கோடுகளும் கோலங்களும்/அத்தியாயம் 18

விக்கிமூலம் இலிருந்து

18


சித்திரைக் கத்திரி சுட்டெரிக்கிறது. சரோ ஊரில் சென்று ஒரே ஒரு கடிதம் சுருக்கமாகத் தான் வந்து சேர்ந்ததாக எழுதினாள். சரவணனுக்குப் பள்ளிக் கூடம் அடைத்தாயிற்று. நானும் மதுரைக்குப் போவேன். மாமா வீட்டுக்கு என்று குதிக்கிறான். “நம் கொல்லையில் கடலை புடுங்கப் போறம், அங்க என்னடா இருக்கு? புரட்டாசி லீவுல அப்பாவக் கூட்டிட்டுப் போய் காட்டச் சொல்ற, உனக்குத்தா இனி அந்த சைக்கிள்...” என்றெல்லாம் ஆசை காட்டி அவனைச் சமாதானப்படுத்துகிறாள்.

இந்நாட்களில் கன்னியப்பன் அவள் கண்களில் தட்டுப்படுவதில்லை. பட்டாலும் முன்போல் வெள்ளையாகப் பேச்சுக் கொடுப்பதில்லை.

நெற்பயிர் கதிர் பிடிக்கிறது.

அன்று, கன்னியப்பன் பம்ப் ரூமுக்குப் பக்கத்தில் விநோதமாகக் காட்சி அளிக்கிறான். வரி வரியான பனியன் மேனியை முழுமையாக மூடுகிறது. மஞ்சளும் பச்சையுமான பட்டை கண்களில் பளிரென்று படுகிறது. இடுப்பில் வேட்டி தார்பாய்ச்சாமல்... கையில் ஒரு டிரான்சிஸ்டர். அதிலிருந்து வரும் பாடலை அவன் ரசிக்கிறான் என்று தெரிகிறது. "ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால், அந்த உறவுக்குப் பெயர் என்ன... காதல்...” என்ற பாட்டு தெளிவாகச் செவந்தியின் செவிகளில் விழுகிறது.

அவள் நின்று நிதானித்துப் பாட்டு எதையும் கேட்பதில்லை. சில பாட்டுக்கள் தொடக்கத்திலேயே அசிங்கம் என்று அவளுக்குத் தோன்றும். சரோ இம்மாதிரி பாட்டுக்களை அலறவிடும்போது கோபமாக வரும்.

கல்யாணமான புதிதில் அவள் புருசன் அவளைக் காஞ்சிபுரம் சினிமா தியேட்டருக்குக் கூட்டிச் சென்றிருக்கிறான். “சீ என்னங்க அசிங்கமா டிரஸ் போட்டுகிட்டுக் கூச்ச நாச்சம் இல்லாம வாராங்க. இதெல்லாமா நல்ல சினிமா” என்றாள். இப்போது வீட்டுக்கு வீடு டி.வி. வாங்கி வைத்திருக்கிறார்கள். அம்சு வீட்டில் ஒரு கறுப்பு வெள்ளை இருக்கிறது. வேல்ச்சாமி அவன் அம்மா வாங்கி வைத்திருக்கிறாள். நீலவேணி வீட்டில் இருக்கிறது. சுந்தரிக்குக் கலராக வாங்க வேண்டும் என்று உள்ளுர ஆசை. இதில் சினிமாவே பார்க்க வசதியாக மேலும் பத்து பன்னிரண்டாயிரம் கொடுத்து டெக் வாங்கி வைத்து சினிமாப் பார்ப்பதாம். இளசுகள் எப்படி உடம்பு வணங்கி வேலை செய்யும்? புல் அறுத்துக் கொண்டு இவள் நகருவதைக் கன்னியப்பன் பார்க்கிறான்."என்னக்கா, பேசாம போறிங்க?”

தன் விதி வலிமையைக் காட்டும் பெருமையா?

“பேசுவதற்கு என்னப்பா இருக்கு?”

“ஏனில்ல? எப்ப கடல வெட்டப் போறீங்க? வெட்டறதுக்காச்சுக்கா. நா நெறய பேரக்கூட்டிட்டு வந்து ஒரு புடிபுடிக்கணுமில்ல? முதமுதல்ல கடலபோட்டு அமோகமா எடுக்கப் போறீங்க. எனக்கு வேட்டி மட்டும் வாங்கித்தந்தாப் பத்தாது.”

“வேட்டி வாணாம். டெளசர் வாங்கித் தாரே. பூடிசும் போட்டுட்டு தாட்டுப்பூட்டுன்னு நடந்து வா!"

அவள் சிரித்துக்கொண்டே இதைச் சொல்லவில்லை. குத்தல் தொனிக்கிறது. அது அவளே அறியாமல் வரும் குத்தல்..

அவன் சிரிக்கிறான். அப்போது கூடையுடன் லட்சுமி வருகிறாள். முருங்கைக் கீரைக் குழைகள் கூடை நிறைய...

"மிசின் பக்கம் கழிச்சிப் போட்டிருந்தாங்க. ஆட்டுக்கும் குடுக்கலாம்; வூட்டுக்கும் ஆவும். உங்களுக்கு வேணுமாக்கா?”

“வாணாம். இன்னைக்கு எல்லாம் ஆயிடிச்சி.”

“மாமா ஊரிலேந்து வந்திட்டரா?” கன்னியப்பனின் சட்டையும், டிரான்சிஸ்டரும் அவளை அப்படிக் கேட்கும்படித் தூண்டுகின்றன.

“இல்ல. வெயில்தா எரிக்கிதே... ஆனா அறுப்புக்கு மின்ன வந்திடுவாங்க...”

