கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/கதையும் காரணமும்

விக்கிமூலம் இலிருந்து

5. கதையும் காரணமும்

உள்ளத்திற்கு உணர்ச்சியும், உடலுக்கு எழுச்சியும், வாழ்வுக்கு மலர்ச்சியும் மகிழ்ச்சியும் தருவன விளையாட்டுப் பந்தயங்களே. சாதி மத பேதங்கள் சாடாத, ஏற்றத்தாழ்வு ஏறிட்டுப் பார்க்காத இனியதொரு சமுதாயத்தை உருவாக்கித் தருவது விளையாட்டுப் பந்தயங்களே. மனித இனத்தின் வலிமைக்கு வடிகாலாக, தனி மனிதன் திறமைக்கு ஊன்றுகோலாக விளங்குவதும் விளையாட்டுப் பந்தயங்கள தாம்.

நூற்றுக்கணக்கான நாடுகள் நேயத்துடன் கலந்து கொள்ள. ஆயிரக்கணக்கான வீரர்களும். வீராங்கனைகளும் ஆர்வத்துடன் போட்டியிட, இலட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து அமைத்தப் பந்தயக் களத்திலே, கோடிக்கணக்கான மக்கள் குதூகலத்துடன் கண்டுகளிக்குமாறு, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக நாடுகள் எல்லாம் குறித்த ஓரிடத்தில் கோலாகலமாகக் கொண்டாடி நடத்தப் பெறும் பந்தயத்திற்கே ஒலிம்பிக் பந்தயம் என்று பெயர்.

விளையாட்டுப் பந்தயங்கள் என்று அழைக்காமல், ஒலிம்பிக் பந்தயங்கள் என்று ஏன் அழைக்க வேண்டும்? என்ற சந்தேகம் வருவது இயற்கையே. இந்தக் கேள்விக்கு விடை தெரிய வேண்டுமானால், நாம் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லத்தான் வேண்டும்.

நல்ல உடலிலே நல்ல மனம் என்ற கொள்கையைக் கடைப்பிடித்து, வலிவும் வனப்பும்தான் வாழ்வுக்குத் தேவை

என்று வாழ்நாள் முழுவதும் செயலாற்றி வந்த நாடு கிரேக்க நாடு. இந்த நாட்டிலே உள்ள புனிதமான இடம் ஒலிம்பியாவாகும். இப்புனித மண்ணிலே தோன்றிய விளையாட்டுக்களைத்தான் ஒலிம்பிக் பந்தயங்கள் என்று அந்நாட்டினர் அழைத்தனர்.

ஒலிம்பியாவிலே, கிரேக்க நாட்டுக் கடவுளர்களில் சியஸ் என்று அழைக்கப் பெறும் தலைமைக் கடவுளின் கோயில் இருந்தது. (நம் நாட்டுக் கடவுளான சிவனைப் போல), சீயஸ் சிலையமைந்த அக்கோயிலின் முன்னே அமைக்கப் பெற்ற விளையாட்டு அரங்கத்திலே தான் அத்தனைப் பந்தயங்களும் அந்நாளில் நடந்தேறின.

சீயஸ் என்ற கடவுளுக்கும், விளையாட்டுப் பந்தயங்களுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம் கடவுளைக் காட்டித்தான் இந்தக் கதையே தொடங்குகிறது உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகவும். 40 அடி உயரம் அமைந்ததாகத் திகழும் சீயஸ் பீடத்தின் முன்னே நிகழ்கின்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும், கடவுளால் தான் தொடங்கப் பெற்றன என்பதற்கு பல கதைகள், பல புராண வரலாறுகள். தேவைக்கு அதிகமாகவே உள்ளன.

