சுழலில் மிதக்கும் தீபங்கள்/16

விக்கிமூலம் இலிருந்து

16

கிரிஜாவுக்கு ஆணி அடித்தாற்போல் ஒரே வரிதான் ஆழ்ந்து பதிகிறது.

அம்மா இல்லை. அப்பா குடிகாரன். வீட்டில் யாரோ ஒரு பெண் பிள்ளையைக் கொண்டுவந்து விட்டான்...

கவிதா...கவிதா... வயசு வந்த பெண்...கட்டுப்பட்டே பழக்கப் படுத்தியிராத பெண்...

இப்போது கட்டுப்படுத்துவார்கள். அவளைக் காப்பி போடச் சொல்வார்கள். ‘மடிப்’ பழக்கம் கட்டுப்பாடாக்கப் படும். பள்ளிக்குச் சென்று வருதல் கண்காணிக்கப் பெறும். அடோலஸண்ட் ஏஜ்-குமரப்பருவம். படிக்கும் பள்ளியோ ஆடம்பர வாழ்க்கை வாழும் செல்வர் வீட்டுச் சிறுவர் சிறுமியர் உள்ள பள்ளி...

இந்த எண்ணங்களிலிருந்து விடுபடவே முடியவில்லை.

எப்போது உறங்கினாள் என்று தெரியவில்லை. கதவை இடிக்கிறார்கள், ஆனால் இவளால் கதவைத் திறக்க எழுந்து செல்ல முடியவில்லை. கட்டிப் போடப்பட்ட நிலையில் இருக்கிறாள்.

கிரி...கிரிஜா, எழுந்திருந்து கதவைத் திறவுங்கள்...கவி... கவிதாபாத்ரூம்ல கெய்ஸர் ஆக்ளிடன்டாகி செத்துட்டாளாம். எழுந்து. ஐயோ...ஐயோ, ஐயோ, கவிதா...!

அடிவயிறு சுருண்டி கொள்ள அலறுகிறாள், ஆனால் கண்களையே திறக்க முடியவில்லை. எழுந்து கதவை எப்படித் திறப்பாள்?

கிரி...? திரி..!

கதவை உடைக்கிறார்கள் ரத்னா, ரத்னாதான்.

“ஐயோ, இவர்கள் பேச்சைக் கேட்டுத்தானே சலனமடைந்தாள்?

கவிதா, கவியம்மா, ஒருநாள் கூட உன்னை அடுப்படியில் விட்டதில்லையே. கெய்ஸர் பிளக் சரியில்லாமல் இருந்திருக்க வேண்டும். தகப்பனும் பாட்டியும் கவனித்திருக்க மாட் டார்கள்...வாழும் வசதியாம் இது யாருக்கு வேண்டும்?... கவி...கவி...

கதவை உடைக்கிறாள், கிரி. கிரிஜா! வாட் ஹேப்பன்ட் டு ஹர்?..

முகத்தில் தண்ணிர் வந்து விழுகிறது.

சட்டென்று விழிப்பு வரக் குலுங்கி எழுந்திருக்கிறாள்.

கதவைத் திறக்கிறாள்.

‘என்ன கிரி...? என்ன?’

‘கவி.. கவிதாவுக்கு என்ன ஆச்சு? என் குழந்தை எப்படி இருக்கா?’

‘கவிதாவுக்கு ஒண்ணுமில்லியே...? ஸ்கூலுக்குப் போயிட்டியிருப்பா...ஏதானும் கனவு கண்டீங்களா?’

ரத்னா சோர்ந்து போயிருக்கிறாள். இரவு முழுவதும் உறங்கியிருக்கவில்லை என்று புரிகிறது.

‘பாடி போஸ்ட்மார்ட்டம் பண்ணிரிப்போர்ட் வர்ல. ஆனி இருக்கா- ருனோவோட பிரதர். பாவம், வந்து அழுவுறான். உங்களுக்கு இது ஸிரிஸா பாதிச்சிருக்கும். அன்ஃபார்ச்சுனேட் காதல் காதல்னு ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டு கோழையாப் போறதுங்க. கண்ட போதைக்கும் அடிமையாகி, அந்த பாய்ஃப்ரன்ட் ஏமாத்திட்டான்னு உயிரை விட்டிருக்கு, ஒரு பக்கம் உங்க மாமியார் மடி கேஸ்...இன்னொரு பக்கம் இப்படி....

தலையில் கை வைத்துக்கொள்கிறாள்.

‘சே...!’

கிரிஜா சிறிதுநேரம் உற்றுப்பார்த்துவிட்டு, குளியலறையில் சென்று பல்துலக்கி முகம் கழுவிக்கொள்கிறாள்...

