சேதுபதி மன்னர் வரலாறு/iv. பள்ளி வாசல்கள், தேவாலயங்கள்

விக்கிமூலம் இலிருந்து

IV. பள்ளிவாசல்கள், தேவாலயங்கள்

சேதுபதிச் சீமையில் இந்து சமயத்தினருக்கு அடுத்ததாக சமண சமயமும், இஸ்லாமும், கிறித்தவமும் பரவியிருந்ததைப் பல ஏடுகளும் இலக்கியங்களும் தெரிவிக்கின்றன. குறிப்பாக இஸ்லாம் என்ற ஏகத்துவத்தைப் பறை சாற்றுகின்ற புதிய சமயம் கி.பி.7ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றாலும் பாண்டிய நாட்டிலும் சேது நாட்டிலும் பரவலாக வளர்ந்துள்ளதை கி.பி.10,12ம் நூற்றாண்டு வரலாறு தெரிவிக்கின்றது. சேதுநாட்டில் இஸ்லாமியரது வருகை எப்பொழுது ஏற்பட்டது என்பதை அறுதியிட்டுச் சொல்லும் ஆவணம் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. கி.பி.12ம் நூற்றாண்டின் இறுதியில் அரபு நாட்டிலிருந்து சுல்தான் செய்யது இபுராஹிம் என்பவர் தமது தோழர்களுடன் பாண்டிய நாட்டில் முதலில் கொற்கையிலும் அடுத்து மதுரை, பெளத்திர மாணிக்கப் பட்டினத்திலும் தங்கியிருந்து இஸ்லாமியச் சமயப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். இதன் காரணமாகச் சேதுநாட்டின் துறைமுக நகரங்களான கீழக்கரை, பெரிய பட்டினம், தேவிபட்டினம், தொண்டிப்பட்டினம், சுந்தர பாண்டியன் பட்டினம் ஆகிய ஊர்களில் இஸ்லாமியரது குடியேற்றங்கள் ஏற்பட்டன. இவர்கள் பெரும்பாலும் அரபு நாட்டில் இருந்து பாண்டிய நாட்டிற்குக் குதிரைகளைக் கொண்டு வந்து விற்பனை செய்யும் வணிகத்திலும், பின்னர் அரசு சேவையிலும் அமர்த்தப்பட்டுப் பணியாற்றி வந்தனர்.

நாளடைவில் இங்கு தங்கி வாழ்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் எதிர்க்கரையில் உள்ள இலங்கை நாட்டிலும் வடக்கே கரையோர நாடுகளான ஆந்திரம், வங்காளம் ஆகிய மாநிலங்களில் கடல் வாணிகத்தில் ஈடுபட்டனர். கி.பி.1502ல் தூத்துக்குடிக்கு வந்த போர்ச்சுகல் நாட்டுப் பரங்கியரால் இவர்களது உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத் தொடர்புகள் சீர் குலைந்தன. இதனால் இவர்களது வாணிகத் தொடர்புகள் நமது நாட்டின் மேற்குக் கரையான கேரளத்துடன் வளர்ச்சி பெற்றன. கீழக்கரை, வேதாளை ஆகிய ஊர்களின் பள்ளி வாசல்களில், அடக்கவிடங்களில் காணப்படும் கல்வெட்டுக்களில் கொல்லம் ஆண்டு பயன்படுத்தப் பட்டிருப்பது தெரிய வருகிறது. திருமலை சேதுபதி மன்னர் ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களாக இருந்த முஸ்லீம்கள் கிழவன் சேதுபதியின் ஆட்சியில் பரவலாக மீண்டும் கடலோரக் கடல் வணிகத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது சேதுபதி மன்னருக்கும் கீழக்கரை வள்ளல் சீதக்காதிக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கமான உறவுகள் இதற்குப் பெரிதும் உதவின.

