சங்க இலக்கியத் தாவரங்கள்/053-150

விக்கிமூலம் இலிருந்து
 

மருதம்
டெர்மினாலியா அர்ச்சுனா (Terminalia arjuna,W.A.)

தமிழ் இலக்கியம் கண்ட ஐம்புலத்துள் மருதமும் ஒன்று. இது வயலும் வயலைச் சார்ந்த இடமுமாகும். இப்புலத்தில் வளரும் மருத மரத்தை வைத்தே இந்நிலம் இப்பெயர் பெற்றது போலும். மருதமரம் உயர்ந்து பருத்து வளரும். இதன் அடிமரம் மிகவும் பருத்திருக்கும். இம்மரம் காவிரி, வையை முதலிய ஆறுகளின் கரைகளில் வளர்வதைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

சங்க இலக்கியப் பெயர் : மருதம்
உலக வழக்குப் பெயர் : வெள்ளை மருது, கரு மருது, பில்ல மருது.
தாவரப் பெயர் : டெர்மினாலியா அர்ச்சுனா
(Terminalia arjuna,W.A.)

மருதம் இலக்கியம்

தொல்காப்பியம் மருத நிலத்தை “வேந்தன் மேய தீம்புனல் உலகம்” (தொல். பொருள். அகத். 5) என்று கூறும். வயலும் வயலைச் சார்ந்த இடமும் மருதம் எனப்படும். ஊடலும் ஊடல் நிமித்தமும் உரிப்பொருளாக உடைய மருத நிலத்தை ‘மருதஞ் சான்ற மருதத் தண்பணை’ என்பர் (சிறுபா.186). இதற்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘ஊடியும் கூடியும் போகம் நுகரும் தன்மை அமைந்த மருத நிலத்தில் குளிர்ந்த வயலிடத்து’ என்பார். மேலும் இப்பொருளைத் தொல்காப்பியம் அகத்திணையியல் நூற்பா (5) உரையிலுங் கூறுவர். சங்க இலக்கியத்தில் மருதத் திணையில் அமைந்துள்ள பாக்கள்:

1. அகநானூறு - ஆறாம் எண்ணுள்ள ..
40 பாக்கள்
2. கலித்தொகை - மருதக்கலி ..
30 பாக்கள்
3. ஐங்குறுநூறு - மருதம் ..
100 பாக்கள்

இவையன்றி நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல் முதலிய தொகை நூல்களிலும் கீழ்க்கணக்கு நூல்களிலும் மருதத் திணைப் பாக்கள் பல உள.

இவற்றுள் எல்லாம் வயலும், வயலைச் சார்ந்த நிலம் பற்றியும், இந்நிலத்தில் வாழும் மக்களைப் பற்றியும், இவர்தம் மருதத் திணையொழுக்கம் பற்றியும் புலவர்கள் பாடியுள்ளனர். மருதம் என்ற மரம் இப்புலத்தில் வளரும் அழகிய பெரு மரமாகும். காவிரி, வையையாறுகளின் கரைகளிலும், துறைகளிலும், வயல்களின் மருங்கிலும் தழைத்து வளரும் என்பர் புலவர் பெருமக்கள்.

“மருதம் சான்ற மலர்தலை விளைவயல்”-பதிற். 73 : 8

இம்மரத்தின் நிழல் சூழ்ந்த பெரிய துறைகளில் ஆடவரும், மகளிரும் நீராடுவர். நீர்நிலைக்கு அணித்தாய் இதன் கிளைகளின் மேலேறி அங்கிருந்து கரையில் உள்ளவர்கள் மருளும்படியாகத் qதுடுமெனw இருபாலாரும் நீரில் பாய்ந்து, குதித்து விளையாட்டயர்வர். இவ்வொலி உருமின் இடியோசை போன்றது என்பர்.

“மருது உயர்ந்து ஓங்கிய விரிபூம்
 பெருந்துறை பெண்டிரொடு ஆடும் என்ப”
-ஐங். 33 : 2-3

“விசும்புஇழி தோகைச் சீர் போன்றிசினே
 பசும்பொன் அவிர் இழைபைய நிழற்ற
 கரை சேர் மருதம் ஏறிப்
 பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே”
-ஐங். 74

“தொல்நிலை மருதத்துப் பெருந் துறை
 நின்னோடு ஆடினன் தண்புன லதுவே”
-ஐங். 75 : 2-4

“. . . . . . . . . . . . . . . . ஆயமொடு
 உயர்சினை மருதத் துறைஉறத் தாழ்ந்து
 நீர்நணிப் படிகோடு ஏறி சீர்முக,
 கரையவர் மருள திரையகம் பிதிர
 நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து”

-புறநா . 243 : 5-9


ஓங்கி வளரும் மருத மர நிழலில் செந்நெல் அடித்துப் போர் போடும் களம் அமைப்பர் எனவும், ஆண்டுறையுந் தெய்வங்கள் அக்களத்தில் பலி பெறுமெனவும், பழைய மரமாதலின் அதில் பாம்பு உறையும் எனவும் கூறுப.

