள்ளலை நோக்கிய மகளிர், மேனியின்
எள்ள அரும் பூண் எலாம் இரிய, நிற்கின்றார் -
'உள்ளன யாவையும் உதவி, பூண்டவும்
கொள்ளையிற் கொள்க!' எனக் கொடுக்கின்றாரினே. 76

மண்டபம் சேர்ந்து இராமன் முனிவரையும் தந்தையையும் தொழுது அமர்தல்

 
எஞ்சல் இல் உலகத்து உள்ள எறி படை அரச வெள்ளம்
குஞ்சரக் குழாத்தின் சுற்ற, கொற்றவன் இருந்த கூடம்,
வெஞ் சினத் தனுவலானும், மேரு மால் வரையில் சேரும்
செஞ் சுடர்க் கடவுள் என்ன, தேரிடைச் சென்று சேர்ந்தான். 77

இரதம் ஆண்டு இழிந்த பின்னர், இரு மருங்கு, இரண்டு கையும்,
பரதனும் இளைய கோவும், பரிந்தனர் ஏந்த, பைந் தார்
வரதனும் எய்தி, மை தீர் மா தவர்த் தொழுது, நீதி
விரத மெய்த் தாதை பாதம் வணங்கி, மாடு இருந்த வேலை, 78

சீதை மண்டபத்துள் வந்த காட்சி

 
சிலையுடைக் கயல், வாள் திங்கள், ஏந்தி, ஓர் செம் பொன் கொம்பர்,
முலை இடை முகிழ்ப்ப, தேரின் முன் திசை முளைத்தது அன்னாள்,
அலை கடல் பிறந்து, பின்னை அவனியில் தோன்றி, மீள
மலையிடை உதிக்கின்றாள்போல், மண்டபம் அதனில் வந்தாள். 79

திருமண மாட்சி காண, வானவர் எல்லாம் வானத்து வருதல்

 
நன்றி வானவர் எலாம், இருந்த நம்பியை,
'துன்று இருங் கருங் கடல் துவைப்பத் தோன்றிய
மன்றல் அம் கோதையாள் மாலை சூட்டிய
அன்றினும், இன்று உடைத்து அழகு' என்றார் அரோ. 80

ஒலி கடல் உலகினில், உம்பர், நாகரில்,
பொலிவது மற்று இவள் பொற்பு; என்றால், இவள்
மலிதரு மணம் படு திருவை, வாயினால்,
மெலிதரும் உணர்வினேன், என் விளம்புகேன்? 81

இந்திரன் சசியொடும் எய்தினான்; இளஞ்
சந்திர மௌலியும் தையலாளொடும்
வந்தனன்; மலர் அயன் வாக்கினாளுடன்
அந்தரம் புகுந்தனன்; - அழகு காணவே. 82

வசிட்டன் திருமணச் சடங்கைத் துவங்குதல்

 
நீந்த அருங் கடல் என, நிறைந்த வேதியர்,
தோய்ந்த நூல் மார்பினர், சுற்ற, தொல் நெறி
வாய்ந்த நல் வேள்விக்கு, வசிட்டன், மை அற
ஏய்ந்தன கலப்பையோடு இனிதின் எய்தினான். 83

தண்டிலம் விரித்தனன்; தருப்பை சாத்தினன்;
மண்டலம் விதிமுறை வகுத்து, மென் மலர்
கொண்டு நெய் சொரிந்து, எரி குழும், மூட்டினன்;
பண்டு உள மறை நெறி பரவிச் செய்தனன். 84

சீதையும் இராமனும் மணத் தவிசில் வீற்றிருத்தல்

 
மன்றலின் வந்து, மணத் தவிசு ஏறி,
வென்றி நெடுந் தகை வீரனும், ஆர்வத்து
இன் துணை அன்னமும், எய்தி இருந்தார்;
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார். 85

இராமனுக்குச் சீதையைச் சனகன் தாரை வார்த்துக் கொடுத்தல்

 
கோமகன் முன் சனகன், குளிர் நல் நீர்,
'பூமகளும் பொருளும் என, நீ என்
மா மகள் தன்னொடும் மன்னுதி' என்னா,
தாமரை அன்ன தடக் கையின், ஈந்தான். 86

வாழ்த்து ஒலியும், மலர் மாரியும்

 
அந்தணர் ஆசி, அருங் கல மின்னார்
தந்த பல்லாண்டு இசை, தார் முடி மன்னர்
வந்தனை, மா தவர் வாழ்த்து ஒலியோடு
முந்திய சங்கம் முழங்கின மாதோ. 87

வானவர் பூ மழை, மன்னவர் பொன் பூ,
ஏனையர் தூவும் இலங்கு ஒளி முத்தம்,
தான் நகு நாள்மலர், என்று இவை தம்மால்,
மீன் நகு வானின் விளங்கியது, இப் பார். 88

இராமன் சீதையின் கையைப் பற்றி, தீ வலம் வருதல்

 
வெய்ய கனல்தலை வீரனும், அந் நாள்,
மை அறு மந்திரம் மும்மை வழங்கா,
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே,
தையல் தளிர்க் கை தடக் கை பிடித்தான். 89

இடம் படு தோளவனோடு, இயை வேள்வி
தொடங்கிய வெங் கனல் சூழ் வரு போதின்,
மடம் படு சிந்தையள், மாறு பிறப்பின்,
உடம்பு உயிரைத் தொடர்கின்றதை ஒத்தாள். 90

அம்மி மிதித்து, அருந்ததி காணுதல்

 
வலம்கொடு தீயை வணங்கினர், வந்து,
பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி,
இலங்கு ஒளி அம்மி மிதித்து, எதிர் நின்ற
கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார். 91

