கல்லாடம்/31-35
< கல்லாடம்
பாடல்:31
அறியாள் போன்று நினைவு கேட்டல்[தொகு]
- பற்றலர்த் தெறுதலும் உவந்தோர்ப் பரித்தலும்
- வெஞ்சுடர் தண்மதி எனப்புகழ் நிறீஇய
- நெட்டிலைக் குறும்புகக் குருதி வேலவ!
- வேதியன் படைக்க மாலவன் காக்கப்
- பெறாததோர் திருவுருத் தான் பெரிது நிறுத்தி (5)
- அமுதயில் வாழ்க்கைத் தேவர்கோன் இழிச்சிய
- மதமலை இருநான்கு பிடர்சுமந்து ஓங்கிச்
- செம்பொன் மணிகுயிற்றிய சிகரக் கோயிலுள்
- அமையாத் தண்ணளி உமையுடன் நிறைந்த
- ஆலவாய் உறைதரும் மூலக் கொழுஞ்சுடர் (10)
- கருவி வானம் அடிக்கடி பொழியும்
- கூடம் சூழ்ந்த நெடுமுடிப் பொதியத்து
- கண்நுழை யாது காட்சிகொடு தோற்றிய
- வெறிவீச் சந்தின் நிரைஇடை எறிந்து
- மற்றது வேலி கொளவளைத்து வளர்ஏனல் (15)
- நெடுங்கால் குற்றுழி இதணுழை காத்தும்
- தேவர் கோமான் சிறை அரி புண்ணினுக்கு
- ஆற்றாது பெருமுழை வாய்விட்டுக் கலுழ்ந்தென
- கமஞ்சூல் கொண்மூ முதுகு குடியிருந்து
- வான்உட்க முரற்றும் மலைச்சுனை குடைந்தும் (20)
- பிரசமும் வண்டும் இரலிதெறு மணியும்
- வயிரமும் பொன்னும் நிரைநிரை கொழித்து
- துகில்நான்று நுடங்கும் அருவி ஏற்றும்
- மறுவறு செம்மணி கால்கவண் நிறுத்தி
- நிறைமதி கிடக்கும் இறால்விழ எறிந்தும் (25)
- எதிர்சொல் கேட்பக் கால்புகத் திகைத்த
- நெருக்குபொழில் புக்கு நெடுமலை கூயும்
- நுகப்பின் பகைக்கு நூபுரம் அரற்றப்
- பைங்காடு நகைத்த வெண்மலர் கொய்தும்
- மனத்தொடு கண்ணும் அடிக்கடி கொடுபோம் (30)
- செம்பொன் செய்த வரிப்பந்து துரந்தும்
- இனைய பல்நெறிப் பண்ணை இயங்கும்
- அளவாக் கன்னியர் அவருள்
- உளமாம் வேட்கையள் இன்னளென் நுரையே (34)
- பாடல்:32
சுடரோடு இரத்தல்[தொகு]
- ஈன்றஎன் உளமும் தோன்றும் மொழிபயின்ற
- வளைவாய்க் கிள்ளையும் வரிப்புனை பந்தும்
- பூவையும் கோங்கின் பொன்மலர் சூட்டிய
- பாவையும் மானும் தெருள்பவர் ஊரும்
- நெடுந்திசை நடக்கும் பொருள்நிறை கலத்தினைப் (5)
- பெருவளி மலக்கச் செயல்மறு மறந்தாங்கு
- சேர மறுக முதுக்குறை உறுத்தி
- எரிதெறும் கொடுஞ்சுரத்து இறந்தன ளாக
- நதிமதம் தறுகண் புகர்கொலை மறுத்த (10)
- கல்இபம் அதனைக் கரும்புகொள வைத்த
- ஆலவாய் அமர்ந்த நீலம்நிறை கண்டன்
- மறிதிரைப் பரவைப் புடைவயிறு குழம்பத்
- துலக்குமலை ஒருநாள் கலக்குவ போல
- உழுவை உகிர்உழக்கும் ஏந்து கோட்டு உம்பல்
- உரிவை மூடி ஒளியினை மறைத்து (15)
- தரைபடு மறுக்கம் தடைந்தன போல
- விண்ணுற விரித்த கருமுகிற் படாம்கொடு
- மண்ணகம் உருகக் கனற்றுமழல் மேனியை
- எடுத்து மூடி எறிதிரைப் பழனத்துப்
- பனிச்சிறுமை கொள்ளா முள்அரை முளரி (20)
- வண்டொடு மலர்ந்த வண்ணம் போல
- கண்ணும் மனமும் களிவர மலர்த்துதி
- மலர்தலை உலகத்து இருள்எறி விளக்கும்
- மன்னுயிர் விழிக்கக் கண்ணிய கண்ணும்
- மறைஉகு நீர்க்குக் கருவும் கரியும் (25)
- வடிவம் எட்டனுள் வந்த ஒன்றும்
- சேண்குளம் மலர்ந்த செந்தா மரையும்
- சோற்றுக் கடன்கழிக்கப் போற்றுயிர் அழிக்கும்
- ஆசைச் செருநர்க்கு அடைந்துசெல் வழியும்
- அருளும் பொருளும் ஆகித்
- திருவுலகு அளிக்கும் பருதிவா னவனே! (31)
- பாடல்:33
இன்னல் எய்தல்[தொகு]
- வள்ளுறை கழித்துத் துளக்குவேல் மகனும்
- மனவுமயிற் கழுத்து மாலை யாட்டியும்
- நெல்பிடித்து உரைக்கும் குறியி னோளும்
- நடுங்கஞர் உற்ற பழங்கண் அன்னையரும்
- அயரும் வெறியில் தண்டா அருநோய் (5)
- ஈயாது உண்ணுநர் நெடும்பழி போலப்
- போகாக் காலை புணர்க்குவது என்னோ?
