கல்லாடம்/பாயிரம்
< கல்லாடம்
பாயிரம்[தொகு]
பாடல்:1 (திங்கள் முடி)[தொகு]
வேழமுகக் கடவுள் வணக்கம்
- திங்கள் முடிபொறுத்த பொன்மலை அருவி
- கருமணி கொழித்த தோற்றம் போல
- இருகவுள் கவிழ்த்த மதநதி உவட்டின்
- வண்டினம் புரளும் வயங்கு புகர்முகத்த
- செங்கதிர்த் திரள்எழு கருங்கடல் போல (5)
- முக்கண்மேல் பொங்கும் வெள்ளம் எறிகடத்த
- பெருமலைச் சென்னியில் சிறுமதி கிடந்தென
- கண்அருள் நிறைந்த கலின்பெரும் எயிற்ற
- ஆறிரண்டு அருக்கர் அவிர்கதிர்க் கனலும்
- வெள்ளை மதிமுடித்த செஞ்சடை ஒருத்தன் (10)
- உலகுயிர் ஆட ஆடுறும் அனலமும்
- ஊழித்தீப் படர்ந்து உடற்றுபு சிகையும்
- பாசக் கரகம் விதியுடை முக்கோல்
- முறிக்கலைச் சுருக்குக் கரம்பெறு முனிவர் (15)
- விழிபடும் எரியும் சாபவாய் நெருப்பும்
- நிலைவிட்டுப் படராது காணியில் நிலைக்கச்
- சிறுகாற்று உழலும் அசைகுழைச் செவிய
- ஆம்பல் முகஅரக்கன் கிளையொடு மறியப்
- பெருங்காற்று விடுத்த நெடும்புழைக் கரத்த (20)
- கருமிடற்றுக் கடவுளை செங்கனி வேண்டி
- இடம் கொள் ஞாலத்து வலம்கொளும் பதத்த
- குண்டுநீர் உடுத்த நெடும்பார் எண்ணமும்
- எண்ணா இலக்கமொடு நண்ணிடு துயரமும்
- அளந்துகொடு முடித்தல் நின்கடன் ஆதலின் (25)
- வரிவுடல் சூழக் குடம்பைநூல் தெற்றிய
- போக்குவழி படையாது உள்உயிர் விடுத்தலின்
- அறிவு புறம்போய உலண்டது போல
- கடல்திரை சிறுக மலக்குதுயர் காட்டும்
- உடல்எனும் வாயில் சிறைநடுவு புக்கு (30)
- போகாது அணங்குறும் வெள்ளறி வேமும்
- ஆரணம் போற்றும்நின் காலுற வணங்குதும்
- கால்முகம் ஏற்ற துளைகொள் வாய்க்கறங்கும்
- விசைத்த நடைபோகும் சகடக் காலும்
- நீட்டிவலி தள்ளிய நெடுங்கயிற் றூசலும் (35)
- அலமரு காலும் அலகைத் தேரும்
- குறைதரு பிறவியின் நிறைதரு கலக்கமும்
- என்மனத் தெழுந்த புன்மொழித் தொடையும்
- அருள்பொழி கடைக்கண் தாக்கி
- தெருளுற ஐய! முடிப்பைஇன் றெனவே. (40)
- = பாடல்:02 (பாய்திரை) =
வேலன் வணக்கம்[தொகு]
- பாய்திரை உடுத்த ஞால முடிவென்ன
- முடங்குளை முகத்துப் பல்தோள் அவுணனொடு
- மிடைஉடு உதிர செங்களம் பொருது
- ஞாட்பினுள் மறைந்து நடுவறு வரத்தால்
- வடவை நெடுநாக்கின் கிளைகள் விரிந்தென்ன (5)
- செந்துகிர் படரும் திரைக்கடல் புக்கு
- கிடந்தெரி வடவையின் தளிர்முகம் ஈன்று
- திரைஎறி மலைகளின் கவடுபல போக்கி
- கல்செறி பாசியின் சினைக்குழை பொதுளி
- அகல்திரைப் பரப்பின் சடைஅலைந்து அலையாது (10)