இராமன் சீதையோடு தன் மாளிகை புகுதல்

 
மற்று உள, செய்வன செய்து, மகிழ்ந்தார்;
முற்றிய மா தவர் தாள் முறை சூடி,
கொற்றவனைக் கழல் கும்பிடலோடும்,
பொற்றொடி கைக் கொடு நல் மனை புக்கான். 92

பல் வகை மங்கல ஆரவாரம்

 
ஆர்த்தன பேரிகள்; ஆர்த்தன சங்கம்;
ஆர்த்தன நான்மறை; ஆர்த்தனர் வானோர்;
ஆர்த்தன பல் கலை; ஆர்த்தன பல்லாண்டு;
ஆர்த்தன வண்டு இனம்; ஆர்த்தன வேலை. 93

இராமனும் சீதையும் தாயர் மூவரையும் வணங்குதல்

 
கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்,
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி,
ஆய தன் அன்னை அடித் துணை சூடி,
தூய சுமித்திரை தாள் தொழலோடும், 94

மாமியர் மகிழ்ந்து சீதைக்குப் பொன் முதலியன அளித்தல்

 
அன்னமும், அன்னவர் அம் பொன் மலர்த் தாள்
சென்னி புனைந்தாள்; சிந்தை உவந்தார்,
கன்னி, அருந்ததி, காரிகை, காணா,
'நல் மகனுக்கு இவள் நல் அணி' என்றார். 95

சங்க வளைக் குயிலைத் தழீஇ நின்றார்,
'அம் கணனுக்கு உரியார் உளர் ஆவார்
பெண்கள் இனிப் பிறர் யார் உளர்?' என்றார்;
கண்கள் களிப்ப, மனங்கள் களிப்பார். 96

'எண் இல கோடி பொன், எல்லை இல் கோடி
வண்ண அருங் கலம், மங்கையர் வெள்ளம்,
கண் அகல் நாடு, உயர் காசொடு தூசும்,
பெண்ணின் அணங்கு அனையாள் பெறுக!' என்றார். 97

இராமன் சீதையொடு பள்ளி சேர்தல்

 
நூற் கடல் அன்னவர் சொற் கடன் நோக்கி,
மால் கடல் பொங்கும் மனத்தவளோடும்,
கார்க் கடல் போல் கருணைக் கடல், பண்டைப்
பாற்கடல் ஒப்பது ஓர் பள்ளி அணைந்தான். 98

வசிட்டன் மங்கல அங்கி வளர்த்தல்

 
பங்குனி உத்தரம் ஆன பகற்போது,
அங்க இருக்கினில், ஆயிர நாமச்
சிங்கம் மணத் தொழில் செய்த திறத்தால்,
மங்கல அங்கி, வசிட்டன் வகுத்தான். 99

பரதன் முதலிய மூவருக்கும் திருமணம் நிகழ்தல்

 
வள்ளல் தனக்கு இளையோர்கள் தமக்கும்
எள்ளல் இல் கொற்றவன், 'எம்பி அளித்த
அள்ளல் மலர்த் திரு அன்னவர் தம்மைக்
கொள்ளும்' எனத் தமரோடு குறித்தான். 100

கொய்ந் நிறை தாரன், குசத்துவசப் பேர்
நெய்ந் நிறை வேலவன், மங்கையர் நேர்ந்தார்;
மைந் நிறை கண்ணியர், வான் உறை நீரார்,
மெய்ந் நிறை மூவரை மூவரும் வேட்டார். 101

தயரதன் மிதிலையில் சில நாள் தங்கியிருத்தல்

 
வேட்டு அவர் வேட்டபின், வேந்தனும், மேல்நாள்
கூட்டிய சீர்த்தி கொடுத்திலன் அல்லால்,
ஈட்டிய மெய்ப் பொருள் உள்ளன எல்லாம்
வேட்டவர் வேட்டவை வேண்டளவு ஈந்தான். 102

ஈந்து, அளவு இல்லது ஓர் இன்பம் நுகர்ந்தே,
ஆய்ந்து உணர் கேள்வி அருந் தவரோடும்,
வேந்தனும், அந் நகர் வைகினன்; மெள்ளத்
தேய்ந்தன நாள் சில; செய்தது உரைப்பாம்: 103

மிகைப் பாடல்கள்

 
எரிகால் சுடர் ஏக, எழுந்த நிலா
வரும் ஈரமும், மா மயில் சானகிதன்
திருமேனியின் மீது சினந்து சுட,
தரியாது, உளம் நொந்து, தனித்து உறைவாள். 2-1

என்று, ஐயன் மனத்தொடும் எண்ணினன்; மற்று
அன்று அங்கு அவை நிற்க, அருட் சனகன்
முன் தந்த தவத்து உறு மொய்குழலாள்
துன்றும் மணம் உற்றது சொல்லிடுவாம். 18-1

கதிரவன் எழலோடும், கடி நகர் இடம் எங்கும்
மதி முக மடவாரும் மைந்தரும் முதியோரும்
விதி புரி செயல் போலும், மேல் உலகினும் இல்லாப்
புதுமையின் உறு, கோலம் புனைதலை முயல்வுற்றார். 21-1

என்றும், நான்முகன் முதல் யாரும், யாவையும்,
நின்ற பேர் இருளினை நீக்கி, நீள் நெறி
சென்று மீளாக் குறி சேரச் சேர்த்திடு
தன் திரு நாமத்தைத் தானும் சாத்தியே. 48-1

சனகனது உபசரிப்பில் யாவரும் மகிழ்ந்திருத்தல்

 
இடம் படு புகழ்ச் சனகர் கோன் இனிது பேண,
கடம் படு களிற்று அரசர் ஆதி, இடை கண்டோர்,
தடம் படு புயத்த சிறு தம்பியர்கள் காறும்,
உடம்பொடு துறக்க நகர் உற்றவரை ஒத்தார். 1

