சுப்பிரமணியர் ஞானம்

விக்கிமூலம் இலிருந்து

சித்தர் பாடல்கள்

நூல் 20

சுப்பிரமணியர் ஞானம்

நூல் பக்கம் 311

காப்பு[தொகு]

ஒழியாத சுழுமுனையில் ஒடுங்கி நல்ல

உற்றகலை வாசிசிவ யோகத் தேகி

வழியான துறையறிந்து மவுனம் கொண்டு

மகத்தான அண்டம் வரை முடிமேல் சென்று

தெளிவான ஓங்கார வடிவேல் கொண்டு

தெளிந்துமன அறிவாலே தன்னைக் கண்டு

வெளியான பரவெளியில் வாசமாகி

வேதாந்த சத்திசிவ ஆதி காப்பே

நூல்[தொகு]

1-5[தொகு]

ஆதியிலே பராபரத்தில் பிறந்த சத்தம்

அருவுருவாய் நின்றபர சிவமும் ஆகிச்

சோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்

தொல்லுலகில் எழுவகையாம் தோற்றமாகி

நீதியென்ற அறிவதனால் தானாய் நின்று

நிறைந்தபரி பூரண நிட்களமும் ஆகிச்

சாதியென்ற சத்திசிவம் அருள் தன்னாலே

சண்முகனும் கணபதியும் தாம் உண்டாச்சே

2

உண்டான சத்திசிவம் ஏகமாகி

உளங்கனிந்து பூரணமாய் நிற்கும் போது

குண்டான மாங்கனியைக் கையில் வாங்கிக்

குமரனுடன் கணபதியைக் குணமாய்ப் பார்த்து

நன்றாகக் கிரிவலமாய் வந்த பேர்க்கு

நல்லகனி தானீவோம் என்று சொன்னார்

பன்றான கனியறிந்து குமரன் தானும்

பாய்ந்து மயிலேறி கிரி வலம் சென்றானே

3

சென்றபின்பு கணபதியும் ஆலோசித்துத்

தீர்க்கமுள்ள மேருகிரி நீர்தாம் என்று

கண்டவுடன் சிவன் உமையாள் பாதம் தன்னைக்

கருத்துடனே சுற்றி வந்து கனியை வாங்கிக்

கொண்டந்த சிவன் உமையைத் தியானம் செய்து

குறியறிந்து நெறி தமக்குள்திருவைப் போற்றித்

தின்றுருசி கண்டறிந்து நிற்கும் போது

தீர்க்கமுள்ள கணபதியை வா என்றாரே

4

வாவென்றே எடுத்து அணைத்து அங்கு அருள்பாலீந்து

மகத்தான ஐவருக்கும் பீடமாகி

ஆவென்று மூலமதற்கு அரசாய் நின்றே

ஐந்தெழுத்திற்கு உயிரான ஆதியாகி

கூவென்ற சத்துசித்த சுத்த மாகிக்

குவிந்தெழுந்த வாதிகுரு தேசி யாகிப்

பூவென்ற ஆயிரத்தெண் மலருக்குள்ளே

பொருந்தி மன அறிவாலே இருந்து வாழே

5

இருந்து வாழ் என்றுரைத்த வேளை தன்னில்

ஏகாந்த மயில்வீரன் எதிரில் வந்தே

அருந்தவமாய் நின்றநிலை தன்னைப் பார்த்தே

அருமையுள்ள கண்மணியே வா என்றேதான்

வருந்தியே மாங்கனியொன்று ஈந்து

நல்ல மகத்தான அண்டர் அண்ட வரைகள் சுற்றித்

திருந்தியே தீர்க்காயுள் பெற்று வாழ்ந்து

தீர்க்கமுடன் மலைக்கு அரசாய் இருந்து வாழே

6-10[தொகு]

