சங்க இலக்கியத் தாவரங்கள்/030-150

விக்கிமூலம் இலிருந்து
 

உழிஞை
கார்டியோஸ்பர்மம் ஹெலிகாகேபம்
Cardiospermum halicacabum,Linn.)

அரணை முற்றுகையிடும் அறிகுறியாக உழிஞைப்பூவைச் சூடிக் கொள்வராதலின், இது ஒரு போர் மலர்.

‘உழிஞை’ என்பது எங்கும் வேலிகளில் ஏறிப் படரும் நீண்ட கொடி. இதனை முடக்கத்தான் (முடக்கற்றான்) என வழங்குவர்.

சங்க இலக்கியப் பெயர் : உழிஞை
தாவரப் பெயர் : கார்டியோஸ்பர்மம் ஹெலிகாகேபம்
(Cardiospermum halicacabum,Linn.)

இக்கொடியை முடக்கறுத்தான் என்று அழைப்பர். முடக்கு வாதத்திற்கும் மருந்தாகப் பயன்படுத்துவர்.

உழிஞை இலக்கியம்

உழிஞைப்பூவால் பெயர் பெற்றது உழிஞைத் திணை. அரணை முற்றுகையிடும் அறிகுறியாக இதன் பூவைச் சூடுவர். ‘உழிஞை’ என்பது ஒரு கொடி என்பதை ‘நுண்கொடி உழிஞை’ (பதிற். ப: 44:10) எனவும், ‘நெடுங்கொடி உழிஞை’ (புறநா 76:5) எனவும் புலவர்கள் கூறுவர். இக்கொடியும், தளிரும், மலரும் பொன் போன்ற இள மஞ்சள் நிறமானவை என்று கூறுப.

“பொலங்கொடி உழிஞையன்-பதிற். ப. 56:5
“பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டி
-புறநா 50:4


மலையாளத்தில் இதனைக் ‘கொற்றான’ என வழங்குவர். கொற்றான் என்பது ‘கருங்கொற்றான்’ ‘நூழிற்கொற்றான்’, ‘முடக்கொற்றான்’ எனப் பல வகைப்படும். உழிஞை உலக வழக்கில்

உழிஞை
(Cardiospermum halicacabum)

‘முடக்கொற்றான்’ எனப்படும். இது முடக்கத்தான் என மருவி வழங்கப்படுகிறது. மருத்துவ நூலார் இதனை ‘முடக்குத் தீர்த்தான்’ என்று கூறி, இதனை முடக்கு வாதத்தைத் தடுத்தற்குரிய மூலிகை என்பர். முடக்கு வாதத்திற்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

இக்கொடியில் கூட்டிலைகள் இருக்கும். இதன் சிற்றிலைகள் மிகச் சிறியவை. கூட்டிலையின் கோணத்தில் இதன் மஞ்சரி தோன்றும். மலர்கள் சிறியவை. இவற்றைத் தனியாகச் சூடுதல் இயலாது. ஆகவே, இக்கொடியைத் துண்டாக்கி, இதன் இலையையும் மஞ்சரியையும் (மலர்) சேர்த்துக் கண்ணியாகத் தொடுத்துச் சூடிக் கொள்வார் என்பர் இடைக்குன்றூர்க் கிழார்.

“நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து
 செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி”
-புறநா:76:5-6}}

கார்நாற்பதில் (31) கண்ணங்கூத்தனார் கண்ட காட்சியை அடியில் வருமாறு, கோவை.இளஞ்சேரனார் குறிப்பிடுகின்றார்.[1]

“ஒரு கடா எருமை அழகானது; மழைநீர் ததும்பும் குளத்தில் நீராடிக் கரை ஏறியது. திடீரென்று வீர நடை போட்டது. காரணம் என்ன? கரையில் களைந்த கொடி ஒன்றை யாரோ வீசி எறிந்துள்ளனர். பூவோடு கூடிய அக்கொடி இவ்வெருமையின் தலையில் வீழ்ந்தது; கொம்பில் சிக்கிக் கொண்டது. இக்கொடிப் பூ, தலையில் எறியப்பட்ட உடனேயே இதற்கு வீரம் தலைக்கேறி விட்டதாம். போருக்குச் செல்லும் வீரனது வீர உணர்வு கொப்பளித்துச் செம்மாந்து விட்டதாம்.

உழிஞை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : ஜெரானியேலிஸ்
தாவரக் குடும்பம் : சாப்பிண்டேசி
தாவரப் பேரினப் பெயர் : கார்டியோஸ்பர்மம் (Cardiospermum)
தாவரச் சிற்றினப்பெயர் : ஹெலிகாகேபம் (helicacabum)
சங்க இலக்கியப் பெயர் : உழிஞை
உலக வழக்குப் பெயர் : முடக்கத்தான், முடக்கற்றான்.
தாவர இயல்பு : எங்கும் வேலியில் ஏறிப் படரும் கொடி. இணர் நுனியில் சிறு பற்றுக் கம்பி இருக்கும். இதனைக் கொண்டு இக்கொடி, கொம்பு பற்றி ஏறிப் படர்ந்து வளரும்.
இலை : கூட்டிலை. சிற்றிலைகள் பளபளப்பானவை. இவற்றின் நுனி கூர்மையானவையாக இருக்கும்.
மஞ்சரி : இலைக் கோணத்தில் கலப்பு மஞ்சரியாகத் தோன்றும்.
மலர் : மஞ்சரிக் காம்பின் அடியில் உள்ள இரு மலர்க் காம்புகள் பற்றுக் கம்பிகளாக மாறியிருக்கும். சிறியது. பொன்னிற இளமஞ்சள் நிறமானது.
புல்லி : 4 புறவிதழ்கள் உட்குழிந்து இருக்கும். வெளிப்புறத்து இருவிதழ்கள் சிறியவை. உட்புறத்து இரு இதழ்களும் சற்றுப் பெரியவை.
அல்லி : 4 அகவிதழ்கள். மலரின் மேற்புறத்தில் உள்ள தாதிழைகளை ஒட்டிய இரு அகவிதழ்களின் அடியில் செதில் ஒன்று இருக்கும். பூவின் அடிப்புறத்தில் உள்ள இரு அகவிதழ்கள் உட்புறமாக மடிந்து இருக்கும்.
மகரந்த வட்டம் : 8 தாதிழைகள் பூவின் நடுவில் இராமல் சற்று ஒதுங்கி அமைந்திருக்கும். தாதிழைகள் ஒரே உயரமில்லாதன.
சூலக வட்டம் : சூலகம் மூன்று செல் உடையது. சூல் தண்டு குட்டையானது. சூல்முடி. மூன்று பிளவானது. சூலறை ஒவ்வொன்றிலும் ஒரு சூல்.
கனி : மெல்லிய, காற்றடைத்த முக்கோண வடிவான (காப்சூல்) உலர்கனி. மூன்று வால்வுகளை உடையது.
விதை : உருண்டை வடிவானது. அடியில் விதை மூக்கு தெளிவாகப் புலப்படும். வித்திலைகள் இரண்டும் அகலமானவை. குறுக்கே மடிந்திருக்கும்.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22 என, சுகியூரா (1931), போடென் (1945பி), காட்ரி (1951), க்யூர்வின்(1961ஏ) என்போர் கணக்கிட்டுள்ளனர்.

  1. இலக்கியம் ஒரு பூக்காடு : பக்: 288