இரவில் காம வேதனை கொண்ட சீதையின் சிந்தையும், சொல்லும்

 
தேட அரு நலத்த புனல் ஆசை தெறலுற்றார்,
மாடு ஓர் தடம் உற்று, அதனை எய்தும் வகை காணார்,
ஈடு அழிவுற, தளர்வொடு ஏமுறுவர் அன்றே?
ஆடக வளைக் குயிலும், அந் நிலையள் ஆனாள். 2

'"உரவு ஏதும் இலார் உயிர் ஈதும்" எனா,
சுரவே புரிவார் உளரோ? கதிரோன்
வரவே, எனை ஆள் உடையான் வருமே! -
இரவே! - கொடியாய், விடியாய்' எனுமால், 3

'கரு நாயிறு போல்பவர் காலொடு போய்,
வரு நாள், அயலே வருவாய்; -மனனே! -
பெரு நாள், உடனே, பிரியாது உழல்வாய்;
ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ? 4

'கனை ஏழ் கடல்போல், கரு நாழிகைதான்,
வினையேன் வினையால் விடியாவிடின், நீ
தனியே பறவாய்; தகவு ஏதும் இலாய் -
பனைமேல் உறைவாய்!-பழி பூணுதியோ? 5

'அயில் வேல் அனல் கால்வன ஆம்; நிழல் ஆய்,
வெயிலே என நீ விரிவாய்; - நிலவே!
செயிர் ஏதும் இலார், உடல் தேய்வு உறுவார்,
உயிர் கோள் உறுவார், உளரோ? உரையாய்! 6

'மன்றல் குளிர் வாசம் வயங்கு அனல் வாய்,
மின் தொத்து, நிலா நகை, வீழ் மலயக்
குன்றில், குல மா முழையில், குடிவாழ்
தென்றற் புலியே! இரை தேடுதியோ? 7

தெருவே திரிவார், ஒரு சேவகனார்,
இரு போதும் விடார்; இது என்னை கொலாம்?
கரு மா முகில் போல்பவர், கன்னியர்பால்
வருவார் உளரோ, குல மன்னவரே? 8

'தெருளா வினை தீயவர் சேர் நரகோ?
அருளான் நெறி ஓடும் அவாவதுவோ?
கருள் ஆர் கடலோ? கரை காண்பு அரிதால்! -
இருளானதுதான் - எனை ஊழிகொலாம்? 9

'பண்ணோ ஒழியா; பகலோ புகுதாது;
எண்ணோ தவிரா; இரவோ விடியாது;
உள் நோவு ஒழியா; உயிரோ அகலா;
கண்ணோ துயிலா; இதுவோ கடனே? 10

இடையே வளை சோர, எழுந்து, விழுந்து,
அடல் ஏய் மகனன் சரம் அஞ்சினையோ?
உடல் ஓய்வுற, நாளும், உறங்கலையால்! -
கடலே! - உரை! நீயும், ஓர் கன்னிகொலாம்?' 11

இரவில் இராமனது நிலை

 
என, இன்னன பன்னி, இருந்து உளைவாள்,
துனி உன்னி, நலம் கொடு சோர்வுறுகால்,
மனைதன்னில், வயங்குறும் வைகு இருள்வாய்,
அனகன் நினைகின்றன யாம் அறைவாம்: 12

'முன் கண்டு, முடிப்ப அரு வேட்கையினால்,
என் கண் துணைகொண்டு, இதயத்து எழுதி,
பின் கண்டும், ஓர் பெண் கரை கண்டிலெனால்; -
மின் கண்டவர் எங்கு அறிவார் வினையே? 13

'திருவே அனையாள் முகமே! தெரியின்,
கருவே, கனியே விளை காம விதைக்கு
எருவே! மதியே! இது என் செய்தவா?
ஒருவேனொடு நீ உறவாகலையோ? 14

'கழியா உயிர் உந்திய காரிகைதன்
விழி போல வளர்ந்தது; வீகில தால்;
அழி போர் இறைவன் பட, அஞ்சியவன்
பழி போல, வளர்ந்தது - பாய் இருளே! 15

'நினையாய் ஒரு கால்; நெடிதோ நெறி தான்?
வினவாதவர் பால், விடை கொண்டிலையோ? -
புன மான் அனையாரொடு போயின என்
மனனே! - எனை நீயும் மறந்தனையோ? 16

'தன் நோக்கு எரி கால், தகை, வாள், அரவின்
பல் நோக்கினது என்பது பண்டு கொலாம்;
என் நோக்கினும், நெஞ்சினும், என்றும் உளார்
மென் நோக்கினதே - கடு வல் விடமே! 17

'கல், ஆர் மலர் சூழ் கழி, வார் பொழிலோடு,
எல்லாம் உள ஆயினும், என் மனமோ -
சொல் ஆர் அமுதின் சுவையோடு இனிது ஆம்
மெல் ஓதியர் தாம் விளையாடு இடமே!' 18

மண முரசு அறையச் சனகன் கட்டளையிடுதல்

 
மானவர் பெருமானும், மண நினைவினன் ஆக,
'"தேன் அமர் குழலாள்தன் திருமணவினை, நாளை;
பூ நகு மணி வாசம், புனை நகர் அணிவீர்!" என்று
ஆனையின்மிசை, யாணர், அணி, முரசு அறைக!' என்றான். 19

நகர மாந்தர் மகிழ்ந்து நகரை அணி செய்தற்கு விரைதல்

 
முரசு அறைதலும், மான முதியவரும், இளையோரும்,
விரை செறி குழலாரும், விரவினர் விரைகின்றார்;
உரை செறி கிளையோடும், உவகையின் உயர்கின்றார்;
கரை தெரிவு அரிது ஆகும் இரவு ஒரு கரை கண்டார். 20