இதனால் சேதுநாட்டில் மேற்கு நாடுகளான துருக்கி, அரேபியா, பாரசீகம் ஆகிய நாடுகளில் இருந்து பல இஸ்லாமியத் துறவிகள் இங்கு வந்து தங்கி அமைதியாக மக்கள் நலப் பணியிலும் சமயப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர். காலப்போக்கில் இவர்கள் இயற்கை எய்தி அடக்கம் பெற்ற புனித இடங்கள் மக்களால் பெரிதும் மரியாதையுடன் மதிக்கப் பெற்று வருகின்றன. இந்த இடங்களில் தூபதீபச் செலவுகளுக்கும் அன்னதானம் வழங்குவதற்காகவும் சமயப் பொறை மிகுந்த சேதுபதி மன்னர்கள் பல ஊர்களைத் தானமாக வழங்கியுள்ளனர். இப்பொழுது கிடைத்துள்ள ஆவணங்கள், செப்பேடுகள் வாயிலாகச் சேதுபதி மன்னர்கள் 10 புனித இடங்களுக்கு 13 ஊர்களை சர்வமானியமாக வழங்கி இருப்பது தெரிய வருகிறது. அந்தப் புனித இடங்களும் அவைகளுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊர்களும் காலவாரியாகப் பட்டியலிட்டுக் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இஸ்லாமியரது தொழுகை வழிபாடு நடத்தப் பெறும் இஸ்லாமியப் புனிதர்களது அடக்கவிடங்கள் அரபு மொழியில் தர்ஹாக்கள் எனப்படும். ஆனால் இந்த அரபுச் சொல்லைப் பயன்படுத்த விரும்பாத தமிழர்கள் புனித அடக்கவிடங்களையும் பள்ளி வாசல்கள் என்றே குறிப்பிடுவது உலக வழக்கமாக உள்ளது.

சேது நாட்டின் மற்றொரு சிறுபான்மையினரான கிறித்துவர்கள் சமுதாய வாழ்வில் மிகவும் பிற்பட்டு 17,18ம் நூற்றாண்டுகளில் வாழத்தொடங்கினர்.

அவர்களது தேவாலயம் ஒன்று கிழக்குக் கடற்கரையில் முத்துப் பேட்டை கிராமத்தில் அமைந்துள்ளது. அதன் வழிபாட்டுச் செலவிற்காக முத்துராமலிங்க சேதுபதி மன்னர் முத்துப்பேட்டை, தெஞ்சியேந்தல் என்ற இரு ஊர்களைச் சர்வ மானியமாக வழங்கியதற்கான கல்வெட்டும் செட்பேடும் கிடைத்துள்ளன. அவைகளின் விவரம் இந்தப் பட்டியலின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆவணப் பதிவேடுகளின்படி


சேதுபதி மன்னர்கள் அறக்கொடையாக
வழங்கிய நிலக்கொடைகளின் விவரம்
பள்ளி வாசல்களுக்கு
தானம் வழங்கப்பெற்ற அமைப்பு தானம் வழங்கப்பட்ட ஊர் தானம் வழங்கப்பட்ட நாள்

I திருமலை சேதுபதி

1 மீரா பள்ளி வாசல், குணங்குடி

குபைங்குடி சகம் 1595 (கி.பி.1673) பிராமாதீச கார்த்திகை 5

II குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி

சா பள்ளி வாசல், இராமநாதபுரம்,

கிழவனேரி சகம் 1656 (கி.பி.1744) ஆனந்த தை 1.

III சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி

1. ஆபில்காபில் தர்ஹா இராமேஸ்வரம்

புதுக்குளம் சகம் 1667 (கி.பி.1745) குரோதன வைகாசி 11.

2. சதக்கத்துல்லா அப்பா தர்ஹா, கீழக்கரை.

கீழத்தில்லையேந்தல் சகம் 1667 (கி.பி.1745) குரோதன வைகாசி 11.

3. மீராசா தர்ஹா, அனுமந்தக்குடி

அழியாபதி சகம் 1666 (கி.பி.1744) குரோதன வைகாசி குணபதி மங்கலம்

4. இபுராஹிம் சாகிபு பள்ளி, ஏர்வாடி

ஏர்வாடி சகம் 1666 (கி.பி.1744) துந்து.பி ஐப்பசி - மாயாகுளம்

IV கிழவன் சேதுபதி

1. காரேந்தல் பள்ளி வாசல்

திருச்சுழியல் - - -

2. பள்ளிவாசல் மானியம்

கொக்குளம் - - -
நாடாக்குளம் _

V முத்து விஜய ரகுநாத சேதுபதி

1. பள்ளி வாசல் பூலாங்கால்

பூலாங்கால் சகம் 1643 (கி.பி.1721) பிலவ தை 17.
கல்வெட்டுகளின் படி

I கிழவன் சேதுபதி

1. காட்டுபாவா சாகிபு பள்ளி வாசல் Iஉத்தார நாட்டு அடுக்குளம் - சகம் கி.பி.1696 தாது அற்பசி 13 Iகாஞரங்குளம

கிறித்தவ தேவாலயங்களுக்கு
ஆவணப் பதிவேடுகளின்படி

I முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி

முத்துப்பேட்டை - சகம் 1703 (கி.பி.1781) பிலவ கார்த்திகை 5 தெஞ்சியேந்தல்.