கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/07

விக்கிமூலம் இலிருந்து

7. காஞ்சிபுரம் மாநாடு; கவிக்குயில் முழக்கம்!

பம்பாய் மாநகரில் தங்கியிருக்கும் கவிக்குயில் சரோஜினிதேவிக்கு புகழாரங்கள் தேடிவந்தன மக்களும், அறிஞர்களும், மேனாட்டு மேதைகளும், பிரிட்டிஷ் பேரரசும் அந்தப் புகழாரங்களைச் சூட்டியதுடன்-பெருமைகளையும் அவர்களுக்குத் தேடிக் கொண்டார்கள்.

இந்த நேரத்தில் சரோஜினி தேவியின் நெஞ்சில் தைத்த நெருஞ்சிமுள் நினைவு சுருக்கென்று நிழலாடியது. நெருஞ்சி முள் கால் பாதத்தில் குத்தும்போது சுருக்கென்று சிறுவலி மட்டுமே ஏற்படும். அதனால் உடல் பாதிப்பு எதுவும் ஏற்படாது.

காலில் குத்திய இடத்தில் வேண்டுமானால் சிறு ரத்தக் குறிப்புத் தோன்றும்-அவ்வளவுதான்! அதைத் தட்டித் தடவி விட்டால் அந்த முள் கீழே விழுந்து விடும். அது போல, கவிக்குயிலுக்கு நெஞ்சிலே தைத்த நெருஞ்சி முள் போன்ற சிந்தனைகள் அவ்வப்போது அவருக்குச் சுருக் கென்று தாக்கும்.

நெருஞ்சி முள் தரையில் படர்ந்து காணப்பட்டாலும் நெருப்புச் சூடுதரும் சூரியன் எப்பக்கம் சாய்ந்து கதிர்களை வீசுகின்றதோ அப் பக்கமே-முள் தலைபாகம் திசை திரும்பும் தன்மையுடையது. அதற்கும் வெப்பம் வேண்டுமல்லவா? அதனால்

அந்த நெருஞ்சிமுள் தத்துவம் போலவே, கவிக்குயில் சரோஜினிக்கு, கவிதை, இலக்கியம், தேசத்தொண்டு, மக்கள் சேவை என்ற வெப்பம் நோக்கி, அவரது நெஞ்சுக் காயத்தின் தாக்குதல்கள் அவரது சிந்தனையிலே அவ்வப்போது நிழலாடித்தாக்கி நினைவுறுத்தும்.

அந்த நினைவுக்கு ஏற்ப, தற்போது கவிக்குயிலுக்குத் தேசத் தொண்டு என்ற வடுக்காயத்தை நெஞ்சு நினைவுபடுத்தியது. அந்த நினைவுச் சிந்தனை பம்பாய் நகர் வந்ததும் அடிக்கடி அவருக்கு எழுவது உண்டு.

பெற்றதாயினும் சிறந்த தாய் நாடு, வெள்ளையனிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதும், நெஞ்சிலே உரமற்றவர்கள் நேர்மைத் திறனற்ற ஏழை மக்கள் வயிற்றுக்குத் திண்டாடுவதும், அந்த விடுதலைப் போருக்கு ஏழை மக்கள் எழுச்சி பெறாமல், தானுண்டு வயிறுண்டு என்று வாழ்வதும் சரோஜினியின் நெஞ்சத்தைத் தாக்கின. அதற்காக பம்பாய் நகரிலே சிந்தித்துக்கொண்டே இருந்தார்.

“The never Sunset in British Empire” என்று உலகம் கூறக்கூடிய சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராச்சியக்காரன், மிகவும் பலம் பொருந்திய பகைவன்

அந்த தந்திர விரோதியை எதிர்த்து, இந்திய நாட்டின் சுயராச்சியத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் தியாகிகளையும், பொதுமக்களையும், அறிஞர்களையும், அவர்தம் ஆகிய உழைப்புத் திறன்களையும் எண்ணிப் பார்த்தார் சரோஜினிதேவி.

மாபெரும் சாம்ராச்சியபதிகளான வெள்ளையர்கள், ஒரு காலத்தில் ஆட்டுத் தோலுக்கு இடம் கேட்டு அலைந்த வியாபாரக்கம்பெனி ஊழியர்களாக இருக்கலாம். ஆனால், இப்போது:

ரத, கஜ. துரக, பதாதிகள் என்ற நால்வகைப்படைகட்கு மட்டும் அதிபதிகள் அல்லர்; அவர்களது அதிகாரம் என்ற சூரியன் உதிக்காத நாடுகள் இல்லையே!

