உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/அப்பம் திருடின எலி

விக்கிமூலம் இலிருந்து

35. அப்பம் திருடின எலி

செட்டியார் வீட்டில் அடுக்களையில் - சென்ற
     தீபா வளியன் றிரவுதனில்
வட்டியில் அப்பம் இருந்ததம்மா! - அதை
     வாசத்தினால் அறிந்தோர் எலிதான்; 1

'நெய்யினில் சுட்ட பணிகாரம் - இது
     நேர்த்தியாய்ச் சுட்ட பணிகாரம்,
பையப் பையக் கடித் துண்பதற்கும் - வெகு
     பக்குவமான பணிகாரம். 2

யார்க்கும் கிடையாப் பெருநிதியாம் - இதை
    யான் இன்று பெற்றதென் பாக்கியமே;
பார்க்கும் பொழுதேநீர் வாயினிலே - ஊறிப்
    பாய்கின்றதே,பசி யாகின்றதே. 3

[அப்போது வேறு சில எலிகள் சத்தமிடக் கேட்டு :]

என்ன சத்தம்! ஓ ! ஓ! தம்பிமார்கள் - கூடி
    இங்கு விளையாட வந்தனரோ?
அன்னவர் ஓடி வருமுன்னமே -யானும்
    அட்பத்தைக் கொண்டு மறைந்திடுவேன். 4

ஏதும் ஒருபொடி யாகிலும் - யான் அவர்க்கு
    ஈந்திடேன்; முற்றுமே தின்றிடுவேன்;
திய தானம் தனக்குப்போக - மீதி
    உள்ளவர் அல்லவோ செய்திடுவார்?' 5

என்று சொல்லி, அந்த அப்பத்தினை - வாயில்
    ஏந்திக் கடித்திழுத் தோடிடவே,
கன்றப் பசித்த இளைஞரெல்லாம் - வந்து
    கால்கடுக்கத் தேடிப் போயினரே. 6

ஆரும் அறியாத மூலையிலே - அந்த
    அப்பத்தை அவ்வெலி கொண்டுவைத்துக்
கூறிய பல்லால் கறம்பி ஒருபொடி
    கூடச் சிதறாமல் தின்றதம்மா! 7

மட்டுக்கு மிஞ்சிப் புசித்ததனால் மூச்சு
    வாங்கி, வருந்தி, வயிறூதி,
கட்டப் படுவதைச் சுற்றத்தார் எல்லோரும்
    கண்டொரு பண்டிதர்க் காளும்விட்டார். 8

பண்டிதர் வந்துகை பார்த்தனர் ; அவ்வெலி
    பண்டம் முழுதையும் உண்ட கதை
விண்டதும் கேட்டு, குறிகளும் நோக்கி,
    விதிப்படி ஆய்ந்து விளம்பினரே. 9

அப்பம் முழுதும் நீ தின்றனையே - அதை
    அன்பிற் குரியஉன் தம்பியர்க்கும்
ஓப்பவே பங்கிட் டளித்திருந்தால் - துன்பம்
    ஒன்றும்வந் துன்னை அணுகாதே. 10

அன்றியும் உன் தம்பி மாரும் கடும்பசி
      ஆறிக் களித்திருப்பார்கள் அன்றோ?
இன்றினிச் செய்வதென்? இவ்வுலகம் விட்டு
      யாத்திரை போவது திண்ணம்' என்றார். 11

ஆனதனாலே கிடைத்த பொருளை - நாம்
      ஆகும் மட்டும்பகுத் துண்ணவேண்டும்;
ஈனமாந் தன்னயத் தால்வருந் துன்பமே;
      இன்பம் அளிக்கும் பொதுநயமே. 12

அளவு கடந்திடில் ஆரமுதும் - விஷம்
      ஆகும் என்று நம தான்றோர்கள்
உளபடியே சொன்ன வாக்கியத் துண்மையை
      உள்ளத்திற் கொள்ளுங்கள், தோழர்களே! 13