குறுந்தொகை 71 முதல் 81 முடிய

விக்கிமூலம் இலிருந்து

பாடல்: 71 (மருந்தெனின்)[தொகு]

தலைவன் கூற்று


மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே
அரும்பிய சுணங்கி னம்பகட் டிளமுலைப்
பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற்
கல்கெழு கானவர் நல்குறு மகளே.


என்பது, பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.


பாடியவர்
கருவூர் ஓதஞானி.


மேற்கோளாட்சி


இளம்பூரணர்: தொல்காப்பியம் எழுத்ததிகாரம் குற்றியலுகரப்புணரியல், நூற்பா 75 "கல்லைக்கெழீஇயனவென இரண்டனுருபு விரிந்தது".
நச்சினார்க்கினியர்: மேலது.
இறையனார் அகப்பொருள் உரை: நூற்பா 51 "தலைவன் தன்நெஞ்சிற்குச் சொல்லிச்செலவழுங்கியது"
தமிழ்நெறி விளக்கம் 24. மேலது
பேராசிரியர்: தொல்காப்பியம் பொருளதிகாரம் உவமவியல்,நூற்பா 28. "இனிதுறு கிளவிபற்றி ஏனை உவமம் வந்தது."
பேராசிரியர்: தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல், நூற்பா 202 "நிகழ்காலமென்னும் உறுப்பு வந்தது".
நச்சினார்க்கினியர்: மேலது.
இலக்கணவிளக்கம்: மேலது.
பேராசிரியர்: தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் நூற்பா, 211. "பொருளென்னும் உறுப்பின்றி வந்தது"
நச்சினார்க்கினியர்: மேலது.
சேனாவரையர்: தொல்காப்பியம் சொல்லதிகாரம் எச்சவியல் நூற்பா, 45 "எமக்கென்னும் சொல்பின்னும் முன்னும் எஞ்சிநின்றது".
நச்சினார்க்கினியர்: மேலது.
இலக்கணவிளக்கம்: நூற்பா, 51. மேலது.
குணசாகரர் யாப்பருங்கலம் விருத்தியுரை, நூற்பா 15. "இயற்சீரான் வந்த ஆசிரியப்பா".

பாடல்: 72 (பூவொத்தலமருந்)[தொகு]

தலைவன் கூற்று


பூவொத் தலமருந் தகைய வேவொத்
தெல்லாரு மறிய நோய்செய் தனவே
தேமொழித் திரண்ட மென்றோண் மாமலைப்
பரீஇ வித்திய வேனற்
குரீஇ யோப்புவாள் பெருமழைக் கண்ணே.


என்பது, தலைமகன் தன் வேறுபாடு கண்டு வினாய பாங்கற்கு உரைத்தது.


பாடியவர்
மள்ளனார்.


மேற்கோளாட்சி

நச்சினார்க்கினியர்: தொல்காப்பியம் அகத்திணைஇயல் நூற்பா, 16. 'இக்குறுந்தொகையுள் குரீஇ யோப்புவாள் கண்ணென வழிநிலைக் காட்சியைப் பாங்கற்குக் கூறினமையின் அத்தினைக்கதிர் முற்றுதற்குரிய இளவேனிலும், பகற்பொழுதும் காட்சிக்கண் வந்தன'.


பாடல்: 73 (மகிழ்நன்)[தொகு]

தோழி கூற்று


மகிழ்நன் மார்பே வெய்யை யானீ
அழியல் வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று நாட்டிற் போக்கிய
ஒன்றுமொழிக் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே.

என்பது பகற்குறி மறுத்து இரவுக்குறி நேர்ந்தது, அதுவும் மறுத்தமைப்படத் தலைமகட்குத் தோழி சொல்லியது.


பாடியவர்
பரணர்.