இத்தகைய ஒரு சாம்ராச்சியாதிபதிகளை எதிர்த்து விடுதலைப் போராட்டம் நடத்துவது எளிய, சுலபமான பணியா? சரி, சுலபமான வேலை ஆல்ல என்பதால், இந்தியர்கள் எல்லாம் மானரோஷத்துடன் மறப்போர் புரியும் பக்குவப்பட்டவர்களா? அல்லவே!

எனவே தாய்தாட்டின் மானம் பெரிதா? மனிதன் உயிர் பெரிதா? என்று எண்ணிய போர்க்கள விடுதலை வீரர்கள் அனைவரும் எந்தத் தியாகம் புரியவும் தயாராகி விட்டார்கள் என்பதை சரோஜினி கண்டார்.

இத்தகைய அடிமைகளை தம்மால் எவ்வாறு விடுதலை வீறு பெறச் செய்ய இயலும்? நம் கவிதைகளால் இந்திய மக்களின் விழுச்சியுற்ற தேகத்தில் எழுச்சியைப் பெற வைக்க இயலாதா? ஏன் இயலாது?

தாம் எழுதும் கவிதைகள் மூலமாகவே இந்தியர்களைப் போர் வீரர்களாக்க முடியும் என்று கருதி, விடுதலைக் கீதங்களைப் பாட ஆரம்பித்தார்; அந்தப் பாடல்கள் மக்கள் உள்ளத்தை கனற்களமாக்கியது.

கவிக்குயில் சரோஜினிதேவிக்கு முன்பே, மராட்டிய சிங்கமாகக் காட்சிதந்த விடுதலைப்போராளி, பால கங்காதர திலகர் பெருமான், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போர் புரிந்து சிறைவாசமடைந்திருந்தார்.

ஏன் அவர் சிறைபட்டார் தன்னைவிட தாய் நாட்டு மானம் பெரிது என்று நம்பிய திலகா, 'சுயராஜ்யமே எனது பிறப்புரிமை; அதை நான் அடைந்தே தீருவேன்'! என்று, வீர முழக்கமிட்டதற்காகச் சிறை புகுந்தார். துன்புற்றார். கவிக்குயில் சரோஜினிக்கும் திலகர் பெருமான்-ஒரு விடுதலைப் போராட்டப் பாடமானார். அதனால், திலகர் சிறை மீண்ட பிறகு, அவரைச் சந்தித்து சுதந்திரப் போராட்டத்திற்கான உத்வேகத்தைப் பெற்றார் கவிக் குயில் சரோஜினிதேவி.

திலகர் பெருமானைச் சந்தித்ததற்குப் பிறகு, கவியரசி, காந்தியடிகளின் அரசியல் குருவான கோபால கிருஷ்ண கோகலேயைச் சந்தித்தார்.

கோகலே எத்தகைய பண்பாளர் தெரியுமா? ஒழுக்க சீலர்; பண்பட்ட கல்வியாளர்; மான்போன்ற சாதுவான மனித மேதை; ஆனால், அவருக்கும் மற்ற விடுதலை வீரர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்; அவர் ஆங்கிலேயர்களைப் பகைவராகக் கருதவில்லை காரணம் அவர்களோடு அன்பாகப் பழகியே இந்திய மக்களுக்கு ஏதாவது நன்மைகளைச் செய்யலாமே என்ற பெருந்தன்மைப் படைத்த பெருந்தகை ஆவர்.

இதுபோன்ற அரிய பண்புகள் அவரிடம் இயற்கையாகவே இருந்ததனால், காந்தி பெருமான் கோகலேயை தனது அரசியல் ஆசானாக நம்பினார்; ஏற்றார்; அவர் வழியையே பின்பற்றினார்.

இதே நேரத்தில் பாகிஸ்தான் பிரிவினைதேவை என்று காங்கிரஸ் கட்சியை எதிர்த்துப் பிற்காலத்தில் போராடிய முகமதலி ஜனாப்ஜின்னா, அப்போது காங்கிரஸ் கட்சியிலே தேசியவாதியாக உழைத்துக் கொண்டிருந்தார்.