6

வாழென்று சொன்னவுடன் மயில் வீரன்தான்

மகத்தான சிவசத்தி பதம் மேற்கொண்டே

ஆவென்று மயிலேறிக் கயிலாசத்தை

ஆவலுடன் சுற்றிவரும் போதிலே தான்

சூழென்றே இமயகிரி வடபாகத்தில்

சுத்தசித்த மான தபோதனர்கள் கண்டு

தாள்பணிந்து வணக்கமதாய் நிற்கும் போது

தபோதனர்கள் ரிஷிகளுமே தாம் வந்தாரே

7

வந்தவரைத் தான் பார்த்து வரையில் நிற்க

மகத்தான சற்குரு என்றடி பணிந்தே

இந்தமலைச் சாரலிலே வெகுநாளாக

இன்பமுடன் தவம் செய்து வாழ்ந்தோமையா

அந்தரமாய் ராட்சதர்கள்அண்டி வந்தே

அலங்கோலம் செய்துமே துரத்துகின்றார்

சுந்தரமாய் இருந்து தவம் காவாய் என்று

சுத்தசித்தமாய்த் தவத்தைத் தொடங்கினாரே

8

தொடங்கிமனம் அடங்கி நிலை தன்னைக் காத்துச்

சுத்தமுடன் நின்று விளையாடும் போதில்

அடங்கி மனம் அடங்காத அசுரர் தாமும்

அஞ்சாமல் அழும்பு செய்யும் அகத்தைப் பார்த்துத்

திடங்கொண்டு மயிலேறிச் செவ்வேல் கொண்டு

சிவந்து வரும் அசுரர் கிளை மாளவென்று

படங்குவித்து வேல்முனையைத் தியானம் பண்ணிப்

பாயவிட அசுரர் கிளை பறந்து போச்சே

9

பறந்து போய்ப் பலவிதமாய் ரூபங்கொண்டு

பந்திபந்தி யாய் அசுரர் பறந்து வந்தார்

சிறந்துவந்த சேனைகளை நன்றாய்ப் பார்த்துத்

தீர்க்கமுள்ள மயிலேறித் தெளிந்து நின்றே

அறந்தழைக்க வேணுமென்று தூல சூட்சம்

அரூபமெனும் காரணமாய் ரூபம் கொண்டு

நிரந்தரமாய் வந்த பொலா அசுரர் தம்மை

நர்த்தூளி செய்து தவம் நிலை கொண்டானே

10

நிலைகொண்டு நின்ற செயம் கொண்டு சிந்தை

நேர்மையுடன் தவம் செய்யும் முனிவர் கண்டு

கலைகொண்டு மனம் தெளிந்து மகிழ்ச்சி யாகிக்

கானமயில் வீரனடி கருதிப் போற்றித்

தலைகொண்டு தாள் பணிந்தே அருட்கண் பெற்றுத்

தபோதனரும் ரிடிகளுமே தாம் பணிந்து

சிலைகொண்டு நின்ற வடிவேலன் தன்னைத்

தெரிசித்தே அவரவர்கள் பதி சென்றாரே

11-15[தொகு]

