சீர்மிகு சிவகங்கைச் சீமை/சோழபுரத்திலிருந்து

விக்கிமூலம் இலிருந்து



9. சோழபுரத்திலிருந்து


இன்றைய சிவகங்கைக்கு வடக்கே பத்து கல் தொலைவில் உள்ளது சோழபுரம். பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியரை வென்று பாண்டிய மண்டலம் முழுவதையும் தங்களது ஆளுகையின் கீழ் வைத்து இருந்த சோழ பாண்டியர், இந்த ஊரை சோழர்களது ஆதிக்கத்தையும், பதுங்கி விட்ட பாண்டியரது வீரத்தையும் நினைவூட்ட நிர்மானித்தனர். இதே பெயரிலான ஊர்கள், கன்னியாகுமரி மாவட்டம், காமராசர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அமைந்துள்ளன. பரங்கியரது பரம எதிரியாக மாறிய சிவகங்கைப் பிரதானிகளை அழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை அரச மரபினரான படைமாத்தூர் கெளரி வல்லப ஒய்யாத் தேவரை, அறந்தாங்கி காட்டில் தேடிப் பிடித்து அழைத்து வந்தனர். புதுக்கோட்டைத் தொண்டைமானது தொள்ளாயிரம் வீரர்கள் புடை சூழ சோழபுரத்தில் 3.9.1801-ம் தேதியன்று அவருக்கு சிவகங்கை ஜமீன்தார் என்ற புதிய பட்டத்தைச் சூட்டினர்.[1] அப்பொழுது சிவகங்கைச் சீமை மன்னர் சக்கந்தி வேங்கண் பெரிய உடையாத் தேவர் இருந்தார். கும்பெனியாரும் அவரை கி.பி.1790-ல் மன்னராக அங்கீகரித்து இருந்தனர். ஆனால், அவர் மருது சேர்வைக்காரர்களது அணியில் இருந்ததால் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

நாலுகோட்டைப் பரம்பரையில் வந்த படைமாத்தூர் கெளரி வல்லபரை புறக்கணித்து விட்டு சிவகங்கையில் மருது சேர்வைக்காரர்கள், சர்வாதிகாரம் செய்கின்றனர் என்பதை வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதற்கும், இதன் மூலம் ராஜ விசுவாசம் மிக்க சிவகங்கைக் குடிகளை புதிய ஜமீன்தார் அணியில் இணையுமாறு செய்து
படமாத்தூர் கெளரிவல்லப மகாராஜா கோயிலில் அமைந்திருக்கும் கெளரிவல்லபரின் சிற்பம்

மருது சேர்வைக்காரரர்களது மக்கள் அணியை பலவீனப்படுத்துவதும் கும்பெனியாரது திட்டம். அவர்கள் போட்ட கணக்கு சரியானது என்பதை பிந்தைய வரலாற்று நிகழ்வுகள் - காளையார் கோவில் போரில் வெற்றி, தனிமைப்படுத்தப்பட்ட மருது சகோதரர்களை கைது செய்து தூக்கில் தொங்கவிட்டது. சிவகங்கைத் தன்னரசு மன்னர் வேங்கன் பெரிய உடையாத் தேவரை பினாங் தீவிற்கு நாடு கடத்தியது போன்றவைகள் நியாயப்படுத்தின.

இதைவிடப் பெரிய ரகசியத் திட்டம் ஒன்றையும் கும்பெனியார் வரைந்து வைத்து இருந்தனர். தமிழகத்தில் எஞ்சியிருந்த பாரம்பரிய தன்னாட்சி மன்னர்களை ஒழித்து, நாடு முழுவதும் ஆங்கிலப் பேரரசை நிறுவுவது, என்பதுதான் அந்த திட்டம்.

இராமநாதபுரம் சேதுபதி மன்னர் கொடூரமாக ஆட்சி செய்வதைத் தடுத்து நிறுத்துவதாகச் சொல்லி, சேதுபதி மன்னரை கி.பி.1795-ல் கைது செய்து, சிறையில் அடைத்தனர். சேது நாட்டில் கும்பெனி நிர்வாகத்தைப் புகுத்தினர்.[2]

மன்னரது வாரிசான அவருக்கு ஒரு மகள் (சிவகாமி நாச்சியார்) இருந்தும், மன்னரது தமக்கை மங்களேஸ்வரி நாச்சியாரை சரியான வாரிசு என பிரசித்தம் செய்தனர். அவரிடம் விரைவில் அரசை ஒப்படைத்து விடுவோம் எனப் பொய்யுரைத்து விட்டு எட்டு ஆண்டுகள் அவர்களது நேரடி ஆட்சியை அங்கு நடத்தினர். பிறகு, மறவர் சீமையின் தன்னரசு நிலையை நீக்கிவிட்டு கி.பி.1803-ல் இராமநாதபுரம் தன்னரசை ஜமீன்தாரி என அறிவித்தனர்.[3]

அப்பொழுது தஞ்சையில் இருந்த மன்னர் இரண்டாவது சரபோஜியைப் பலவந்தப்படுத்தி ஆட்சியுரிமையைப் பறித்தனர். பின்னர் அந்த மன்னர் நாட்டு நலன்கருதி, தஞ்சையை தங்களிடம் ஒப்படைத்து விட்டார் என்று புனை உரை கூறி தஞ்சை அரசைத் தங்களது உடமையாக்கினர்.[4]

அடுத்து, தமிழ் நாட்டில் எஞ்சி இருந்தது சிவகங்கை தன்னரசு ஒன்று மட்டுமே. அதுவும் தன்னரசு நிலையை இழந்து விட்டது என்பதைக் குறிப்பதுதான் சோழபுரத்தில் படைமாத்தூர் கெளரி வல்லப தேவருக்கு ஜமீன்தார் பட்டம் சூட்டியது.

