கல்லாடம்/56-60

விக்கிமூலம் இலிருந்து
பாடல்:56

காவற் பிரிவு அறிவித்தல்[தொகு]

நடைத்திரைப் பரவை நாற்கடல் அணைத்து
வரையறுத்து அமைந்த வகைநான் காக
விதிவரத் திருத்திய மேதினிப் பொறையை
குருமணி விரித்தலின் தேனொடு கிடந்து
மாயாது தொடுத்த மணமலர் சுமத்தலின் (5)
வரைஎன நிறுத்திய திருவுறை பெருந்தோள்
தரித்தும் அணைத்தும் தான்எனக் கண்டும்
செய்ததும் அன்றி திருமணம் பணைத்துக்
காக்கவும் குரிசில் கருத்துறும் போலும்
விடையா வடந்தைசெய் வெள்ளிஅம் சிலம்பினும் (10)
தென்கால் விடுக்கும் செம்பின் பொருப்பினும்
கொண்டல்வந் துலவும் நீலக் குவட்டினும்
கோடைசென் நுடற்றும் கொல்லிக் கிரியினும்
பிறந்தவர் பிறவாப் பெரும்பதி யகத்தும்
முடிந்தவர் முடியா மூதூர் இடத்தும் (15)
கண்டவர் காணாக் காட்சிசெய் நகரினும்
வேகத் தலையினும் விதிஆ கமத்தினும்
கல்வியர் உளத்தும் கலர்நெஞ் சகத்தும்
தெய்வம் விடுத்துப் பொய்கொள் சிந்தையினும்
கொலையினர் கண்ணும் குன்றா தியைந்து (20)
வெளியுறத் தோன்றி இருளுற மறைந்த
விஞ்சைவந் தருளிய நஞ்சணி மிடற்றோன்
சந்தமும் பதமும் சருக்கமும் அடக்கமும்
சின்னக் குறளும் செழுங்கார் போலப்
பெருமறை முழங்கும் திருநகர்க் கூடல் (25)
ஒப்புற் றடைமலர் சுமந்த
மைப்புறக் கூந்தல் கொடிவணங்கு இடையே! (27)
பாடல்:57

உள் மகிழ்ந்து உரைத்தல்[தொகு]

நுனிக்கவின் நிறைந்த திருப்பெரு வடிவினள்
உயிர்வைத்து உடலம் உழன்றன போல
நெடும்பொருள் ஈட்ட நிற்பிரிந்து இறந்து
கொன்றுணல் அஞ்சாக் குறியினர் போகும்
கடுஞ்சுரம் தந்த கல்லழல் வெப்பம் (5)
தேவர் மருந்தும் தென்தமிழ்ச் சுவையும்
என்னுயிர் யாவையும் இட்டடைத் தேந்தி
குருவியும் குன்றும் குரும்பையும் வெறுத்தநின்
பெருமுலை மூழ்கஎன் உளத்தினில் தொடாமுன்
வீழ்சுற்று ஒழுக்கிய பராரைத் திருவடக் (10)
குளிர்நிழல் இருந்து குணச்செயல் மூன்றும்
உடலொடு படரும் நிலைநிழல் போல
நீங்காப் பவத்தொகை நிகழ்முதல் நான்கும்
உடனிறைந் தொழியா உட்பகை ஐந்தும்
மதியினின் பழித்த வடுஇரு மூன்றும் (15)
அணுகாது அகற்றி பணிமுனி நால்வர்க்கு
அறமுதல் நான்கும் பெறஅருள் செய்த
கூடற் பெருமான் நீடருள் மூழ்கி
இருபதம் உள்வைத் திருந்தவர் வினைபோல்
போயின துனைவினை நோக்கி
ஏகின எனக்கே அற்புதம் தருமே! (21)
பாடல்:58

புனல் ஆட்டுவித்தமை கூறிப் புலத்தல்[தொகு]

