சங்க இலக்கியத் தாவரங்கள்/042-150

விக்கிமூலம் இலிருந்து
 

ஆத்தி-ஆர்
பாகினியா ரசிமோசா (Bauhinia racemosa, Lam.)

குறிஞ்சிப் பாட்டில் (67) “அடும்பமர் ஆத்திநெடுங் கொடி அவரை” என்ற அடியில் இடம் பெற்ற ‘ஆத்தி’ என்பது ஒரு சிறு மரம். இதன் மலர் கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும்.

சங்க இலக்கியப் பெயர் : ஆத்தி
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : ஆர்
பிற்கால இலக்கியப் பெயர் : காட்டாத்தி, திருவாத்தி, ஆத்தி
உலக வழக்குப் பெயர் : ஆத்தி, மந்தாரை, காட்டாத்தி
தாவரப் பெயர் : பாகினியா ரசிமோசா
(Bauhinia racemosa, Lam.)

ஆத்தி-ஆர் இலக்கியம்
முடிமன்னர் குடிகளில் முன்தோன்றி மூத்த குடியில் முதற்குடி சோழர் பெருங்குடி. சோழமன்னர் தம் குடிப்பூ ‘ஆத்தி’. இதனைக் குறிஞ்சிப் பாட்டில் மட்டும் காணலாம்.

“அடும்பமர் ஆத்தி நெடுங்கொடி அவரை-குறிஞ். 67

பிற சங்கவிலக்கியங்களில் அதிலும் புறநானூற்றில் ஆத்தி மலர் ‘ஆர்’ என்று குறிப்பிடப்படுகின்றது. இதில் மூவேந்தர்களின் குடி மலர்களும் கூறப்படுகின்றன.

“வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
 மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்
 கொற்ற வேந்தர் வரினும்
-புறநா. 338:6-8

(போந்தை-பனை)

மூவேந்தரும் தத்தம் குடிப் பூவை உரிமை மலராக மிக மதித்தனர்; போற்றினர்; குடிப்பெருமை கொண்டனர். இவ்வுரிமை தனி உரிமையாகாமல் குடிக்குரிய பொது உரிமையாகவே இருந்தது. ஒரு குடியைச் சேர்ந்த மன்னர் பிரிந்தாலும், பகைத்தாலும் குடிப் பூவை விட்டாரிலர்; மாற்றிக் கொண்டாரிலர். சோழன் நலங்கிள்ளியும், சோழன் நெடுங்கிள்ளியும் பிரிந்தனர். பகைத்தனர்; அந்நிலையிலும், இரு பெருஞ்சோழ மன்னர்களும் தமக்குரிய ஆத்தி மலரைச் சூடிக் கொண்டு போருக்கு எழுந்தனர். சோழன் நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட்டான். சோழன் நெடுங்கிள்ளி அடைபட்டிருந்தான். இவ்விரு சோழவேந்தர்களையும் சந்து செய்விக்கத் துணிந்தார் புலவர் கோமான், கோவூர் கிழார். உறையூர் முற்றியிருந்த நலங்கிள்ளியை நோக்கிக் கூறுகிறார்.

“சோழவேந்தே! நின்னொடு பொருபவன் கண்ணியில் பனையினது வெளிய தோடில்லையாதலின் அவன் சேரனும் அல்லன்; கரிய கோட்டினை உடைய வேம்பின் தாரணியாமையின் அவன் பாண்டியனும் அல்லன். நின்னுடைய கண்ணியும் ஆத்திப் பூவாற் கட்டப்பட்டது. நின்னுடன் பொர எழுந்தவன் கண்ணியும், ஆத்தி மலரால் செறிக்கப்பட்டுள்ளது. இருவரும் வெல்லுதல் என்பதும் இயலாது. ஒருவர் தோற்பினும், தோற்பது ஆத்தி சூடிய நுங்குடியன்றோ? அச்செயல் நுங்குடிக்குத் தக்கதன்று. ஆகவே, நீவிர் போரிடுதல் தகாது” என்று கூறி இருவரையும் போரிடாமல் சந்து செய்தார்.

“இரும்பனை வெண்தோடு மலைந் தோனல்லன்
 கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
 நின்னகண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
 பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே
 ஒருவீர் தோற்பினும் தோற்ப துங்குடியே
 இருவீர் வேறல் இயற்கையுமன்றே அதனால்
 குடிப்பொருள் அன்றுநும் செய்தி, கொடித்தேர்
 நும்மோ ரன்ன வேந்தர்க்கு
 மெய்ம்மலி உவகை செய்யும் இவ்விகலே”
-புறநா. 45

காலப்போக்கில், ‘ஆர்’ ஆட்சி அருகி, ‘ஆத்தி’ ஆட்சி பெருகிற்று. உலக வழக்கில் இரண்டும் உலவின. ஆத்திச் சிறு மரம், காட்டாத்தி எனவும் திருவாத்தி எனவும் கூறப்படும்.