சூரியன் ஒளி வீசி விளங்குதல்

 
'அஞ்சன ஒளியானும், அலர்மிசை உறைவாளும்,
எஞ்சல் இல் மனம், நாளைப் புணர்குவர்' எனலோடும்,
செஞ் சுடர் இருள் கீறி, தினகரன், ஒரு தேர்மேல்,
மஞ்சனை அணி கோலம் காணிய என, வந்தான். 21

நகர மாந்தர் அணிசெய்த வகை

 
தோரணம் நடுவாரும், தூண் உறை பொதிவாரும்,
பூரண குடம் எங்கும் புனை துகில் புனைவாரும்,
கார் அணி நெடு மாடம் கதிர் மணி அணிவாரும்,
ஆரண மறைவாணர்க்கு இன் அமுது அடுவாரும், 22

அன்ன மென் நடையாரும், மழ விடை அனையாரும்,
கன்னி நல் நகர், வாழை கமுகொடு நடுவாரும்,
பன்ன அரு நிறை முத்தம் பரியன தெரிவாரும்,
பொன் அணி அணிவாரும், மணி அணி புனைவாரும், 23

சந்தனம், அகில், நாறும் சாந்தொடு, தெரு எங்கும்
சிந்தினர் திரிவாரும், செழு மலர் சொரிவாரும்,
இந்திரதனு நாண, எரி மணி நிரை மாடத்து,
அந்தம் இல் விலை ஆரக் கோவைகள் அணிவாரும், 24

தளம் கிளர் மணி கால, தவழ் சுடர் உமிழ் தீபம்,
இளங் குளிர் முளை ஆர் நல் பாலிகை இனம், எங்கும்,
விளிம்பு பொன் ஒளி நாற, வெயிலொடு நிலவு ஈனும்,
பளிங்குடை உயர் திண்ணைப் பத்தியின் வைப்பாரும், 25

மந்தர மணி மாட முன்றிலின் வயின் எங்கும்,
அந்தம் இல் ஒளி முத்தின், அகல் நிரை ஒளி நாறி,
அந்தர நெடு வான் மீன் அவண் அலர்குவது என்ன,
பந்தரின் நிழல் வீச, படர் வெயில் கடிவாகும், 26

வயிரம் மின் ஒளி ஈனும், மரகத மணி வேதி,
செயிர் அற ஒளிர் தீபம் சில தியர் கொணர்வாரும்,
வெயில் விரவிய பொன்னின் மிடை கொடி, மதி தோயும்
எயிலினில் நடுவாரும், எரி அகில் இடுவாரும், 27

பண்டியில் நிறை வாசப் பனிமலர் கொணர்வாரும்,
தண்டலை இலையோடு, கனி பல தருவாரும்,
குண்டலம் வெயில் வீசக் குரவைகள் புரிவாரும்,
உண்டை கொள் மத வேழத்து ஓடைகள் அணிவாரும், 28

கலவைகள் புனைவாரும், கலை நல தெரிவாரும்,
மலர் குழல் மலைவாரும், மதிமுகம் மணி ஆடித்
திலகம் முன் இடுவாரும், சிகழிகை அணிவாரும்,
இலவு இதழ் பொலி கோலம் எழில் பெற இடுவாரும், 29

தப்பின மணி காசும், சங்கமும், மயில் அன்னார்
ஒப்பனை புரி போதும், ஊடலின் உகு போதும்,
துப்பு உறழ் இள வாசச் சுண்ணமும், உதிர் தாதும்,
குப்பைகள் என, வாரிக்கொண்டு அயல் களைவாரும், 30

மன்னவர் வருவாரும், மறையவர் நிறைவாரும்,
இன் இசை மணி யாழின் இசை மது நுகர்வாரும்,
சென்னியர் திரிவாரும், விறலியர் செறிவாரும்,
கன்னலின் மண வேலைக் கடிகைகள் தெரிவாரும். 31

கணிகையர் தொகுவாரும், கலை பல பயில்வாரும்,
பணி அணி இன முத்தம், பல இரு நில மன்னர்
அணி நெடு முடி ஒன்று ஒன்று அறைதலின், உகும் அம் பொன்
மணி மலை தொகுமன்னன், வாயிலின் மிடைவாரும், 32

கேடகம் வெயில் வீச, கிளர் அயில் நிலவு ஈன,
கோடு உயர் நெடு விஞ்சைக் குஞ்சரம் அது போல,
ஆடவர் திரிவாரும், அரிவையர் களி கூர,
நாடகம் நவில்வாரும், நகை உயிர் கவர்வாரும், 33

கதிர் மணி ஒளி கால, கவர் பொருள் தெரியாவாறு,
எதிர் எதிர் சுடர் விம்முற்று எழுதலின், இளையோரும்,
மது விரி குழலாரும், மதிலுடை நெடு மாடம்
அது, இது, என ஓராது, அலமரல் உறுவாரும், 34

தேர்மிசை வருவாரும், சிவிகையில் வருவாரும்,
ஊர்தியில் வருவாரும், ஒளி மணி நிரை ஓடைக்
கார்மிசை வருவாரும், கரிணியில் வருவாரும்,
பார்மிசை வருவாரும், பண்டியில் வருவாரும், 35

முத்து அணி அணிவாரும், மணி அணி முனிவாரும்,
பத்தியின் நிமிர் செம் பொற் பல கலன் மகிழ்வாரும்,
தொத்து உறு தொழில் மாலை சுரி குழல் அணிவாரும்,
சித்திர நிரை தோயும் செந் துகில் புனைவாரும், 36

விடம் நிகர் விழியாரும், அமுது எனும் மொழியாரும்,
கிடை புரை இதழாரும், கிளர் நகை வெளியாரும்,
தட முலை பெரியாரும், தனி இடை சிறியாரும்,
பெடை அன நடையாரும், பிடி என வருவாரும், - 37