கிராமியமாகப் பச்சை வாயில் சேலையைப் பின் கொசுவம் வைத்து உடுத்தியிருக்கிறாள். ஒரு கையில் கொடியாக இலைகள்... லட்சுமி கறுப்பில்லை. சிவப்போடு சேர்த்திதான். பச்சைக் குத்து பளிச்சென்று தெரிகிறது."எங்கே கையில் பச்சை குத்திருக்கே. உம் பேரா...?”

இவள் வலிய அவள் வலது கையைப் பற்றி நிமிர்த்திப் பார்க்கிறாள். எல்.வி என்று ஆங்கிலத்தில் ஒரு பூமாலைக்குள் எழுதப்பட்டிருக்கிறது. லட்சுமி இவள் பெயர். வி. யார் பெயர்? அவள் கேட்கவில்லை. காலஞ்சென்ற புருசனின் பெயராக இருக்கும். அவள் சடக்கென்று கையைத் திருப்பிப் போட்டுக் கொள்கிறாள்.

“நீங்க கல்யாணமானா பச்சை குத்திப்பிங்களா?”

“இல்ல... அவுங்க கட்சித் தலவர் பேரக் குத்திட்டாங்க. என்னையும் மகளிரணி, குத்திக்கன்னாங்க... நா மாட்டேன்னே. பிறகு அவுங்க பேரு வேலு. அத்தச் சேத்துக் குத்தினாங்க. அதா...”

குரலில் சோகம் இழையோடுகிறது.

"பாவம் லச்சுமி. நாந் தெரியாம கேட்டுட்டே. வருத்தப்படாதே... தப்பா நினைச்சிக்காத” என்று சமாளிக்கிறாள். என்றாலும் இது நாகரீகமான நடப்பு அல்ல என்று உறுத்துகிறது.

இப்போது கன்னியப்பனைக் கட்டினால் இந்தப் பச்சைக் குத்து உறுத்தும். பச்சைக் குத்து ஒன்றுதானா? ஒரு பிள்ளையே இருக்கிறது.

ஆண் ஒரு பெண்ணைக் கட்டியபின் இன்னொருத்தியைக் கட்டாமலே தொடர்பு கொள்கிறான். அவனுக்கு வரைமுறையே இல்லை. மனைவி இறந்து குழந்தைகளை மாற்றாந்தாய்க்குக் காட்டக் கூடாது என்று அவள் பாட்டன் திருமணமும் இல்லாமல் வேறு அப்பழுக்கும் ஒட்டாமல் இருந்தாராம். ஆனால் தன் மகளுக்கு அதனால்தானோ, நியாயம் செய்யவில்லை?

ஆண் தான் ஒரு பெண் ஒழுக்கமுடனோ, ஒழுக்கமில்லாமலோ இருப்பதற்குக் காரணம். சின்னஞ்சிறு வயசு. இவள் காலமெல்லாம் ஒழுக்கச்சுமையைச் சுமந்து கொண்டு மோசமான உலகில் எப்படி வாழ்வாள்? அவளுக்கும் நல்ல புருசன். அவனுக்கும் நல்ல இடம். சரோசா அவனுக்கு ஏற்றவளல்ல. கைநழுவிப் போனதுதான்...

கடலை முற்றுவதற்கு முன் பயறு கொத்துக் கொத்தாகப் பழுக்கிறது. அவ்வப்போது பறித்துக் கொண்டு வந்து வீட்டு முற்றத்தில் போட்டு அது காய்கிறது. அம்மா தடியில் அடித்து ஒரு படி பயிறு போல் எடுக்கிறாள். பொக்கில்லை. நல்ல திரட்சியாக இருக்கிறது.

கடலைப் பயிர் மேலே செடி பழுத்துவிட்டது. பச்சை இலைகள் பழுத்த செடியில் புள்ளிகள் போல் தெரிகின்றன. சாந்தியும்கூட அன்று வந்திருக்கிறாள். கொல்லைக்குச் சென்று ஒரு செடியைப் பிடுங்கிப் பார்க்கிறார்கள். கடலை சலங்கை சலங்கையாகப் பிடித்திருக்கிறது. ஒன்றை உடைத்துப் பார்க்கிறார்கள். தோல் முற்றிப் பழுத்துவிட்டது.

"அக்கா, புடுங்கிடலாம்...”

“புதன் கிழம புடுங்கிடலாம். இன்னக்கித் திங்கள்...”

சாந்தி சைகிளில் ஏறும் போது “அந்தப் பக்கமா, கன்னியப்பன பாத்தீன்னா சொல்லிடு. கடல புடுங்கறமின்னு!”

“சொல்றேன்க்கா” என்று சொல்லிவிட்டு அவள் போகிறாள்.

புதனன்று காலையில், கன்னியப்பன் ஏழெட்டுப் பேரைக் கூட்டி வருகிறான்.

சாந்திதான் முதல் குத்தைப் பிடுங்கி, "அக்கா சாமி கும்பிட்டுக் கர்ப்பூரம் காட்டுங்க?” என்று வைக்கிறாள்.. சாந்தி கை தனக்கு மிகவும் உதவியான நெருக்கமான, அதிர்ஷ்டமான கை என்று நம்பிக்கை.

எல்லாப் பெண்களும் குலவை இடுகிறார்கள்.

நீ முந்தி, நான் முந்தி என்று கடலைப் பயிரைப் பிடுங்கி ஆங்காங்கு ஈரமண் உதிர்த்துக் குவிக்கிறார்கள். செவந்தி மனம் துளும்பப் பார்க்கிறாள்.

ஒரு பொக்குக் கடலை கூட இல்லை. ஏக பேச்சும் சிரிப்புமாக இருக்கிறது. கன்னியப்பன், வேல்ச்சாமி, லட்சுமி, வேணி, அம்சு எல்லோரும் கடலை உதிர்க்கிறார்கள். சுந்தரியும் அம்மாவும் அத்தனை பேருக்கும் சோறு பொங்கிக் கொண்டு வருகிறார்கள்.

