கல்லாடம்/3-5

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

பாடல்:03 (அமுதமும்)[தொகு]

தமர் நினைவு கூறி வரைவு கடாதல்[தொகு]

அமுதமும் திருவும் பணிவரப் படைத்த
உடலக்கண்ணன் உலகு கவர்ந்து உண்ட
களவுடை நெடுஞ்சூர் கிளை களம்விட்டு ஒளித்த
அருள்நிறைந்து அமைந்த கல்வியர் உளமெனத்
தேக்கிய தேனுடன் இறால்மதி கிடக்கும் (5)
எழுமலை பொடித்த கதிர்இலை நெடுவேல்
வள்ளி துணைக்கேள்வன் புள்ளுடன் மகிழ்ந்த
கறங்கு கால்அருவிப் பரங்குன்று உடுத்த
பொன்னகர்க் கூடல் சென்னியம் பிறையோன்
பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினை (10)
கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ் கூறி,
பொற்குவை தருமிக்கு அற்புடன் உதவி
என்உளம் குடிகொண்டு இரும்பயன் அளிக்கும்
கள்அவிழ் குழல்சேர் கருணைஎம் பெருமான்
மலர்ப்பதம் நீங்கா உளப்பெருஞ் சிலம்ப! (15)
கல்லாக் கயவர்க்கு அருநூல் கிளைமறை
சொல்லினர் தோம்என துணைமுலை யருத்தன
பலஉடம்பு அழிக்கும் பழிஊன் உணவினர்
தவம்எனத் தேய்ந்தது துடிஎனும் நுசுப்பே
கடவுள் கூறார் உளம்எனக் குழலும் (20)
கொன்றை புறவுஅகற்றி நின்றஇருள் காட்டின
சுரும்பு படிந்துண்ணும் கழுநீர் போல
கறுத்துச் சிவந்தன கண்இணை மலரே
ஈங்கிவை நிற்க சீறூர் பெருந்தமர்
இல்லில் செறிக்கும் சொல்லுடன் சில்மொழி
விள்ளும் தமிழில் கூறினர்
உள்ளம் கறுத்துக் கண்சிவந்து உருத்தே. (27)

பாடல்:04 (பூமணி)[தொகு]

தாய் அறிவு கூறி வரைவு கடாதல்[தொகு]

பூமணி யானை பொன்என எடுத்து
திங்களும் புயலும் பரிதியும் சுமந்த
மலைவரும் காட்சிக்கு உரிய ஆகலின்
நிறையுடைக் கல்வி பெறுமதி மாந்தர்
ஈன்ற செங்கவி எனத்தோன்றி நனிபரந்து (5)
பாரிடை இன்பம், நீளிடைப் பயக்கும்
பெருநீர் வையை வளைநீர்க் கூடல்
உடலுயிர் என்ன உறைதரு நாயகன்
கடுக்கைமலர் மாற்றி வேப்பலர் சூடி
ஐவாய்க் காப்புவிட்டு அணிபூண் அணிந்து (10)
விரிசடை மறைத்து மணிமுடி கவித்து
விடைக்கொடி நிறுத்திக் கயற்கொடி எடுத்து
வழுதி ஆகி முழுதுலகு அளிக்கும்
பேரருள் நாயகன் சீரருள் போல
மணத்துடன் விரிந்த கைதைஅம் கானல் (15)
நலத்தொடர் வென்றிப் பொலம்பூண் குரிசில்
சின்னம் கிடந்த கொடிஞ்சி மான்தேர்
நொச்சிப் பூவுதிர் நள்இருள் நடுநாள்
விண்ணம் சுமந்து தோற்றம் செய்தென
தன்கண் போலும் எண்கண் நோக்கி (20)
கள்வரைக் காணும் உள்ளம் போலச்
செம்மனம் திருகி உள்ளம் துடித்து
புறன்வழங் காது நெஞ்சொடு கொதித்தனள்
மாறாக் கற்பின் அன்னை
கூறுஆம் மதியத் திருநுதற் கொடியே! (25)

பாடல்:05 (பகையுடன்)[தொகு]

பாங்கி அஞ்சி அச்சுறுத்தல்[தொகு]

பகையுடன் கிடந்த நிலைபிரி வழக்கினைப்
பொருத்தலும் பிரித்தலும் பொருபகை காட்டலும்
உட்பகை அமைத்தலும் உணர்ந்துசொல் பொருத்தலும்
ஒருதொழிற்கு இருபகை தீராது வளர்த்தலும்
செய்யா அமைச்சுடன் சேரா அரசன் (5)
நாடு கரிந்தன்ன காடுகடந்து இயங்கி
இடும்பை நிரப்பினர்க்கு ஈதலின் இறந்தோர்க்கு
இதழ்நிறை மதுவம் தாமரை துளித்தென
விழிசொரி நீருடன் பழங்கண் கொண்டால்
உலகியல் நிறுத்தும் பொருள்மரபு ஒடுங்க (10)
மாறனும் புலவரும் மயங்குறு காலை
முந்துறும் பெருமறை முளைத்தருள் வாக்கால்
'அன்பின் ஐந்திணை' என்று அறுபது சூத்திரம்
கடல்அமுது எடுத்துக் கரையில் வைத்ததுபோல்
பரப்பின் தமிழ்ச்சுவை திரட்டி மற்றவர்க்குத் (15)
தெளிதரக் கொடுத்த தென்தமிழ்க் கடவுள்
தழற்கண் தரக்கின் சரும ஆடையன்
கூடல்அம் பெரும்பதி கூறார் கிளை என
நிறைநீர்க் கயத்துள் தருதாள் நின்று
தாமரை தவஞ்செய்து அளியுடன் பெற்ற
திருமகட்கு அடுத்ததுஎன் என்று
ஒருமை காண்குவர் துகிர்கிளைக் கொடியே! (22)


பார்க்க:[தொகு]

கல்லாடம்
கல்லாடம் பாயிரம்
கல்லாடம்:6-10
கல்லாடம்:11-15
கல்லாடம்:16-20
கல்லாடம்:21-25
கல்லாடம்:26-30
கல்லாடம்:31-35
கல்லாடம்:36-40
கல்லாடம்:41-45
கல்லாடம்:46-50
[[]] :[[]] :[[]] :[[]]
"https://ta.wikisource.org/w/index.php?title=கல்லாடம்/3-5&oldid=486086" இலிருந்து மீள்விக்கப்பட்டது