சுழலில் மிதக்கும் தீபங்கள்/இரண்டாவது பாகம்

விக்கிமூலம் இலிருந்து

இரண்டாவது பாகம்

ரித்துவாரம் சென்றடையும்முன் முதியவள் கிரிஜாவுக்கு மிக நெருக்கமானாற் போன்று ஒட்டி விடுகிறாள்.

பழைய கிராம முன்சீபு பரம்பரையாம். முதியவள் ஆறு குழந்தைகள் பெற்றாளாம். ஒன்றுகூடத் தங்கவில்லை. ஆறு மாசம், இரண்டு வயசு, நான்கு வயசு, என்று வளர்த்து மூன்று பிள்ளைகளும், பிறந்த உடன் இரண்டு பெண்களையும் இருபது நாளில் வயிற்றுப்போக்கு வந்து, ஒரு பெண்னையும் பறிகொடுத்தாளாம்.

கிழவருக்கு முன்சீபு என்கிற அதிகாரச் செருக்கும். ஆணவமும் சாதித் திமிரும் அதிகம் உள்ளவர் என்பதை அவள் பேச்சில் இருந்து உணர முடிகிறது. மாமியார் தொண்ணுறு வயசு வாழ்ந்து இவளை வறுத்தெடுத்தாள். இவருடைய அதிகாரம்... சாதி காரணமாக, கிராமத்தில் பட்ட துன்பங்களும் இடிபாடுகளும் விவரிப்பதற்கில்லை. ஒரு பழைய வீடும், கறம்பை தட்டிய பூமியும் கொஞ்சம் உடமைகள். அவற்றை மைத்துனர் பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்து விட்டார்கள். அவனிடம் பெற்ற பணத்தைக் கொண்டுதான் வாழ்க்கையின் பயனாகக் கருதும் இந்த கங்கை யாத்திரைக்கு இவள் வந்திருக்கிறாள்.

‘இப்ப பொட்டிப்பாம்பாக, சாதுவாட்டம் உட்கார்ந்திருக்காரேன்னு நினைக்காதேம்மா! வச்சிண்டே சொல்றேன். அம்மா பேச்சைக் கேட்டுண்டு விறகு கட்டையால அடிச்சிருக்கார்...சாதிகெட்டபய, அந்தத் தாசில்தாரன்னார். அவன் சஸ்பென்ட் பண்ணி வச்சிட்டான், ஆயிரம் காரணம் சொல்லி ...ஒரு கஷ்டமா, ரெண்டு கஷ்டமா?...

கிழவர், முழு வழுக்கையாய்ச் சுருங்கி, கண் பார்வையும் மங்கிவிட்ட நிலையில் நடுக்கமும் குறுக்கமுமாக ஒரு பழுப்புச் சட்டை, பழைய கம்பளித் துண்டுக்குள் ஒடுங்கி, மனைவியே ஊன்று கோலாக, துணையாக, ஆதரவாக உட்கார்ந்திருந்கிறார்.

சாமு....அவனை இப்படிக் கற்பனை செய்ய முடியுமாக் கிழவரின் யுகம் அது வேறு: இது வேறு.

அந்தக் காலத்தில் சாதிச் செருக்கு, பரம்பரை அதிகாரத் திமிர் இருக்கலாம். இப்போது. இது பணத்திமிர்-பணச் செருக்கு. ஆடம்பரம்...

விறகுக் கட்டையால் அடித்தவனை இன்னமும், அதை காப்பதுபோல் பாதுகாக்கிறாள். அது கொடுத்திருக்கும் வினாத்தாளைப்பற்றி இவளிடம் சொன்னால், என்ன எதிரொலி இவளிடம் இருந்து வரும் என்று கிரி நினைத்துப் பார்க்கிறாள்.

புருஷனாகப் பட்டவன், துாலமாகவும் சூக்குமமாகவும் அலைகடல் துரும்பாய் ஆக்கப்படும் பெண்ணுக்கு அடைக்கல்ம் என்று அவளுள் பதிக்கப்பட்டிருக்கிறது. அடிப்பதும் அழுத்துவதும் அதிகாரம் செய்வதும் அவன் உரிமை; சேவிப்பதும், பூசிப்பதும், பாதுகாப்பதும் இவள் கடமை. இந்தம்மாளுக்கு இந்தக் கணவன் இல்லையென்றால் சொத்துமில்லை; பத்துமில்லை. புருஷனை விலக்கினால் மைத்துனருமில்லை. அவர் மக்களுமில்லை. பிள்ளையில்லை. பெண் இருந்தால்கூட இவர்களுக்குச் சொந்தமில்லை: அவள் தன்னைக் கட்டியவனுககு அடிமையாவாள்.

ஹரித்துவாரத்துக்கு வந்து நிற்கையில் அந்திமயங்கும் நேரம். கிரிஜாவுக்கு இந்தி தெரிந்திருப்பது இவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. ஒரு ரிக்ஷாவைப் பேசுகிறாள்.

‘நீயும் ரெண்டு நாள் இருந்துட்டுப் போகத்தானேம்மா வந்திருக்கே? எங்ககூட இருந்துக்கோயேன்? எனக்கு அவாளை இவாளைப் பார்த்துக் கேட்க வேண்டாமே?...’

இந்தச் சொல்லுக்குக் காத்திருந்தாற்போல இன்னொரு ரிக்‌ஷாவையும் பேசுகிறாள்.

முன்பு தங்கிய அதே விடுதிதான். இந்நாள் கைமாறி இருக்கிறது. பின்புறத்துப் படிகளில் கங்கை பெருகி ஓடுகிறது. சில்லென்ற நீர் பட்டதுமே உடல் சிலிர்க்கிறது: உள்ளத்தில் அது உணர்வின் வெள்ளமாகப் பாய்கிறது.

தீப ஆரத்தி விடும் நேரம்.

கெளரி அம்மாள், கணவரைப் படியில் உட்கார்த்தி வைத்து, புனித கங்கையைச் செம்பால் எடுத்தி ஊற்றி நீராட்டுகிறாள்.

கிரிஜா, அவர்கள் மூட்டைகளுடன் பையை வைத்து விட்டு வெளியே வந்து, அகன்ற படித்துறையில் அமர்ந்து கங்கையின் ஓட்டத்தில் ஒன்றிப் போகிறாள்.'கடந்த காலம், நிகழ்காலம் என்ற உணர்வுகள் கரைகின்றன.