கும்பெனியாரது இந்த இரகசியத் திட்டத்தை அன்று எத்தனை பேர்புரிந்து இருந்தனர்? புரிந்து இருந்தாலும், அவர்களால் என்ன செய்ய முடியும்? வெற்றிக் களிப்பில் வெறிபிடித்து ஓடிவரும் காட்டானையை பிடித்து

(Upload an image to replace this placeholder.)

சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/183

நிறுத்துவதற்கு திறமைசாலி வேண்டுமல்லவா? ஒருவருமே இல்லை! கும்பெனியாரை எதிர்த்துப் போரிட்ட மதுரை சீமை அதிபர் கம்மந்தான் கான் சாகிபை, துரோகிகள் மூலம் பிடித்து கி.பி.1764-ல் தூக்கில் ஏற்றினர். பாஞ்சாலங்குறிச்சிப் போரில் தோற்று ஒடிய கட்டபொம்மனுக்கும் அதே கதி. கி.பி. 1794-ல் கும்பெனியாருக்கு கப்பம் செலுத்த தவறிய சாப்டூர் பாளையக்காரரும் தூக்கில்தான் தொங்கினார். சேது நாட்டில், கும்பெனியாரது ஆதிக்கமும் எந்த உருவிலும் செயலிலும் காலூன்றிவிடக் கூடாது என மிகவும் எச்சரிக்கையாக இருந்து, அவர்களுக்கு மரண அடி கொடுக்க முயன்ற இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதியை வஞ்சகமாக கைது செய்து வாழ்நாள் முழுவதையும் சிறையிலே கழித்து இறக்குமாறு செய்தனர்.[5] அவர்களை எதிர்த்து மக்களை திரட்டி சேதுபதி சீமையின் தென்பகுதி முழுவதிலும் நாற்பத்து ஒரு நாட்கள் நடத்திய ஆயுதக் கிளர்ச்சியையும், அசுரத்தனமாக அடக்கி ஒடுக்கப்பட்டது. அதனைத் தலைமை ஏற்று நடத்திய சிங்கன்செட்டி, மீனங்குடி கனக சபாபதித் தேவர், முத்துக்கருப்ப பிள்ளை, சித்திரங்குடி மயிலப்பன் சேர்வை ஆகியோருக்கும் மரண தண்டனை, எஞ்சிய ஆங்கில எதிர்ப்பாளர்களான ராஜசிங்க மங்கலம் குமரத் தேவர், காடல்குடி பாளையக்காரர் கீர்த்தி வீரநாயக்கர், மருது சேர்வைக்காரர்கள், அவர்களது மக்கள் அனைவருக்கும் துக்குத் தண்டனைப் பரிசு.[6]

காலத்தின் வேக சக்கரத்தை பற்றிப் பிடித்து பின்னோக்கி செலுத்த யாரால்தான் முடியும்? அது, நமது நாட்டின் தலை விதியைச் சீரழித்து, நாட்டின் நிகழ்வுகளை பயனற்று பலவீனமடையச் செய்தது.

படைமாத்துார் கெளரி வல்லபத் தேவர் ஜமீன்தார் ஆக்கப்பட்டாரே தவிர, அவரது முறையான நிர்வாகம் இயங்குவதற்கு காலதாமதமானது. மதுரைச் சீமையின் நிலத் தீர்வை முறையை ஆழமாக ஆராய்ந்து, நிரந்தரமான நிலவரித் திட்டம் ஒன்றை தமிழகம் எங்கும் புகுத்த கும்பெனியார் முயன்றதே இந்த தாமதத்திற்கு காரணமாகும். ஏற்கனவே கும்பெனி கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ் வங்காளத்தின் இந்த நிலவரி முறையை கி.பி. 1793-ல் அமுல்படுத்தி இருந்தார். அதன்படி ஆண்டுதோறும், நிலவரித் தீர்வையாக சிவகங்கை ஜமீன்தார் கும்பெனியாரது குழுமத்திற்கு எவ்வளவு செலுத்த வேண்டுமென்பதை நிகுதி செய்தனர். அதற்கான "சன்னது" ஒன்றை கி.பி. 1803-ல் சிவகங்கை ஜமீன்தாருக்கு வழங்கினர். அன்று ஆட்சி மொழியாக இருந்த பாரசீக மொழி வழக்கில் அது "மில்கியத் இஸ்திமிரார்" என வழங்கப்பட்டது. தன்னரசு, சிற்றரசு என்ற பாரம்பரிய அரசு முறைகளுக்கு புறம்பானது இந்தப் புதிய நிலக்கிழார்முறை என்றாலும், கால மாற்றத்தின் காரணமாக இங்குள்ள அரச வழியினர் தங்களது சமூக அந்தஸ்தை ஒரளவு பேணிக் கொள்வதற்கு இந்த ஜமீன்தார் பதவியை விட்டாலும் வேறு வழி இல்லை என்ற நிலை. சமுதாயப் பணிகள் செய்வதற்கான வாய்ப்பும் அவருக்கு மிகவும் குறைவு. குற்றங்களுக்கு நியாயம் வழங்கும் உரிமையும் அறவே இல்லாதது. கி.பி.1801-ல் சோழபுரத்தில் தொடங்கிய இந்த முறை நூற்றைம்பது ஆண்டுகள் வரை நீடித்து கி.பி.1949-ல் சிவகங்கையில் முடிவடைந்தது.[7]