சரோஜினி தேவிக்கு முகமதலி ஜின்னாவின் நட்பும் அப்போது கிடைத்தது. அவரோடும் தேவி நெருங்கிப் பழகினார். அரசியல் பற்றிய விளக்கம் கேட்டறிந்தார்.

இந்திய சுதந்திரத்திற்காக மேற்கண்டவாறு போராடிய தேச பக்தர்களின் தொடர்பு; கவிக்குயிலுக்கும் நெருக்கமாக, இறுக்கமாக ஏற்பட்டதால், அவருக்கும் சுயராச்சியப் போரின் முக்கியத்துவம் புரிந்தது.

இந்த நேரத்தில்தான் இங்கிலாந்து நாட்டிலே இருந்து இந்திய வந்த தியாசாபிகல் சொசைட்டியின் முக்கியஸ்தர்களுள் ஒருவரான அன்னிபெசண்ட் அம்மையாரின் தொடர்பும் சரோஜினிக்கு ஏற்பட்டது.

அன்னிபெசண்ட் அயல்நாட்டு வீரமங்கைதான் என்றாலும், அவர் இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்ற வேட்கைக்காக Home Rule என்ற சுயாட்சி இயக்கத்தை தமிழகத்திலே உருவாக்கி, வெள்ளையர்களையே எதிர்த்து போராடி சிறை புகுந்தார்.

அல்லும் பகலும் அன்னிபெசண்ட் அயர்வில்லாமல் உழைப்பதைக் கண்ட கவிக்குயில் தேவியார். அவரைப் பின்பற்றி அரசியல் தொண்டு புரிவது என்ற முடிவுக்கு வந்தார்.

சரோஜினிதேவியின் பேச்சு, மூச்சு, உழைப்பு, திறன், செயல், கவிதை, மேடைமுழக்கம் அனைத்தும் அன்னி பெசண்ட் அம்மையாரைப் பின்பற்றியே அரசியல், சமையம் ஆகிய துறைகட்கு பயன்பட்டு வரலாயின.

வழக்கம்போல சரோஜினிதேவியின் எழுத்தாற்றல் இயற்கை அழகிலும், தாலாட்டுக் கற்பனையிலும் ஈடுபடாமல் கனல்தெறிக்கும் கவிதைக் கருத்துக்களை ஏற்றிக் கொண்டு, இந்திய நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. இந்த அரிய செயல்கள் யாவும் பிரிட்டிஷ் அரசுக்கு நெருப்பூட்டுவதுபோல அமைந்தது.

இந்த விடுதலை வேட்கை உணர்ச்சிகளுடன் சரோஜினி தேவி இந்தியக் கிராமங்கள், நகரங்கள், இலக்கிய மன்றங்கள், திருவிழாக்கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்ற பல நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டு பெண் சிங்கம் போல கர்ஜனை விட்டுக் கொண்டு நாட்டைச் சுற்றி வந்தார்.

ஒரு பெண்மணி, கவிக்குயில், கவியரசி நாடு சுதந்தரம் பெற வேண்டும் என்று பற்பல மேடைகளிலே பேசி வந்த எண்ணங்கள், புழுப் போன்ற மக்களைப் புலியாக்கிற்று; கோழைகளை வீரராக்கின என்றால் மிகையல்ல!

"தாய்மார்களே, நீங்கள் அடுப்பூதிக் கொண்டிருப்பது மட்டும் உங்கள் கடமையல்ல; நாட்டு விடுதலைக்காக உழைக்க வாருங்கள் என்று தாய்மார்களை நோக்கி அறை கூவலிட்டார்.

எழுச்சி பெற்றனர் இளைஞர்கள்; உணர்ச்சியுற்றனர் முதியவர்கள்; புரட்சி எண்ணங்களைப் பெற்றனர் பெண்கள்; நடுத்தர வயதுடைய வாலிபர்கள்; எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு என்ற நிலையிலே உருவானார்கள்!

சரோஜினியால் புதியதோர் விடுதலைப் படை தயாராகி வருவதைக் கண்ட வெள்ளையர் அரசு வெலவெலத்து சிந்தித்தது. என்ன செய்வது? எப்படி அடக்குவது? இதற்கு வழிகள் என்ன? என்று திட்டமிட்டபடியே இருந்தது பிரிட்டிஷ் ஆட்சி!