11

பதிதேடி அவரவர்கள் செல்லும் போது

பத்தியுள்ள அகத்தியமா முனிவன் வந்து

விதியறிந்தே அசுரர்கிளை மாளவென்று

வெற்றியுள்ள வடிவேலைத் தியானம் பண்ணிக்

கெதியறிந்து தூலமுடன் சூட்சமாகிக்

கிருபையுள்ள காரணமாம் ரூபம் கொண்டு

சதியறிந்து சங்காரம் செய்தாய் ஐயா

சண்முகமே என்குருவே சரணந்தானே

12

சரணமென்ற அகத்தியமா முனியைப் பார்த்துச்

சண்முகமாய் நின்றவடி வேலன் தானும்

திரணமதாய்த் தானறிந்து நீயார் என்னத்

திருவடியைப் பூசை செய்யும் சேயன் என்றார்

கரணமந்தக் கரணமதாய் வந்தது ஏதோ

கருணையுடன் வா என்று கடாட்சம் நல்கித்

தருணமறிந்து உதவுவது தருமம் என்று

சங்கையுடன் தான் வந்த வகை சொல்லாயே

13

சொல்லென்று மயில்வீரன் கேட்க வந்த

சோதி மயமான அகத்தியர் தாம் சொல்வார்

சல்லென்று வந்தபொலா அசுரர் தம்மைச்

சண்முகமாய் நின்ற வடிவேலும் கொண்டு

செல்லென்று சங்காரம் செய்தாய் அந்தத்

திருவுருவாய் நின்ற காரணத்தைக் காட்டி

உள்ளென்ற ஆகார தூல சூட்சம்

உண்மை என்ற காரணம் உரை செய்வாயே

14

உரைசெய்வாய் என்று சொன்ன உறுதி கேட்டே

உண்மையென்று மயில்வீரன் உறுதியாகி

நிரைசெய்தே எக்கியங்கள் தாமுண்டாக்கி

நேமமுடன் அகத்திய மாமுனிவா என்றே

அரையறிந்தே அருகிருத்தி ஓம குண்டம்

ஆதியென்ற மந்திரத்தில் அங்கி யாக்கிப்

புரையறிந்து மந்திரங்கள் செபிக்கும் போது

பூரணமாய்க் கும்பமதில் தானுண்டாச்சே

15

உண்டான பூரணமாய்க் கும்பம் வாங்கி

உண்மையென்ற மாமுனிக்கே அபிடேகித்து

நன்றான நவக்கிரகம் ஒன்பதுக்கும்

நலமான அனுக்கிரக நிலையும் காட்டி

குன்றான அனுக்கிரக வாசல் காணக்

குவிந்துமனம் அறிவதனால் விண் என்றூணே

விண்ணென்று விசையுடனே முனை நாவுள்ளே

மெய்ஞ்ஞான வாசலது திறக்கும் அப்பா

16-20[தொகு]

