குறிஞ்சிக்கலி- 49 முதல் 56 முடிய

விக்கிமூலம் இலிருந்து

49 கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை, நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின், கனவில் கண்டு, கதுமென வெரீஇப் புதுவது ஆக மலர்ந்த வேங்கையை 'அது' என உணர்ந்து, அதன் அணி நலம் முருக்கிப் பேணா முன்பின் தன் சினம் தணிந்து, அம் மரம் காணும் பொழுதின் நோக்கல் செல்லாது, நாணி இறைஞ்சும் நல் மலை நல் நாட!

போது எழில் மலர் உண் கண் இவள் மாட்டு நீ இன்ன காதலை என்பதோ இனிது - மற்று இன்னாதே, மின் ஓரும் கண் ஆக, இடி என்னாய், பெயல் என்னாய், இன்னது ஓர் ஆர் இடை, ஈங்கு நீ வருவதை;

இன்புற அளித்தனை இவள் மாட்டு நீ இன்ன அன்பினை என்பதோ இனிது - மற்று இன்னாதே, மணம் கமழ் மார்பினை, மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து, அணங்கு உடை ஆர் இடை, ஈங்கு நீ வருவதை;

இருள் உறழ் இரும் கூந்தல் இவள் மாட்டு நீ இன்ன அருளினை என்பதோ இனிது - மற்று இன்னாதே, ஒளிறு வேல் வலன் ஏந்தி, 'ஒருவன் யான்' என்னாது, களிறு இயங்கு ஆர் இடை, ஈங்கு நீ வருவதை;

அதனால், இரவின் வாரல்; ஐய! விரவு வீ அகல் அறை வரிக்கும் சாரல், பகலும் பெறுவை, இவள் தட மென் தோளே.

50 வாங்கு கோல் நெல்லொடு வாங்கி, வரு வைகல், மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி, தூங்கு இலை வாழை நளி புக்கு, ஞாங்கர் வருடை மட மறி ஊர்வு இடைத் துஞ்சும் இருள் தூங்கு சோலை, இலங்கு நீர் வெற்ப!

அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த உரவு வில் மேல் அசைத்த கையை, ஓராங்கு நிரை வளை முன்கை என் தோழியை நோக்கிப், படி கிளி பாயும் பசும் குரல் ஏனல் கடிதல் மறப்பித்தாய் ஆயின், இனி நீ நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும்; இவளே பல் கோள் பலவின் பயிர்ப்பு உறு தீம் கனி அல்கு அறைக் கொண்டு ஊண் அமலைச் சிறுகுடி நல்கூர்ந்தார் செல்வ மகள்.

நீயே, வளியின் இகல் மிகும் தேரும், களிறும் தளியின் சிறந்தனை - வந்த புலவர்க்கு அளியொடு கைதூவலை;

அதனால், கடு மா கடவுறூஉம் கோல் போல், எனைத்தும் கொடுமை இலை ஆவது அறிந்தும், அடுப்பல் - வழை வளர் சாரல் வருடை நல் மான் குழவி வளர்ப்பவர் போலப் பாராட்டி, உழையின் பிரியின், பிரியும், இழை அணி அல்குல் என் தோழியது கவினே!

51 சுடர் தொடீஇ! கேளாய் - தெருவில் நாம் ஆடும் மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய கோதை பரிந்து, வரிப் பந்து கொண்டு ஓடி , நோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள், அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே! உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை 'அடர் பொன் சிரகத்தால் வாக்கிச், சுடர் இழாய்! உண்ணு நீர் ஊட்டி வா' என்றாள்; என, யானும் தன்னை அறியாது சென்றேன்; மற்று, என்னை வளை முன்கை பற்றி நலியத், தெருமந்திட்டு, 'அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்!' என்றேனா, அன்னை அலறிப் படர்தர, தன்னை யான், 'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும் தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக் கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகை கூட்டம் செய்தான், அக் கள்வன் மகன்!

