சங்க இலக்கியத் தாவரங்கள்/050-150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
 

போங்கம்
அடினாந்தீராவின் சிற்றினம்
(Adenanthera pavonina, SP.)

போங்கம் என்ற சொல் குறிஞ்சிப் பாட்டில் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“போங்கம் திலகம் தேங்கமழ் பாதிரி-குறிஞ். 74

இதற்கு நச்சினார்க்கினியர் ‘மஞ்சாடிப்பூ’ என்றும், அடுத்து வரும் திலகம் என்பதற்கு மஞ்சாடி மரப்பூ என்றும் உரை கூறுவர். இதனால் போங்கம் என்பது மஞ்சாடி மர வகை என்று கருத இடமுண்டு. தாவரவியலில் திலகத்தை அடினாந்தீரா பவோனினா என்றுரைப்பர். இப்பேரினத்தில் பைகலர் (Adenanthera bicolor) என்ற மற்றொரு சிற்றினம் இலங்கை, மலாக்கா முதலிய நாடுகளில் வளர்வதாக ஹுக்கர் கூறுவர். இதன் மலர்கள் திலகத்தின் பூக்களைக் காட்டிலும் சிறியவை என்றும், இதன் விதைகள் ஒரு புறம் நல்ல சிவப்பு நிறமும், மற்றொரு புறம் கறுப்பு நிறமும் உடையவை என்றும் காம்பிள் கூறுவர். இது ஒரு வேளை போங்கமாக இருக்கலாமோ என்று எண்ண வேண்டியுள்ளது.

மற்று பரிபாடல் திரட்டுப் பாடலில் வேங்கை, மராஅம், மகிழம், பிண்டி முதலிய மலர்களுடன் ‘போங்கி’ என்றொரு மலர் குறிப்பிடப்படுகின்றது.

“ஒருசார் அணிமலர் வேங்கை, மராஅ, மகிழம்
 பிணிநெகிழ் பிண்டி நிவந்துசேர்பு ஓங்கி
 மணி நிறம் கொண்ட மலை
-பரி. 1 : 8-10

இம்மரம் ‘சிசால்பினாய்டியே’ என்னும் (Caesalpinoideae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதற்கு ‘மஞ்சாடி’ என்று பெயர் எனக் ‘காம்பிள்’ கூறுவர்.