வெளியே சென்று பையனை அழைத்து சூடாக இரண்டு தேநீர் கொண்டு வரப் பணிக்கிறாள்.

‘கிரி, உங்களை இது ரொம்பப் பாதிச்சிருக்கும்...’

“...அ. ஆமாம். ஆனால்.. நான் அதனால் மூட்டையைக் கட்டிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வாலை இடுக்கிக் கொண்டு குழையும் நாயின் நிலையில் போய் நிற்கமாட்டேன். நான் உங்களைப்போல் வெளியில் இருந்தால்தான், ‘ருனோக்கள்’ உருவாவதைத் தடுக்க முடியும்...’

ஒ. கிரி, அப்ப.. மாமியார் உங்ககிட்ட, ‘நடந்தது நடந்து போச்சு, வந்துடு’ன்னு கூப்பிடலியா?’

‘அந்தப் பேச்சே இல்லை ரத்னா. அப்படி அவள் சொல்லி யிருக்கும் பட்சத்தில், கீழே காரில் அமர்ந்தவன் என்னைச் சந்திக்க விரும்பியிருந்தால், நான் ஒரு வேளை மனம் இறங்கிப் போயிருந்திருப்பேன் என் குழந்தைகளை உத்தேசித்து. ஆனால்... அவன் செருக்கு, அம்மாவிடம் பெண்ணாப் பிறந்தவள் என்ற என் நிலையை உறுதியாக்க நான் பண்ணினது மன்னிக்க முடியாத தப்புன்னு சொல்லி, பெரிய மனிதத்தன்மையாக ஒரு பத்தாயிரம் ரூபாய் ‘செக்’கையும் கொடுத்து அனுப்பியிருந்தான். நான் செக்கை வீசி எறிஞ்சேன்...’

ரத்னா மெளனமாக இருக்கிறாள்.

‘ஸ்ர்ட்டிஃபிகேட் எல்லாம் வந்துடுத்து. என் சேலைகளைக் குடுத்து அனுப்பி இருக்கிறார்கள்...நகைகளைத் தான் கழட்டி முன்பே வைத்து விட்டேன்...’

‘போ, ரத்னா, முகம் கழுவிட்டு வா, டீ வந்துடுத்து...’

ரத்னா எழுந்து செல்கிறாள்.

கிரிஜா தான்படுத்த படுக்கையை ஒழுங்காக்கி, அறையைப் பெருக்குகிறாள்.

மணி ஏழரைக்கு மேலாகியிருக்க வேண்டும். தெருவில் பள்ளிக்குச் செல்லும் சிறுவர் அணி அணயாகத் தென்படுகின்றனர்.

கவிதாவைப் போலவே பருமனாக ஒரு பெண் நீலம் வெள்ளைச் சீருடையில் போகிறாள்...

பார்த்துக்கொண்டே நிற்கிறாள். கனவு கூர்முள்ளாக வருத்துகிறது. கவிதா ருனோவைப்போல் போகக்கூடும். வாய்ப்புக்கள் உள்ளன. குமரப்பருவம்... வீட்டுக் கண்டிப்பு. அம்மா கெட்டவள் என்ற உருவேற்றல்கள்...

‘கிரி, என்ன பார்க்கறிங்க? டீ ஆறிப்போயிட்டுது...’, அவள் உள்ளே வருகிறாள். தேநீரைப் பருகுகிறாள். ரத்னா கைப்பையிலிருந்து ஒரு பாக்கெட்டை எடுக்கிறாள். சந்தனத் தூள்... சுகந்த சந்தனத்துள்...கோபுர வடிவிலான வில்லை ஒன்றைக் கிளிஞ்சல் போன்ற அந்தக் கிண்ணத்தில் வைக் கிறாள். ஒரு சிறு துண்டுக் காகிதத்தை நன்றாகச் சுருட்டி தீக்குச்சியில் காட்டிப் பற்ற வைத்து, அந்த ‘கோன்’ வில்லையைக் கொளுத்துகிறாள். சன்னமாக நெளிந்து வளைந்து பாம்பின் அசைவைப் போல் புகை எழும்புகிறது.

‘சந்தன வாசனை வருதா, கிரி?...’ என்று கேட்டுக் கொண்டு சன்னல் கதவை மூடுகிறாள்.

சந்தன மணம் குப்பென்று பரவவில்லை. மெல்லிய திரி இழையாக முகர வேண்டி இருக்கிறது.