எல்லோருக்கும் சந்தோசம். “அதாஅதா குண்டெலி, அடி. அடி வேல்ச்சாமி!”

வளைகளில் இருந்து தலை நீட்டும் எலிகளுக்குக் கபால மோட்சம்தான். ஒரு பத்துப் பதினைந்து எலிகள் அடிபடுகின்றன.

“இந்தா கடலையை வுடு, எலியத் தூக்கிட்டுப் போ" என்று காகத்துக்குத் தூக்கி எறிகிறான் கன்னியப்பன்.

“நல்ல பால்கடலை. காஞ்சா எண்ணெய் நல்லா வரும்” என்று வேணி சொல்கிறாள்."என்ன ரகம் இது? ஆபீசிலதான கேட்டு வாங்கின?”

"ஜி.ஆர்.ஐ. நல்ல ரகம், போடுங்கன்னாரு...”

"அக்கா வேர்க்கடலை வடை சுட்டிருக்கீங்களா?”

‘இல்லையே? எப்படிச்சுடுறது?”

“இத்தோட கொஞ்சம் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு , உப்பு முளவு சோம்பு போட்டு அரச்சி, வெங்காயம் இஞ்சி கொத்தமல்லி கறிவேப்பிலை போட்டு வட சுட்டா பஷ்டா இருக்கும்!”

“நீ ஒரு நா டிபன் போடு!”

“பின்ன ஒரு வடை 1 ரூவா" என்று சிரிக்கிறாள் வேணி.

“இதே கடலையைக் கொதிக்கிற வெந்நீர ஊத்தி ஊறவச்சி, தோலிய எடுத்திரனும். பிறகு பருப்ப நல்ல வெண்ணெயா அரச்சிப் பால் போல் கரச்சி அடுப்பில வச்சிக் காச்சணும். சர்க்கரை போட்டு சுண்டக் காச்சின பாலவுட்டு ஏலக்கா போட்டா, பாயசம் ரொம்ப நல்லா இருக்கும்....”

“பண்ணினாப் போச்சி. நிசமாலுந்தா. ஒரு நா அமாவாசக் கூட்டத்த நம்மூட்டில வச்சிட்டு, பாயசம் பண்ணி வைக்கிறேன்...” என்று சொல்கிறாள் செவந்தி. “அப்பவடையும் சுட்டு வையுங்க!”

“அதென்னவோ, கடலையை வெவிச்சுத் திண்ணாத் தா ருசி. அதும் நெல்லுப்புழுக்கையில மூட்டக் கட்டிப் போட்டுட்டா, அந்த ருசி தனி...” மூக்காயிப் பாட்டியின் பேத்தி வந்திருக்கிறாள். இவள் கை சுத்தம் கிடையாது. தனியாகக் கடத்தி விடுமோ என்ற அச்சம் உண்டு.

சரவணன் நாகம்மாளின் மகனுடன் பச்சைக்கடலை பிடுங்குவதாகச் சொல்லிக் கொண்டு உடைத்து உடைத்து வயிற்றுக்குள் தள்ளுகிறார்கள். கடைவாய் வழி பால் ஒழுகுகிறது.

“டேய், பச்சைக் கடலை வகுத்தால புடுங்கிக்கும். வூட்டுக்குப் போங்க. வேவிச்சித்தார”

குவியலாகக் களத்து மேட்டில் கொண்டு வந்து குவித்தாயிற்று. பிடுங்கியவர்களுக்கெல்லாம் மரக்கால்களாகக் கடலையை அளந்து கொடுக்கிறாள்.

காக்கைகள் கருப்பாகச் சுத்தி வட்டமிடுகின்றன. நாயும்கூட அசந்து மறந்தால் எடுக்கும் பண்டம். வெயில் நாட்கள். இரண்டு நாட்கள் காய்ச்சல் போதும். இரவும் பகலுமாகக் காவல் இருக்க வேண்டும். பகல் பொழுதுக்குச் செவந்தியும் அம்மாவும் மாறி மாறிக் காவல் இருப்பார்கள்...

இரண்டு இரவுகள்... ரங்கன் கயிற்றுக் கட்டிலைப் போட்டுக் கொண்டு படுத்துக்கொள்ள வேண்டும்.

இப்போதெல்லாம் இவளுக்கு இரண்டு வயல்களில் வேலை இருப்பதனால் வீட்டில் அதிக நேரம் தங்கவே நேரம் இல்லை. சரோ இல்லாததால், வீட்டிலேயே வேலை இல்லைபோல் ஒரு வெறுமை.

ஏழு மணியோடு வீட்டில் வந்து கிணற்றடியில் இலைத் தூசு, மண், புழுதி போகத் தண்ணீரிறைத்துக் குளிக்கிறாள். ரங்கன் வருகிறான்.

“குளிக்கிறியா?” “ஆமா. நீங்கதா என்ன ஏதென்று எட்டிப் பார்க்குறதில்ல. நான்ல சபதம் போட்டிருக்கேன்.” பேச்சில் மனத்தாங்கலின் சுமை.

“கடலபுடுங்கப் போறமின்னு நீ சொல்லவேயில்லை. நா ஒரு அவுசர காரியமா பட்டணம் போகவேண்டியதாச்சு. அண்ணியோட தங்கச்சி வந்திட்டாங்க. சரோ ரிசல்ட் இந்த வாரக் கடாசில வராப்பில இருக்கு.”

“சரோ கடிதாசி எதானும் குடுத்தனுப்பி இருக்கா?”