16

கன்னென்ற கபாட வழிக் குள்ளே நின்று

கலையறிந்து வாசியினால் கமலம் நோக்கி

உன்னென்று மூலமதில் வங்கென் பூரி

உறுதியென்ற சமாதியிலே சிங்கென் ரேசி

என்றென்றும் இப்படியே கொண்டு நின்றால்

ஏகமுள்ள தசதீட்சை உண்மை கேளே

உண்மையுடன் சுழுமுனையில் விண்ணென்று ஊணி

உறுதியுடன் ஆராத தீட்சை கேளு

17

நன்மையுடன் ஓங் – ரீங் – அங் – உங்கென் ஓதி

நாட்டமுடன் பதினாறாம் உருவே செய்தால்

தண்மையுடன் கணபதியும் பிரகாசிப்பார்

தானமென்ற சுழுமுனையில் தன்னைப் பார்த்து

நுண்மையுடன் ஓம்நம சிவாயம் என்றால்

நோக்கு முன்னே பிரமம் தரிசனமும் ஆமே

ஆமப்பா நமச்சிவாய நமவென்றே

:அதன் பின்வய நமசிவய நமசியென்று   

18

தாமப்பா தலைகாலால் மாறிக் கொண்டு

சங்கையுடன் கால்தலையால் மாறிக் கொள்ளு

ஆமப்பா நமச்சிவய சிவயநம வென்றும்

அதன் பிறகு சிவயநம சிவநம வென்றும்

ஓமப்பா நமசிவய வென்று மாற

உண்மையென்ற ஆதாரம் சித்தியாமே

சித்தமுடன் ஐந்தெழுத்தை மைந்தா நீயும்

செம்மையுடன் தலை கால் கால் தலையாய் மாறச்

19

சுத்தமுடன் ஆதார தேவதைகள் வந்து

சொன்னபடி இருதயத்தில் சுகமாய் நின்று

பத்தியுடன் இப்படியே தியானம் பண்ணிப்

பதிவாக விபூதியையும் தளமாய்ப் பூசி

நித்தியமும் இப்படியே செய்து நின்றால்

நிலையில்லாத் தூலசடம் நிலைக்கும் பாரே

பாரப்பா கலையறிந்து நிலையில் நின்று

பத்தியுடன் ஆதார சூட்சம் கேளு

20

நேரப்பா ஓம்கிலி அங் கென்றென்று ஓது

நிலையறிந்தே அங்கிலி நங்கு என்று என்று ஓது

காரப்பா வங்கிலி சிங்கு என்று என்று ஓது

கருணையுடன் சிங்கிலி வங்கு என்று என்று ஓது

சாரப்பா வங்கிலி அங்கு என்று என்று ஓது

சலுதியாம் அங்கிலி மங்கு என்று என்று ஓது

ஓதியபின் வங்கிலி சிங்கு என்று என்று ஓது

உண்மையுடன் அங்கிலி சிங்கு என்று என்று ஓது

21-25[தொகு]

21

நீதியுடன் அங்கிலி மங்கு என்று என்று ஓது

நிலையறிந்து மங்கிலி ரீங்கு என்று என்று ஓதே

ஆதியுடன் ரீங்கிலி ஓம் என்று என்று ஓது

அப்பனே தலைகாலாய் மாறி ஓது

சோதியுடன் சுழுமுனையில் மனக்கண் சார்த்திச்

சுத்தமுடன் விபூதியை நீ தரித்துக் கொள்ளே

கொள்ளப்பா விபூதியை நீ தரித்துக் கொண்டு

கூர்மையுடன் கால்தலையாய் மாறிக் கொண்டு

22

சொல்லப்பா ஓங்கிலி ரீங்கு என்று என்று ஓது

சுத்தமுடன் ரீங்கிலி மங்கு என்று என்று ஓது

வில்லப்பா மங்கிலி சிங்கு என்று என்று ஓது

விவரமதாய் தோற்றுமடா செய்கை யாவும்

உள்ளப்பா மங்கிலி மங்கு என்று என்று ஓது

உத்தமனே சிங்கிலி மங்கு என்று என்று ஓது

ஓதியபின் வங்கிலி சிங்கு என்று என்று ஓது

உத்தமனே சிங்கிலி மங்கு என்று என்று ஓது

23

நீதியுடன் மங்கிலி நங்கு என்று என்று ஓது

நிலையறிந்து நங்கிலி யங்கு என்று என்று ஓதே

சோதியுடன் மங்கிலி ஓம் என்று என்று ஓது

சுத்தமுடன் ஈராறு தவமும் சித்தி

வீதியென்ற ஆதாரம் மேலாதாரம்

விண்ணடங்கி கண்ணடங்கி மேவி நில்லே

நில்லப்பா கண்ணடங்கி விண்ணென்று ஊணி

நிலையறிந்து பிராணாயம் செய்தால் மைந்தா

24

கல்லப்பா தேகமது காலன் ஏது

காலன் என்னும் வியாதி எல்லாம் காணாது ஓடும்

உள்ளப்பா வாசியது உறுதி ஆகும்

ஓதுகின்ற மந்திரமும் சித்தி ஆகும்

சொல்லப்பா தாலமுடன் சூட்சம் சொன்னேன்

துலங்கி நின்ற தூலத்தின் சுருக்கம் கேளே

சுருக்கமுடன் ஆதார நூல் சூட்சம்

சொன்னபடி பிராணாயம் செய்து கொண்டே

25

உருக்கமுடன் செப தபங்கள் பூசையாலும்

உண்மையாய் உனக்குள்ளே கண்டு தேறிப்

பெருக்கமுடன் தான் இருந்து சீவ ஆன்மாவே

பிரணவமாய் நின்ற பரம் நீருமாகி

நெருங்கியந்த அண்டவெளிக்கு உள்ளே சென்று

நேமமுடன் பிராணாயம் நினைவாய்ச் செய்யே

செய்யப்பா பிராணாயம் நினைவாய்ச் செய்யச்

சிவசிவா கரு மானம் செப்பக் கேளு

26-30[தொகு]