சிவகங்கை ஜமீன்தாரியின் முதலாவது ஜமீன்தார் கெளரி வல்லப உடையாத் தேவர், கி.பி.1829 வரை பதவியில் இருந்தார். இவரது ஆட்சிக்காலம் அமைதியாகக் கழிந்தது. தங்களுடைய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் மீண்டும் மக்கள் ஆயுதம் ஏந்தி போராட முயற்சிக்கக் கூடாது என்பதற்காக போராட்ட உணர்வினை ஊக்குவிக்கும் மையங்களாக கோட்டைகள் உதவக்கூடாது என்பதற்காக மக்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். மன்னர்களது தற்காப்பு நிலையங்களாக பல நூற்றாண்டுகளாக விளங்கிய கோட்டைகளையும், கொத்தளங்களையும் இடிக்குமாறு உத்திரவிட்டனர்.[8] சிவகங்கைச் சீமை முழுவதும் மக்களிடத்தில் எஞ்சியுள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்கான பணியினை வைகுந்தம் பிள்ளை என்பவர் மேற்கொண்டார்.[9]

கீழே கண்டுள்ள ஆயுதங்கள் சிவகங்கைச் சீமை மக்களிடமிருந்து, 31.3.1802 வரை பறிமுதல் செய்யப்பட்டு, இராமநாதபுரம், மதுரை கோட்டைகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கு அவை அழிக்கப்பட்டன.

1. துப்பாக்கிகள் 2096
2. மருந்து நிறைத்து சுடும்
துப்பாக்கிகள்
1229
3. வேல், ஈட்டிகள் 3640
4. கைத்துப்பாக்கிகள் 42
5. வாள்கள் 652
6. குறுவாள் 441
7. ஜிங்கால் 17
8. ஸ்ரோஜன் 90
9. துப்பாக்கி சனியன்கள் 91
மொத்தம் 8,298.

திருபுவனம், திருப்புத்தூர், மானாமதுரை, பார்த்திபனூர், பிரான்மலை, அனுமந்தக்குடி, சூரக்குடி, காளையார்கோவில் ஆகிய ஊர்களில் அமைந்து இருந்த கோட்டைகள் இடித்து அழிக்கப்பட்டன.[10]

ஏற்கனவே குறிப்பிட்டது போல, ஜமீன்தார்கள் ஆட்சியில் தர்ம காரியங்களுக்கு முழுமையான கிராமங்களை வழங்குவதில் பல சிக்கல்கள் இருந்தன. சில சிறப்பான செயல்களுக்காக ஜமீன்தாரியில் அடங்கியுள்ள சில ஊர்களை திருக்கோயில், தனியார் ஆகியவர்களுக்கு இனாமாக வழங்குவதற்கு ஜமீன்தார் விரும்பினாலுங்கூட, அந்த ஊர்களுக்கு நிகுதி செய்யப்பட்ட தொகையை பொறுப்புத்தொகை (குயிட் ரெண்ட்)யாக கும்பெனியாருக்குச் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம். ஆனால், கெளரி வல்லபரிடத்தில் மேலோங்கி நின்ற ஆன்மிகப் பிடிப்பு காரணமாக சில கிராமங்களை சர்வ மான்யமாக வழங்கி உதவியுள்ளார். அவைகளுக்கான ஆவணங்கள் கிடைக்கவில்லை. கிடைத்துள்ள சில குறிப்புகளில் இருந்து கீழ்க்கண்ட திருக்கோயில்கள், திருமடங்கள், தனியார்கள் ஆகியோர் அவரது அறக்கொடைகளைப் பெற்று இருந்ததை அறிய முடிகிறது.[11]

1. திருக்கோயில்கள்
கி.பி அன்னவாசல் இராமநாதசாமி ஆலயம்,
1829 இராமேஸ்வரம்
1802 மாறனி சர்வேஸ்வரர் ஆலயம், சருகணி
(தேவாலயம்)
1816 நசர்புளியன்குடி முகம்முது நபி மௌறவீது
விழாவிற்கு
1816 கமுதக்குடி மீனாட்சி சுந்ததரர் ஆலயம், மதுரை
1828 கீழ்சேத்தூர் சந்திரசேகர சுவாமி கோயில்.
2. திருமடங்கள்
கி.பி வாவியேந்தல் இராமசாமி பரதேசி - போதகுரு
சாமிமடம்