“ஒண்ணுமில்ல. இவங்க பத்துநாக்கூட இருக்கல. ஒரு வாரம் இருந்திட்டு வந்திட்டாங்க. அவருக்கு லீவில்ல. அவங்களுக்கு என்ன பிரச்னையோ. சரோவ நாந்தா போய் கூட்டி வரணும் போல....” *

“அவ என்னமோ அங்கியே படிக்கறன்னு சொல்லிட்டுப் போயிருக்கா?”

அவன் முகம் பரவி வரும் இருட்டில் உணர்வுகளை புலனாகும்படி துலக்கமாகத் தெரியவில்லை. ஆனால் குரலில் உற்சாகமில்லை.

“நீ உள்ளாற வா செவந்தி, உங்கிட்ட ஒரு விசயம் பேசணும்...” இத்தனை ஆண்டுகளில் இப்படி அவன் கூப்பிட்டிருக்கிறானா? என்ன புது விசயம்?

ஈரப் பாவாடையுடன் உள்ளே வந்து உடை மாறுகிறாள். அம்மாவும் அப்பாவும் களத்து மேட்டில் இருக்கிறார்கள். முடியைத் துவட்டிக் கொண்டு, “நீங்கதா செத்த ராத்திரி காவலுக்குப் படுக்கணும். கன்னியப்ப வந்தா, கூலி வாங்கிட்டுப் போயிட்டா. அவனப் போயி கெஞ்ச எனக்கு மனசில்ல. சொத்து நம்முது.”

“சரி நான் கட்டிலக் கொண்டு போட்டுட்டுப் படுக்கிற. இல்லாட்டி என்ன, சாவடிப்பக்கந்தான செவந்தி எனக்கு இப்ப அவசரமா ஆயிரம் ரூபா வேண்டியிருக்கு. ஒரு வண்டி நல்லா இருந்திச்சி வாங்கினே. வண்டிய வச்சிட்டுப் போ, நாளக்கி பணந்தாரே. நிலுவ வரணும்னு சொன்னேன். அவ மூணு நாளு களிச்சி வந்து இன்னக்கி பணம் கேக்குறான். நமக்கு ரொம்ப வேண்டிய பார்ட்டி. வண்டி நல்லாருக்கு, நா எடுத்துக்கறேன்னு ஓட்டிட்டுப் போயிட்டாரு. பணம் முன்னப் பின்னத் தருவாரு. அவரோட வண்டி பாங்கு வாசல்ல வச்சிட்டு உள்ள போனாராம். திரும்ப வரச்சே காணமாம். மேல நத்தத்திலேந்து சொசைட்டி ஆபீசுக்கு வராரு. ரொம்ப நல்ல மனுசன். ரெண்டு மாசமாத் தந்துடறேன்னாரு.இப்ப இவனுக்குப் பணம் குடுக்கணும். தெரிஞ்சவங்க யார் கிட்டயும் புரட்ட முடியல. ஒரு அஞ்சு நூறு குடுத்தாலும்... சமாளிச்சிக்குவே. வண்டிய எடுத்திட்டுப் போன்னு சொல்ல வண்டியும் இல்ல?”

இது வரையிலும் இவன் இப்படி இவளிடம் தன் இயலாமையைச் சொல்லிக் கொண்டதில்லை. கடுகு சிறுத்தாலும் காரம் உண்டு. வியாபாரத்தில் பெரிய வளமை இல்லை.

கடைகளில் ஏழெட்டுச் சைகிள் கூட இல்லை. ஆனால் கண்டிகை சைகிள் கம்பெனியில் இருந்து இங்கே சைக்கிள் விற்கும் ஏஜென்சி போல் வாணிபம் நடக்கிறது என்று தெரியும். அங்கு மூன்று சக்கர குழந்தை சைக்கிள், சிறுவர், பெரியவர்கள் சைகிள் என்று பண்ணும் ஃபாக்டரி பத்து வருசங்களுக்கு முன் ஏற்பட்டது. அந்த முதலியார் சிநேகம். அவருக்கு ஏதோ நஷடம் வந்துவிட்டது என்று அப்பன் சொன்னதாக நினைவு.

ஆக இப்போது...

பட்டாளத்தார் கொடுத்த பணம் மீதி இருக்கிறது. எப்போதும் வங்கியில் தான் போட்டு வைக்கிறாள். ஐநூறு இருக்கும். அவள் மிக சிக்கனமாகச் செலவு செய்திருக்கிறாள். அதைத் தொடவே இல்லை. வளையல்களை ஆண்டாளம்மாவிடம் வைத்து அவசரப் பணம் வாங்குவாள்...

“இப்பக் குடுக்கறதுக்கில்லீங்க. நாளக்கின்னா, வங்கிலேந்து எடுத்துத் தருவே. திடுமின்னு அஞ்சு நூறு எங்கிட்ட எப்படி?” “நாளக்கித்தா போதும்...”

இதுவும் ஒரு சுப சூசகம்தான்.

அன்றிரவுக்குக் கன்னியப்பன் காவலுக்கு வரவில்லை. இவ்வளவு நாட்களில் இப்படி அவன் வராமலிருந்ததில்லை. எப்படியானாலும் அவன் அந்தக் கழனிக்கு நீர் பாய்ச்சி, மராமத்துச் செய்யாமல் இருக்கமாட்டான். இருக்கட்டும்.

காலையில் வங்கிக்குச் சென்று அவள் பணத்தை எடுத்து கணவரிடம் கொடுக்கிறாள்.

செவந்தியின் கை ஓங்குகிறது.