சேக்கிழார் இதனைத் திருவாத்தி என்பர். திருச்செங்காட்டாங்குடித் திருக்கோயிலின் திருமரம் காட்டாத்தி எனப்

ஆர்—ஆத்தி
(Bauhinia tomentosa)

படும். அவ்வையார் ‘ஆத்திசூடி அமர்ந்த தேவனை’ என்றார். ‘ஆர்புனை சடையோன்’ என்று கூறும் புட்பவிதி (54 : 1). ஆத்திப் பூ, கண்ணியாகவும் சூடப்படும். மாலையாகவும் புனையப்பட்டு அணியப்படும்; ஆத்தி மரத்தில் அம்பு கொண்டு, நார் உரித்துப் பயன்படுத்தினர் என்றும் அறியப்படுகிறது.

“ஆர்நார்ச் செறியத் தொடுத்த கண்ணி ”-புறநா. 81 : 3-4

“அம்பு கொண்டறுத்த ஆர்நார் உரிவையின்
 செம்பூங்கரந்தை புனைந்த கண்ணி”
-அகநா. 269 : 10-11

ஆத்தி மரக்காடு நிறைந்திருந்தமையின் ஆர்க்காடு மாவட்டங்கள் தோன்றலாயின. ஆர்க்காட்டைத் தலைநகரமாகக் கொண்டு, முற்காலத்தில் சோழர் குலக் குறுநில மன்னர் ஆண்டனர் என்ப.

“படுமணி யானைப் பசும்பூண் சோழர்
 கொடிநுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்”

-நற். 227 : 5-6

ஆர்க்காட்டில் வாழ்ந்த சோழர் குல வீர மன்னன், வீர இளைஞரிடம் செல்வாக்குப் பெற்றவனாக விளங்கினான். அவன் பெயர் அழிசி. அவனது மகன் பெயர் சேந்தன். இருவருடைய காலத்திலும், ஆர்க்காடு வளம் பெற்று, எழிலோடு விளங்கியது. வனப்பு வாய்ந்த நங்கையின் எழில் நலத்திற்கு, வளமான ஊரை உவமை கூறும் மரபில் இவ்வூரும் உவமையாக்கப்பட்டது:

“ஒள்வாள் இளையர் பெருமகன்
 அழிசி ஆர்க்காடு அன்ன இவள்
 பழிதீர் மாண் நலம் தொலைவன கண்டே”

-குறுந். 258 : 6 - 8

ஆர் என்னும் பெயரால் பெற்ற மற்றோர் ஊர்: ஆர் + ஊர்: ஆருர். இவ்வூர் தெய்வத் தொடர்பினால் திருவாரூர் ஆயிற்று. இதனை, மனுச் சோழன் காலத்தில் சோழர் தலைநகர் என்ப.

ஆத்திமரத்தைத் தாவரவியலார் பாகீனியா ரசிமோகா (Bauhinia racemosa) என்றழைப்பர். இது சீசல்பினாய்டியே (Ceasalpinoideae) என்னும் துணைக் குடும்பத்தைச் சேர்ந்தது. இத்துணைக் குடும்பத்தில் பல பிரிவுகள் உள்ளன (tribe). அவற்றுள் ஒன்று பாகினியே (Bauhineae) என்பது. இதில் 37 பேரினங்கள் உள்ளதாக ‘ஹூக்கர்’ அறிவித்துள்ளார். ‘காம்பிள்’ என்பவர் 10 பேரினங்கள் தமிழ்நாட்டில் உள்ளதாகக் குறிப்பிடுவர். இவற்

ஆர்—ஆத்தி
(Bauhinia tomentosa)

றுள், ‘ஆத்தி’ என்னும் பெயரில் குறிப்பிடத்தக்க மூன்று சிறு மரங்கள் தமிழ் நாட்டில் வளர்கின்றன. இவை மூன்றும் ஒரே மாதிரியானவை. கபிலர் கூறும் ஆத்தி அல்லது கோவூர் கிழார் கூறும் ‘ஆர்’ என்பதைத் தாவரவியலில் பாகினியா பர்பூரியா (Bauhinia purpurea) என்று கருத இடமுண்டு. ‘மந்தாரத்தில் தாரம் பயின்று’ என்பது இதுவே என்பர். இதன் பூக்கள் வெளிர் மஞ்சள் நிறமானவை. இதனை ‘மந்தாரை’ என்றும் கூறுவர்.

