கம்பராமாயணம்/யுத்த காண்டம்/களியாட்டுப் படலம்

விக்கிமூலம் இலிருந்து

அயன்படையால் பகை ஒழிந்தது என்று உவந்த இராவணன் மகளிரின் களியாட்டம் காணுதல்

இன்னது இத் தலையது ஆக, இராவணன் எழுந்து பொங்கி, தன்னையும் கடந்து நீண்ட உவகையன், சமைந்த கீதம் கின்னரர் முதலோர் பாட, முகத்திடைக் கிடந்த கெண்டைக் கன்னி நன் மயில் அன்னாரை நெடுங் களியாட்டம் கண்டான். 1

அரம்பையர், விஞ்சை மாதர், அரக்கியர், அவுணர் மாதர், குரும்பை அம் கொங்கை நாகர் கோதையர், இயக்கர் கோது இல் கரும்பினும் இனிய சொல்லார், சித்தர் தம் கன்னிமார்கள், வரம்பு அறு கம்மையோர்கள், மயில்-குலம் மருள, வந்தார். 2

மேனகை, இலங்குவாட் கண் திலோத்தமை, அரம்பை, மெல்லென் தேன் நகு மழலை இன் சொல் உருப்பசி, முதலாம் தெய்வ வானக மகளிர் வந்தார் - சில் அரிச் சதங்கை பம்ப, ஆனகம், முரசம், சங்கம், முருட்டொடும் இரட்ட, ஆடி. 3

தோடு உண்ட சுருளும், தூங்கும் குழைகளும், சுருளின் தோய்ந்த ஏடு உண்ட பசும் பொன் பூவும், திலதமும், இலவச் செவ் வாய் மூடுண்ட முறுவல் முத்தும், முள்ளுண்ட முளரிச் செங்கண், காடு உண்டு பரந்தது என்ன, முனிந்தது - கறை வெண் திங்கள். 4

முளைக் கொழுங் கதிரின் கற்றை முறுவல் வெண் நிலவும், மூரி ஒளிப் பிழம்பு ஒழுகும் பூணின் உமிழ் இள வெயிலும், ஒண் பொன் விளக்கையும் விளக்கும் மேனி மிளிர் கதிர்ப் பரப்பும், வீச, வளைத்த பேர் இருளும், கண்டோ ர் அறிவு என, மருளும் மாதோ. 5

கள் உண்ட வேகம் பரத்தலினால், களியாட்டு அயரும் மடவாரிடத்துத் தோன்றிய நிலைமைகள்

நல் பெருங் கல்விச் செல்வம் நவை அறு நெறியை நண்ணி, முன் பயன் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி, முற்றி, பின் பயன் உணர்தல் தேற்றாப் பேதைபால், வஞ்சன் செய்த கற்பனை என்ன ஓடிக் கலந்தது, கள்ளின் வேகம். 6

பல பட முறுவல் வந்து பரந்தன; பனித்த, மெய் வேர்; இலவு இதழ் துடித்த; முல்லை எயிறு வெண் நிலவை ஈன்ற; கொலை பயில் நயன வேல்கள் கொழுங் கடை சிவந்த; கொற்றச் சிலை நிகர் புருவம் நெற்றிக் குனித்தன; விளர்த்த செவ் வாய். 7

கூந்தல் அம் பாரக் கற்றைக் கொந்தளக் கோலக் கொண்டல் ஏந்து அகல் அல்குல் தேரை இகந்துபோய் இறங்க, யாணர்ப் பூந் துகிலோடும் பூசல் மேகலை, சிலம்பு பூண்ட மாந் தளிர் எய்த, நொய்தின் மயங்கினர்-மழலைச் சொல்லார். 8

கோத்த மேகலையினோடும் துகில் மணிக் குறங்கைக் கூட, காத்தன, கூந்தற் கற்றை, அற்றம், அத் தன்மை கண்டு - வேத்தவை, 'கீழ் உளோர்கள் கீழ்மையே விளைத்தார்; மேலாம் சீர்த்தவர் செய்யத் தக்க கருமமே செய்தார்' என்ன. 9

பாணியின் தள்ளி, கால மாத்திரைப் படாது பட்ட நாணியின் முறையின் கூடாது, ஒரு வழி நடையின் செல்லும் ஆணியின் அழிந்த பாடல் நவின்றனர் - அனங்க வேள்தன் தூணியின் அடைத்த அம்பின் கொடுந் தொழில் துறந்த கண்ணார். 10

வங்கியம் வகுத்த கானம் வயங்கிய மழலை வாயர், சங்கை இல் பெரும் பாண் உற்ற துறைதொறும் திறம்பத் தள்ளி, சிங்கல் இல் அமுதினோடும் புளி அளாம் தேறல் என்ன, வெங் குரல் மடுத்த பாடல் விளித்தனர், மயக்கம் வீங்க. 11