ஆம். ஏக்கருக்கு ஆறு ஏழு மூட்டைதான் காணும் என்றுதான் அப்பன் சொன்னார். ஒன்னரை ஏக்கர் நிலத்தில், ஏறக்குறைய இருபது மூட்டைகள் விளைந்திருக்கின்றன. மிஷினில் காய்களைக் கொடுத்து தோடு நீக்கிய மணிகள்... முழி முழியாக... சிவப்பு மணிகளாக பூமி தந்த பரிசு. உழைப்பும் நம்பிக்கையும் தந்த பரிசு.. இல்லை தான்வா அம்மாள் மூலமாகக் கடவுள் காட்டிய வழி இது. பயிறும் கூட ஏறக்குறைய முக்கால் மூட்டை கண்டிருக்கிறது. கூலிகளையும் கணக்குப் போட்டால் இருபது மூட்டைத் தேறும்.

"அக்காஅந்த ஆபீசுக்குக் கூட்டிப் போங்க. நானும் கடலப் பயிர் செய்யிறேன்...” என்று சுந்தரி சொல்கிறாள்.

வங்கியில் பயிருக்கு வாங்கிய கடனை அடைத்தபின் கையில் இரண்டாயிரத்து சொச்சம் இருக்கிறது.

சரோவின் ரிசல்ட் வந்துவிட்டது. கணக்குப் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றதுடன் பள்ளிக்கு மாநிலத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்ற பெருமையையும் தேடித் தந்திருக்கிறாள். இவள் பெயர் தினத்தாள்களில் வருகிறது. பள்ளி ஆசிரியை, ரீடா கடை தேடி வந்து பாராட்டிவிட்டுப் போகிறாள்.

எல்லோருக்கும் பெருமை. செவந்திக்கு ஆகாயத்தில் மிதப்பது போல் இருக்கிறது. “நீங்க இப்பவே ராத்திரி பஸ்ஸில போயி நம்ம குழந்தையக் கூட்டிட்டு வாங்க. நாம எப்படியும் மேல படிக்க வச்சிடுவம்...”

“ஸ்காலர்ஷிப் கிடைக்கும்ன்னு சொல்றாங்க. நா. இத இப்பவே போறேன்...”

செவந்தியின் மனதில், தான்வா ஆபீசர் மேடம் போல் சரோ வரவேண்டும் என்ற கனவு உயிர்க்கிறது. அவங்களைப்போல் மண்ணுடன் ஒட்டி தாய்ப்பாசமாக இருக்கும்படியான ஒரு படிப்பைப் படிக்கலாமே?

அவன் காலை பஸ்ஸைப் பிடித்துக் கொண்டு மதுரைக்குச் செல்கிறான். செவந்தி அன்று மாலை திரிகையில் பயிறை எண்ணெய் தடவி வைத்துக் கொண்டு உடைத்துக்கொண்டிருக்கிறாள்.

“அம்மா அம்மா! அக்கா வந்திடிச்சி!” என்று சரவணன் ஒடி வருகிறான்.

“அப்பா காலமதான போனாங்க? எப்படி? மாமன் கூட்டி வந்திட்டானா?...”

சரோசா கையில் அப்பா வாங்கிக் கொடுத்திருந்த பெட்டியுடன் விரைந்து வருகிறாள். பெட்டி கீழே நழுவுகிறது.

அம்மாவின் தோளில் தலை சாய்த்து விம்முகிறாள்.

“சரோ... சரோ என்னம்மா? என்னாச்சி? அப்பா காலம போயிருக்காங்க, நீ பஸ்டா பாஸ் பண்ணியிருக்கேன்னு பேப்பர்லல்லாம் வந்திச்சி, போட்டோ கேட்டு வந்தாங்க. எங்களுக்கெல்லாம் பெருமையாக இருக்கு. கடலக்கா நல்லா வெளஞ்சிருக்கு... ஏங்கண்ணு, சந்தோசமா இருக்கறப்ப ஏ அழுவுற? சீ கண்ணத் தொட. நீ மேல பெரிய படிப்பு படி. அந்தத் தான்வா மேடம் போல படிக்கணும். உன்ன யாரு கூப்பிட்டு வந்தாங்க? மாமன் வரலியா?” இத்தனைக் கேள்விக்கும் விசும்பலே விடையாக இருக்கிறது. இவளுக்கு இனம் தெரியாத கலவரம் வயிற்றைக்கலக்குகிறது. ஏதேனும் ஆயிட்டதா? எதானும் நடக்கக் கூடாதது நடந்துவிட்டதா? கடவுளே! “ஏம்மா ஏனழுவுற என்ன ஆச்சி?”

“நீ நினைச்சாப்பலதாம்மா, அவங்க மோசமானவங்க. மாமாக்கு உணுமையில நம்ம மேல பாசம் இல்ல. மாமி அவுங்க வீட்டுக்காரங்க வச்சதுதா சட்டம். அவங்க தங்கச்சி பசங்க கூடப் போனனா, அவங்க கூட நானும் திரும்பிடுவேன்னு நினைச்சிருந்தாப்பல. அவங்க ஒரு வாரந்தா இருந்தாங்க. அவங்க புருசன் பெண்சாதி ரெண்டு புள்ளங்கள ஆட்டோ வச்சிட்டு ஊரெல்லாம் பாத்தாங்க. என்ன அவங்ககூட அனுப்பவே இல்லை. மாமா ட்யூட்டோரியல் நடத்துறாப்பல. அவங்க வீட்டு மாடில. அது கீழ ஒரு டாக்டரு கிளினிக்குக்கு வாடகைக்கு விட்டிருக்காங்க. மேல அவங்க பெட்ரூம் இருக்காப்பல. சேந்தாப்பல ஒரு போர்ஷன்ல, மாமியோட அம்மா. ஒரு லூசு தம்பிக்கு இடம். பிறகு கிச்சன். எல்லாம் 'பாஷா' இருக்கும். நான் போயி ஒருவாரம்தான் வேலக்காரி இருந்தா. தங்கச்சி ஊருக்குப் போனா, வேலக்காரியும் நின்னிட்டா.”