இதனைக் கொக்கு மந்தாரை என்றும், வெள்ளை மந்தாரை என்றும், கலைக் களஞ்சியம் (Vol. II : P 1124) குறிப்பிடுகிறது. இதனைப் பாகீனியா பர்பூரியா (Bauhinia purpurea) என்றழைப்பர். ஞானசம்பந்தப் பெருமான் ‘கொக்கின் இறகினொடு வன்னி புக்கசடையார்’ என்று கூறும் கொக்கு மந்தாரை என்பது இதுவே என்பர். இதன் பூக்கள் வெளிர் மஞ்சள் நிறமானவை. இது ‘மந்தாரம்’ எனவும், ‘திருவாத்தி’ எனவும், ‘திருவாட்சி’ எனவும் வழங்கப்படும்.

இதைப் போலவே, அகவிதழ்களின் அடிப்பாகம் மஞ்சள் நிறமாகவும் மேற்பாகத்தில் சிறிய செம்மை நிறப் பகுதியும் கொண்ட இன்னுமொரு ஆத்தி காணப்படுகின்றது. இதற்குத் தாவரவியலில் பாகீனியா டொமேன்டோசா (Bauhinia tomentosa) என்று பெயர் இதனை ஒரு சிலர் ‘காட்டாத்தி’ என்பர். இது ஆங்கிலத்தில், ஹோலி மௌன்டன்-எபனி (Holy mountain-ebony) எனப்படும். இன்னொரு ஆத்தி மரம் திருக்கோயில்களில் வளர்க்கப்படுகின்றது. இதன் பூக்கள் கருஞ்சிவப்பு நிறமானவை. இதனைப் பாகினியா ரசிமோசா (Bauhinia racemosa) என்றழைப்பர். இதற்குப் ‘பர்பிள் பாகீனியா’ என்ற பெயரும் உண்டு.

ஆத்தி—ஆர் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்பெல்லேட்டா
தாவரக் குடும்பம் : சீசல்பினாய்டியே (Caesalpinoideae)
தாவரப் பேரினப் பெயர் : பாகீனியா (Bauhinia)
தாவரச் சிற்றினப் பெயர் : ரெசிமோசா (гaсеmosа)
தாவர இயல்பு : சிறு மரம். கோணல் மாணலாக வளரும்
தாவர வளரியல்பு : மீசோபைட்

ஆர்—ஆத்தி
(Bauhinia tomentosa)

இலை : இரண்டு சிற்றிலைகள் கொண்ட கூட்டிலை. இரண்டும் அடியில் ஒட்டியிருக்கும்.
இலைக்காம்பு : 15 மி.மீ. முதல் 22 மி.மீ.நீளமானது.
சிற்றிலை : 6 செ. மீ. முதல் 8 செ. மீ. நீளம். 4.5 முதல் 6 செ.மீ. அகலம்.
இலை நரம்பு : கையன்ன விரி நரம்புகள் இலை நுனி வரையில்.
இலையடிச் செதில் : 2 சிறியவை, முதிரு முன்னர் உதிர்ந்து விடும்.
மஞ்சரி : நுனி வளர்ந்த பூந்துணர் உச்சியில் கலப்பு மஞ்சரியாக இருக்கும்.
மலர் : வெளிர் மஞ்சள் நிறமானது. ஐந்தடுக்கானது. இருபக்கச் சமச் சீரானது. பூவடிச் செதில்களும் பூவடிச் சிறு செதில்களும் உண்டு.
புல்லி வட்டம் : ஐந்து பசிய மடல்கள் பற்கள் போன்றிருக்கும்.
அல்லி வட்டம் : 5 மடல்கள், சற்றுச் சமமில்லாமலிருக்கும். நேராகக் காணப்படும். திருகு இதழமைப்பு.
மகரந்த வட்டம் : 5 மகரந்தத் தாள்கள், மகரந்தப் பைகள் சுழல் அமைப்புடையன. நீளவாக்கில் வெடிக்கும்.
சூலக வட்டம் : சூற்பை காம்புடனிருக்கும். பல சூல்களை உடையது. சூல்தண்டு குட்டையானது. இழை போன்றது.
கனி : தட்டையானது: உட்புறம் தடுப்புகள் உடையது.
விதை : முட்டை வடிவானது; முளை சூழ்தசை கொண்டது.

இம்மரம். இந்தியாவில் பஞ்சாப் முதல் இலங்கை வரையில் வளர்கிறது.சீனா, மலேயா நாடுகளிலும் காணப்படுகிறது.