“பைது அறவிளைந்த பெருஞ்செந் நெல்லின்
 தூம்பிடைத் திரள்தாள் துமித்த வினைஞர்
 பாம்புறை மருதின் ஓங்கு சினைநிழல்
பலிபெறு வியன்கள மலிய வேற்றி”
-பெரும்பா. 230-233

மேலும் காவிரியாற்றில் ஒரு பெருந்துறை; அதில் பலரும் நீராடுவர். அங்கு ஒரு பெரிய மருத மரம் உள்ளது. அதில் சேந்தன் தந்தையின் யானை பிணிக்கப்பட்டுள்ளது என்பர் பரணர்.

“. . . . . . . . . . . . . . . . காவிரிப்
 பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த
 ஏந்து கோட்டு யானைச் சேந்தன்தந்தை”
-குறுந். 258 : 2-3

வையையாற்றின் திருமருத முன் துறையில் தலைமகனும், தலைமகளும் புனற்கண் நீரணி இன்பந் துய்த்த செய்தியை மையோடக் கோவனாரும் (பரிபா. 7) திருமருத நீர்ப்பூந்துறையின் தைந் நீராடும் செய்தியை நல்லந்துவனாரும் (பரிபா. 11) விரித்துரைப்பர்.

“உரும்இடி சேர்ந்த முழக்கம் புரையும்
 திருமருத முன்துறை சேர்புனற்கண் துய்ப்பர்”

பரிபா. 7 : 83-84


மேலும், வையை யாற்றின் வார்மணல் கூடிய அகன்ற துறையில் ஓங்கி வளர்ந்த மருத மரக்காவில் வதுவை அயர்தலும் கூறப்படுகின்றது.

“வருபுனல் வையை வார்மணல் அகன்துறை
 திருமரு தோங்கிய விரி காவில்
 நறும்பல் கூந்தல் குறுந்தொடி மடந்தையொடு
 வதுவை அயர்ந்தனை என்ப . . . . .”
-அகநா. 36 : 9-12

மருதம் ஓங்கிய இம்மலர்க் காவில் காஞ்சி மரமும், மாமரமும் வளர்ந்திருக்குமென்றும் பதிற்றுப்பத்து கூறும்.

“மருதுஇமிழ்ந்து ஓங்கிய நறுஇரும் பரப்பின்
 மணல்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு”

-பதிற். 23:18-19


மருதம்
(Terminalia arjuna)

“அறல்அவிர் வார்மணல் அகல்யாற்று அடைகரை
 துறையணி மருதமொடு இகல்கொள ஓங்கி
 கலிதளிர் அணிந்த இருஞ்சினை மாஅத்து”
-அகநா. 97 : 18-20

இனி, மருதமரத்தின் இருவேறு வகையான செம்மருதும், வெண்மருதும் கூறப்பட்டுள்ளமை காண்க.

“முடக் காஞ்சிச் செம்மருதின்”-பொருந. 189

“நெடு வெண்மருதொடு வஞ்சி சாஅய”-அகநா. 226 : 9

மேலும் மருத மரத்தின் மலர் செந்நிறமானது என்றும், துய்யினை உடையதென்றும், மலர்கள் தொங்குகின்ற துணரில் விரியுமென்றும், அத்துணர் புள்ளினம் இரிய உதிருமென்றும் கூறுவர்.

“வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப்
 பழனப் பலபுள் இரியக் கழனி
 வாங்குசினை மருதத் தூங்குதுணர் உதிரும்”
-நற். 350 : 1-3

“உளைப்பூ மருதத்துக் கிளைக்குருகு இருக்கும்”-ஐங். 7
(உளைப்பூ-விரிந்த பூ)

“ஐயவி யன்ன சிறுவீ ஞாழல்
 செவ்வீ மருதின் செம்மலோடு தா அய்த்
 துறையணிந்தன்று. . . .. . . .. . . . ”
-குறுந். 50 : 1-3
(செம்மல் -பழம்பூ)

மருதின் பூவில் புறவிதழ் கரிய நிறமானதென்றும், மேலே துய்யினை உடையதென்றும், இதன் பூங்கொத்துக்களைக் கொண்டையிலே அணிவர் என்றும், துய்யினை உடைய மருத மலரை மார்பில் அப்பிக் கொண்டால், அது சந்தனக் குழம்பைப் பூசுவதை ஒத்திருக்குமென்றும் நக்கீரர் கூறுவர்.

