கம்பராமாயணம்/யுத்த காண்டம்/இராவணன் களம் காண் படலம்

விக்கிமூலம் இலிருந்து

போர் விரர்க்கு விருந்து அளிக்க இராவணன் முற்படல்

பொருந்து பொன் பெருங் கோயிலுள், போர்த் தொழில் வருந்தினர்க்கு, தம் அன்பினின் வந்தவர்க்கு, அருந்துதற்கு அமைவு ஆயின ஆக்குவான், விருந்து அமைக்க மிகுகின்ற வேட்கையான். 1

வான நாட்டை 'வருக!' என, வல் விரைந்து, ஏனை நாட்டவரோடும் வந்து எய்தினார்; 'ஆன நாட்டு அந்த போகம் அமைத்திர்; மற்று ஊனம் நாட்டின், இழத்திர் உயிர்' என்றான். 2

போகப் பொருள்களுடன் தேவ மகளிர் வருதல்

நறவும் ஊனும், நவை அற நல்லன பிறவும், ஆடையும், சாந்தமும், பெய்ம் மலர்த் திறமும், நானப் புனலொடு சேக்கையும், புறமும் உள்ளும் நிறையப் புகுந்தவால். 3

நானம் நெய் நன்கு உரைத்து, நறும் புனல் ஆன கோது அற ஆட்டி, அமுதொடும் பானம் ஊட்டி, சயனம் பரப்புவான், வான நாடியர் யாவரும் வந்தனர். 4

அரக்க வீரர் போகம் நுகர்தல்

பாடுவார்கள்; பயில் நடம் பாவகத்து ஆடுவார்கள்; அமளியில் இன்புறக் கூடுவார்கள்; முதலும் குறைவு அறத் தேடினார் என, பண்ணையின் சேர்ந்ததால். 5

அரைசர் ஆதி, அடியவர் அந்தமா, வரை செய் மேனி இராக்கதர் வந்துளார், விரைவின் இந்திர போகம் விளைவுற, கரை இலாத பெரு வளம் கண்ணினார். 6

இராவணனிடம் தூதுவர் வந்து, மூலபலப் படை அழிந்தமையைத் தெரிவித்தல்

இன்ன தன்மை அமைந்த இராக்கதர் மன்னன் மாடு வந்து எய்தி வணங்கினார், அன்ன சேனை களம் பட்ட ஆறு எலாம் துன்னு தூதர் செவியிடைச் சொல்லுவார்: 7

நடுங்குகின்ற உடலினர், நா உலர்ந்து ஒடுங்குகின்ற உயிர்ப்பினர், உள் அழிந்து இடுங்குகின்ற விழியினர், ஏங்கினார், பிடுங்குகின்ற உணர்வினர், பேசுவார்: 8

'இன்று யார் விருந்து இங்கு உண்பார்?- இகல் முகத்து இமையோர் தந்த வென்றியாய்!-ஏவச் சென்ற ஆயிர வெள்ளச் சேனை நின்றுளார் புறத்தது ஆக, இராமன் கை நிமிர்ந்த சாபம் ஒன்றினால், நான்கு மூன்று கடிகையின் உலந்தது' என்றார். 9

'வலிக் கடன் வான் உளோரைக் கொண்டு, நீ வகுத்த போகம், "கலிக் கடன் அளிப்பென்" என்று நிருதர்க்குக் கருதினாயேல், பலிக் கடன் அளிக்கற்பாலை அல்லது, உன் குலத்தின் பாலோர் ஒலிக் கடல் உலகத்து இல்லை; ஊர் உளார் உளரே உள்ளார் 10

இராவணன் திகைத்து தூதரின் பேச்சை ஐயுற்றுக் கூறுதல்

ஈட்ட அரும் உவகை ஈட்டி இருந்தவன், இசைத்த மாற்றம் கேட்டலும், வெகுளியோடு துணுக்கமும் இழவும் கிட்டி, ஊட்டு அரக்கு அனைய செங் கண் நெருப்பு உக, உயிர்ப்பு வீங்க, தீட்டிய படிவம் என்னத் தோன்றினன், திகைத்த நெஞ்சன். 11

'என்னினும் வலியர் ஆன இராக்கதர் யாண்டும் வீயார்; உன்னினும், உலப்பு இலாதார்; உவரியின் மணலின் மேலார்; "பின் ஒரு பெயரும் இன்றி மாண்டனர்" என்று சொன்ன இந் நிலை இதுவோ? பொய்ம்மை விளம்பினீர் போலும்' என்றான் 12

மாலியவான், 'தூதுவர் பொய் உரையார்; நீ பெரியோர் செய்கையை மேற்கொள்' எனல்

கேட்டு அயல் இருந்த மாலி, 'ஈது ஒரு கிழமைத்து ஆமோ? ஓட்டு உறு தூதர் பொய்யே உரைப்பரோ? உலகம் யாவும் வீட்டுவது இமைப்பின் அன்றே, வீங்கு எரி? விரித்த எல்லாம் மாட்டுவன் ஒருவன் அன்றே, இறுதியில் மனத்தால்?' என்றான். 13

'"அளப்ப அரும் உலகம் யாவும் அளித்துக் காத்து அழிக்கின்றான் தன் உளப் பெருந் தகைமை தன்னால் ஒருவன்" என்று உண்மை வேதம் கிளப்பது கேட்டும் அன்றே? "அரவின்மேல் கிடந்து, மேல் நாள், முளைத்த பேர் இராமன்" என்ற வீடணன் மொழி பொய்த்து ஆமோ? 14