“ஏண்டி சுகு, உன் நாத்தனா பொண்ணா? அதென்ன உக்காத்தி வச்சி சோறு போடவா கூட்டிட்டு வந்திருக்க? சும்மா நின்னிட்டிருக்கு. வீடு பெருக்கித் துடைக்கச் சொல்லு. கிரைண்டில மாவாட்டுறதுக்குக் கசக்குதா. அவ வூட்டில கல்லுல அரய்க்கல?”ம்பா.

"மெள்ள மெள்ள எல்லா வேலையும் நானே செய்யணும்னு ஆயிட்டது. அது கூட பொறுத்துக்கலாம், அந்தாளு தம்பி அது மென்டலி ரிட்டார்ட்... அது அசட்டு சிரிப்பு சிரிச்சிகிட்டு ஏங்கிட்டயே நிக்கும். சரோ ..உம்பேரு அதான? நாங்க கூட்டிட்டுப் போரேன். என்னோட ஊரு பாக்க வரியா? கோயிலுக்கு, சினிமாக்கு என்று அசடு வழியும்.”

“ஏண்டி அவங்கிட்ட பேசுனா என்ன? முகம் காட்டாம திருப்பிக்கிற? என்று அவன் ஆத்தாக்காரி வேற. எனக்கு கோபமா வரும். மாமா சாப்புட வரப்பத்தான் கீழ வருவாங்க. காபி மாமிக் கொண்டு குடுப்பா. கார்த்திக் கராத்தே கிளாஸ், திவ்யா டான்ஸ் கிளாஸ்ன்னு மாமி காலம கூட்டிட்டுப் போவாங்க. டாக்டர் இவங்களுக்கு சொந்தக்காரங்க போல, மாமி அங்கப் போயி ரிசப்ஷனிஸ்ட்டா உக்காந்திருவாங்க.” “மாமா சாப்பிட வரச்சே ஒரு நாள் கேட்டேன். எனக்கு பாலிடெக்னிக்ல சேர அப்ளிகேசன் வாங்க வேணாமான்னு. சும்மா அவரு சொன்னத ஞாபகப்படுத்தறாப்பல. ரிசல்ட் வரலியே, வரட்டும் பாக்கலாம் என்று மழுப்பிட்டு எந்திரிச்சிப் போயிட்டாரு. பிறகு ரிசல்ட் வந்திடிச்சி. பேப்பர் காலம போட்டுட்டுப் போவா. இவங்க யாரும் எந்திரிக்க மாட்டாங்க. நான் பார்த்தேன். முதல் மூணுல நா மூணாவதுன்னு வந்திருக்கே. எனக்கு ஒரே சந்தோசம். மாடிக்கு ஏறிப்போன. கதவத் திறந்து வச்சிட்டுப் பிள்ளைங்க இவங்க படுத்திருந்தாங்க. அப்பவும் நான் கதவு தட்டினே... மாமா மாமா.. ன்னு கூப்பிட்டதும் அவரு அலறி அடிச்சிட்டு லுங்கிய இழுத்துக்கட்டிட்டு சரோவா என்ன இப்படி... என்ன விசேசம்ன்னாரு. நா பேப்பர காட்டின. சாவகாசமா சிகரெட் பத்த வச்சிட்டு, ‘இதுக்குத் தா இப்படி எழுப்பினியா? சரி. கங்கிராட்ஸ்... நல்லா பண்ணிட்ட. கீழே போ நா வாரேன்..' ன்னாரு."

“இதுக்குள்ள மாமி எந்திரிச்சிட்டாங்க. நானும் அங்கியே நின்ன. தெரிஞ்சதும் அவங்க சந்தோசப்படுற மாதிரி 'பரவாயில்லையே நீயும் ராங்க்ல வந்திட்டியா?'ன்னாங்க".

“பாலிடெக்னிக் ... விமன்ஸ் பாலிடெக்னிக் படிக்கணும்ங்குது. என்ன சொல்ற சுகந்தா..”ன்னாரு மாமா.

“பாலிடெக்னிக் படிச்சி இவ என்ன பண்ணப் போறா? ஏற்கனவே ஆம்புளக்கே வேல இல்லே. இவப்பாம்மாவால மூணு வருசம் ஆஸ்டல்ல சேத்துப் படிக்கவைக்க முடியுமா? அப்படியே படிக்க வச்சப் பிறகு ஒரு பி.இ. பி.டெக். மாப்பிள்ளையைத் தேடி பிடிக்க முடியுமா? ஒன்னரை லட்சம் செலவாகும். இவம்மா நம்ம பூமில விவசாயம் பண்ணுறா அதுல ஒரு லாபமும் நமக்கு இல்ல. கடசீல அத வித்து தா கலியாணம் கட்டணும்னு ஒரு இக்கட்டுல கொண்டு வப்பாங்க. என்னக் கேட்டா நா ஒரு யோசனை சொல்வே. உறவும் இருக்கும். கலியாணத்துக்கும் செலவில்ல? அவ பேருக்கு ஒரு பிசினஸ்ஸாம் இருக்கும்...”ன்னாங்க. அது என்ன தெரியுமா? அந்த லூசுக்கு என்னக் கல்யாணம் கட்டி வைக்கிறதாம். அவங்க அவன் பேரில் ஒரு பப்ளிக் டெலிபோன் வைப்பாங்களாம். அதோட ஜெராக்ஸ் லாமினேஷன்லாம் வச்சிட்டா நா ஆபிசையும் பாத்திட்டு, இவங்களுக்குக் கையாளா இருப்பேனாம்.. என்ன வச்சிட்டே இப்படிச் சொன்னாங்கம்மா.. அந்த லூசு பல்ல இளிச்சிட்டு என்னத் தொட்டுத் தொட்டுப் பேசறப்ப அவம்மா ஒன்னும் சொல்லமாட்டா...”