கவிதை பாடிக் கொண்டிருந்த சரோஜினி தேவி கனல் தெறிக்கப் பேசுகிறாளே; இதற்கா அவளைப் பாராட்டினோம்; பட்டம் வழங்கினோம்; உலகப் புகழை உருவாக்கிக் கொடுத்தோம் என்று உள்ளம் தடுமாறி அவளை அடக்கும் அடக்குமுறைகளைப் பற்றி விவாதித்தனர் வெள்ளையர்கள்!

போர்க்கள ஆடு ஒன்று பின்னுக்குப் போய் முன்னுக்கு வந்து கரடுமுரடாக பகையாட்டை மோதி மோதித் தாக்குவதைப் போன்ற ஆத்திர வெறியோடு அலைமோதிக் கிடந்தார்கள் ஆங்கிலேய அதிகாரிகள்!

கவிக்குயில் மேடைப் பேச்சுக்கு எதிர்ப்பாகப் பலரை தூண்டி விட்டு எதிர்வாத முழக்கமிட்டது ஆங்கில அரசு! எதுவும் எடுபடாததால் அடக்குமுறை ஆயுதங்கனை சரோஜினி தேவி மீது ஏவிட முயன்றது.

இந்த நேரத்தில், 1918ம் ஆண்டு, தமிழ்நாட்டிலே உள்ள காஞ்சிபுரத்தில் தமிழ் மாநில அரசியல் மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்த மாநாடு அன்னி பெசண்ட் அம்மையாரது இயக்கமான சுயாட்சி இயக்கத்தினரால் நடத்தப்பட்ட மாநாடாகும்.

அந்த அரசியல் சுயாட்சி கட்சி மாநாட்டிற்குக் கவிக்குயில் சரோஜினிதேவி தலைமை வகித்தார். அந்த மாநாட்டில், அவர் வீர முழக்கமிட்ட பேச்சு வருமாறு:

வீரர்களை ஈன்றளிக்கும் இந்தியத் தாய்மார்களே! பகையை விளையாட்டாக எதிர்த்து விளையாடிடும் பக்குவமுள்ள பாலகர்களைத் தோற்றுவிக்கும் பெண் குலமே! ஜான்சி ராணியின் வீரத்தை அவரவர் வயிறுகளிலே சுமந்து கொண்டிருக்கும் வீரத்தின் விளைநிலங்களே! இளைஞர்களே! சகோதரர்களே!

என்னை வரவேற்றுப் பேசிய நண்பர், சொல்லிலே இனிமையைத் தவழவிட்டு தீஞ்சுவைக் கவிதைகளைப் பாடிவரும் கவிக்குயில் என்றார். அது உண்மை தான்! ஆனால், நான் இப்போது அப்படியெல்லாம் பாடி, கல்வியாளர்களையும், ரசிகர்களையும் மகிழ வைப்பதை மறந்து விட்டேன்! என் மனம் அவ்வாறு செய்ய மறுத்து விட்டது. ஏன் தெரியுமா?

"நம்முடைய பாரதத் தாய் அந்நியர்களான ஆங்கிலேயர்கள் இடையே அடிமைப்பட்டு அவதிப்படுகின்றாள்! பெற்ற தாயினும் சிறந்த நமது அன்னை நாடு. வெள்ளை அராஜகவாதிகளிடம் கட்டுண்டு, தறிகெட்டு, நிலைகெட்டு, குலைந்திருப்பதை ஒரு கணம் நாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா?"

"திலகர் பெருமான், ஞானமகான் கோகலே, அயல் நாட்டு அன்னை அன்னி பெசண்ட், பண்டித மோதிலால் தேரு, புரோஷாய் மேத்தா, புலாபாய் தேசாய், சர். செதல்வாட்டு, வ. உ. சிதம்பரம் பிள்ளை, திரு. வி. கலியாண சுந்தரம், சுப்பிரமணிய சிவா, வ.வே.சு. ஐயர், ஈ.வி.ஆர் ராமசாமி போன்றவர்கள் ஓயாத போராட்டத்தில் குதித்து விட்டார்கள்."

தியாகிகள், அறிஞர்கள், நாடக நடிகர்கள், கலைஞர்கள், அடிமட்ட வறுமையிலே நாள் தோறும் அவஸ்தைதைகளை அனுபவிக்கும் கீழ்மட்ட ஏழைகள் உட்பட்ட எல்லாருமே அவரவர்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள சுதந்திரப் போராட்டத்திலே ஈடுபட்டுச் சிறை செல்கிறார்கள;

மானத்தோடுதான் வாழவேண்டும் மனிதப் பிறவி என்பதை-நீங்கள் அறியாதவர்கள் அல்லர்! அதனாலே தான் எந்த லாப நட்டத்தையும் பாராமல் விடுதலை வேள்வியிலே சுடர்விட்டெரியும் நெருப்பிலே குதித்து விட்டார்கள்.

