பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குடியும் குறளும்

குடி என்பது இரு பொருள்களைத் தருகின்ற ஒரு சொல் "பெருங்குடிமகன்" என்பதும் அப்படியே ஒரு பொருள் உயர்வும், மறு பொருள் இழியும் ஆகும். உயர்வையும் இழிவையும் ஒரே சொல்லிற் கொண்ட சொற்கள் பலவற்றைத் தமிழிற் காணலாம். அவற்றில் இதுவும் ஒன்று. இங்கு நாம் கூறவந்த குடி, குடிக்கும் வழக்கத்தை ஒழித்துக் குடியின் பெருமையை உயர்த்த வேண்டும் என்பதேயாம்.

"குடியன்" "குடித்தான்" என்று சொல்லுகிற பொழுது "கள்" என்ற சொல்லையும் சோத்துச் சொல்லுவதில்லை. ஏனெனில், அச்சொல்லைச் சொல்லுவதும் சொல்லக் கேட்பதும் எழுதுவதும் படிப்பதும் நினைப்பதும் கூடத் தவறு என்பது தமிழ் மக்களின் கொள்கை. அதனாலேயே அச்சொல்லைத் தமிழ் அறிஞர்கள் உலக வழக்கிலிருந்தே ஒழித்துவிட்டார்கள் என்று தெரிகிறது.

உலகில் தோன்றி அழிந்த, தோன்றி இருக்கின்ற எல்லாச் சமயங்களும் குடியை வெறுத்துள்ளன.

வெறிக்கக் குடிக்காதே

என்பது ஏசு பெருமான் வாக்கு.

குடிப் பழக்கம் ஆண்டவனை
அணுக விடாது

என்பது நபிகள் நாயகம் வாக்கு,

குடிப்பது அறச்செயல் அல்ல;
மறச் செயல்

என்பது புத்தர் பெருமான் வாக்கு.