மேற்கோளாட்சி
இளம்பூரணர்: தொல்காப்பியம் பொருளதிகாரம் களவியல் நூற்பா, 24. "தோழி வன்புறை"
நச்சினார்க்கினியர்: மேலது, நூற்பா 23.
நம்பியகப்பொருள்: நூற்பா, 154. "தலைவியைப் பாங்கி கழறியது".


பாடல்: 74 (விட்டகுதிரை)[தொகு]

தோழி கூற்று
விட்ட குதிரை விசைப்பி னன்ன
விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன்
யாந்தற் படர்ந்தமை யறியான் றானும்
வேனிலானேறு போலச்
சாயின னென்பநம் மாணல நயந்தே.


என்பது, தோழி தலைமகன் குறை மறாதவாற்றாற் கூறியது.


பாடியவர்
விட்ட குதிரையார்.


மேற்கோளாட்சி
நம்பியகப்பொருள் நூற்பா, 148. "தலைவி பாங்கியை முனிந்தது".


பாடல்: 75 (நீகண்டனை)[தொகு]

தலைவி கூற்று


நீகண் டனையோ கண்டார்க்கேட் டனையோ
ஒன்று தெளிய நசையின மொழிமோ
வெண்கோட் டியானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.


என்றது, தலைமகன் வரவுணர்த்திய பாணற்குத் தலைமகள் கூறியது.


பாடியவர்
மோசிகீரனார்.


மேற்கோளாட்சி
இளம்பூரணர்: தொல்காப்பியம் சொல்லதிகாரம் கிளவியாக்கம் நூற்பா, 18. "செய்யுளில் இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயர் வந்தது".
கல்லாடர்: மேலது.
இளம்பூரணர்: தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியல் நூற்பா,6. "தலைவன் வருகின்றானென்ற உழையர்க்குத் தலைவி கூறியது.
நச்சினார்க்கினியர்: தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பு நூற்பா, 6. "தலைவன் வரவைத் தலைவி விரும்பிக் கூறியது".


பாடல்: 76 (காந்தள்)[தொகு]

தலைவி கூற்று


காந்தள் வேலி யோங்குமலை நன்னாட்டுச்
செல்பவென்பவோ கல்வரை மார்பர்
சிலம்பிற் சேம்பி னலங்கல் வள்ளிலை
பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇத்
தண்வரல் வாடை தூக்கும்
கடும்பனி யச்சிர நடுங்கஞ ருறவே.


என்பது, பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு அவர் பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது.


பாடியவர்
கிள்ளிமங்கலங் கிழார்.


மேற்கோளாட்சி


பாடல்: 77 (அம்மவாழி)[தொகு]

தலைவி கூற்று


அம்ம வாழி தோழி யாவதும்
தவறெனிற் றவறோ விலவே வெஞ்சுரத்
துலந்த வம்பல ருவலிடு பதுக்கை
நெடுநல் யானைக் கிடுநிழ லாகும்
அரிய கானஞ் சென்றோர்க்
கெளிய வாகிய தடமென் றோளே.


என்பது, பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.


பாடியவர்
மதுரை மருதன் இளநாகனார்.


மேற்கோளாட்சி
இளம்பூரணர்: தொல்காப்பியம் சொல்லதிகாரம் இடையியல் நூற்பா, 28. "அம்மவென்னும் இடைச்சொல் கேட்பித்தல் பொருளில் வந்தது.
சேனாவரையர்: மேலது, நூற்பா, 27.
தெய்வச்சிலையார்: மேலது, நூற்பா, 28.
நச்சினார்க்கினியர்: மேலது, நூற்பா, 28.
மயிலைநாதர்: நன்னூல் நூற்பா, 437.
இலக்கணவிளக்கம் நூற்பா, 274.



பாடல்: 78 (பெருவரை)[தொகு]

பாங்கன் கூற்று


பெருவரை மிசையது நெடுவெள் ளருவி
முதுவாய்க் கோடியர் முழவிற் றதும்பிச்
சிலம்பினிழிதரு மிலங்குமலை வெற்ப
நோதக்கன்றே காமம் யாவதும்
நன்றென வுணரார் மாட்டும்
சென்றே நிற்கும் பெரும்பே தமைத்தே.