எனது நாக்கு கவிபாடிய நாக்குதான்; ஆனால் இன்று, அக்கவிகளிலே கனற் கட்டிகளை (நெருப்பை) ஏற்றிப் பாடி வருகிறேன்? ஏன் தெரியுமா? சுதந்திரம் சுதந்திரம் சுதந்திரமே நமது பிறப்புரிமை என்பதை மக்கள் நெஞ்சங் களிலே நிலைநாட்டத்தான்.

நான் எழுதிய அனல் கட்டிக் கவிதைகள், பிரிட்டிஷ் பகைவர்களைச் சுட்டுக் காயமாக்கி அருகிறது. பொறாமை பற்றியோரைப் பொசுக்கி வருகிறது.

அதனால் வெள்ளை அராஜகவாதிகள் என்னைச் சுதந்திரப் போராட்டக் களத்திலே இருந்து எப்படி வெளியேற்றலாம் என்று திட்டமிட்டு வருவதாகக் கேள்விப்படுகின்றேன்.

விடுதலைப் போராட்டத் தலைவர்களிடம் நான் பழகக் கூடாது; பேசக்கூடாது; அவர்கள் சம்பந்தமே எனக்குத் தொடரக்கூடாது என்பதற்காகத்தான், ஆங்கில அரசு எனக்கு விருது அளித்துப் பாராட்டியதாக மந்திரி மாண்டேகு கூறியுள்ளார்.

கவிபாடும் குயிலுக்கு விடுதலைப் போர்க்களத்தில் என்ன வேலை? குழலும் யாழும் வாசித்து மக்களை மகிழ்விப்பதல்லவா ஒரு கவியின் பணி! அதை மறந்து சுயராச்சியப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட வேண்டும் என்று எங்களுக்கு எதிராக அறை கூவலிட்டு அழைப்பதா ஒரு பெண்கவியின் வேலை?

உலகம் புகழ்ந்து பாராட்ட வேண்டும் என்பதற்காகத்தான், தாகூருக்கு பெருமைபடுத்தி அளித்த அதே விருது பதக்கத்தையே சரோஜினி தேவிக்கும் வழங்கினோம்; அதற்குரிய நன்றியா எங்களை வசைபாடுவது? அழகா? என்றெல்லாம் ஆங்கிலேயர்கள் அறிக்கை விடுத்துள்ளார்கள்.

ஆங்கிலேயர்களே! உங்களது விருதுக்கு நான் ஆசைப்பட்டவள் அல்லள்! வலிய வந்து நீங்களே என்னைப் பாராட்டி விருது வழங்கினீர்களே அல்லாமல்-நானா உங்களைக் கேட்டேன்?

விருது கொடுத்துப் பாராட்டிய பதக்கத்துக்கா எனது தாய் மண் மானத்தை அடகு வைப்பேன்? அவ்வாறு கனவு காணாதீர்கள். சரோஜினி உங்களுடைய பட்டம் பதவிகளுக்கு மயங்கி விடுதலையை விலை பேசிடுவாள் என்று எண்ணாதீர்கள்! எனது மூச்சு போகும்வரை பாரத் மாதாகீ ஜெய் என்ற கோஷம் போடுவேனே தவிர, வேறு எதற்கும் உங்களிடம் அஞ்சேன் என்று வெள்ளையர்கள் கேள்விகளுக்கும் பதில் கூறினார். அவர் மேலும் தன்னைப் பற்றியும், தனது கவிதைகளைப் பற்றியும் ஒரு தன் நில விளக்கம் தந்துப் பேசியதாவது:

“ரோஜா பூக்கள் மணக்கும் தோட்டத்துக்கு நடுவே, விண்ணளாவும் கோபுரத்தின் மீது தனியாக உட்கார்ந்து பாடுவது மட்டுமே கவிஞன் கடமையல்ல; கவிஞர்கள் மக்களோடு மக்களாகப் பழகவேண்டும். வீதிகளிலும், சந்து முனைகளிலும், பொது மன்றங்களிலும், குப்பை மேடுகளிலும், களம் கண்ட போர் முனைகளிலும் கவிஞனது கால்கள் கடும் பயணம் புரிதல் வேண்டும்.