3. தனியார்கள்
கி.பி மணக்குடி சிவராவ் தர்மசாசனம்,
1801 புன்னன்குடி
மணிமுடி ஏந்தல்
கருத்தன் ஏந்தல்
பொட்டல் வயல்
ஊழியமானியம்
ஜீவித இனாம்
திருப்பதி ஐயன், தர்மாசனம்

ஜீவித இனாம்
1802 சூரிக்கன்ஏந்தல் வரதாச்சாரியார், தர்மசாசனம்
1823 நெட்டிஏந்தல் சங்கர அய்யன்
1829 தடங்குண்டு
சித்தாட்டி
உமச்சிப்பட்டி
பொன்னம்பட்டி,கட்டனூர் முதலான
ஒன்பதுஊர்
சுப்புராயர்
சுப்பிரமணியம்
ஆபத்து உத்தாரண ஐயர்
இருஞ்சிறைகருப்பாயி ஆத்தாள்
மாணிக்கம் ஆத்தாள்


இந்த நிலக்கொடைகள் தவிர கிடைத்துள்ள இரு செப்பேடுகளின் உண்மை நகல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.


1. சருகணி தேவாலயச் செப்பேடு
(முதல் பக்கம்)


சமய நல்லிணக்கத்திற்கும் சமரச மனப்பான்மைக்கும் பெயர்பெற்ற சேதுபதிகளது வழித்தோன்றளான சிவகெங்கையின் முதலாவது ஜமீன்தார் படமாத்துர் கெளரி வல்லப உடையாத் தேவர் அவர்கள் தமது முன்னோரைப் போன்று திருமடங்களுக்கும் கோவில்களுக்கும் தனியார்களுக்கும் பல அறக்கொடைகளை வழங்கியதை வரலாற்றில் காண முடிகிறது. சாக்கை வட்டம் கோழியூரில் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களது தொலுகைப் பள்ளிக்கும், திருப்புவனம் வட்டம் புளியங்குளம் நபிகள் நாயகம் அவர்களது பிறந்ததின மெளலி விழா கொண்டாடுவதற்கும் நிலக்கொடைகளை ஏற்கெனவே வழங்கியுள்ளார். இப்பொழுது அவரது குடிகளில் சிறுபான்மையினரான கிருத்துவர்களுக்கு சருகணி தேவலாயத்திற்கு கி.பி. 1802-ல் சருகணிமாரனேந்தல் கிராமத்தில் சர்வமாணியமாக வழங்கியதை இந்த செப்பேடு தெரிவிக்கின்றது.

1. சுபஸ்ரீ மன் மகாமண்டலிசுபரன் அரி
2. யாயிர தளவிபாடன் பாசைக்கு தப்பு வார்க்க
3. ண்டன் மூவராய கண்டன் கண்டனாடு கொண்டு
4. கொண்டனாடு குடாதான் பாண்டிமண்டல
5. தாபனசாரியான் சோளமண்டல பிரதிஷ்டபனா
6. சாரியான் தொண்டமண்டல சண்ட பிரசண்டன்
7. இளமும் கொங்கும் யாட்பாணமும் கெசவேட்டை
8. கொண்டருளிய ராசாதிராசன் ராசபரமேசுரன் ரா
9. சமார்த்தாண்டன் ராசகெம்பீரன் ராசகுலதிலகன்
10. இவுளி பாவடி மீதித் தேறுவார் கண்டன் மலை கலங்
11. கிளு மனங்கலங்காதகண்டன் அன்னதான சத்
12. திரசோமன் வடகரைப்புலி சாமித்துரோகிகள் தலைமீதி 13. த்திடும் இருதாளினான் பட்டமானங்காத்தான்
14. தேசி காவலன் தாலிக்கு வேலி தரியர்கள் சிங்
15. கம் இரவிகுல சேகரன் இளங்சிங்கம் தளசிங்
16. கம் ஒட்டியர் தளவி பாடணன் ஒட்டியர் மோகந்
17. தவிள்த்தான் குலுக்க தளவிபாடன் துலுக்கராட்டந்தவி
18. ள்த்தான் விகடதடமணிமகுட விக்கிரம பொற்கொடி
19. யை வெட்டிநிலை மீட்ட வீரசூர புசமேல் பராக்கிரம
20. வேட்டிலுந் தங்கம் வெதுப்பிலும் பச்சை னாயகமுடைய
21. அரசராவண ரமன் அந்தப்பிரகண்டன் மனு நீ
22. தி சோழன் மன்னரில் மன்னன் மன்னர்கள் தம்
23. பிரான் துஷ்டரில் துஷ்டன் துஷ்டர் நெஷ்டுரன் சிஷ்
24. டரில் சிஷ்டன் சிஷ்டர் பரிபாலன் சாமிகாரிய துர
25. ந்தரன் பொறுமைக்கு தர்மர் அறிவுக்கு அகத்தி
26. யன் சொல்லுக்கு அரிச்சந்திரன் குடைக்குக்கர்ணன்
27. பரிக்கு நகுலன் வாளுக்கு அபிமன் சாடிக்காரர்
28. மிண்டன் வலியசிசருவி வழியில்க் கால்நீட்டி இட....
29. ரா கோடாலி எதுத்தார்கள் முண்டன் சேதுகாவல
30. ன் செங்காவிக் குடையான் தொண்டியந்துறை காவல
31. ன் துரைகள் சிரோமணி அனுமக் கொடியான் அடை
32. யலர்கள் சிங்கம் மகரக்கொடியான் மயமன்னியர்
33. தம்பிரான் செயதுங்கராயர் குருமுடி ராயர் மும்முடிரா
34. யர் விருப்பாச்சிராயர் அசுபதி கெசபதி நரபதி ரெகு
35. நாதச் சேதுபதி அரசு நிலையிட்ட முத்து விசையரெ
36. குநாதக் கெவுரி வல்லப பெரிய உடையாத்தேவரவர்
37. கள் பாவத்துக்குப்பிரம்பும் புண்ணியத்துக்குள்
38. ளுமாகப் பிறீதிவி ராட்சிய பரிபாலனம் பண்ணி
39. அருளாநின்ற சாலிவாகன சகாத்த சூர எளு
40. உயங். மேல் செல்லாநின்ற துர்மதி (உது மார்களி
41. உயங் சருகனிச் சறுவேரர் கோவிலுக்கு மாற
42. ணி முழுவதும் சறுவ மாணியமாகவும் அந்தக் கிராம
43. த்தில் பிரக்கிற சகல வரி யிறை சறுவ மாணியமாகவும்
44. தானம் பண்ணி தாம்பூர பட்டயங் குடுத்திருப்பதி