உள் நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும்
கண்ணுறல் அரிது என்றும், கருதுதல் அரிது அம்மா!
எண்ணுறு சுடர் வானத்து இந்திரன் முடி சூடும்
மண்ணுறு திருநாளே ஒத்தது - அம் மண நாளே. 38

மண மண்டபத்திற்குத் தயரதன் வருதல்

 
கரை தெரிவு அரியது, கனகம் வேய்ந்தது,
வரை என உயர்ந்தது, மணியின் செய்தது,
நிரைவளை மணவினை நிரப்பு மண்டபம்,
அரைசர் தம் அரசனும் அணுகல் மேயினான். 39

வெண்குடை இள நிலா விரிக்க, மின் எனக்
கண் குடை இன மணி வெயிலும் கான்றிட,
பண் குடை வண்டினம் பாட, ஆடல் மா
மண் குடை தூளி விண் மறைப்ப, - ஏகினான். 40

மங்கல முரசுஇனம் மழையின் ஆர்த்தன;
சங்குகள் முரன்றன; தாரை, பேரிகை,
பொங்கின; மறையவர் புகலும் நான்மறை
கங்குலின் ஒலிக்கும் மா கடலும் போன்றதே. 41

பரந்த தேர், களிறு, பாய் புரவி, பண்ணையில்
தரம் தரம் நடந்தன; தானை வேந்தனை
நிரந்தரம் தொழுது எழும் நேமி மன்னவர்,
புரந்தரன் புடை வரும், அமரர் போன்றனர். 42

தயரதன், சனகன், முதலியோர் ஆசனத்து அமர்தல்

 
அனையவன், மண்டபம் அணுகி, அம் பொனின்
புனை மணி ஆதனம் பொலியத் தோன்றினான்;
முனிவரும், மன்னரும், முறையின் ஏறினார்;
சனகனும், தன் கிளை தழுவ, ஏறினான். 43

திருமண மண்டபத்தின் தோற்றம்

 
மன்னரும், முனிவரும், வானுளோர்களும்,
அன்ன மென் நடை அணங்கு அனைய மாதரும்,
துன்னினர் துவன்றலின், சுடர்கள் சூழ்வரும்
பொன் மலை ஒத்தது - அப் பொரு இல் கூடமே. 44

புயல் உள, மின் உள, பொரு இல் மீன் உள,
இயல் மணி இனம் உள, சுடர் இரண்டு உள;
மயன் முதல் திருத்திய மணி செய் மண்டபம்,
அயன் முதல் திருத்திய அண்டம் ஒத்ததே. 45

எண் தவ முனிவரும், இறைவர் யாவரும்,
அண்டரும், பிறரும், புக்கு அடங்கிற்று; ஆதலால்,
மண்டபம் வையமும் வானும் வாய் மடுத்து
உண்டவன் மணி அணி உதரம் ஒத்ததே. 46

தராதலம் முதல் உலகு அனைத்தும் தள்ளுற,
விராவின, குவிந்தன, விளம்ப வேண்டுமோ?
அரா-அணை துறந்து போந்து, அயோத்தி எய்திய
இராகவன் செய்கையை இயம்புவாம் அரோ: 47

இராமன் நீராடி மணக்கோலம் புனைதல்

 
சங்கு இனம் தவழ் கடல் ஏழில் தந்தவும்,
சிங்கல் இல் அரு மறை தெரிந்த தீர்த்தமும்,
கங்கையே முதலவும், கலந்த நீரினால்,
மங்கல, மஞ்சனம் மரபின் ஆடியே, 48

கோது அறு தவத்துத் தம் குலத்துளோர் தொழும்
ஆதி அம் சோதியை அடி வணங்கினான் -
காது இயல், கயல் விழிக் கன்னிமார்களை,
வேதியர்க்கு அரு மறை விதியின் நல்கியே. 49

அழி வரு தவத்தினோடு, அறத்தை ஆக்குவான்,
ஒழிவு அருங் கருணை ஓர் உருவு கொண்டென,
எழுத அரு வடிவு கொண்டு, இருண்ட மேகத்தைத்
தழுவிய நிலவு என, கலவை சாத்தியே; 50

மங்கல முழு நிலா மலர்ந்த திங்களை,
பொங்கு இருங் கருங் கடல் பூத்தது ஆம் என,
செங்கிடைச் சிகழிகை, செம் பொன் மாலையும்,
தொங்கலும், துயல்வர, சுழியம் சூடியே; 51

ஏதாம் இல் இரு குழை, இரவு, தன் பகல்,
காதல் கண்டு உண்ர்ந்தன, கதிரும் திங்களும்,
சீதைதன் கருத்தினைச் செவியின் உள்ளுற,
தூது சென்று, உரைப்பன போன்று தோன்றவே; 52

கார் விடக் கறையுடை, கணிச்சி, வானவன்
வார் சடைப் புடையின், ஓர் மதி மிலைச்ச, தான்
சூர் சுடர்க் குலம் எலாம் சூடினான் என,
வீர பட்டத்தொடு திலகம் மின்னவே; 53

சக்கரத்து அயல் வரும் சங்கம் ஆம் என
மிக்கு ஒளிர் கழுத்து அணி தரள வெண் கொடி,
மொய்க் கருங் குழலினாள், முறுவல் உள்ளுறப்
புக்கன நிறைந்து, மேல் பொடிப்ப போன்றவே. 54

பந்தி செய் வயிரங்கள் பொறியின் பாடு உற
அந்தம் இல் சுடர் மணி அழலின் தோன்றலால்,
சுந்தரத் தோள் அணி வலயம், தொல்லை நாள்
மந்தரம் சுற்றிய அரவை மானுமே. 55