கலப்படம் பண்ணி ஏமாத்தறாங்க. ஐஸ்கிரீம் வாங்கணும், கொண்டாடனும்னு போனமா?...இதை வாங்கிப் பையில் போட்டுட்டோம், அதுக்குள்ள, ‘விமன்ஸ் ஹாஸ்டல்ல மாடிலேந்து குதிச்சிட்டாங்கன்னு யாரோ சொல்லிட்டுப் போனாங்க, அடிச்சுப் புரண்டுட்டு வந்தோம்... ராத்திரி முழுசும்...ஆஸ்பத்திரி, போலீசுன்னு...எப்படியோ ஆபிட்டுது. இந்த வாசனை சந்தனமேயில்லை...’ ரத்னா அதிருப்தியுடன் எழுந்திருக்கிறாள்.

‘ரத்னா...நான் வந்தன்னிக்கு இந்த ஆஷ்ட்ரே, சாம்பல், எல்லாம் பார்த்தப்ப, நீங்க சிகரெட்டுக் குடிக்கிற வங்கன்னு நினைச்சேன். பொசுங்கின காகிதச்சுருள் இப்ப போட்டிருக்கிற அதில, அத சிகரெட் துண்டுன்னும் நினைச்சேன். ரோஜா மாமி நீங்கள்ளாம் தெருவோட சிகரெட் குடிச்சிட்டுப் போகும் சாதின்னு கேவலமாகச் சொன்னாளா, எனக்கு உறுத்திட்டே இருந்தது.’

ரோஜ மாமி எல்லாம் சொல்லுவா. இனிமே நீங்களும் எல்லாம் பழக்கமாயிட்டீங்க, பிரஷ்டம் பண்ணினதுக்கு நியாயம் இருக்கும்பா. ஒரு பக்கம் பொய்யில்ல. இந்த ஹாஸ்டல்லயே எல்லாம் பார்ப்பீங்க. ஆனா, ருனோவைப்போல் மன முதிர்ச்சியில்லாத நிலையில் அப்படி விழறவங்கதான் - சகஜம். இது ஒரு எஸ்கேபிஸ்ம். இந்த ரோஜா மாமி வீட்டில போனா அந்த மாமியே மட்டரகமான ஸெக்ஸ் புத்தகங்களைத் தான் படிச்சிட்டிருப்பா, பார்டிலயும் கலந்திட்டு குடிக்கவும் பழிக்கப்பட்டிருப்பா. தமிருல யெளியாற இத்தனை மட்டப் புத்தகங்களும் மட்ட சினிமாக்களும் இந்த ஆசாரக் கும்பலால் தான் போஷிக்கப்படுகின்றன. ஏன்னு நினைச்சுப் பாத்திருக். கிறீங்களா, கிரி?

ஏன்னா அவங்களும் ஏதோ ஒரு வகையில் சுயமா இருக்க முடியாதபடி அழுத்தப்பட்டவங்க முடி, ஆசாரம், மதம், இல்லாட்ட நேர்மாறாக உடல்பரமான விவகாரங்கன்னு போலித்தனமான எல்லைக்குள் தங்களை ஏமாற்றி கொள்ளுவாங்க.’ கிரி வாய் திறந்து பேசவில்லை.

‘ரொம்பப் பேர் விடுதலை, நாகரிகம்னா, அறிவுன்னே புரிஞ்சுக்கல. கிரி, நாம யாருக்கும் விரோதிகளல்ல. ஆனால், நாம் நாமாக இருக்க சமுதாயத்தில் அநுமதிக்காத சக்திகளோடு போராட வேண்டியிருக்கு...நாம் இப்படிச் சிந்திக்க ஆரம்பிச்சதனால, எதிர்ப்புச் சக்தி ரொம்ப மூர்க்கமா அழுத்த வருது. ஆண்வர்க்கம் இவ்வளவு கொடுமையா முன்னல்லாம் நடந்திருக்கலன்னு தோணுது...கிரிஜாவின் மனவெழுச்சி குபிரென்று வெளிக்கிளம்புகிறது.

‘ரத்னா, எனக்குக் கவியையும் சாருவையும் நினைச்சா சங்கடமாயிருக்கு. என் தொடர்பு அவங்களுக்கு வேணும். அவங்க சுதந்தரமா, நல்ல அறிவோடு வளரனும். நான் குடும்பத்திலிருந்து விலக்கப்பட்டாலும், அவங்க...அவங்களை விட முடியாது...’-

கண்ணிர் மல்குகிறது.

ரத்னா அவள் கையைப்பற்றி மெல்ல அழுத்தினாள்.

...நிச்சயமாக...நம் போராட்டம் இனிமேல்தான் ஆரம்பம்...’

சந்தன வில்லை, அற்பமான சாம்பற் குவியலாகி விட்டது. ரத்னா சன்னல் கதவுகளை நன்றாகத் திறந்துவிடுகிறாள்.

(முற்றும்)