(இரண்டாவது பக்கம்)


45. னாலே மாறணி முழுதுக்கும் பரினான் கெல்கைய
46. வது போருடைப்புக்கு தெக்கு பெரு நெல்லு
47. க் கோட்டை ஆத்துக்கு கிளக்கு செட்டியேந்தலு
48. வடக்கு னாமத்திக்கி மேற்கு இன்னான் கெல்
49. லைக்கு உள்பட்ட மாரணியில் நீதி நிட்சேபம் தரு
50. ஆபர்ணம் சித்த சாத்தியமென சொல்லப்பட்
51. டதும் கீழ் னோக்கிய கிணறும் மேல் நோக்கிய ம
52. ரமும்அவிதாளி ஆவரை கொளிஞ்சி திட்டு திடல் 53. புத்து புனல் இது முதலான உலக ஆஸத் ஆதாயமு
54. ம் அங்க சுங்கம் வெள்ளைக்குடை கீதாரம் கரை
55. மணியமங்களம் பட்டயவரி மடத்துவரிச்சுக்கல்வரி 56..... ... .... சருகனி கோவில் தீபதூப நெய்வேத்
57. தீயம் ஆராதனைக்கு நிற்சேப தானம் பண்
58. ணிக் குடுத்தபடியினாலே இந்தப்படிக்கு சந்தி
59. ராதித்த சந்திர பிரவேசுவரைக்கும் கல்லு
60. ங் காவேரியும் புல்லும் பூமியும் உள்ளவரை
61. க்கும் ஆண்டனுபவித்துக் கொள்வாராகவும்
62. இந்த தர்மத்தை மேன் மேலும் பரிபாலினம்
63. பண்ணின பேருக்கு ஆயிரங்கோடி கண்ணியா
64. தானமும் ஆயிரங்கோடி லெட்சபிராமண போ
65. சனம் பண்ணி லெட்சந் தேவாலயத்தில் கற்ப
66. கோடி திருவிளக்கு ஏத்தும் பலனு மடைவா
67. ராகவும் இந்த தர்மத்துக்கு யாதொருவன்
68. அம்சளிவு பண்ணினால் கங்கைக் கரையில்
69. காராம் பசுவை மாதாவை குருவை களுத்தறு
70. த்த தோசத்தில் போவாராகவும்.

2. சிவகங்கை மொட்டை பக்கீர் தர்கா செப்பேடு

சிவகெங்கை நகரின் தென்பகுதி அகிலாண்ட ஈஸ்வரிபுரத்தில் வாழ்ந்திருந்த இஸ்லாமிய புனிதரான மொட்டைப் பக்கீர் சாயுபு என்பவருக்கு சிவகெங்கையின் முதலாவது ஜமீன்தார் படமாத்தூர் கெளரிவல்லபத் தேவர் அவர்கள் பொன்னான்குளம் மாகணம் உடையாரேத்தல் திரணி கிராமத்திலும், மங்களம் தாமுக இத்துக்குடி மாகணம் நாளிவயல் கிராமத்திலும் நஞ்சை புஞ்சை நிலங்களை சர்வ மாணியமாக வழங்கி சிறப்பித்ததை இந்த செப்பேடு தெரிவிக்கின்றது. இந்த செப்பேட்டின் காலம் சரியாக கணக்கிடப்பட்டு குறிக்கப்படவில்லை.