கோவையின் பெரு வட முத்தம் கோத்தன,
காவல் செய் தடக் கையின் நடுவண் காந்துவ,
'மூவகை உலகிற்கும் முதல்வன் ஆம்' என,
ஏ வரும் பெருங் குறி இட்ட போன்றவே. 56

மாண்ட பொன் மணி அணி வலயம் வந்து, எதிர்
வேண்டினர்க்கு உதவுவான் விரும்பி, கற்பகம்
ஈண்டு, தன் கொம்பிடை ஈன்றது ஆம் என,
காண் தகு தடக் கையில், கடகம் மின்னவே; 57

தேனுடை மலர்மகள் திளைக்கும் மார்பினில்,
தான் இடை விளங்கிய தகையின் ஆரம்தான்,
மீனொடு சுடர் விட விளங்கும் மேகத்து,
வான் இடு வில் என, வயங்கிக் காட்டவே; 58

நணுகவும் அரியதா நடக்கும் ஞானத்தர்
உணர்வு என, ஒளி திகழ் உத்தரீயம்தான்,
தணிவு அருங் கருணையான் கழுத்தில் சாத்திய,
மணி உமிழ் கதிர் என, மார்பில் தோன்றவே; 59

மேவ அருஞ் சுடர் ஒளி விளங்கும் மார்பின் நூல்,
'ஏவரும் - தெரிந்து இனிது உணர்மின் ஈண்டு' என,
தேவரும், முனிவரும், தெரிக்கலா முதல்
மூவரும், தான் என, முடித்தது ஒத்ததே. 60

சுற்றும் நீள் தமனியச் சோதி பொங்க, மேல்
ஒற்றை மா மணி உமிழ் உதரபந்தனம்,
மற்றும் ஓர் அண்டமும், அயனும், வந்து எழ,
பொன் தடந் தாமரை பூத்த போன்றதே. 61

'மண்ணுறு சுடர் மணி வயங்கித் தோன்றிய
கண்ணுறு கருங் கடல் அதனை, கை வளர்
தண் நிறப் பாற்கடல் தழீஇயது ஆம்' என,
வெண் நிறப் பட்டு, ஒளி விளங்கச் சாத்தியே; 62

சலம் வரு தரளமும், தயங்கு நீலமும்,
அலம்வரு நிழல் உமிழ் அம் பொன் கச்சினால்,
குலம் வரு கனக வான் குன்றை நின்று உடன்
வலம் வரு கதிர் என, வாளும் வீக்கியே; 63

முகை விரி சுடர் ஒளி முத்தின் பத்தி வான்
தொகை விரி பட்டிகைச் சுடரும் சுற்றிட,
தகை உடைவாள் எனும் தயங்கு வெய்யவன்
நகை இள வெயில் என, தொங்கல் நாற்றியே; 64

காசொடு கண் நிழல் கஞல, கைவினை
ஏசறு கிம்புரி எயிறு வெண் நிலா
வீசலின், மகரவாய் விளங்கும் வாள் முகம்,
ஆசையை ஒளிகளால் அளந்து காட்டவே; 65

'இனிப் பரந்து உலகினை அளப்பது எங்கு?' என,
தனித்தனி தடுப்பன போலும் சால்பின;
நுனிப்ப அரு நுண் வினைச் சிலம்பு நோன் கழல்,
பனிப் பருந் தாமரைப் பாதம் பற்றவே; 66

இன்னணம் ஒளிர்தர, இமையவர்க்கு எலாம்,
தன்னையே அனையது ஓர் கோலம் தாங்கினான் -
பன்னக மணி விளக்கு அழலும் பாயலுள்
அன்னவர் தவத்தினால் அனந்தல் நீங்கினான். 67

முப் பரம் பொருளிற்குள் முதலை, மூலத்தை,
இப் பரம் துடைத்தவர் எய்தும் இன்பத்தை,
அப்பனை, அப்பினுள் அமிழ்தை, தன்னையே
ஒப்பனை, ஒப்பனை உரைக்க ஒண்ணுமோ? 68

இராமன் தேரில் ஏறி வரும் காட்சி

 
பல் பதினாயிரம் பசுவும், பைம் பொனும்,
எல்லை இல் நிலனொடு, மணிகள் யாவையும்,
நல்லவர்க்கு உதவினான்; நவிலும் நான் மறைச்
செல்வர்கள் வழுத்துற, தேர் வந்து ஏறினான். 69

பொன் திரள் அச்சது; வெள்ளிச் சில்லி புக்கு
உற்றது; வயிரத்தின் உற்ற தட்டது;
சுற்று உறு நவ மணி சுடரும் தோற்றத்தது;
ஒற்றை ஆழிக் கதிர்த் தேரொடு ஒப்பதே. 70

நூல் வரும் தகையன, நுனிக்கும் நோன்மைய,
சால் பெருஞ் செவ்விய, தருமம் ஆதிய
நாலையும் அனையன, புரவி நான்கு, ஒரு
பாலமை உணர்ந்தவன் பக்கம் பூண்டவே. 71

அனையது ஓர் தேரினில், அருணன் நின்றெனப்
பனி வரு மலர்க்கண் நீர்ப் பரதன் கோல் கொள,
குனி சிலைத் தம்பிபின் கூட, ஏனையன்
இனிய பொற் கவரி கால் இயக்க, ஏகினான். 72

மண்ணவரும் விண்ணவரும் மகிழ்தல்

 
அமைவு அரு மேனியான் அழகின் ஆயதோ?
கமை உறு மனத்தினால் கருத வந்ததோ?
சமைவு உற அறிந்திலம்; தக்கது ஆகுக -
இமையவர் ஆயினார் இங்கு உளாருமே! 73

'வரம்பு அறும் உலகினை வலிந்து, மாய்வு இன்றி,
திரம் பயில் அரக்கர்தம் வருக்கம் தேய்வு இன்று
நிரம்பியது' எனக் கொடு, நிறைந்த தேவரும்,
அரம்பையர் குழாத்தொடும், ஆடல் மேயினார். 74

