சேதுபதி மன்னர் வரலாறு/vi. செல்ல முத்து விஜய ரகுநாத சேதுபதி

விக்கிமூலம் இலிருந்து

VI. செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி

இவரது 14 ஆண்டு கால ஆட்சியில் மூன்று சிறப்பான நிகழ்ச்சிகள் வரலாற்றில் பதிவு பெற்றுள்ளன. முதலாவது, தஞ்சை மராத்தியரது படைகள் இவரது ஆட்சி காலத்தில் சேது நாட்டின் வடபகுதியை ஆக்கிரமித்து இராமநாதபுரம் கோட்டை நோக்கி முன்னேறி வந்தது. இந்தப் படையெடுப்பையும் தளவாய் வெள்ளையன் சேர்வைக்காரர் முறியடித்து சேதுநாட்டுத் தன்னரசு நிலையை நிலை நாட்டினார்.

இரண்டாவது நிகழ்ச்சி, கீழக்கரையில் டச்சுக்காரர்கள் ஒரு தொழிற்சாலையை அமைத்துத் தூத்துக்குடிப் பரவர்களைக் கொண்டு அங்கு நெசவுப்பட்டறை தொடர்வதற்கு அனுமதி அளித்தார். நாளடைவில் டச்சுக்காரர்கள் அந்தத் தொழிற்சாலைப் பகுதியைச் சுற்றி சுவர் எழுப்பி ஒரு சிறு அரணாக மாற்ற முயற்சித்தனர். தகவலறிந்த சேதுபதி மன்னர் அந்த அரணைப் பீரங்கிகளால் இடித்துத் தகர்த்தெறியுமாறு உத்தரவிட்டார். உடனே டச்சுக்காரர்களின் தலைமை இடமான துத்துக்குடியிலிருந்து வந்த துதுக்குழுவினர் சேதுபதியைச் சந்தித்து அவருடைய நடவடிக்கையைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். சீற்றம் கொண்ட சேது மன்னர் அத்துாதுக்குழுவினரைச் சிறையிடும்படி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து துத்துக்குடியிலிருந்து டச்சுக்காரர்கள் கீழக்கரைக்கு ஒரு போர்க்கப்பலை அனுப்பி வைத்தனர். நிலைமை மிகவும் மோசமானதை அறிந்த கீழக்கரை சின்னத்தம்பி மரைக்காயர் என்பவர் டச்சுக்காரரின் பொருட்டு சேதுபதி மன்னரைச் சந்தித்து, சேதுமன்னரும் டச்சுக்காரரும் போரிடும் நிலையைத்தவிர்க்க உதவினார். அதன்பிறகு டச்சுக்காரருக்கும் சேதுபதி மன்னருக்கும் இயல்பான உறவு நீடித்தது.

மூன்றாவது நிகழ்ச்சி தமிழ்நாட்டில் ஆற்காடு நவாபு பதவிக்கு கடைசி நவாபாக இருந்த தோஷ்து முகம்மது என்பவரது மருமகனாகிய சந்தா சாகிபும், நவாபின் மைனர் மகனுக்குப் பாதுகாவலராக நியமிக்கப்பட்ட அன்வர்தீனும் போட்டியிட்டனர். அப்பொழுது ஹைதராபாத் நிஜாம் பதவிக்கும் போட்டி, இதனால் போட்டி நிஜாம்களில் ஒருவர் சந்தாசாகிபையும் மற்றவர் அன்வர்தீனையும் ஆற்காடு நவாபாக நியமித்தனா. இந்த இருவர்களுக்கு இடையே நிகழ்ந்த பூசல்களில் பிரெஞ்சுக்காரரது துணை கொண்ட சந்தாசாகிபை சேதுபதி மன்னர் ஆதரித்தார். திருச்சி அருகே நடைபெற்ற போரில் உதவுவதற்காக 5000 மறவர்களையும் சேதுபதி மன்னர் அனுப்பி வைத்தார்.

அந்தத் திருச்சிப் போரில் பிரெஞ்சு காரரை நம்பிய சந்தாசாகிப் தோல்வியுற்றார். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதரவு பெற்ற அன்வர்தீனின் மகன் முகம்மதலி ஆற்காடு நவாபானார். இந்த மாறுபட்ட சூழ்நிலையில் சேதுமன்னர் ஆற்காடு நவாப்பிற்காகத் திருநெல்வேலிப் பாளையக்காரர்கள் மீது படையெடுத்துச் சென்ற ஆங்கில தளபதி ஹெரானுக்கு நல்லெண்ண நடவடிக்கையாக உதவிகளை வழங்க முன்வந்தார். மன்னார் வளைகுடாவில் உள்ள இரண்டு தீவுகளை ஆங்கிலேயரின் பயன்பாட்டிற்குக் கொடுக்க முன்வந்தார். தளபதி ஹெரான் சேதுபதியின் நல்லெண்ண முயற்சிகளைப் பாராட்டி ஏற்றுக் கொண்டாலும். மேலிடம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

முன்னோர்களைப்போல இந்த மன்னரும் திருக்கோயில்களுக்கும், அன்னசத்திரங்களுக்கும் ஆதரவு வழங்கி வந்ததுடன் கி.பி.1762ல் காலமானார். இவருக்கு ஆண்வாரிசு இல்லாததால் இவரது தங்கை முத்துத் திருவாயி நாச்சியார் மகன் முத்துராமலிங்க சேதுபதி என்ற 11 மாதப் பாலகன் சேதுபதியாகப் பட்டம் சூட்டப்பெற்றார்.