1. உ சாலிவாகன சகார்த்தம் 1765 கலியத்
2. தம் 4765க்கு மேல் செல்லாநின்ற சோ
3. பகிறுதுஸ்ரீ சித்திரை 5தீ ஸ்ரீமது விசை
4. யரகுநாதச சிவன்னப் பெரிய உடையாத் தே
5. வரவர்கள் முத்துவடுகனாதத் தேவரவர்கள்
6. சிவகங்கையிலிருந்து மொட்டைபக்கிரி
7. சாயபுக்கு பொன்னாகுள மாகாணத்தில் உடை
8. யானெந்தல் திரணிஉள்பட விரையடி 60
9. ளம் மங்கலந் தாலுகாவில் இத்திக்குடி மா
10. காணத்தில் நாளிவயல் கிராமம் கலவிரை
11. யடி 40ளம் ஆக கிராமம் - உகு விரையடி - 10:ளசூ
12. தற்ம பூசாதனம் சறுவமானியமாகப்பண் 13. ணிக்கொடுத்தபடியினாலே இந்தக்கிறாம நா
14. ன் கெல்லைக்குள்ப்பட்ட நஞ்சை புஞ்சை தி
15. ட்டுதிடல் மேல்நோக்கிய மரம் கீள்நோக்
16. கிய கிணறு பாசிபடுகை நிதிநிட்சேபம்
17. ஸ்ரீராமஜெயம்
18. செலதரு பாஸாணம் புண்ணியகா
19. மிய சித்தசாத்தியமென்று சொல்
20. லப்பட்ட போகதேச்சுவாமியங்கனா
21. ளும் நிலவரி கீதாரவரி வெள்ளக்குடை
22. வரி கரை மணியம் சகலமும் சறுவமா
23. னியமாக ஆண்டனுபவித்துக்கொள்
24. வரராகவும் இந்த தர்மசானத்துக்கு
25. ஆதாமொருதர் புரோவிற்த்தியாக
26. பரிபாலனம் பண்ணி வருகிற பேர்
27. காசியிலும் றாமிசுபரத்திலும் பி
28. றம்மப்பிறதிஷ்டை சிவப்பிறதி
29. ஷ்டை விஷ்னுப்பிறதிட்டை பண்ணி
30. பலனை யடைவராகவும் இந்த தற்
31. மத்துக்கு அகிதம்பண்ணின
32. பேர் ராமீசுரம் காசியில் கெ
33. ங் கையில் காராம்பசுவை வதை
34. பண்ணின பாவத்தை யனு
35. பவிப்பாராகவும் இந்தப்ப
36. டிக்கி இந்த சறுவமானியதற்
37. ம பூசாதன மெளுதினேன் சிவ
38. கெங்கையிலிருக்கும் தற்
39. மப் பள்ளிக்கூடம் திருக்கா
40. லிங்கவாத்தியார் குமார
41. ன் ஆண்டபெருமாள்
42. கையெளுத்து.


கெளரி வல்லபத் தேவர் ஜமீன்தார் ஆவதற்கு முன்னர் நான்கு மனைவிகளையும், ஜமீன்தார் ஆன பிறகு மூன்று மனைவிகளையும், மொத்தம் ஏழு பேரை மணந்து இருந்தார். இவர்களைத் தவிர பிரதானி சின்ன மருது சேர்வைக்காரரால் காளையார் கோவிலில் காவலில் வைக்கப்பட்டிருந்தபொழுது, கருப்பாயி ஆத்தாள் என்ற கணிகையைக் காதலித்து மணந்தார். அவர்தான் காளையார் கோவிலில் இருந்து அவர் தப்பிச் செல்வதற்கு உதவியவர். அங்கிருந்து தொண்டமான் சீமைக்குச் சென்று அங்கு அறந்தாங்கி காட்டில் வாழ்ந்தபொழுது மாணிக்க ஆத்தாள் என்ற பெண்ணையும் குருவாடிப்பட்டி கருப்பாயி ஆத்தாளையும் மணந்து இருந்தார். இதோ அவர்களது பெயர்கள்:

1. வெள்ளை நாச்சியார்
2. ராக்கு நாச்சியார்
3. வேலு நாச்சியார்
4. முழுதார் நாச்சியார்
5. அங்கமுத்து நாச்சியார்
6. பர்வதம் நாச்சியார்
7. முத்து வீராயி நாச்சியார்
8. கருப்பாயி ஆத்தாள் நாச்சியார் (இசை வேளாளர்)
9. மாணிக்கம் நாச்சியார் (கள்ளர்)
10. குருவாடிப்பட்டி கருப்பாயி நாச்சியார் (அகம்படியர்)