சொரிந்தனர் மலர் மழை; சுண்ணம் தூவினர்;
விரிந்து ஒளிர் காசு, பொன் தூசு, வீசினர்;
பரிந்தனர்; அழகினைப் பருகினார் கொலோ?
தெரிந்திலம், திருநகர் மகளிர் செய்கையே! 75

வள்ளலை நோக்கிய மகளிர், மேனியின்
எள்ள அரும் பூண் எலாம் இரிய, நிற்கின்றார் -
'உள்ளன யாவையும் உதவி, பூண்டவும்
கொள்ளையிற் கொள்க!' எனக் கொடுக்கின்றாரினே. 76

மண்டபம் சேர்ந்து இராமன் முனிவரையும் தந்தையையும் தொழுது அமர்தல்

 
எஞ்சல் இல் உலகத்து உள்ள எறி படை அரச வெள்ளம்
குஞ்சரக் குழாத்தின் சுற்ற, கொற்றவன் இருந்த கூடம்,
வெஞ் சினத் தனுவலானும், மேரு மால் வரையில் சேரும்
செஞ் சுடர்க் கடவுள் என்ன, தேரிடைச் சென்று சேர்ந்தான். 77

இரதம் ஆண்டு இழிந்த பின்னர், இரு மருங்கு, இரண்டு கையும்,
பரதனும் இளைய கோவும், பரிந்தனர் ஏந்த, பைந் தார்
வரதனும் எய்தி, மை தீர் மா தவர்த் தொழுது, நீதி
விரத மெய்த் தாதை பாதம் வணங்கி, மாடு இருந்த வேலை, 78

சீதை மண்டபத்துள் வந்த காட்சி

 
சிலையுடைக் கயல், வாள் திங்கள், ஏந்தி, ஓர் செம் பொன் கொம்பர்,
முலை இடை முகிழ்ப்ப, தேரின் முன் திசை முளைத்தது அன்னாள்,
அலை கடல் பிறந்து, பின்னை அவனியில் தோன்றி, மீள
மலையிடை உதிக்கின்றாள்போல், மண்டபம் அதனில் வந்தாள். 79

திருமண மாட்சி காண, வானவர் எல்லாம் வானத்து வருதல்

 
நன்றி வானவர் எலாம், இருந்த நம்பியை,
'துன்று இருங் கருங் கடல் துவைப்பத் தோன்றிய
மன்றல் அம் கோதையாள் மாலை சூட்டிய
அன்றினும், இன்று உடைத்து அழகு' என்றார் அரோ. 80

ஒலி கடல் உலகினில், உம்பர், நாகரில்,
பொலிவது மற்று இவள் பொற்பு; என்றால், இவள்
மலிதரு மணம் படு திருவை, வாயினால்,
மெலிதரும் உணர்வினேன், என் விளம்புகேன்? 81

இந்திரன் சசியொடும் எய்தினான்; இளஞ்
சந்திர மௌலியும் தையலாளொடும்
வந்தனன்; மலர் அயன் வாக்கினாளுடன்
அந்தரம் புகுந்தனன்; - அழகு காணவே. 82

வசிட்டன் திருமணச் சடங்கைத் துவங்குதல்

 
நீந்த அருங் கடல் என, நிறைந்த வேதியர்,
தோய்ந்த நூல் மார்பினர், சுற்ற, தொல் நெறி
வாய்ந்த நல் வேள்விக்கு, வசிட்டன், மை அற
ஏய்ந்தன கலப்பையோடு இனிதின் எய்தினான். 83

தண்டிலம் விரித்தனன்; தருப்பை சாத்தினன்;
மண்டலம் விதிமுறை வகுத்து, மென் மலர்
கொண்டு நெய் சொரிந்து, எரி குழும், மூட்டினன்;
பண்டு உள மறை நெறி பரவிச் செய்தனன். 84

சீதையும் இராமனும் மணத் தவிசில் வீற்றிருத்தல்

 
மன்றலின் வந்து, மணத் தவிசு ஏறி,
வென்றி நெடுந் தகை வீரனும், ஆர்வத்து
இன் துணை அன்னமும், எய்தி இருந்தார்;
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார். 85

இராமனுக்குச் சீதையைச் சனகன் தாரை வார்த்துக் கொடுத்தல்

 
கோமகன் முன் சனகன், குளிர் நல் நீர்,
'பூமகளும் பொருளும் என, நீ என்
மா மகள் தன்னொடும் மன்னுதி' என்னா,
தாமரை அன்ன தடக் கையின், ஈந்தான். 86

வாழ்த்து ஒலியும், மலர் மாரியும்

 
அந்தணர் ஆசி, அருங் கல மின்னார்
தந்த பல்லாண்டு இசை, தார் முடி மன்னர்
வந்தனை, மா தவர் வாழ்த்து ஒலியோடு
முந்திய சங்கம் முழங்கின மாதோ. 87

வானவர் பூ மழை, மன்னவர் பொன் பூ,
ஏனையர் தூவும் இலங்கு ஒளி முத்தம்,
தான் நகு நாள்மலர், என்று இவை தம்மால்,
மீன் நகு வானின் விளங்கியது, இப் பார். 88

இராமன் சீதையின் கையைப் பற்றி, தீ வலம் வருதல்

 
வெய்ய கனல்தலை வீரனும், அந் நாள்,
மை அறு மந்திரம் மும்மை வழங்கா,
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே,
தையல் தளிர்க் கை தடக் கை பிடித்தான். 89

இடம் படு தோளவனோடு, இயை வேள்வி
தொடங்கிய வெங் கனல் சூழ் வரு போதின்,
மடம் படு சிந்தையள், மாறு பிறப்பின்,
உடம்பு உயிரைத் தொடர்கின்றதை ஒத்தாள். 90

