குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6/மகாகவி பாரதியாரின் சிந்தனைகள்-I

விக்கிமூலம் இலிருந்து

7
மகாகவி பாரதியாரின்
சிந்தனைகள் - I

பாரதி, காலம் தந்த கவிஞன். இல்லை, இல்லை! ஒரு காலத்தை உருவாக்கிய கவிஞன்! அந்தக் காலத்திற்கு அவன் கவியரசனாக விளங்கினான்! அடிமைப்பட்டுக் கிடந்த நாட்டில் பாரதி, சுதந்திரக் கவிஞனாக விளங்கினான்! பாரதி காலம் சமுதாயத்தில் அரசியல் அடிமைத் தனம், பொருளாதார அடிமைத் தனம், சாதி மதங்களின் விலங்குகள், மூட நம்பிக்கைகளின் ஆட்சி, எங்கும் சிறுபிள்ளைத் தனம்-விளையாட்டுத்தனம் நிறைந்திருந்த வேடிக்கை மனிதர்கள் பெருகி வாழ்ந்திருந்த காலம்! இந்த யுகத்தில் பாரதி பிறக்கிறான்; தனக்கென ஒரு காலத்தை உருவாக்கிக் கொள்கிறான். பாரதி, அடிமையாகப் பிறந்து அடிமையாகவே செத்துப் போனான்! ஆனால், பாரதியின் ஆன்மா, சுதந்திர தேவியை தரிசனம் செய்தது. அதனால், ஆனந்த சுதந்திரப் பள்ளு பாடினான்!

பாரதி, பாரத சமுதாயத்தை முதன் முதலாகப் படைக்கிறான். பாரதிக்கு முன்பு பாரத நாட்டில் பாரத சமுதாயம் இருந்ததில்லை; எண்ணற்ற சாதிகள் இருந்தன; கணக்கற்ற மதங்கள் இருந்தன. முதன் முதலாக பாரதி சாதி, மத வர்க்கங்களைக் கடந்த ஒன்றுபட்டு நின்ற பாரத சமுதாயத்தைக் காண்கிறான்! படைக்கிறான்! பாரதி காலத்தில் பாரதியால் பாரத சமுதாயம் படைக்கப் பெற்றது. ஆயினும் பாரதி கண்ட சமுதாய அமைப்பு உருவாயிற்றா? நிலைபெற்று விளங்குகிறதா? இன்றும் பாரதி கண்ட சமுதாய அமைப்பு உருக்கொள்ள மறுக்கிறது. எங்கும் மொழி, இனம், சாதி, மத அமைப்புகள்! அவ்வழிக் கலகங்கள்! பொது நலன்கள் புறக்கணிக்கப் படுகின்றன. "நமக்குத் தொழில் கவிதை நாட்டுக்குழைத்தல்” என்று பாரதி கூறிய வழியில் பாரதம் செல்லவில்லை! இன்று போகிற போக்கைப் பார்த்தால் நாட்டையே தேடவேண்டிய அவசியம் வந்து விடும்போல் தெரிகிறது.

பாரதி காலத்தில் நமது நாட்டின் மக்கள் தொகை முப்பது கோடி! இன்று மக்கள் தொகை பல கோடியாகப் பெருகி வளர்ந்துள்ளது. பாரதி, பாரத நாட்டின் மக்கள் அனைவரும் ஒரே சமுதாயம் என்று கூறுகிறான், பாரதி விரும்பிய சமுதாயம் உருக் கொண்டதா? பாரதியின் எண்ணம் நிறைவேறியதா? சமுதாயம் என்ற அமைப்பு எளிதில் உருவாவதில்லை. தன்னயப்புள்ள மனிதர்கள் தன் முனைப்புள்ள மனிதர்கள் சமுதாயம் உருவாகத் தடையாக இருக்கின்றனர். கூட்டம் வேறு; கூடி வாழ்தல் வேறு. சமுதாய அமைப்பில் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பொறுப்பும் கடமையும் உரிமையும் உறவும் உடையவர்களாக விளங்குபவர். ஒருவர் எல்லோருக்காகவும் எல்லோரும் ஒருவருக்காகவும் என்கிற வாழும் முறைமை சமுதாய அமைப்பில் நிலைபெற்று விளங்கும்.

பாரத சமுதாயத்திற்கு ஏற்று தனியுடைமைச் சமுதாயமல்ல. பொதுவுடைமைச் சமுதாயமே என்று பாரதி எண்ணிப் பாடியுள்ளான்.

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொதுவுடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக் கொரு புதுமை!

என்பது பாரதியின் பாடல்!

இன்று வரை பாரதி விரும்பிய சமுதாயம் உருக் கொள்ளவில்லை! பாரத சமுதாயம் பொதுவுடைமைச் சமுதாயமாகவும் வளரவில்லை! சுதந்திரத்திற்கு முன்பிருந்த பின்னடைவுகள் சுதந்திரப் போராட்டத்தின் போது அமுங்கிக் கிடந்தன. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு மீண்டும் பிற்போக்குத் தனங்களும் பின்னடைவுகளும் தலைதூக்க லாயின. இது வருந்தத்தக்க நிகழ்ச்சி; வரலாறு.

வரலாறு மாற வேண்டாமா? பாரத சமுதாயம் வளர வேண்டாமா? ஆம்! கவிஞன் பாரதி, பாரத சமுதாய மாற்றத்துக்குரிய உந்து சக்தியைத் தந்தான்! ஆயினும், மாற்றம் ஏற்படவில்லை. பொதுவுடைமைச் சமுதாய அமைப்பே இன்று உலக அரங்கில் கேள்விக்குறி! ஆயினும் மனிதன் உலகாயதத்திலும் பொருளாதாரத்திலும் ஆன்மிகத்திலும் வளர்ந்து முழு மனிதன் ஆக வேண்டின் பொதுவுடைமைச் சமுதாய அமைப்பே துணை செய்யும். உடைமைகள் கருவிகளே தவிர இலக்குகள் அல்ல. மானுடத்தின் இலக்கு இங்கு அமரர் இன்பம் காண்பது, மானிடர் பிறரைக் கொல்ல நினையாமல் வாழும் மனச் சான்று மிக்க வாழ்க்கையை நடத்தும் முறை காண்பது. இந்த உலகை இன்பக் கேணியாக்கல்! இதுவே பாரதியின் சிந்தனை!