ஏனைய பிறவும் கண்டார்க்கு இந்திரசாலம் என்ன, - தான் அவை உருவில் தோன்றும் பாவனைத் தகைமை சான்றோர், - மான் அமர் நோக்கினாரை மைந்தரைக் காட்டி, வாயால் ஆனையை விளம்பி, தேரை அபிநயம் தெரிக்கலுற்றார். 12

அழுகுவர்; நகுவர்; பாடி ஆடுவர்; அயல் நின்றாரைத் தொழுகுவார்; துயில்வர்; துள்ளித் தூங்குவர்; துவர் வாய் இன் தேன் ஒழுகுவர்; ஒல்கி ஒல்கி, ஒருவர்மேல் ஒருவர் புக்கு, முழுகுவர், குருதி வாட் கண் முகிழ்த்து, இடை, மூரி போவர். 13

உயிர்ப்புறத்து உற்ற தன்மை உணர்த்தினார், 'உள்ளத்து உள்ளது அயிர்ப்பினில் அறிதிர்' என்றே; அது களியாட்டம் ஆக, செயிர்ப்பு அறு தெய்வச் சிந்தைத் திரு மறை முனிவர்க்கேயும், மயிர்ப்புறம்தோறும் வந்து பொடித்தன, காம வாரி. 14

மாப் பிறழ் நோக்கினார்தம் மணி நெடுங் குவளை வாட் கண் சேப்புற, அரத்தச் செவ் வாய்ச் செங் கிடை வெண்மை சேர, காப்பு உறு படைக் கைக் கள்வ நிருதர்க்கு ஓர் இறுதி காட்டி, பூப் பிறழ்ந்து உருவம் வேறாய்ப் பொலிந்தது ஓர் பழனம் போன்ற. 15

கயல், வரு காலன் வை வேல், காமவேள் கணை, என்றாலும், இயல் வருகிற்கிலாத நெடுங் கணார், இணை மென் கொங்கைத் துயல்வரு கனக நாணும், காஞ்சியும், துகிலும், வாங்கி, புயல் பொரு கூந்தல் பாரக் கற்றையின் புனையலுற்றார். 16

இராவணனது செவியில் வானரர் ஆர்த்த ஓசை புகுதல்

முத்து அன்மை மொழியல் ஆகா முகிழ் இள முறுவல் நல்லார், இத் தன்மை எய்த நோக்கி, அரசு வீற்றிருந்த எல்லை, அத் தன்மை அரியின் சேனை ஆர்கலி ஆர்த்த ஓசை மத்தன் மெய் மயங்க வந்து, செவிதொறும் மடுத்தது அன்றே. 17

ஆடலும், களியின் வந்த அமலையும், அமுதின் ஆன்ற பாடலும், முழவின் தெய்வப் பாணியும், பவள வாயார் ஊடலும், கடைக்கண் நோக்கும், மழலை வெவ் உரையும், எல்லாம் வாடல் மென் மலரே ஒத்த - ஆர்ப்பு ஒலி வருதலோடும். 18

இராம இலக்குவரின் நாண் ஒலி தோன்றுதல்

தறி பொரு களி நல் யானை சேவகம் தள்ளி ஏங்க, துறு சுவல் புரவி தூங்கித் துணுக்குற, அரக்கர் உட்க, செறி கழல் இருவர் தெய்வச் சிலை ஒலி பிறந்தது அன்றே- எறி கடல் கடைந்த மேல்நாள், எழுந்த பேர் ஓசை என்ன. 19

களியாட்ட மகளிர்பால் வெறுப்புத் தோன்ற, இராவணன் இருந்த நிலை

முத்து வாள் முறுவல் மூரல் முகத்தியர், முழுக் கண் வேலால் குத்துவார், கூட்டம் எல்லாம் வானரக் குழுவின் தோன்ற, மத்து வார் கடலின் உள்ளம் மறுகுற, வதனம் என்னும் பத்து வாள் மதிக்கும், அந் நாள், பகல் ஒத்தது இரவும், பண்பால். 20

ஒற்றர்களால் செய்தி உணர்ந்த இராவணன் மந்திர மண்டபத்திற்குச் செல்லுதல்

ஈது இடை ஆக, வந்தார், அலங்கல்மீது ஏறினார்போல் ஊதினார், வேய்கள், வண்டின் உருவினார், உற்ற எல்லாம்; 'தீது இலர், பகைஞர்' என்ன, திட்கென்ற மனத்தன், தெய்வப் போது உகு பந்தர் நின்று, மந்திர இருக்கை புக்கான். 21

மிகைப் பாடல்கள்

வடித்திடும் அமுதத் தேறல் மாந்தினர் எவரும்; உள்ளம் பிடித்தது களிப்பின் பெற்றி; பிறந்தது காம வேகம்; எடுத்தனர், மகர யாழின் இன் இசை இனிமையோடு; நடித்தனர், நங்கைமார்கள் நாடகத் தொகையின் பேதம். 3-1