- நான்கெயிற்று ஒருத்தல் பிடர்ப்பொலிவரைப்பகை
- அறுகால் குளிக்கும் மதுத்தொடை ஏந்த
- முள்தாள் செம்மலர் நான்முகத்து ஒருவன் (10)
- எண்ணிநெய் இறைத்து மணஅழல் ஓம்ப
- புவிஅளந்து உண்ட திருநெடு மாலோன்
- இருகரம் அடுக்கிப் பெருநீர் வார்ப்ப
- ஒற்றை ஆழியன் முயலுடல் தண்சுடர்
- அண்டம் விளர்ப்பப் பெருவிளக்கு எடுப்ப (15)
- அளவாப் புலன்கொள விஞ்சையர் எண்மரும்
- வள்ளையில் கருவியில் பெரும்புகழ் விளைப்ப
- முனிவர் செங்கரம் சென்னி ஆக
- உருப்பசி முதலோர் முன்வாழ்த்து எடுப்ப
- மும்முலை ஒருத்தியை மணந்துலகு ஆண்ட (20)
- கூடற்கு இறைவன் இருதாள் இருத்தும்
- கவையா வென்றி நெஞ்சினர் நோக்க
- பிறவியும் கூற்றமும் பிரிந்தன போலப்
- பீரமும் நோயும் மாறில்
- வாரித் துறைவற்கு என்னா தும்மே? (25)
- பாடல்:34
நெஞ்சொடு நோதல்[தொகு]
- பொருள்செயல் அருத்தியின் எண்வழி தடைந்து
- நால்திசை நடக்கும் அணங்கின் அவயவத்து
- அலைதரு தட்டைக் கரும்புறம் மலைமடல்
- கடல்திரை உகளும் குறுங்கயல் மானும்
- கடுங்கான் தள்ளி தடைதரு நெஞ்சம்! (5)
- கயிலைத் தென்பால் கானகம் தனித்த
- தேவர்நெஞ் சுடைக்கும் தாமரை யோகின்
- மணக்கோல் துரந்த குணக்கோ மதனை
- திருக்குளம் முளைத்த கண்தா மரைகொடு
- தென்கீழ்த் திசையோன் ஆக்கிய தனிமுதல் (10)
- திருமா மதுரை எனும்திருப் பொற்றொடி
- என்னுயிர் அடைத்த பொன்முலைச் செப்பின்
- மாளா இன்பம் கருதியோ? அன்றி
- புறன்பயன் கொடுக்கும் பொருட்கோ? வாழி!
- வளர்முலை இன்பெனின் மறித்து நோக்குமதி (15)
- பெரும்பொருள் இன்பெனின் பெரிதுதடை இன்றே
- யாதினைக் கருதியது? ஒன்றை
- ஓதல் வேண்டும் வாழிய பெரிதே! (18)
- பாடல்:35
அல்லகுறி அறிவித்தல்[தொகு]
- வற்றிய நரம்பு நெடுங்குரல் பேழ்வாய்
- குழிவிழி பிறழ்பல் தெற்றற் கருங்கால்
- தாளிப் போந்தின் கருமயிர்ப் பெருந்தலை
- விண்புடைத்து அப்புறம் விளங்குடற் குணங்கினம்
- கானம் பாடிச் சுற்றிநின் றாட (5)
- சுழல்விழி சிறுநகை குடவயிற்று இருகுழைச்
- சங்கக் குறுந்தாட் பாரிடம் குனிப்ப
- தேவர் கண்பனிப்ப முனிவர் வாய்குழற
- கல்ல வடத்திரள் மடிவாய்த் தண்ணுமை
- மொந்தை கல்லலகு துத்தரி ஏங்க (10)
- கட்செவி சுழல தாழ்சடை நெறிப்ப
- இதழி தாதுதிர்ப்ப பிறைஅமுது உகுக்க
- வெள்ளி அம்பலத்துள் துள்ளிய பெருமான்
- கூடல் மாநகர் அன்ன பொற்கொடி!
- இரவிக்கு அணிய வைகறை காறும் (15)
- அலமரல் என்னைகொல்? அறிந்திலம் யாமே
- வெண்முத்து அரும்பி பசும்பொன் மலர்ந்து
- கடைந்த செம்பவளத் தொத்துடன் காட்டும்
- இரும்பு கவைத்தன்ன கருங்கோட்டுப் புன்னைச்
- சினைமுகம் ஏந்திய இணர்கொள்வாய்க் குடம்பையின் (20)
- எக்கர்ப் புள்ளினும் வெண்மை இடம்மறைக்கும்
- சிறைவிரி தூவிச் செங்கால் அன்னம்
- குறும்பார்ப்பு அணைக்கும் பெடையொடு வெரீஇ
- சேவலும் இனமும் சூழும்
- காவில் மாறித் துயில் அழுங்கு தற்கே. (25)