என்பது, பாங்கன் தலைமகற்குச் சொல்லியது.


பாடியவர்
நக்கீரனார்.


மேற்கோளாட்சி
நச்சினார்க்கினியர்: தொல்காப்பியம் சொல்லதிகாரம் எச்சவியல்,நூற்பா, 61. "அஃறிணை யொன்றன்பாற்கண் வந்த பெயரெச்சப்படர்க்கை வினைக்குறிப்பு முற்று.
மயிலைநாதர்: நன்னூல்,நூற்பா, 350. "ஒன்றன்பால் வினைக்குறிப்புமுற்றுப் பெயரெச்சக் குறிப்பானது.
சங்கரநமச்சிவாயர்: மேலது.
இளம்பூரணர்: தொல்காப்பியம் சொல்லதிகாரம் தொகைமரபு நூற்பா, 30. "யாவதென்னும் ஒன்றறி சொல்லும், நிலைமொழியாய் நின்று புணர்தலும் மருவின் பாத்தியது".
நச்சினார்க்கினியர்: மேலது.
பரிமேலழகர்: திருக்குறள் 1255. "காமநோயுறாதார் மானமுடையார் நன்றென வுணரார் மாட்டுஞ்சென்றே நிற்கும்; யானறிவ தொன்றன்றென்பதாம்".
தமிழ்நெறிவிளக்கம், 17. தோழி தலைவனிடம் படைத்து மொழிந்தது.

பாடல்: 79 (கானயானை)[தொகு]

தலைவி கூற்று


கான யானை தோனயந் துண்ட
பொரிதா ளோமை வளிபொரு நெடுஞ்சினை
அலங்க லுலவை யேறி யொய்யெனப்
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும்
அத்த நண்ணிய வங்கடிச் சீறூர்ச்
சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்
கொல்லே மென்ற தப்பற்
சொல்லா தகறல் வல்லு வோரே.


என்பது, பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்த தலைமகள் தோழிக்குச்சொல்லியது.


பாடியவர்
குடவாயிற் கீரனக்கன்


மேற்கோளாட்சி
நச்சினார்க்கினியர்: தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியல் நூற்பா, 43. "தலைவன் சொல்லாது பிரிந்தது".
இளம்பூரணர்: தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியல் நூற்பா, 7.
"புணர்ந்துடன் போகிய கிழவோண் மனையிருந்
திடைச்சுரத் திறைச்சியும் வினையுஞ்சுட்டி
அன்புறு தக்க கிளத்த றானே
கிழவோன் செய்வினைக் கச்சமாகும்' ஆதலின்,"'புலம்புதரு குரலவாய்ப் புறவினைப் பெடை அழைக்கும் வருத்தங்கண்டு வினைமுடியாமல் வருவரோவென அஞ்சியவாறு காண்க'.
நச்சினார்க்கினியர்:மேலது.

பாடல்: 80 (கூந்தலாம்ப)[தொகு]

பரத்தை கூற்று


கூந்த லாம்பன் முழுநெறி யடைச்சிப்
பெரும்புனல் வந்த விருந்துறை விரும்பி
யாமஃ தயர்கஞ் சேறுந் தானஃ
தஞ்சுவ துடைய ளாயின் வெம்போர்
நுகம்படக் கடக்கும் பல்வே லெழினி
முனையான் பெருநிரை போலக்
கிளையொடுங் காக்கதன் கொழுநன் மார்பே.


என்றது, தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது.


பாடியவர்
ஒளவையார்.


மேற்கோளாட்சி


இளம்பூரணர்: தொல்காப்பியம் கற்பியல் நூற்பா, 10. "புனல்விளையாட்டின்கண் காமக்கிழத்தியர் கூற்று நிகழ்ந்தது".
நச்சினார்க்கினியர்: மேலது.
குறுந்தொகை
[[]]