52 முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செத்து, மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக் குறங்கு அறுத்திடுவான் போல், கூர் நுதி மடுத்து, அதன் நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை, மல்லரை மறம் சாய்த்த மால் போல், தன் கிளை நாப்பண், கல் உயர் நனம் சாரல், கலந்து இயலும் நாட! கேள்;

தாமரைக் கண்ணியைத், தண் நறும் சாந்தினை, நேர் இதழ்க் கோதையாள் செய் குறி நீ வரின், 'மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம் அணங்கு' என அஞ்சுவர், சிறுகுடியோரே;

ஈர்ந் தண் ஆடையை, எல்லி மாலையை, சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய் குறி நீ வரின், ஒளி திகழ் ஞெகிழியர், கவணையர், வில்லர், 'களிறு' என ஆர்ப்பவர், ஏனல் காவலரே;

ஆர மார்பினை, அண்ணலை, அளியை ஐது அகல் அல்குலாள் செய் குறி நீ வரின், 'கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனாப் புலி' என்று ஓர்க்கும், இக் கலி கேழ் ஊரே;

என ஆங்கு, விலங்கு ஓரார், மெய் ஓர்ப்பின், இவள் வாழாள், இவள் அன்றிப் புலம் புகழ் ஒருவ! யானும் வாழேன்; அதனால் பொதி அவிழ் வைகறை வந்து நீ குறை கூறி, வதுவை அயர்தல் வேண்டுவல், ஆங்குப் புதுவை போலும் நின் வரவும், இவள் வதுவை நாண் ஒடுக்கமும், காண்குவல் யானே.

53 வறன் உறல் அறியாத வழை அமை நறும் சாரல் விறல் மலை வியல் அறை, வீழ் பிடி உழையதா மறம் மிகு வேழம், தன் மாறு கொள் மைந்தினான், புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல உயர் முகை நறும் காந்தள் நாள் தோறும் புதிது ஈன, அயம் நந்தி அணிபெற, அருவி ஆர்த்து இழிதரும் பய மழை தலைஇய பாடு சால் விறல் வெற்ப!

மறையினின் மணந்து, ஆங்கே மருவு அறத் துறந்த பின் இறை வளை நெகிழ்பு ஓட, ஏற்பவும் ஒல்லும்மன் - அயல் அலர் தூற்றலின், ஆய் நலன் இழந்த, கண்! கயல் உமிழ் நீர் போலக், கண் பனி கலுழாக்கால்?

இனிய செய்து அகன்று, நீ இன்னாதாத் துறத்தலின், 'பனி இவள் படர்' எனப் பரவாமை ஒல்லும்மன் - ஊர் அலர் தூற்றலின், ஒளி ஓடி நறு நுதல் பீர் அலர் அணி கொண்டு, பிறை வனப்பு இழவாக்கால்?

'அஞ்சல்' என்று அகன்று, நீ அருளாது துறத்தலின், நெஞ்சு அழி துயர் அட, நிறுப்பவும் இயையும்மன் - நனவினால் நலம் வாட, நலிதந்த நடுங்கு அஞர், கனவினால் அழிவுற்றுக், கங்குலும் ஆற்றாக்கால்?

என ஆங்கு, விளியா நோய் உழந்து ஆனா என் தோழி, நின் மலை முளிவுற வருந்திய முளை முதிர் சிறு தினை தளி பெறத் தகைபெற்றாங்கு, நின் அளி பெற நந்தும், இவள் ஆய் நுதல் கவினே!

54 'கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெறப் பொடி அழல் புறந்தந்த பூவாப் பூம் பொலன் கோதைத், தொடி செறி யாப்பு அமை அரி முன்கை, அணைத் தோளாய்! அடி உறை அருளாமை ஒத்ததோ நினக்கு?' என்ன, நரந்தம் நாறு இரும் கூந்தல் எஞ்சாது நனி பற்றிப், பொலம் புனை மகரவாய் நுங்கிய சிகழிகை, நலம்பெறச் சுற்றிய குரல் அமை ஒரு காழ் விரல் முறை சுற்றி, மோக்கலும் மோந்தனன்; நறாஅ அவிழ்ந்தன்ன என் மெல் விரல் போது கொண்டு செறாஅச் செங் கண் புதைய வைத்துப் பறாஅக் குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன்; தொய்யில் இள முலை இனிய தைவந்து, தொய்யல் அம் தடம் கையின், வீழ் பிடி அளிக்கும் மையல் யானையின், மருட்டலும் மருட்டினன்; அதனால், அல்லல் களைந்தனன் தோழி! நம் நகர் அரும் கடி நீவாமை கூறின்,'நன்று' என, நின்னொடு சூழ்வல், தோழி, 'நயம் புரிந்து, இன்னது செய்தாள் இவள்' என மன்னா உலகத்து மன்னுவது புரைமே!