கவிஞன் என்பவன் யார்? தேசத்துக்கு அபாயம் வந்தால், நாடு அடிமைப்பட்டுக் கிடந்தால்; சோதனைகள் சமுதாயத்துக்குச் சூழ்ந்தால், மக்களிடம் சோர்வும், தோல்வியும், தைரியமின்மையும் ஏற்பட்டால்-அந்தந்தக் காலங்களில் நன்மை தீமைகளை அறிந்து பாடுபவன் அல்லவா கவிஞன்?

நன்மைகளை நாட்டி, தீமைகளை ஓட்டி, ஊமைகளை பேசவைக்க, ஆமைகளை வேகமாக நகரவிட ஏழைகளை கோழைகளை, மோழைகளை, பாழைகளை, கூழைகளை வீரர்களாக்கிட கவிஞன் உணர்வுகளும், கனற் கருத்துக்களும் யாரிடமிருந்து பூகம்பம் போல் வெடித்து வெளி வருகின்றதோ அவனல்லவா கவிஞன்?

பாரத நாட்டில் அடிமைகளாக வாழ்கின்ற வாலிபர்களே, வீறிட்டு எழுங்கள்! விடியல் விடிகின்றது. தைரியம் பெற்றிட எழுங்கள்; மக்களை ஊக்குவிக்கும் தைரியம் இன்பம், ஆற்றலும் நம்பிக்கையும் உடைய ஒரு பெண் கவி நெஞ்சம் உங்களை அழைக்கின்றது?

இந்தியா, இன்றில்லாவிட்டாலும், நாளை, நாளை அல்லாவிட்டாலும் நாளைய மறுநாள் நிச்சயமாக பூரண விடுதலைப் பெற்றே தீரும் என்ற நம்பிக்கையில் மக்களைப் போராட தான் அழைக்கின்றேன்.

சுதந்திரப் போராட்டம் ஆங்காங்கே நாடு முழுவதுமாக தீவிரமாக நடைபெற்று வருவதை நீங்களும் அறிவீர்கள்.

நான் ஒரு பெண் ; தொட்டிலை ஆட்டிய பெண்! வீட்டை மறந்து விட்டேன்! பம்பாயிலே இருந்துப் போராட்டம் செய்கிறேன்: கவிபாடும் பழக்கத்தையும் தூக்கி எறிந்து விட்டேன்! சகோதரர்களே! எழுக! போராடிட வருக!

சகோதரிகளே! குழந்தைகளைப் பெறுவது மட்டுமே தமது பணியன்று; பாலூட்டி சீராட்டி அவர்களைப் பராமரிப்பது மட்டுமே நமது வேலைகளன்று; கணவரைக் கவனிப்பது மட்டுமே நமது கடமையன்று.

நமது நாட்டுக்காக நாம் ஆற்றிய தொண்டு என்ன என்று உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். என் வீடு, என் வாசல், என் குழந்தைகள், என் தாய், தந்தை, கணவர் ஆகியவைதான் பொதுஎன்று எண்ணாதீர்!

மக்களுக்கு அந்த கடுகு உள்ளம் வரக்கூடாது. யாதும் ஊரே, யாவரும் உறவே, எல்லாருக்கும் வேண்டுவது எல்லா வசதிகளுமே நாடு பெற வேண்டியது தன்மானச் சுதந்திரமே என்ற தொன்னையுள்ளத்தை பெறவேண்டும் நீங்கள்!

மக்களுக்கு சேவை செய்வதில் ஆணென்றும் பெண்னென்றும் பேதம் எழக்கூடாது சொந்தக் கடமைகளைச் செய்திட எப்படி பொங்கி எழுகின்றீர்களோ, அதே உணர்வுகள் நாட்டுக்கு விடுதலை பெறவேண்டும் என்ற எண்ணத்திலேயும் பீறிட்டு-வீறிட்டுத் தோன்ற வேண்டும்.

தாம் பிறந்த மண்! நம்மால் விடுதலைப் பெற்றது என்ற எண்ணம் உங்களுக்குள் உதிக்க வேண்டும்! அது தான் தாய்நாட்டு பற்று விடுதலை வேட்கை!" என்று பேசி முடித்தார்