'ஒன்று இடின் அதனை உண்ணும் உலகத்தின் உயிர்க்கு ஒன்றாத நின்றன எல்லாம் பெய்தால், உடன் நுங்கு நெருப்பும் காண்டும், குன்றொடு மரனும், புல்லும், பல் உயிர்க் குழுவும், கொல்லும் வன் திறல் காற்றும் காண்டும்; வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ ? 15

'பட்டதும் உண்டே உன்னை, இந்திரச் செல்வம்; பற்று விட்டது மெய்ம்மை; ஐய! மீட்டு ஒரு வினையம் இல்லை; கெட்டது, உன் பொருட்டினாலே, நின்னுடைக் கேளிர் எல்லாம்; சிட்டது செய்தி' என்றான்; அதற்கு அவன் சீற்றம் செய்தான். 16

மாலியவான் உரையால் சீற்றமுற்ற இராவணன், 'வெற்றி எனதே' எனல்

'இலக்குவன் தன்னை வேலால் எறிந்து, உயிர் கூற்றுக்கு ஈந்தேன்; அலக்கணில் தலைவர் எல்லாம் அழுந்தினர்; அதனைக் கண்டால், உலக்குமால் இராமன்; பின்னர் உயிர்ப் பொறை உகவான்; உற்ற மலக்கம் உண்டாகின் ஆக; வாகை என் வயத்தது' என்றான். 17

மாருதி கொணர்ந்த மருந்தால் இலக்குவன் உயிர் பெற்றான் எனத் தூதர் உரைத்தல்

ஆண்டு அது கண்டு நின்ற தூதுவர், ஐய! மெய்யே மீண்டது, அவ் அளவின் ஆவி, மாருதி மருந்து மெய்யில் தீண்டவும்; தாழ்த்தது இல்லை; யாரும் அச் செங்கணானைப் பூண்டனர் தழுவிப் புக்கார்; காணுதி போதி' என்றார். 18

இராவணன் கோபுரத்தின் மீது ஏறி, களத்தைக் காணுதல்

தேறிலன் ஆதலானே, மறுகுறு சிந்தை தேற, ஏறினன், கனகத்து ஆரைக் கோபுரத்து உம்பர் எய்தி, ஊறின சேனை வெள்ளம் உலந்த பேர் உண்மை எல்லாம், காறின உள்ளம் நோவ, கண்களால் தெரியக் கண்டான். 19

கொய் தலைப் பூசல் பட்டோ ர் குலத்தியர் குவளை தோற்று நெய்தலை வென்ற வாள்-கண் குமுதத்தின் நீர்மை காட்ட, கை தலை வைத்த பூசல் கடலொடு நிமிரும்காலை, செய்தலை உற்ற ஓசைச் செயலதும் செவியின் கேட்டான். 20

எண்ணும் நீர் கடந்த யானைப் பெரும் பிணம் ஏந்தி, யாணர் மண்ணின் நீர் அளவும் கல்லி, நெடு மலை பறித்து, மண்டும் புண்ணின் நீர் ஆறும், பல் பேய்ப் புதுப் புனல் ஆடும் பொம்மல், கண்ணின் நீர் ஆறும், மாறாக் கருங் கடல் மடுப்பக் கண்டான் 21

குமிழி நீரோடும், சோரிக் கனலொடும், கொழிக்கும் கண்ணான், தமிழ் நெறி வழக்கம் அன்ன தனிச் சிலை வழங்கச் சாய்ந்தார் அமிழ் பெருங் குருதி வெள்ளம் ஆற்று வாய்முகத்தின் தேக்கி, உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம் வந்து உடற்றக் கண்டான். 22

விண்களில் சென்ற வன் தோள் கணவரை, அலகை வெய்ய புண்களில் கைகள் நீட்டி, புது நிணம் கவர்வ நோக்கி, மண்களில் தொடர்ந்து, வானில் பிடித்து, வள் உகிரின் மானக் கண்களைச் சூன்று நீக்கும் அரக்கியர் குழாமும் கண்டான். 23

இராவணன் சோகமும் கோபமும் கொண்டு கோபுரத்திலிருந்து இறங்கி, அரசிருக்கை மண்டபத்தை அடைதல்

விண் பிளந்து ஒல்க ஆர்த்த வானரர் வீக்கம் கண்டான்; மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான்; கண் பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் கண்டான்; புண் பிளந்தனைய நெஞ்சன் கோபுரத்து இழிந்து போந்தான். 24

நகை பிறக்கின்ற வாயன், நாக்கொடு கடை வாய் நக்கப் புகை பிறக்கின்ற மூக்கன், பொறி பிறக்கின்ற கண்ணன், மிகை பிறக்கின்ற நெஞ்சன், வெஞ் சினத் தீமேல் வீங்கி, சிகை பிறக்கின்ற சொல்லன், அரசியல் இருக்கை சேர்ந்தான் 25

மிகைப் பாடல்கள்

அலக்கண் எய்தி அமரர் அழிந்திட, உலக்க வானர வீரரை ஓட்டி, அவ் இலக்குவன் தனை வீட்டி, இராவணன் துலக்கம் எய்தினன், தோம் இல் களிப்பினே. (இந்த பாடல் படலத்தின் முதற் செய்யுளாக உள்ளது)

முற்று இயல் சிலை வலாளன் மொய் கணை துமிப்ப, ஆவி பெற்று, இயல் பெற்றி பெற்றாலென்ன, வாள் அரக்கர் யாக்கை, சிற்றியல் குறுங் கால் ஓரிக் குரல் கொளை இசையா, பல் பேய் கற்று இயல் பாணி கொட்ட, களி நடம் பயிலக் கண்டான். 21-1