இவர்களில் முழுதார் நாச்சியார் (தொ வரிசை எண்.4), அங்கமுத்து நாச்சியார் (தொ.வ.எண்.5) முத்து வீராயி நாச்சியார் (தொ.வ.எ.10) ஆகிய மூன்று பேர்களுக்கும் குழந்தை பேறு கிட்டவில்லை. எஞ்சியுள்ள நான்கு (தொ.வ.எண். 1, 2, 3, 6) மனைவிகளில் (தொடர் வரிசை எண் 8, 9, 10)ல் கண்ட வைப்புகள் நீங்கலாக) முதலாமவருக்கு ஒரு பெண்ணும், இரண்டாமவருக்கு ஒரு பெண்ணும், மூன்றாமவருக்கு ஒரு ஆணும், மூன்று பெண்களும் இருந்தனர். ஜமீன்தார் இறக்கும்பொழுது உயிருடன் இருந்தவர்கள் அங்கமுத்து நாச்சியார் (5), பர்வத வர்த்தினி (6), முத்து விராயி (7), இந்த மூன்று பெண்களில் வயதில் முதியவரான கைம்பெண்ணுக்கு ஜமீன்தாரது வாரீசாக சிவகங்கையின் அடுத்த ஜமீன்தார் ஆவதற்கு உரிமை இருந்தது. ஆனால், படை மாத்துர் ஒய்யாத் தேவரது மகன் முத்துவடுகநாததேவர் தம்மிடத்தில் சிவகங்கை ஜமீனுக்கான உரிமை ஆவணம் இருப்பதாக கும்பெனியாரை ஏமாற்றியதால் அவர் கி.பி.1730-ல் சிவகங்கையின் இரண்டாவது ஜமீன்தாராக்கப்பட்டார்.


கி.பி.1731-ல் இவர் மரணம் முற்றதும், அவரது மகன் போதகுருசாமித் தேவர் மூன்றாவது ஜமீன்தார் ஆனார்.


அவ்வளவுதான். ஓராண்டிற்கு மேலாக உருவாகி வந்த ஜமீன் உரிமை பற்றிய குழப்பங்கள் நீதிமன்றத்திற்குச் சென்றன. ராணி ராக்குநாச்சியாரது பேரன் முத்து வடுக நாதத் தேவர் (1), ராணி அங்க முத்து நாச்சியார் (2), ராணி வேலு நாச்சியாரது மகள் கோட்டை நாச்சியாரது சுவீகார புத்திரன், (3), என்ற மூவரும் தங்களது உரிமை மனுக்களை கி.பி.1732-ல் தென் பிராந்திய மாநில நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த உரிமை வழக்குகளின் முடிவில் கி.பி.1735-ல் ராணி அங்க முத்து நாச்சியாரது உரிமையை அங்கீகரித்தது. இத்தீர்ப்பு வெளியிட்ட பொழுதிலும், அவைகளின் மேல் முறையீடு. ஏனைய வாரிசுதார்களது உரிமை என்பன போன்று அடுத்தடுத்து பல வழக்குகள் தொடர்ந்தன. மதுரை, சென்னை வழக்கு மன்றங்களின் தீர்ப்புரைகளுடன் அமையாமல், அவை அப்பொழுதும் லண்டனில் அமைந்து இருந்த பிரிவு கவுன்சில் என்ற உச்சநீதிமன்ற முடிவுகளுக்கும் பலமுறை சென்று வந்தன. அந்த நூற்றாண்டு முழுவதும் சிவகங்கை ஜமீன்தார்கள் உரிமை வழக்குகள் நீதிமன்றங்களில் குவிந்து வந்தன.


இத்தகைய வழக்குகளைச் சந்தித்தவர்களாக, அந்த வழக்குகளின் தீர்ப்புரையையொட்டி சிவகங்கை ஜமீன்தார்களது பதவிக்காலமும் இருந்து வந்தது. அந்த ஜமீன்தார்களது பட்டியல் பின்வருமாறு.

1. முத்துவடுக நாதத் தேவர் கி.பி.1830-31
(படைமாத்தூர் ஒய்யாத் தேவர் மகன்
2. (௸யார் மகன்) போத
குருசாமித் தேவர்
கி.பி.1831-35
3. ராணி அங்கமுத்து நாச்சியார் கி.பி.1835-37
(கோர்ட் அட்டாச்மென்ட்) கி.பி.1837-44
4. கெளரீ வல்லபத் தேவர் கி.பி.1844-48
(இரண்டாவது)
(கோர்ட் ஆவ் வார்டு)
கி.பி.1848-59
5. இரண்டாவது போத
குருசாமித் தேவர் என்ற
அரண்மனைசாமித் தேவர்
கி.பி.1859-60
6. ராணி காத்தம நாச்சியார் கி.பி.1864-77
(குத்தகைதாரர்
பி. கிருஷ்ணசாமி செட்டி)
கி.பி.1877-78
7. துரைச் சிங்கத் தேவர் கி.பி.1878-83
(குத்தகைதாரர்கள்
ஸ்டிராநாக்கும் மற்றும்
இருவரும்)
1883-88
8. பெரிய சாமி என்ற கி.பி.1888-98
உடையணத் தேவர்
(துரைச்சிங்கத் தேவர் மகன்)
9. துரைச்சிங்கத் தேவர் கி.பி.1898-1941
10. து. சண்முக ராஜா கி.பி.1941-1963
11. கார்த்திகேய வெங்கடாசலபதி கி.பி.1863-79