- கீழ்இணர் நின்ற மேற்பகை மாவின்
- ஓருடல் இரண்டு கூறுபட விடுத்த
- அழியாப் பேரளி உமைகண் நின்று
- தன்பெயர் புணர்த்திக் கற்பினொடு கொடுத்த
- அமையா வென்றி அரத்தநெடு வேலோய்! (15)
- கீழ்மேல் நின்றஅக் கொடுந்தொழிற் கொக்கின்
- கூறிரண் டாய ஒருபங்கு எழுந்து
- மாயாப் பெருவரத்து ஒருமயில் ஆகி
- புடவிவைத்து ஆற்றிய பல்தலைப் பாந்தள்
- மண்சிறுக விரித்த மணிப்படம் தூக்கி (20)
- விழுங்கிய பல்கதிர் வாய்தொறும் உமிழ்ந்தென
- மணிநிரை சிந்தி மண்புக அலைப்ப
- கார் விரிந்து ஓங்கிய மலைத்தலைக் கதிர்என
- ஓ அறப் போகிய சிறைவிரி முதுகில்
- புவனம் காணப் பொருளொடு பொலிந்தோய் (25)
- போழ்படக் கிடந்த ஒருபங்கு எழுந்து
- மின்னின் மாண்ட கவிர்அலர் பூத்த
- சென்னி வாரணக் கொடும்பகை ஆகி
- தேவர்மெய் பனிப்புற வான்மிடை உடுத்திரள்
- பொரியின் கொரிப்ப புரிந்த பொருள் நாடித் (30)
- தாமரை பழித்த கைமருங்கு அமைத்தோய்
- ஒருமையுள் ஒருங்கி இருகை நெய்வார்த்து
- நாரதன் ஓம்பிய செந்தீக் கொடுத்த
- திருகுபுரி கோட்டுத் தகர்வரு மதியோய்!
- முலைஎன இரண்டு முரண்குவடு மரீஇக் (35)
- குழற்காடு சுமந்த யானைமகள் புணர்ந்தோய்
- செங்கண் குறவர் கருங்காட்டு வளர்த்த
- பைங்கொடி வள்ளி படர்ந்தபுய மலையோய்
- இமயம் பூத்த சுனைமாண் தொட்டில்
- அறிவின் தங்கி அறுதாய் முலையுண்டு (40)
- உழல்மதில் சுட்ட தழல்நகைப் பெருமான்
- வணங்கிநின் றேத்த குருமொழி வைத்தோய்!
- ஓம் எனும் எழுத்தின் பிரமம் பேசிய
- நான்மறை விதியை நடுங்குசிறை வைத்து
- படைப்புமுதல் மாய வான்முதல் கூடித் (45)
- தாதையும் இரப்ப தளைஅது விடுத்தோய்
- கூடம் சுமந்த நெடுமுடி நேரி
- விண்தடை யாது மண்புகப் புதைத்த
- குறுமுனி தேற நெடுமறை விரித்தோய்
- ஆறுதிரு எழுத்தும் கூறுநிலை கண்டு (50)
- நின்தாள் புகழுநர் கண்ணுள் பொலிந்தோய்
- மணிக்கால் அறிஞர் பெருங்குடித் தோன்றி
- இறையோன் பொருட்குப் பரணர் முதல்கேட்ப
- பெருந்தமிழ் விரித்த அருந்தமிழ்ப் புலவனும்
- பாய்பார் அறிய நீயே ஆதலின் (55)
- வெட்சிமலர் சூழ்ந்த நின்இரு கழற்கால்
- குழந்தை அன்பினொடு சென்னிதலை கொள்ளுதும்
- அறிவுநிலை கூடாச் சில்மொழி கொண்டு
- கடவுள் கூறா உலவா அருத்தியும்
- சனனப் பீழையும் தள்ளாக் காமமும் (60)
- அதன்படு துயரமும் அடைவுகெட் டிறத்தலும்
- தென்புலக் கோமகன் தீத்தெறு தண்டமும்
- நரகொடு துறக்கத்து உழல்வரு பீழையும்
- நீளாது இம்பரின் முடித்து
- மீளாக் காட்சி தருதிஇன் றெனவே. (65)