கொன்றைஅம் துணரில் செவ்வழி குறித்து
வால்உளை எருக்கில் வளர்உழை பாடி
கூவிளங் கண்ணியில் குலக்கிளை முரற்றி
வெண்கூ தளத்தில் விளரிநின் றிசைத்து
வண்டும் தேனும் ஞிமிறும் கரும்பும் (5)
உமிழ்நறவு அருந்தி உறங்குசெஞ் சடையோன்
மதுமலர் பறித்துக் திருவடி நிறைத்த
நான்மறைப் பாலனை நலிந்துயிர் கவரும்
காலற் காய்ந்த காலினன் கூடல்
திருமறுகு அணைந்து வருபுனல் வையை (10)
வரைபுரண் டென்னத் திரைநிரை துறையகத்து
அணைந்தெடுத் தேந்திய அரும்புமுகிழ் முலையோள்
மதிநுதல் பெருமதி மலர்முகத்து ஒருத்தியை
ஆட்டியும் அணைத்தும் கூட்டியும் குலவியும்
ஏந்தியும் எடுத்தும் ஒழுக்கியும் ஈர்த்தும் (15)
முழக்கியும் தபுத்தியும் முலைஒளி நோக்கியும்
விளிமொழி ஏற்றும் விதலையின் திளைத்தும்
பூசியும் புனைந்தும் பூட்டியும் சூட்டியும்
நிறுத்தியும் நிரைத்தும் நெறித்தும் செறித்தும்
எழுதியும் தப்பியும் இயைத்தும் பிணித்தும் (20)
கட்டியும் கலத்தியும் கமழ்த்தியும் மறைத்தும்
செய்தன எல்லாம் செய்யலர் போலஎன்
நெட்டிலை பொலிந்தபொன் நிறைதிரு உறையுளில்
பாசடைக் குவளைச் சுழல்மணக் காட்டினைக்
கருவரிச் செங்கண் வசாலினம் கலக்க (25)
வேரிமலர் முண்டகத்து அடவிதிக்கு எறிய
வெள்ளுடற் கருங்கண் கயல்நிரை உகைப்ப
மரகதப் பன்னகத்து ஆம்பல்அம் குப்பையைச்
சொரி எயிற்றுப் பேழ்வாய் வாளைகள் துகைப்ப
படிந்து சேடெறியும் செங்கண் கவரியும் (30)
மலைசூழ் கிடந்த பெருங்குலைப் பரப்பும்
மலையுடன் அலைந்த முதுநீர் வெள்ளமும்
மிடைந்து வயல்இரிந்து முதுகுசரிந் துடைந்து
சிறியோன் செருஎன முறியப் போகி
உழவக் கணத்தைக் குலைக்குடில் புகுத்தும் (35)
பெருநீர் ஊரர் நிறைநீர் விடுத்துச்
செறிந்த தென்எனக் கேண்மின்
மறிந்துழை விழித்த மறிநோக் கினரே! (38)
பாடல்:59

தன்னை வியந்து உரைத்தல்[தொகு]