அழுகை கட்டுப்படுத்த முடியாமல் வருகிறது அவளுக்கு. மகளின் முதுகை அவள் ஆதரவாகத் தடவுகிறாள். “நீதா வந்திட்டியேம்மா. அழுவாத, நீ எங்கும் போக வேண்டாம். நா உன்ன மேல சேர்த்துப் படிக்க வைப்பேன். அவன் கெடக்கிறான். சொந்தத் தாய் தகப்பன மதிக்கல. போகட்டும். அவனவன் பொண்ணு பிள்ள பெத்து வச்சிருக்கிறான். காலம் வரப்ப தெரியும்...”

“அம்மா நீ சொன்னப்ப நா நினைக்கவே இல்ல. எப்படிம்மா மனிசங்க இப்படி இருக்கிறாங்க! அவங்க நிலத்தில நீ பயிரு போடுறியாம். அதுக்கு அவங்களுக்குப் பணம் குடுக்கணுமாம்... மாமி சொல்லுது.. நா அடுத்த நிமிசமே மாமாகிட்ட, நா ஊருக்குப் போறேன். என்ன ஏத்தி வுடுங்கன்னிட்டேன். காலம பஸ்ஸுக்கு அவருதாவந்து ஏத்துனாரு. சொல்றாரு சரோ இங்க வீட்ல இருக்கிறது தோதுப்படாது. நீ அங்கேயே பக்கத்தில எதானும் பாலி டெக்னிக்ல சேர்ந்து படி. நா ஒண்னும் செய்யலேன்னு நினைக்காத...ன்னு பஸ் டிக்கெட் எடுத்துக் குடுத்திட்டு நூறு ரூபா கையில் குடுத்தாரு. எனக்கு அவுரு மூஞ்சியில எறிஞ்சிடணும்ன்னு கோவம் வந்திச்சி. ஆனா பெரியவங்க. அவுரு ஏ, மாமிக்கு அப்படிப் பயப்படறாரு. அப்பால்லாம் உன்ன எப்படி வெரட்றாரு? ரேடியோவப் போட்டு உடைச்சாரே மாமா, மாமி என்ன சொல்றாங்களோ அதுக்கு மாறு இல்லாம நடக்கிறாரு. இந்த நூறு ரூபா அவளுக்குத் தெரிஞ்சி குடுத்தாராங்கிறது சந்தேகம். அப்படி அவங்ககிட்ட என்ன பவர் இருக்கு?...” சரோ அங்கிருந்து செல்லும் போது பக்குவம் வராத குழந்தையாக இருந்தாள். இப்போதோ, இந்த ஒரு மாதத்தில் எவ்வளவு மாற்றம்!

“செங்கல்பட்டு வந்ததும் இறங்கி, நம்மூர் பஸ் புடிச்சிட்டு ஒடியாந்தேன். கடயில அப்பா இல்ல. சைகிள் கூட கேக்கல. நடந்தே வந்தேன்.” “சரி, எதும் சாப்பிட்டுருக்கமாட்டே. குளிச்சிட்டு வாம்மா. சோறு குழம்பு எல்லாமிருக்கு, வா! முகம் எப்படி வாடி கறுத்துப் போச்சு? நா உங்கப்பாவப் போயி இட்டுட்டு வாங்கன்னு அனுப்பினே. வயசுப் பெண்ணத் தனியே ஏத்தி அனுப்பி இருக்கிறான். இவன்லாம் ஒரு மாமன்!” பாட்டி பிரமை பிடித்தாற்போல் உட்கார்ந்திருக்கிறாள்.

தாத்தா சாவடியில் இருந்து ஒடோடி வருகிறார்.

“ஊரே கொண்டாடுது. உன் டீச்சர் வந்ததும் உன்னியப் பார்க்கச் சொல்லிச்சாம். சோறு சாப்பிட்டு வா கண்ணு, சைக்கிள்ள நானும் வாரேன்.”

புதிய ஏடுகள் திரும்புகின்றன.

மதுரை சென்ற கணவன் அங்கு ஒரு நாள்கூட தங்கவில்லை. மகள் இல்லை என்று தெரிந்த மறுநிமிடமே அவன் திரும்பி விடுகிறான். அதிகாலையில் வந்து கதவு இடிக்கிறான்.

அடுத்து அவர்கள் சரோவின் மேற் படிப்பை இலட்சியமாக்கி முயற்சிகள் செய்கிறார்கள். சரோவைப் பள்ளியில் அழைத்துப் பாராட்டுகிறார்கள். பத்திரிக்கைக்காரர்கள் அவள் இலட்சியம் பற்றிக் கேட்கிறார்கள். அதற்கு அடுத்த மாதம் காஞ்சிபுரம் அரிமா மகளிர் சங்கத் தலைவி அவள் என்ன படித்தாலும் அதற்கு உதவி செய்வதாக அறிவிக்கிறார்.

விண்ணப்பப் படிவங்கள் பெறுவதும் சான்றிதழ்கள் வாங்குவதும், நேர்முகம் காணச் செல்வதுமாக நாட்கள் ஒடுகின்றன.

ப்ளஸ் டுக்கு சேரு. நீ டாக்டராகவோ, இன்ஜினியராகவோ வரலாம் என்று ஒரு பக்கம் யோசனை சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் அவ்வளவுக்கு முடியுமா என்ற மலைப்பு.