அம்மி மிதித்து, அருந்ததி காணுதல்

 
வலம்கொடு தீயை வணங்கினர், வந்து,
பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி,
இலங்கு ஒளி அம்மி மிதித்து, எதிர் நின்ற
கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார். 91

இராமன் சீதையோடு தன் மாளிகை புகுதல்

 
மற்று உள, செய்வன செய்து, மகிழ்ந்தார்;
முற்றிய மா தவர் தாள் முறை சூடி,
கொற்றவனைக் கழல் கும்பிடலோடும்,
பொற்றொடி கைக் கொடு நல் மனை புக்கான். 92

பல் வகை மங்கல ஆரவாரம்

 
ஆர்த்தன பேரிகள்; ஆர்த்தன சங்கம்;
ஆர்த்தன நான்மறை; ஆர்த்தனர் வானோர்;
ஆர்த்தன பல் கலை; ஆர்த்தன பல்லாண்டு;
ஆர்த்தன வண்டு இனம்; ஆர்த்தன வேலை. 93

இராமனும் சீதையும் தாயர் மூவரையும் வணங்குதல்

 
கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்,
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி,
ஆய தன் அன்னை அடித் துணை சூடி,
தூய சுமித்திரை தாள் தொழலோடும், 94

மாமியர் மகிழ்ந்து சீதைக்குப் பொன் முதலியன அளித்தல்

 
அன்னமும், அன்னவர் அம் பொன் மலர்த் தாள்
சென்னி புனைந்தாள்; சிந்தை உவந்தார்,
கன்னி, அருந்ததி, காரிகை, காணா,
'நல் மகனுக்கு இவள் நல் அணி' என்றார். 95

சங்க வளைக் குயிலைத் தழீஇ நின்றார்,
'அம் கணனுக்கு உரியார் உளர் ஆவார்
பெண்கள் இனிப் பிறர் யார் உளர்?' என்றார்;
கண்கள் களிப்ப, மனங்கள் களிப்பார். 96

'எண் இல கோடி பொன், எல்லை இல் கோடி
வண்ண அருங் கலம், மங்கையர் வெள்ளம்,
கண் அகல் நாடு, உயர் காசொடு தூசும்,
பெண்ணின் அணங்கு அனையாள் பெறுக!' என்றார். 97

இராமன் சீதையொடு பள்ளி சேர்தல்

 
நூற் கடல் அன்னவர் சொற் கடன் நோக்கி,
மால் கடல் பொங்கும் மனத்தவளோடும்,
கார்க் கடல் போல் கருணைக் கடல், பண்டைப்
பாற்கடல் ஒப்பது ஓர் பள்ளி அணைந்தான். 98

வசிட்டன் மங்கல அங்கி வளர்த்தல்

 
பங்குனி உத்தரம் ஆன பகற்போது,
அங்க இருக்கினில், ஆயிர நாமச்
சிங்கம் மணத் தொழில் செய்த திறத்தால்,
மங்கல அங்கி, வசிட்டன் வகுத்தான். 99

பரதன் முதலிய மூவருக்கும் திருமணம் நிகழ்தல்

 
வள்ளல் தனக்கு இளையோர்கள் தமக்கும்
எள்ளல் இல் கொற்றவன், 'எம்பி அளித்த
அள்ளல் மலர்த் திரு அன்னவர் தம்மைக்
கொள்ளும்' எனத் தமரோடு குறித்தான். 100

கொய்ந் நிறை தாரன், குசத்துவசப் பேர்
நெய்ந் நிறை வேலவன், மங்கையர் நேர்ந்தார்;
மைந் நிறை கண்ணியர், வான் உறை நீரார்,
மெய்ந் நிறை மூவரை மூவரும் வேட்டார். 101

தயரதன் மிதிலையில் சில நாள் தங்கியிருத்தல்

 
வேட்டு அவர் வேட்டபின், வேந்தனும், மேல்நாள்
கூட்டிய சீர்த்தி கொடுத்திலன் அல்லால்,
ஈட்டிய மெய்ப் பொருள் உள்ளன எல்லாம்
வேட்டவர் வேட்டவை வேண்டளவு ஈந்தான். 102

ஈந்து, அளவு இல்லது ஓர் இன்பம் நுகர்ந்தே,
ஆய்ந்து உணர் கேள்வி அருந் தவரோடும்,
வேந்தனும், அந் நகர் வைகினன்; மெள்ளத்
தேய்ந்தன நாள் சில; செய்தது உரைப்பாம்: 103

மிகைப் பாடல்கள்

 
எரிகால் சுடர் ஏக, எழுந்த நிலா
வரும் ஈரமும், மா மயில் சானகிதன்
திருமேனியின் மீது சினந்து சுட,
தரியாது, உளம் நொந்து, தனித்து உறைவாள். 2-1

என்று, ஐயன் மனத்தொடும் எண்ணினன்; மற்று
அன்று அங்கு அவை நிற்க, அருட் சனகன்
முன் தந்த தவத்து உறு மொய்குழலாள்
துன்றும் மணம் உற்றது சொல்லிடுவாம். 18-1

கதிரவன் எழலோடும், கடி நகர் இடம் எங்கும்
மதி முக மடவாரும் மைந்தரும் முதியோரும்
விதி புரி செயல் போலும், மேல் உலகினும் இல்லாப்
புதுமையின் உறு, கோலம் புனைதலை முயல்வுற்றார். 21-1

என்றும், நான்முகன் முதல் யாரும், யாவையும்,
நின்ற பேர் இருளினை நீக்கி, நீள் நெறி
சென்று மீளாக் குறி சேரச் சேர்த்திடு
தன் திரு நாமத்தைத் தானும் சாத்தியே. 48-1