விடம்கொதித்து உமிழும் படம்கெழு பகுவாய்க்
கண்டல்முன் முளைத்த கடிஎயிற் றரவக்
குழுவினுக்கு உடைந்து குளிர்மதி ஒதுங்க
தெய்வப் பிறைஇருந்த திருநுதற் பேதையைக்
கண்டுகண்டு அரவம் மயில்எனக் கலங்க (5)
நெடுஞ்சடைக் காட்டினை அடும்தீக் கொழுந்தென
தலைஏது அலையா நகுதலை தயங்க
அணிதலை மாலையை நிறைமதித் திரள்எனப்
புடைபுடை ஒதுங்கி அரவுவாய் பிளப்ப
ஒன்றினுக்கு ஒன்று கன்றிய நடுக்கொடு (10)
கிடந்தொளி பிறழும் நெடுஞ்சடைப் பெருமான்
படைநான்கு உடன்று பஞ்சவன் துரந்து
மதுரை வவ்விய கருநட வேந்தன்
அருகர்ச் சார்ந்துநின்று அருட்பணி அடைப்ப
மற்றவன் தன்னை நெடுந்துயில் வருத்தி (15)
இறையவன் குலத்து முறையர் இன்மையால்
கருதி தோரை கல்லொடு பிறங்க
மெய்யணி அளறாக் கைம்முழம் தேய்த்த
பேரன்பு உருவப் பசுக்கா வலனை
உலகினில் தமது முக்குறி யாக் (20)
மணிமுடி வேணியும் உருத்திரக் கலனும்
நிலவுமிழ் புண்ணியப் பால்நிறச் சாந்தமும்
அணிவித் தருள்கொடுத்து அரசன் ஆக்கி
அடுமால் அகற்றி நெடுநாள் புரக்க
வையகம் அளித்த மணிஒளிக் கடவுள் (25)
நெடுமறிக் கூடல் விரிபுனல் வையையுள்
பிடிகுளி செய்யும் களிறது போல
மயிலெனும் சாயல் ஒருமதி நுதலியை
மருமமும் தோளினும் வரையறப் புல்லி
ஆட்டுறும் ஊரன் அன்புகொள் நலத்தினை (30)
பொன்னுலகு உண்டவர் மண்ணுலகு இன்பம்
தலைநடுக் குற்ற தன்மை போல
ஒன்றற அகற்றி உடன்கலந் திலனேல்
அன்ன ஊரனை எம்மில் கொடுத்து
தேரினும் காலினும் அடிக்கடி கண்டு (35)
நெட்டுயிர்ப்பு எறிந்து நெடுங்கண் நீருகுத்துப்
பின்னும் தழுவ உன்னும் அவ்வொருத்தி
அவளே ஆகுவள் யானே தவலருங்
கருநீர்க் குண்டு அகழுடுத்த
பெருநீர் ஆழித் தொல்லுல குழிக்கே. (40)
பாடல்:60

புதல்வன் மேல்வைத்துப் புலவி தீர்தல்[தொகு]

அடியவர் உளத்திருள் அகற்றலின் விளக்கும்
எழுமலை பொடித்தலின் அனல்தெறும் அசனியும்
கருங்கடல் குடித்தலின் பெருந்தழற் கொழுந்தும்
மரவுயிர் வௌவலின் தீவிழிக் கூற்றும்
என்னுளம் இருத்தலின் இயைந்துணர் உயிரும் (5)
நச்சின கொடுத்தலின் நளிர்தரு ஐந்தும்
கருவழி நீக்கலின் உயர்நிலைக் குருவும்
இருநிலம் காத்தலின் மதியுடை வேந்தும்
ஆகிய மணிவேல் சேவலம் கொடியோன்
வானக மங்கையும் தேன்வரை வள்ளியும் (10)
இருபுறம் தழைத்த திருநிழல் இருக்கும்
ஒரு பரங் குன்றம் மருவிய கூடல்
பெருநதிச் சடைமிசைச் சிறுமதி சூடிய
நாயகன் திருவடி நண்ணலர் போல
பொய்பல புகன்று மெய்ஒளித்து இன்பம் (15)
விற்றுணும் சேரி விடாதுறை ஊரன்
ஊருணி ஒத்த பொதுவாய்த் தம்பலம்
நீயும் குதட்டினை ஆயின் - சேயாய்!
நரம்பெடுத்து உமிழும் பெருமுலைத் தீம்பாற்கு
உள்ளமும் தொடாது விள்ளமுது ஒழுக்கும் (20)
குதலைவாய் துடிப்பக் குலக்கடை உணங்கியும்
மண்ணுறு மணியெனப் பூழிமெய் வாய்த்தும்
புடைமணி விரித்த உடைமணி இழுக்கியும்
சுடிகையும் சிகையும் சேர்ந்துகண் பனித்தும்
பறையும் தேரும் பறிபட்டு அணங்கியும் (25)
மறிக்கண் பிணாவினர் இழைக்கும் சிற்றிலில்
சென்றழி யாது நின்றயர் கண்டும்
உறுவதும் இப்பயன் அன்றேல்,
பெறுவது என்பால் இன்றுநின் பேறே. (29)
"https://ta.wikisource.org/w/index.php?title=கல்லாடம்/56-60&oldid=486170" இலிருந்து மீள்விக்கப்பட்டது