“ஏம்மா நீ என்ன சொல்லுற? அப்பா இன்ஜினியரிங் போலாம்னு சொல்றாங்க. எனக்கென்னமோ, பிளஸ் டு ரெண்டு வருசம், பிறகு என்ட்ரன்ஸ் டெஸ்ட். பிறகு காலேஜ் நாலு வருசம். முடியுமா? நான் பாலிடெக்னிக்லசேர்ந்து மூணு வருசம் படிப்பேன். பிறகு அதற்கு எதானும் வேலை கிடைக்கும். அதற்கப்புறம் எம்.ஐ.இ எதிலானும் படிக்கலாம்ன்னு எங்க ஜூலி மிஸ் சொல்றாங்க.. லயன்ஸ் அம்மா பாலிடெக்னிக்லே இங்கேயே எடம் கிடைக்கும்ன்னு சொல்றாங்க... ஆனா பாய்ஸ்கூடப் படிக்கணும்..”

அவளே சொல்லிக் கொண்டு போகிறாள்.

செவந்தியோ, கடலை விளைவித்த நிலத்தில் பசுந் தாளுடன் உழுது சுவர்ண வெளிப்பட்டத்துக்கு மும்மரமாக உழவோட்டி, நாற்றங்கால் பயிர் செய்கிறாள்.

கொல்லை மேட்டு விளைச்சலும் இவளைத் துாக்கி விடுகிறது. அடுத்து அங்கு வேர்க்கடலை பயிரிட ரங்கன் வங்கியில் கடன் பெற உதவுவதாக உறுதி கூறுகிறான்.

நாட்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறக்கின்றன. சரவணனுக்குப் பள்ளிக் கூடம் திறந்தாயிற்று. செவந்திக்கு, தான்வா ஆபிசர் அம்மாளைச் சென்று பார்க்க வேண்டும், மகள் படிப்புக்கு அவள் யோசனையைக் கேட்க வேண்டும் என்ற ஆர்வம்.

ரங்கனுடன் கொல்லை மேட்டுப் பயிருக்குக் கடன்வாங்க நிலவள வங்கிக்குச் செல்கிறாள்.

“அம்மா உங்க வீட்டுக்காரரா? பூமி அவங்க பேரில இருக்குதா?” என்று கேட்டுக் கொண்டு விண்ணப்ப படிவம் தருகிறார், அவருக்கு நன்கு பரிச்சயமான வங்கிக்காரர்.

வேர்க்கடலை பயிர் இடையில் ஊடுபயிர் உளுந்து, வரப்பில் சுற்றி ஆமணக்கு என்று விரிவாக்கப் பணியாளரின் ஆலோசனைப்படி தீர்மானம் செய்கிறார்கள்.

இங்கே கையெழுத்து அங்கே கையெழுத்து என்று அவரே எல்லாம் காட்டுகிறார். செவந்திக்குப் புருசனுடன் வந்து அவரும் தன் உழைப்பில் பங்கு பெறுகிறார் என்று வெளியுலகுக்கு அறிவிப்பதே பெருமையாக இருக்கிறது.

காற்றுக்காலம்போய், சுவர்ணவளிப்பட்டம் நடவு வயல் உழுது சீராக்கும் பருவம்.. கன்னியப்பன் இப்போதெல்லாம் முழுப் பொறுப்பும் எடுத்துக் கொள்வதில்லை. முழுநிலமும் உழ நாலைந்து ஏர் தேவைப்படுகிறது. உழவு காலங்களில் அப்பன் சும்மா இருக்க மாட்டார். ஆனால் அவரை முழுசும் நம்பவும் முடியவில்லை.

“கன்னிப்பா, ஏம்பா கால வாரிவுடறே! ஒரே நாள்ல முடிக்கணும் கூட ரெண்டாளக் கூட்டிட்டு வான்னா, இப்படிக் கால வாரி வுடுற?” என்று செவந்தி சத்தம் போடுகிறாள்.

“ஆளே இல்லக்கா... நா, நீங்க மக்யாநாள் வச்சிட்டாவரத் தோதுப்படும். நாளக்கி எனக்கு வேல இருக்கு. வர்றதுக்கில்ல.”

“அப்ப வேற ஆளும் கொண்டாந்து விடமாட்ட? அப்பா இருந்தா ஒரு ஏருக்கு அவர நம்பலாம். மூணு நாளா உடம்பு சரியில்ல...”

“ஆமா... கையில் காசு வேணும்னு, வண்டியடிக்கிறாரு, காசு எதுக்குன்னு உங்களுக்கே தெரியும்.”

“சரி. சரி... போ... நானே சமாளிச்சிக்கறே!”

அவள் அதிகாலையில் எழுந்து சாணம் அள்ளவந்தபோது திகைக்கிறாள். மாடுகள் இல்லை; ஏரும் இல்லை.

உள்ளே ஓடிவந்து கட்டிலில் பார்க்கிறாள். அப்பன் குறட்டை இழுப்பு கேரு கேரென்று வாசல் வரை கேட்கிறது. வாசலில் புருசன் இல்லை.

மனசுக்குள் ஒரு குறளியாக...

விடுவிடென்று வாசல் கதவைச் சாத்திக் கொண்டு ஒடுகிறாள். அவள் கண்களால் தன்னையே நம்ப முடியவில்லை.

ஐந்து ஏர் ... தண்ணிர் பாய்ந்து, தொழுஉரம் போட்ட வயலில் உழுகின்றன. கண்களைத் துடைத்துக் கொண்டு பார்க்கிறாள். கன்னியப்பன் , வேல்ச்சாமி, பழனியாண்டி, மாரி ...பிறகு அந்த அகலமான முதுகுடன் உயரமான ஆள்... வரப்படியில் அருகில் நிற்கிறாள். தார்ப்பாய்ச்சிய வேட்டி.

கன்னியப்பன் அரையில் அணிந்த சட்டியுடன் முன்னே செல்கிறான்.

“மாமோவ்.... முதலாளி அம்மா வாராங்க. பாத்து உழுங்க!...”

கேலிச் சிரிப்பு காற்றின் அலைகளுடன் வந்து செவிகளில் மோதுகிறது.