55 மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலே போல், பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டுப் போழ் இடை இட்ட கமழ் நறும் பூங் கோதை, இன் நகை, இலங்கு எயிற்றுத், தேமொழித், துவர்ச் செவ்வாய் நல் நுதால் நினக்கு ஒன்று கூறுவாம்; கேள், இனி;

'நில்' என, நிறுத்தான்; நிறுத்தே வந்து. நுதலும், முகனும், தோளும், கண்ணும், இயலும், சொல்லும், நோக்குபு நினைஇ, 'ஐ தேய்ந்தன்று, பிறையும் அன்று; மை தீர்ந்தன்று, மதியும் அன்று; வேய் அமன்றன்று, மலையும் அன்று; பூ அமன்றன்று, சுனையும் அன்று; மெல்ல இயலும், மயிலும் அன்று; சொல்லத் தளரும், கிளியும் அன்று'

என ஆங்கு, அனையன பல பாராட்டிப், பையென, வலைவர் போலச் சோர் பதன் ஒற்றிப், புலையர் போலப் புன்கண் நோக்கித், தொழலும் தொழுதான்; தொடலும் தொட்டான்; காழ் வரை நில்லாக் கடும் களிறு அன்னோன் தொழூஉம்; தொடூஉம்; அவன் தன்மை ஏழைத் தன்மையோ இல்லை, தோழி!

56 ஊர்க் கால் நிவந்த பொதும்பருள், நீர்க் கால், கொழு நிழல் ஞாழல் முதிர் இணர் கொண்டு, கழும முடித்துக், கண் கூடு கூழை சுவல் மிசைத் தாதொடு தாழ, அகல் மதி தீம் கதிர் விட்டது போல, முகன் அமர்ந்து ஈங்கே வருவாள் இவள் யார் கொல்? ஆங்கே, ஓர் வல்லவன் தைஇய பாவை கொல்? நல்லார் உறுப்பு எலாம் கொண்டு, இயற்றியாள் கொல்? வெறுப்பினால் வேண்டு உருவம் கொண்டது ஓர் கூற்றம் கொல்? - ஆண்டார், கடிது, இவளைக் காவார் விடுதல்; கொடி இயல், பல் கலைச் சில் பூங் கலிங்கத்தள் - ஈங்கு இது ஓர் நல்கூர்ந்தார் செல்வ மகள்!

இவளை சொல்லாடிக் காண்பேன், தகைத்து; நல்லாய்! கேள்;

ஆய் தூவி அனம் என, அணி மயில் பெடை எனத், தூது உண் அம் புறவு எனத், துதைந்த நின் எழில் நலம் - மாதர் கொள் மான் நோக்கின் மட நல்லாய்! - நின் கண்டார்ப் பேதுறூஉம் என்பதை அறிதியோ? அறியாயோ?

நுணங்கு அமைத் திரள் என, நுண் இழை அணை என, முழங்கு நீர்ப் புணை என, அமைந்த நின் தட மென் தோள் - வணங்கு இறை வால் எயிற்று அம் நல்லாய்! - நின் கண்டார்க்கு, அணங்கு ஆகும் என்பதை அறிதியோ? அறியாயோ?

முதிர் கோங்கின் முகை என, முகம் செய்த குரும்பை எனப், பெயல் துளி முகிழ் எனப், பெருத்த நின் இள முலை - மயிர் வார்ந்த வரி முன்கை மட நல்லாய்! - நின் கண்டார் உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ? உணராயோ?

என ஆங்கு, பேதுற்றாய்ப் போலப் பிறர் எவ்வம் நீ அறியாய், யாது ஒன்றும் வாய் வாளாது இறந்தீவாய்! கேள், இனி; நீயும் தவறு இலை; நின்னைப் புறங்கடை போதர விட்ட நுமரும், தவறு இலர்; நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டாங்குப் 'பறை அறைந்து அல்லது செல்லற்க' என்னா