பொலிவான, வலிவான உடல் மட்டும் கொண்டவர்கள் அல்லர் கிரேக்கர்கள் கவின் மிக்கக் கற்பனைகளோடு கதை புனைவதிலும், சிலை வடிப்பதிலும் வல்லவர்கள் நம் நாட்டுப் புராணக் கதைகளுக்கும் சற்றும் சளைத்தவையல்ல அவர்கள் கூறும் கதைகள். விளையாட்டுப் பந்தயங்களைத் தொடங்கி வைத்தது மட்டுமல்ல, விளையாட்டரங்கத்தை அளந்து கட்டி முடித்தவரும் கடவுளேதான் என்று கூறும் அளவுக்கு அவர்கள் கதைகள் அழகாகச் செல்லுகின்றன.

கதையின் காரணத்தை அறியப் புகுந்தால், அவர் தம் வாழ்க்கைமுறை அவ்வாறு இருந்ததுதான் காரணம் என்பதை நாம் அறியலாம். கிரேக்கர்கள் இயற்கையின் அழகைப் புகழ்ந்தனர் போற்றினர். பக்தியுடன் வணங்கினர். இயற்கையின் வடிவிலே இறை உருவை அமைத்தனர். இயற்கை வழி இயங்கும் இறைவன் நினைவைத் தாங்கும் உடலை, உள்ளத்தை, வலிமையோடும் திறமையோடும் வைத்திருக்கும் வாழ்வைத் தொடங்கினர். தொடர்ந்தனர். அதன் காரணமாகவே, உடலைப் பேணும் உயர்ந்த நெறியைக் காத்தனர்.

நம் நாட்டு சித்தர் திருமூலர் கூறிய கருத்தின்படியே அவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.

அதாவது,

உடம்பின் உள்ளே உத்தமன் கோயில் கொண்டான் என

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்பது போல

இதய நிலை மட்டும் அப்படி அவர்களுக்கு அமையவில்லை. இயற்கைச் சூழ்நிலையும் அவ்வாறுதான் அமைந்திருந்தது. கிரேக்க, நாட்டைச் சுற்றிலும் உள்ள நாடுகள் அனைத்தும், தாங்களே தலைமை ஏற்று மற்ற நாடுகளை ஆளவேண்டும் என்று விரும்பின பிறரை ஆளவேண்டும் என்றால் அடக்குமுறைதானே முன்னே எழும்: ஆசை ஆவேசத்தைத் தூண்டிவிட்டது.

விருப்பத்தை நிறைவேற்ற, எல்லா நாடுகளும் போரையே சரண் புகுந்தன. போருக்குத் தேவை படைக்கலன்கள் என்றாலும், படைக்கலன்களைப் பயன்படுத்த பலமான உடலும் தேவையன்றோ! இக்காலம்போல, பீரங்கியும் வெடிகுண்டும், விமானத் தாக்குதலும் அக்காலத்தில் இல்லையே!

ஆகவே, ஒவ்வொரு அரசும் தங்கள் குடிமக்களைப் பலம் வாய்ந்தவர்களாக மாற்ற முயன்றது. அதற்குத் துணைதரும் உடலழகுப் பயிற்சிகளை உற்சாகத்துடன் செய்து, உடலை வளர்க்கத் தூண்டியது. தங்களைக் காத்துக்கொண்டால் தானே, பிற நாடுகளையும் அடக்கித் தலைமை ஏற்க முயும்! ஆகவே, தற்காப்புக்காகவும், தாய்நாட்டைக் காக்கவும் பெற்ற உடல்வளத்தில் விளைந்த திறமையை, வெளிப்படுத்த விரும்பினர். அதற்கு மேடையாக அமைந்ததுதான் இந்த ஒப்பற்ற ஒலிம்பிக் பந்தயங்கள்.

ஒப்புவமை இல்லாத ஒலிம்பிக் பந்தயம் கிரேக்க மக்களை எத்தகைய நிலையில் வாழச் செய்து வாழ்வில் மிளிரச் செய்தது, என்பதை இனி வரும் பகுதிகளில் காண்போம்.