26

பொய்யப்பா போகாது பிராண வாயு

பொருந்தி நின்று விளையாடும் புதுமை கேளு

பையப்பா சுழு முனையில் விண்ணென்று ஊணிப்

பதியாக மூலம் அதில் வங்கென் பூரி

மெய்யப்பா சுழு முனையில் சிங்கென்று ரேசி

வேகமுடன் கண்டம் அங்கென்று கும்பே

அங்கென்று கண்டம் அதில் கும்பித்தே தான்

அசையாது வாசி திருவாசி தானும்

27

செங்கமலம் ஆனசுழி பிண்டத்து ஏறும்

திரும்பி அந்தப் பிண்டம் அதில் சென்று வாழும்

சங்கையுடன் தன்னகத்தில் தானே தானாய்த்

தன்மையுடன் நின்று விளையாடும் வாசி

மங்களமாய்ச் சுழு முனையிலே விண்ணென்று ஊணி

மார்க்கமுடன் இகபரமாய் இருந்து காணே

காணவே சத்தியவள் தியானம் கேளு

கருவாகச் சொல்லுகிறேன் கருத்தாய்க் கேளு

28

பூணவே உரைத்திடுவாய் அங்கிங்கு என்று

புத்தியுடன் பதினாறு உருவே செய்து

தோணவே விபூதி தூளிதமே பூசிச்

சுத்தமுடன் பராசத்தி நிர்த்தம் செய்வாள்

ஊனவே இப்படியே தியானம் பண்ணி

உண்மையுடன் பிரணாயம் உறுதி பாரே

29

உறுதியுள்ள அகத்திய மாமுனியே கேளாய்

உண்மையுள்ள சத்தியை நீ தியானம் பண்ணிப்

பரிதிமதி சுடரொளி போல பஞ்ச கர்த்தாள்

பதியறிந்து பிராணாயம் பதிவாய்ச் செய்து

சுருதி பொருள் ஆனதொரு பொதிகை மேவிச்

சுகசீவ பிராண கலை வாசியேறிக்

கருதி மனம் ஒன்றாகிச் சுழியில் நின்று

கலக்கம் அற்ற அமிர்தபானம் கைக் கொள்ளே

30

பானமென்ற மதி அமிர்த பானம் கொள்ளப்

பரபிரமம் ஆன சுழி வழியும் காட்டித்

தானம் என்ற ஆதார மேலாதாரம்

தனையறியும் பிராணாயச் சங்கை சொல்லி

ஞானமென்ற நிலைகாட்டி மூலம் காட்டி

நாதாந்த ஆறுமுக நிலையும் காட்டி

மோனம் என்ற வடிவேலின் முனையும் காட்டி

முனை அறிந்து கலை நிறுத்தி முடிமேல் நில்லே

31-32[தொகு]

31

நில்லப்பா சதுரகிரி முடியில் சென்று

நிலையான பொதிகையிலே வாசம் ஆகி

உள்ளப்பா தானாகி விண்ணென்று ஊணி

உன் மனத்தில் நினைத்த ஒரு மந்திரம் தன்னைச்

சொல்லப்பா தியானமுடன் செபிக்கம் போது

சுத்தமுடன் தித்திக்கும் சும்மா நின்று

செல்லப்பா அட்டாங்க யோகத்து ஏகிச்

சிவாயகுரு பாதம் அதில் தெளிவாய் நில்லே

32

தெளிவான தெளிவு அதனால் தன்னைக் கண்டு

தீர்க்கமுடன் இருந்து தவம் செய்ய என்றும்

அழியாத அனுக்கிரக வரமும் ஈந்தே

ஆர்வமுடன் மயில் வீரன் வடிவேல் கொண்டே

அழியாத அண்டவரை முடிமேல் சென்றே

அட்டகிரி பர்வதத்திற்கு அரசும் ஆகி

ஒழிவாகி அண்டவெளி எங்கும் தானாய்

ஓங்கார வடிவேலை உவந்தான் முற்றே
      • முற்றும்
"https://ta.wikisource.org/w/index.php?title=சுப்பிரமணியர்_ஞானம்&oldid=975036" இலிருந்து மீள்விக்கப்பட்டது