“துவா முடித்த துகளறு முச்சிப்
 பெருந்தண் சண்பகஞ் செறீஇக் கருந்தகட்டு
 உளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்
 . . . . . . . . . . . . . . . .
 நறுங்குறடு உறிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
 தேங்கமழ் மருதிணர் கடுப்ப”
-திருமுரு. 27-34

மருதம்
(Terminalia arjuna)

மருதம் தமிழிசையில் ஒரு வகையான பண் எனவும் படும். தாள அறுதியை இனிதாகக் கொண்டு, யாழ்க்கருவியின் நரம்பைத் தெரிந்து யாழோர் மருதப் பண்ணை இசைப்பர் என்று மதுரைக் காஞ்சி கூறுகின்றது.

“சீர்இனிது கொண்டு நரம்பினிது இயக்கி
 யாழோர் மருதம் பண்ண”
-மதுரைக்கா. 657-658

மருதம் காலைப்பண் என்று பரணர் கூறுவர். (புறநா. 149) இவ்வுண்மையைச் சீவக சிந்தாமணிப் பாடலும் [1] வலியுறுத்தும்.

‘வைகறை விடியல்-மருதம்’ என்று மருதத்திற்குப் பொழுது கூறிற்று தொல்காப்பியம். (அகத்: 9)

மருதம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : காலிசிபுளோரே (Calyciflorae),
மிர்டேலீஸ் (Myrtales)
தாவரக் குடும்பம் : காம்பிரிடேசீ (Combretaceae)
தாவரப் பேரினப் பெயர் : டெர்மினாலியா (Terminalia)
தாவரச் சிற்றினப் பெயர் : அர்ச்சுனா (arjune, W. A.)
தாவர இயல்பு : மரம். உயரமான, அகன்ற, பொலிவுள்ள இலையுதிர் மரம்.
தாவர வளரியல்பு : மீசோபைட். 15 முதல் 20 மீட்டர் உயரமாகவும், மேலே 10 மீட்டர் அகன்றும், தழைத்து வளரும்.
கிளைத்தல் : அடி மரம். 4 முதல் 8 மீட்டர் சுற்றளவுடையது. 3-4 மீட்டர் உயரத்திற்கு மேல் பெரிய கிளைகளை பரப்பி வளரும்.
அடிமரம் : சுற்றிலும் சப்பையான 1-2 மீட்டர் உயரமும், 1 முதல் 1·5 மீட்டர் அகலமும் உள்ள தாங்கு வேர் எனப்படும் (Buttresses). அடிமரப் பட்டைகள் காணப்படும்.
பட்டை : கருநீல நிறமானது (pinkish grey). வழவழப்பானது.
அடிமரத் தண்டு : பழுப்பு நிறமுள்ளது. வலியது.
இலை : தனியிலை. குறுகிய, நீண்ட இலைகள். 8 முதல் 10 செ.மீ. நீளம். 3 முதல் 3.5 செ. மீ. அகலம். அடியில் குறுகியும், நுனி முட்டை வடிவாகவும் உள்ளது. இலை நுனி அகன்ற கோணமுள்ளது.
இலைக் காம்பு : 8 முதல் 10 மி. மீ. நீளமானது.
இலை நரம்பு : நடு நரம்பு பருத்துத் தோன்றும்.
விளிம்பு : நேரானது.
மஞ்சரி : கலப்புப் பூந்துணர், ‘ஸ்பைக்’ போன்றது.
மலர் : இருபாலானது, 4 முதல் 5 அடுக்கானது மலரடிச் சிறு செதில்கள். இரண்டும் நீளமானவை.
புல்லி வட்டம் : 4-5 விளிம்புகள். மலரும் போது உதிர்ந்து விடும். கரும் பச்சை நிறமானது.
அல்லி வட்டம் : 4-5 அகவிதழ்கள் கருஞ்சிவப்பானவை.
மகரந்த வட்டம் : இரு அடுக்கு வட்டங்களில் 8-10 மகரந்தத் தாள்கள்.
சூலக வட்டம் : கீழானது. ஓரறைச் சூலகம்.
சூல் : 2-3 தொங்கு சூல்கள்.
சூல் முடி : எளிதானது, சிறியது.
கனி : 4 செ.மீ. நீளமும் 1.5 செ.மீ.அகலமுமுள்ள 4
பட்டையான உலர்கனி. 4 நீண்ட சிறகு போன்று கனியுறை அகன்று தடித்துள்ளது.
விதை : ஒற்றை விதை, முளை சூழ்தசையில்லாதது. வித்திலைகள் (கான்வலூட்) வளைந்தவை.
பயன் : மரம் மிக வன்மையானது. பழுப்பு நிறமான அடிமரம் கட்டிட வேலைக்கு உதவும். பலகையில் கருங்கோடுகள் அழகுடன் காணப்படும். பெரிதும் வயலும், வயலைச் சார்ந்த மருத நிலத்தில் வளரும்.



  1. சீ. சிந்: 1991