இந்த உரிமையியல் வழக்குகள், ஜமீன்தார்களது பொருளாதார வளத்தைப் பெருமளவு பாதித்தது என்று சொன்னால் மிகையாகாது. இவர்களது சமுதாயப் பணிகளும் இதன் காரணமாக முடக்கம் பெற்றுவிட்டன. தவிர்க்க முடியாத சூழ்நிலையிலும் தங்களது பாரம்பரியப் பண்பினால் அவர்களில் சிலர் அறக்கொடை வழங்குதலையும், திருப்பணிகளை நிறைவேற்றி இருப்பதையும் கீழ்க்கண்ட சாதனைகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. போதகுருசாமித் தேவர்

தச்சன்குளம் தர்மாசனம்

ராணி காத்தம நாச்சியார்

கி.பி. உளக்குடி தர்மாசனம்
1855 நண்டு காய்ச்சி தெய்வச்சிலைப் பெருமாள் ஆலயம், திருப்புல்லணி.
1856 நந்தனூர் ஊழிமானியம்
உத்தமனூர்
முடவேலி
ஊழியமானியம்
தர்மசானம்
1868 வேளாளர் ஏந்தல் ஊழியமானியம்
சவரிப்பராஜகுளம்
இடைகுளம்
இடையன்குளம்
தர்மாசனம்
ஊழியமானியம்
(குதிரை ஏற்றத்துக்கு)

உடையணத் தேவர்

1892 நெற்குப்பை மனமொத்த கண்டீசுரர்
திருக்கோயில் குடமுழுக்கு
ஒழுகுமங்கலம்
ஆத்திக்காடு
வஞ்சினிப் பட்டி
குடமுழுக்கு
குடமுழுக்கு
குடமுழுக்கு
1893 திருக்கோட்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள்
கோயில் திருப்பணி
1896 செம்பனூர் கண்டீசுவரர் கோயில்
வெளியாத்தூர் கைலாச நாத சுவாமி கோயில்
1897 சன்னவனம் சன்னவன நாதர் சுவாமி கோயில்
சாக்கோட்டை சாக்கை அம்மன் கோயில்
1907 திருப்புவனம் திருப்பணி, குடமுழுக்கு

உடையணத் தேவர்

1906 கோவிலூர் கோயில் குடமுழுக்கு
எழுவன் கோட்டை விசுவநாதர் கோயில்
குடமுழுக்கு.
1907 கத்தப்பட்டு சிவன் கோயில் திருப்பணி
1908 உஞ்சனை ஈசுவரன் கோயில் குடமுழுக்கு.
1911 பட்டமங்கலம் மரியாதை கண்ட விநாயகர்,
அம்மன் கோயில் குடமுழுக்கு


துரைச் சிங்கத் தேவர்

1924 ஒழுகு மங்கலம் திருமஞ்சன முடைய
ஈசுவரர் குடமுழுக்கு
நெற்குளம் மனமொத்த கண்டீசுரர்
திருக்கோயில் திருப்பணி
1930 வயிரவன் பட்டி சிவன் கோயில் திருப்பணி
குடமுழுக்கு
1934 வடவன்பட்டி முனியப்ப சுவாமி பிள்ளையார்
கோயில் திருப்பணி, குடமுழுக்கு.


சண்முகராஜா


1942 பட்ட மங்கலம் பிள்ளையார் கோவில் திருப்பணி
ஏரியூர் நாச்சியம்மன் கோயில் திருப்பணி
அம்மச்சிப்பட்டி கறுப்பர் கோவில் திருப்பணி,
குடமுழுக்கு
1954 திருக்கோட்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள்
கோயில் திருப்பணி
1961 திருப்புவனம் சவுந்திர நாயகி புஷ்பேசுவரர்
ஆலயம் குடமுழுக்கு
காளையர் கோயில் இராஜகோபுர குடமுழுக்கு

கார்த்திகேய வெங்கிடாசலபதி ராஜா

1965 மானாமதுரை வீர அழகர் கோவில் குடமுழுக்கு
சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோயில்
குடமுழுக்கு
இளையான்குடி இராஜேந்திர சோழீஸ்வரர்
கோயில் குடமுழுக்கு

  1. Welsh.J.Col. - Military Reminiscencs (1881) Vol.I. P. 116, 117
  2. Raja Ram Rao.T. - Manual of Ramnad Samasthanam (1891) P: 252 178.
  3. Ibid - P: 258
  4. Baliga.B.B. - Thanjavur District Hand Book. P: 82, 83
  5. கமால். Dr. S.M. - விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (1987)
  6. கமால். Dr. S.M._மாவீரர் மருதுபாண்டியர் (1989) பக்: 283, 184
  7. Tamil Nadu Estates (Abolition and Conversion into Ryotwari Scttlemcnt Act. 1948)
  8. Madura Dist. Rccords, Vol. 1146/1.9.1803. P:34 184.
  9. Madura Dist. Records. Vol. I 178(A)/17, 5, 1802, P: 354
  10. Madura Dist, Records Vol. 1178 (A) 17.5.1802, P: 354
  11. சிவகங்கை தேவஸ்தான பதிவேடுகள்